இலங்கை பாராளுமன்றம்

இலங்கை பாராளுமன்றம்

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதற்காக அமைச்சரவை உப குழு !

“பொய்களால் எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியாது.” – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

நாட்டை மீளக் கட்டியெழுப்ப மக்கள் விரும்பத்தகாத முடிவுகளை எடுக்க தயாராக இருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை முன்வைத்து உரையாற்றுகையில், அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், நேரடி வரிகளை அதிகரிப்பதன் மூலம் மக்களின் ஒட்டுமொத்த வரிச்சுமையையும் குறைக்க முடியும்.

நான் பிரபலமாக இருக்க விரும்பவில்லை. இந்த நாடு விழுந்துள்ள நெருக்கடியிலிருந்து மீண்டும் கட்டியெழுப்ப விரும்புகிறேன்.

நாட்டின் நலனுக்காக மக்கள் விரும்பத்தகாத முடிவுகள் எடுக்கப்படுகின்றன. எனினும், இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் அந்த முடிவுகளின் முக்கியத்துவம் பலருக்கும் புரியும்.

வரி விதிக்கக்கூடிய வருமான வரம்பை ரூ.1 இலட்சத்தில் இருந்து ரூ.2 இலட்சமாக உயர்த்த வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.

PAYE வரி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இந்த வரிகள் தானாக முன்வந்து விதிக்கப்படவில்லை.

ஆனால் நாம் விரும்பியதைச் செய்வதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நீங்கள் விரும்பாவிட்டாலும், சரியானதைச் செய்யுங்கள்.

PAYE வரி ஒழிக்கப்பட்டால் நாட்டுக்கு 100 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படும். வரி வரம்பை இரண்டு இலட்சமாக உயர்த்தினால், நாட்டுக்கு 63 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படும். இழப்படும் மொத்தத் தொகை 163 ரூபாவாகும். இந்த பணத்தை இழக்கும் இடத்தில் நாங்கள் இல்லை. சமூகத்தின் அனைத்து மக்களுக்கு வாழ்வது மிகக் கடினம். ஆனால் இந்த கஷ்டத்தை இன்னும் 5 முதல் 6 மாதங்கள் பொறுத்துக்கொண்டால் ஒரு தீர்வை எட்டலாம். இப்படியே தொடர்ந்தால், 3, 4 ஆம் காலாண்டில் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் கொடுப்பனவு வழங்கலாம்.

தனியாருக்குச் சலுகை அளிக்கலாம். முழு நாட்டு மக்களின் கைகளையும் இன்றையும் விட வளப்படுத்த முடியும்.

வேலைவாய்ப்பினால் வருமானம் பெருகும். வங்கி வட்டியை குறைக்கலாம். அடுத்த மூன்று ஆண்டுகளில், நாட்டு மக்கள் இன்று பெறுவதை விட 75% கூடுதல் வருமானத்தைப் பெற முடியும். உண்மையான வறிய சமூகத்தை அடையாளம் காண்பது. மானியத்துடன் கூடிய வங்கிக் கணக்கு மூலம் நேரடியாக பணமாக உதவி வழங்கும் திட்டத்தைத் தயாரித்து வருகின்றனர்.

ஆனால் சில குழுக்கள் இந்த பாதையை உடைக்க முயற்சிக்கின்றன. நான் ஒருபோதும் சாத்தியமற்றது என்று சொல்லவில்லை. அதிகாரத்திற்காக பொய் சொல்லாதீர்கள். பாதீட்டு உரையிலும், பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்ப நிகழ்விலும் கூறப்பட்ட அனைத்தையும் செயல்படுத்த உள்ளேன். இப்போது அதன் மூலம் பொருளாதாரத்தில் ஓரளவு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடிந்துள்ளது. பொய்களால் எதிர்காலத்தை கட்டியெழுப்ப முடியாது என்பதை பலர் இப்போது புரிந்துகொள்கிறார்கள்.

