கோத்தாபய ராஜபக்ஷ

கோத்தாபய ராஜபக்ஷ

“யுத்த குற்றத்துக்கு பொறுப்பேற்று கோத்தாபய ராஜபக்ஷ பதவி விலகவேண்டும்.”- எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தல் !

பொருளாதார பின்னடைவு, யுத்தகுற்றம் மற்றும் ஊழலுக்கு பொறுப்பேற்று ஐனாதிபதி பதவி விலகவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“ராஜபக்ஷ இருட்டு அகன்று போக வேண்டும். இனமதமொழி வேறுபாடின்றி ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென மக்கள் கோருகின்றனர். அந்தவகையில் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுவரும் போராட்டத்திற்கு தார்மீக ஆதரவை வழங்குகிறோம். போராட்டத்தில் அரசியல் கலப்பு வேண்டாமென போராட்டாரர்கள் விரும்புகிறார்கள்.

வடக்கு கிழக்கில் பலர் கலந்து கொள்ள வேண்டுமென விரும்புகின்றனர். புத்தாண்டு மலரும் வேளையில் போராட்டம் வெற்றி பெற வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, ஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிரான குற்றப்பிரேரணை, நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைக்கு எதிரான சட்டத்திருத்தம் நிறைவேறினால் நாட்டில் மறுமலர்ச்சி ஏற்படும்.“ எனத் தெரிவித்துள்ளார்.

“பல்கலைகழகங்கள் விவசாயதுறை தொடர்பான பட்டப்படிப்பை கொடுக்க முன்வர வேண்டும்.” – வவுனியாவில் கோட்டாபாய !

“30 வருட யுத்த நிலையை முடிவுக்கு கொண்டு வந்து எமது இளைய சமுதாயத்தை அபிவிருத்தி பாதையில் அழைத்து செல்ல உங்கள் அனைவரையும் அழைக்கின்றேன்.” என ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

 

வவுனியா பல்கலைகழகத்தின் ஆரம்ப நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு அதனை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது ஒரு விசேஷமான நாள். சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்துக்கு அமைய இந்த பல்கலை கழகம் ஆரம்பிக்கப்பட்டு இந்த பிரதேசத்தினை கல்வி, பொருளாதார ரீதியில் உயர்வடைய இந்த பல்கலைக்கழகம் திறந்து வைக்கப்படுகிறது.  எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டது போல நாட்டில் புதிய பல்கலைகழகம் உருவாக்கப்பட்டு இந்த பிரதேச மாணவர்களிடம் கையளிக்கபடுவதில் பெருமையடைகிறேன்.

இந்த பல்கலைகழகம் ஊடாக இளமாணி பட்டங்களை மட்டுமல்ல, மேலதிக பட்டங்களையும், வேலை வாய்ப்புகளையும், வெளிநாட்டு வாய்ப்புகளையும் உருவாக்கி எமது இளைய சமுதாயத்துக்கு பெற்று கொடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்து செல்ல தயாராக வேண்டும். இந்த பல்கலை கழகம் ஊடாக தொழில் நுட்ப சவால்களை முறியடித்து நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். எதிர் வரும் காலங்களில் எமது நாட்டில் தொழில் வாய்ப்புகளை உருவாக்க கூடிய கல்வி முறைகளை நாம் உருவாக்க அயராது உழைக்க வேண்டும்.

எமது நாடு விவசாய நாடு என்பதால் எதிர்காலத்தில் விவசாய துறையில் பாடத்திட்டங்களை உருவாக்கி அவற்றில் பட்டங்களை பெற்று கொடுத்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தொழில் வாய்ப்புக்களை பெற்று கொடுக்க பல்கலைகழகங்கள் முன்வர வேண்டும். எதிர் காலத்தில் மிக அதிகளவான மாணவர்களை பல்கலைகழகங்களுக்கு உள்ளீர்க்க எதிர்பார்த்து இருக்கிறோம். அதிகளவான மாணவர்கள் உயர்தரத்திலே சித்தியடைந்தாலும், அனைவரையும் பல்கலைகழகங்களுக்கு உள்ளீர்க்க முடியவில்லை எதிர்காலத்தில் இந் நிலைமை மாற்றியமைக்கப்படும்.

பல்கலைகழகங்களில் பட்ட படிப்பு கற்கை நெறிகளுக்கு மேலதிகமாக டிப்ளோமா, சான்றிதழ் கற்கை நெறிகள் புதிது புதிதாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் 30 வருட யுத்த நிலையை முடிவுக்கு கொண்டு வந்து எமது இளைய சமுதாயத்தை அபிவிருத்தி பாதையில் அழைத்து செல்ல உங்கள் அனைவரையும் அழைக்கின்றேன் என்றார்.