நாம் இப்போது எதிர்மறைப் பொருளாதாரத்திலிருந்து நேர்மறைப் பொருளாதாரத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கிறோம். 2023ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இந்த தருணத்தில் தாய்நாட்டிற்கு அதிகபட்ச ஆதரவை வழங்குகிறார்கள்.

2022 இறுதிக்குள், அவர்கள் எங்களுக்கு 4 பில்லியன் டொலர் அன்னியச் செலாவணியைக் கொடுத்தனர். பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களை வெவ்வேறு வழிகளில் செல்வாக்கு செலுத்துவதன் பின்னணியில் நமது தொழில்முனைவோர் மற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் இந்த உறுதிமொழியை வழங்கினர்.

ஆனால் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதும் இலங்கைக்கு பணம் அனுப்புவதும் ஆட்சியில் இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு அல்ல நாட்டிற்கு என்று நிரூபித்தார்கள். அவர்கள் அனைவரும் நமது மரியாதைக்கு உரியவர்கள் எனவும் தெரிவித்தார்.

மீனவர் பிரச்சினைக்கு தீர்வு வழங்குங்கள் – பாராளுமன்ற தரையில் அமர்ந்து திலிப் வெதராச்சி போராட்டம்!

ஐக்கிய மக்கள் சக்தியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட உறுப்பினர் திலிப் வெதராச்சி இன்று (21) பாராளுமன்றத்தின் நடுவில் தரையில் அமர்ந்து போராட்டம் ஒன்றை நடத்தினார்.

வரவு செலவுத் திட்டத்தில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுமாறு கோரியே அவர் இந்தப் போராட்டத்தை நடத்தினார்.

2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட விவாதத்தில் தனது உரையை நிகழ்த்திய பின், சட்டசபை அரங்கின் நடுவே வந்து தரையில் அமர்ந்து தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

பல நாள் படகுகள் பல நாட்களாக கடலுக்குச் சென்று மீன் பிடிப்பதாகவும், நியாயமான விலை கிடைக்காமல் மீனவர்கள் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

‘500,000 க்கும் மேற்பட்ட பழங்குடியினர் உள்ளோம். பாராளுமன்ற அங்கத்துவம் எமக்கு வேண்டும்.”- வேடுவத் தலைவர் உருவரிகே வன்னியலத்தோ

தேசியப்பட்டியலில் ஆதிவாசி பிரதிநிதியொருவர் பாராளுமன்றத்துக்கு நியமிக்கப்பட வேண்டுமென வேடுவத் தலைவர் உருவரிகே வன்னியலத்தோ வலியுறுத்தியுள்ளார்.

பதுளை, மொனராகலை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் 500,000 க்கும் மேற்பட்ட பழங்குடியினர் உள்ளனர்.

அவுஸ்திரேலியாவில் உள்ள பழங்குடியினர் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டதாகவும், நேபாளத்தில் பழங்குடியினர் உயர் பதவிகளை வகித்து வருவதாகவும் அவர் கூறினார்.

தம்பானையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“எமது நாட்டில் முதல் தடவையாக பிரதேச சபை உறுப்பினராக பூர்வீக பிரதிநிதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவர் என் மருமகள், ஹென்னானிகலவில் வசிக்கிறார். இந்த நாட்டின் முதல் மற்றும் பழைமையான சொந்தக்காரர்கள் என்ற சிறப்பைப் பெற்றுள்ள எமது மக்களுக்கு பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் தொடர்ந்தும் இல்லை என நான் வெகு காலமாக பேசிக்கொண்டிருக்கிறேன். நாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அரசுக்கு ஒரு முன்மொழிவும் முன்வைக்கப்பட்டது. ஓரிரு வாரங்களுக்குப் பிறகு, இது தொடர்பாக விவாதங்கள் நடந்தன. ஆனால் பின்னர் மறதியில் மங்கிப்போனது” என்றார்.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றம்.

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம், திருத்தங்களுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இன்று மாலை நாடாளுமன்றில் அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் தொடர்பிலான வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இதில், 22ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக இரண்டாம் வாசிப்பின் போது 179 வாக்குகளும், எதிராக ஒரு வாக்கும் அளிக்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர எதிராக வாக்களித்தார்.

இதற்கமைய, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு 178 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

இதனையடுத்து, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மூன்றாம் வாசிப்பின்பின் மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 174 வாக்குகள் அளிக்கப்பட்டன.

இதற்கமைய, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார். இது தொடர்பான விவாதங்கள் நேற்றும் இன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றம் இன்னமும் ராஜபக்ஷக்களின் பிடியிலே உள்ளது – சுமந்திரன் விசனம் !

பாராளுமன்றம் தொடர்ந்தும் பொதுஜன பெரமுனவின் பிடியில் உள்ளது. அதனைக் கலைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தனது டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மக்கள் ஆணையை இழந்த பொதுஜன பெரமுனவின் பிடியிலேயே இன்னமும் தான் உள்ளதை மீண்டும் நாடாளுமன்றம்
வெளிப்படுத்தியுள்ளது.

பாராளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என்பதை மீண்டும் தெரிவிக்கின்றேன்.

டலஸுக்கு வெளிப்படையாக ஆதரவை வெளியிட்டவர்களின் எண்ணிக்கை 113ஐ விட அதிகம் அவர்களுக்கு என்ன நடந்தது
என வே.வி.பியின் தலைவர் முக்கியமான கேள்வியொன்றை எழுப்பியுள்ளார் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வெளியானது சுறுப்பாக செயற்பட்ட முதல் 5 பாராளுமன்ற உறுப்பினர்களின் விபரம் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவரும் உள்ளடக்கம். !

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பெப்ரவரி மாதத்தில் பாராளுமன்றத்தில் மிகவும் சுறுசுறுப்பாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மும்மொழியிலும் நாடாளுமன்றத்தில் முழங்கிய இரா.சாணக்கியனுக்கு உயர் பதவி! |  Minnal 24 News

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உறுப்பினர் ஒருவரும் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (TNA) உறுப்பினர் ஒருவரும் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர்.

manthri.lk ஆல் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, 2022 பிப்ரவரியில் பாராளுமன்றத்தில் மிகவும் சிறப்பாக செயற்பட்ட ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களாக பின்வருவோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

1. ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
2. அலி சப்ரி
3. லக்ஷ்மன் கிரியெல்ல
4. பந்துல குணவர்தன
5. சாணக்கியன் ராசமாணிக்கம்

“பாராளுமன்றம் தமிழீழத் தமிழர்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு தீர்வைத் தராது.” – சி.வி.விக்னேஸ்வரன்

“நாங்கள் எங்கள் மக்களுக்கு உணர்வூட்டுவதிலும் பார்க்க அவர்களுக்கு அறிவூட்ட வேண்டும். எமது அரசியல் போராட்டங்களுக்கு மக்களின் நேரடி நடவடிக்கைகளே வலுச் சேர்க்கக்கூடும். இனிவருங்காலத்தில் பாராளுமன்றத்தில் பேசுவதால் விளையும் நன்மை மிகக் குறைவே. ஆனால் மக்களுக்குப் பிழையான அரசியல் அறிவைப் புகட்டக்கூடாது. ஆகவே பாராளுமன்றம் தமிழீழத் தமிழர்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு தீர்வைத் தராது.” என  சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஆறு கட்சிகள் இணைந்து நேற்று நடத்திய ஈழத் தமிழர் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வும் தேசிய, பிராந்திய, சர்வதேச நிலவரங்களும் கருத்தரங்கு நேற்று கல்வியங்காடு இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசும்போதே விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“சென்ற வாரம் இந்தியப் பத்திரிகையொன்றின் இலத்திரனியல் ஊடகத்திற்கு ஒரு பேட்டி அளித்தேன். அங்கு நான் கூறிய ஒரு விடயம் பத்திரிகைகளில் வெளிவரவில்லை. அதனை இப்பொழுது  உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

இதுகாறும் பிரிந்து நின்ற ஆறு கட்சிகளும் எவ்வாறு ஒருமித்து அந்தக் கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுத முடிந்தது என்று செவ்விகண்டவர் என்னிடம் கேட்டார்.