“ஆட்சிக்காலத்தை நீட்டித்தால் வீதிக்கு இறங்குவோம்.” – எச்சரிக்கிறது ஐக்கிய மக்கள் சக்தி !

“பொதுமக்களின் ஆணையின்றி அரசாங்கம் ஆட்சிக்காலத்தை நீடிக்க முயன்றால் வீதிக்கு இறங்குவோம்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்களிடமிருந்து அதிகாரங்களை பறிப்பதற்கு அரசாங்கம் முயல்கின்றது எனவும்
பொதுமக்கள் அரசமைப்பின் ஏற்பாடுகள் மூலமாக தங்கள் ஆணையை வழங்குவார்கள் மக்கள்  பிரதிநிதிகள் அதனை பின்பற்றவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பெருந்தொற்று அல்லது வேறு பொருளாதார சர்வதேச காரணங்களிற்காக ஜனாதிபதியோ – பிரதமரோ ஆட்சிக்காலத்தை நீடிப்பதற்கான ஏற்பாடுகள் அரசமைப்பில் இல்லை.  சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் மாத்திரமே பதவிக்காலத்தை நீடிக்க முடியும். பொதுமக்களிற்கு சேவையற்றுவதற்கு ஏதாவது தரப்பிற்கு விருப்பமிருந்தால் அவர்கள் அடுத்த மூன்று வருடங்கள் அதில் ஈடுபட்ட பின்னர் பொதுமக்களின் புதிய ஆணையைகோரமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதே நேரம் எதிர்க்கட்சிகளின் கருத்து தொடர்பில் அமைச்சர் நாமல்ராஜபக்ச ,

அரசாங்கத்தினதும் ஜனாதிபதியினதும் ஆட்சிக்காலத்தை நீடிக்கவேண்டிய அவசியமில்லை. தேர்தலை நடத்தாமல் ஆட்சிக்காலத்தை நீடிக்கும்எண்ணம் எதுவும் ஆளும்கட்சிக்கு இல்லை.  அவ்வாறான திட்டம் எதுவுமில்லை,நாங்கள் உரிய நேரத்தில் தேர்தலை நடத்துவோம் என அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்சவினதும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினதும் அரசியல் வாழ்க்கையில் தேர்தல்களை ஒத்திவைப்பது அல்லது நீடிப்பது குறித்து நாங்கள் ஒருபோதும் சிந்தித்ததில்லை என அவர் தெரிவித்துள்ளார். அடுத்த மூன்று வருடங்களிற்கும் பொதுமக்களிற்கு நீதியாக நடந்துகொள்ள அரசாங்கம் என்ற முறையில் முயற்சிகளை மேற்கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

 

“புலம்பெயர் மக்களுடன் இலங்கை அரசாங்கம் புரிந்துணர்வுடன் செயற்படுகிறது.” – அவுஸ்திரேலிய அமைச்சரிடம் ஜனாதிபதி கோத்தாபாய தெரிவிப்பு !

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் சில பிரிவுகளைத் திருத்தம் செய்வதற்கு புலம்பெயர் மக்களுடன் இலங்கை அரசாங்கம் புரிந்துணர்வுடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் கெரன் அன்ட்ரூஸோடு இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

போதைப்பொருள் வியாபாரம், கடற்கொள்ளையர்களின் செயற்பாடுகள் மற்றும் மனித கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்கான வலுவான பொறிமுறையை மேலும் எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இந்தியப் பெருங்கடலின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்கான நடவடிக்கைகளுக்கு தமது அரசாங்கம் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் என அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் தெரிவித்தார். மேலும் பிராந்தியத்தின் பாதுகாப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் அமைச்சர் ஆண்ட்ரூஸ் தெரிவித்தார்.

இதுவரை புலம்பெயர் அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக எந்தத்தகவலும் வெளியாகியிராத நிலையில் அவுஸ்திரேலிய உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரிடம் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“எனது வெற்றி அல்லது தோல்வியை அளவிடுவதற்கான சிறந்த அளவுகோல் மக்கள் கருத்தேயன்றி சமூக ஊடகங்கள் மூலம் அரசியல் எதிரிகளால் பரப்பப்படும் தவறான பிரச்சாரங்கள் அல்ல.” – ஒரு வருட பூர்த்தி உரையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ !

“எனது வெற்றி அல்லது தோல்வியை அளவிடுவதற்கான சிறந்த அளவுகோல் மக்கள் கருத்தேயன்றி சமூக ஊடகங்கள் மூலம் அரசியல் எதிரிகளால் பரப்பப்படும் தவறான பிரச்சாரங்கள் அல்ல.”என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பதவியேற்று ஒரு வருடம் பூர்தியாகியுள்ள நிலையில் நேற்று(18.11.2020) இரவு 8.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். அந்த உரையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது உரையாற்றிய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்,

இந்த குறுகிய காலத்தில் மக்கள் கோரியபடி நாட்டைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். மக்கள் இது பற்றி இனியும் அச்சப்படவோ? சந்தேகப்படவோ ? தேவையில்லை.

கடந்த ஒருவருட காலத்தில், நாட்டின் ஏழ்மையான குடும்பங்களை இலக்காகக் கொண்டு 100,000 வேலைவாய்ப்புகளை வழங்கும் திட்டத்தை நாங்கள் ஆரம்பித்தோம். வேலையற்றிருந்த 60,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் மேலும் அவர்கள் நாட்டிற்கு உற்பத்தித் திறன்வாய்ந்த சேவையைச் செய்யத் தேவையான பயிற்சியையும் வழங்க நடவடிக்கை எடுத்தோம்.

கிராமப்புற மக்களிடையே வறுமையை ஒழிப்பதற்கான மற்றொரு நடவடிக்கையாக, காணிகளை இழந்த 20,000 குடும்பங்களுக்கு ஒரு ஏக்கர் வீதம் காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் குடிநீரை வழங்குவதற்கான எங்கள் திட்டத்தின் கீழ் 429,000 குடும்பங்களுக்கு நாடு முழுவதும் நீர் வழங்குவதற்கான ஆரம்ப பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

ஒரு லட்சம் கி.மீ வீதிகளை அமைக்கும் திட்டத்தின் கீழ் மூன்று 10,000 கி.மீ திட்டங்கள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. 10,000 பாலம் கட்டுமான திட்டத்தின் கீழ் சுமார் 5,000 பாலங்களின் பணிகள் நிறைவடைந்து வருகின்றன. இந்த ஆண்டு மட்டும், நகர்ப்புற குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கும் நடுத்தர மக்களுக்கும் 20,000 க்கும் மேற்பட்ட வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஒரு கிராமத்திற்கு ஒரு வீடு திட்டத்தின் கீழ் 14,000 கிராமப்புற வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. 4000 தோட்ட வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 1000 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக மேம்படுத்தப்படும். பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 10,000 ஆல் அதிகரிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அத்துடன் தங்கள் பொறுப்புகளை புறக்கணிக்காமல் மக்களின் நியாயமான தேவைகளை விரைவாக நிறைவேற்றுமாறு அனைத்து அரச ஊழியர்களையும் கேட்டுக்கொள்கிறேன். இது சரியாக நடக்கிறதா? என்று கண்டறிய நான் அவ்வப்போது அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்குச் செல்கிறேன்.

நாட்டின் உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், சேவைகளை வினைத்திறனானதாக ஆக்கவும், ஊழலை ஒழிக்கவும், விரயங்களை குறைக்கவும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மட்டுமன்றி மக்களும் பங்களிக்க வேண்டும்.

நான் எப்போதும் சவால்களுக்கு முகம்கொடுத்து வெற்றிபெற்றவன். நான் அச்சுறுத்தல்களுக்கு பயந்த நபர் அல்ல. பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து அவற்றை தீர்ப்பதன்றி அவற்றிலிருந்து விடுபட்டு ஓடும் பழக்கம் என்னிடம் இல்லை. வாக்குகளை மட்டும் எதிர்பார்த்து யாரையும் மகிழ்விக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. இந்த நாட்டின் சுபீட்சமே எனது எதிர்பார்ப்பு. அந்த நோக்கத்தை அடைய மனசாட்சியுடன் தேவையான எந்த நடவடிக்கையும் எடுக்க நான் தயங்க மாட்டேன். எனது வெற்றி அல்லது தோல்வியை அளவிடுவதற்கான சிறந்த அளவுகோல் மக்கள் கருத்தேயன்றி சமூக ஊடகங்கள் மூலம் அரசியல் எதிரிகளால் பரப்பப்படும் தவறான பிரச்சாரங்கள் அல்ல.”  எனவும் ஜனாதிபதி தனது உரையில் தெரிவித்திருந்தார்.