அதற்கு நான், எமது அரசியல் குறிக்கோள்களைப் பொறுத்தவரையில் எமக்குள் அதிகம் வித்தியாசம் இல்லை என்றேன். அவற்றை அடையும் மார்க்கம் பற்றியே எமக்குள் முரண்பாடுகள் உண்டு என்றேன். அதை விளக்குமாறு கோரப்பட்ட போது, நான், எமது தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்துமே ‘ஒற்றையாட்சி வேண்டாம் சமஷ்டி ஆட்சி முறையே வேண்டும்’ என்று தான் கோரி வருகின்றோம் என்றேன்.

எமது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஒருபடி மேலே போய் கூட்டு சமஷ்டியை எமது குறிக்கோளாகக் குறிப்பிட்டுள்ளோம் என்றேன். ஆகவே எமது குறிக்கோள் ஒன்றே அதனை அடையும் விதத்தில் எமக்குள் வேற்றுமைகள், வித்தியாசங்கள், முரண்பாடுகள் உண்டு என்றேன். நான் அங்கு கூறியதை இங்குள்ள அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகின்றேன். ஏதோ காரணத்திற்காக செவ்வி கண்டவர் இக்கேள்வியையும் பதிலையும் தணிக்கை செய்துவிட்டார்.

ஆகவே முக்கியமான ஒரே குறிக்கோளை வைத்திருக்கும் எமது ஆறு கட்சிகளும் இன்று இந்த கருத்தரங்கத்தை ஒருமித்து நடத்துவதில் வியப்பொன்றுமில்லை.

இந்தியாவிற்கெதிரான கருத்துடைய எமது 24 கரட் கட்சி, அதன் தாய்க் கட்சியின் யாப்பு இன்று வரையில் ஒற்றையாட்சியே எமக்கு வேண்டும் என்று கூறினாலுங்கூட, தேர்தல் காலத்தில் சமஷ்டியே தமது குறிக்கோள் எனக் கூறி வருகின்றார்கள். ஆகவே அவர்களும் கொள்கை ரீதியாக எங்களுடன் தான்! மலை உச்சியில் இருந்து உண்மை உணர்ந்து அவதரணம் செய்து மக்களுடன் மக்களாக நின்று சிந்தித்து எங்கள் எல்லோருடனும் ஒருங்கிணைந்து செயலாற்ற அக்கட்சி ஒத்துக் கொண்டிருந்தால் எமதுமக்களின் அரசியல் பலம் இன்னும் மேலோங்கியிருக்கும். இப்பொழுதும் காலம் கடந்துவிடவில்லை என்று அவர்களுக்கு இந்த உரையின் ஊடாக அன்புடன் எடுத்துக்கூறிவிட்டு இன்றைய தலையங்கத்திற்கு வருகின்றேன்.

‘ஈழத் தமிழர் தீர்வில் நாடாளுமன்றத்தின் வகிபாகம்’ என்பது தலையங்கம். எனவே தமிழ்ஈழத் தமிழருக்கு அப்பாற் போய் இலங்கை எங்கிலும் வாழும் சகல தமிழ் மக்களையும் உள்ளடக்கியே தலையங்கம் நிற்பதை நாங்கள் அவதானிக்க வேண்டும். தமிழீழம் என்றால் இலங்கையின் வடக்கு கிழக்கையே அச் சொல் குறிக்கும். ஈழம் என்றால் முழு இலங்கையையும் குறிக்கும். எனவே வடக்கு கிழக்குத் தமிழ் மக்களுக்கு அப்பால் சென்று மலையகத் தமிழர்களையும் வடக்குகிழக்கு தவிர்ந்த கொழும்புத் தமிழர்களையும் உள்ளடக்கிய மற்றைய மாகாணத் தமிழ் மக்களையும் ஒன்று சேர்த்தே மேற்படி தலையங்கம் தரப்பட்டுள்ளது. அதாவது பொதுவாக இந்நாட்டின் தமிழ் மக்களின் தீர்வில் பாராளுமன்றத்தின் வகிபாகம் என்னவாக இருக்கலாம் என்பதே கேள்வி. அப்படித்தான் நான் இந்தத் தலையங்கத்தைப் புரிந்து கொண்டுள்ளேன். எனினும் நான் பொதுவாகவும் தமிழீழத் தமிழர்கள் பற்றி சிறப்பாகவும் சிந்தித்துப் பேச விழைகின்றேன்.

 

எமக்கு சுதந்திரம் கிடைத்த காலத்தில் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் பெரும்பான்மையினராக இருக்க மற்றைய மாகாணங்களில் சிங்களவர்கள் பெரும்பான்மையினராக இருந்தார்கள்.

ஆகவே தமிழ்ப் பேசும் வட கிழக்கு மாகாணம் ஒரு அலகாகவும் மற்றைய மாகாணங்கள் இன்னொரு அலகாகவும் மொழிவாரியாகக் காணப்பட்டன.

எனவே நாடு பிரித்தானியரால் அவ்வாறே பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு மொழிவாரியாகப் பிரித்துப் பார்த்திருந்தால் சமஷ்டி முறையிலான அரசியல் யாப்பு கட்டாயமாகத் தரப்பட்டிருக்கும். ஏனென்றால் கண்டியர்கள் கூட சமஷ்டியையே விரும்பினார்கள்.

அவ்வாறு இலங்கைக்குச் சமஷ்டி வராது செய்தவர்தான் இலங்கை தேசத்தின் தந்தை என்று சிங்கள மக்களால் கொண்டாடப்பட்டுவரும் டி.எஸ்.சேனநாயக்க அவர்கள்.

அவரே இலங்கையின் முதல் பிரதம மந்திரியானார். ஆனால் அவர் தனது திருகுதாளங்களை சுதந்திரம் கிடைக்க முன்னரே தொடங்கியிருந்தார்.

தமிழ் மக்களுக்கு எதிரான முதல் சதி அவராலும் பின்னர் ஆளுநர் நாயகமாக பதவி வகித்த சேர். ஒலிவர் குணதிலகவாலுமே தான் இயற்றப்பட்டது. அவர்கள் இருவரும் எப்படியாவது இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடாக ஆங்கிலேயர்களால் பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என்ற திடமான நினைப்பில் இருந்தார்கள்.

அதனால்தான் 1943ல் பிரித்தானியா கூடிய அதிகாரங்களை இலங்கைக்கு வழங்க இருப்பதாக அறிவித்த பின் சேர் ஜவர் ஜெனிங்க்ஸ் என்ற அரசியல் யாப்பு சட்ட நிபுணருடன் சேர்ந்து இலங்கையின் சிறுபான்மையினர் எவருடனும் கலந்தாலோசியாது ஒரு ஒற்றையாட்சி அரசியல் யாப்பு வரைவை இலங்கைக்கெனத் தயாரித்து பிரித்தானிய கொலனி ஆதிக்க அரசிற்கு அவசர அவசரமாக கொண்டுபோய்ச் சேர்த்தார்கள்.

அப்படியிருந்தும் கொலனி அரசாங்கம் சிறுபான்மையினரை கலந்தாலோசியாது தமக்கு தரப்பட்ட வரைபை ஏற்காது சோல்பரி பிரபுவின் தலைமையில் ஒரு ஆணைக்குழுவை இங்கு அனுப்ப ஆயத்தமானார்கள். இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற சேனநாயக்காவும் குணதிலகாவும் இரண்டாவது சதியில் இறங்கினார்கள்.

இலண்டன் சென்று ஆணையாளர்களைச் சந்தித்து அவர்களைத் தம்பக்கம் ஈர்ப்பதே அந்தச்சதி. ஆணையாளர்கள் இங்கு வருமுன் சேர் ஒலிவர் குணதிலக இலண்டன் சென்று ஒலிவர் ஸ்டன்லி என்ற பிரித்தானிய மாநில செயலாளரைச் சந்தித்து அவருக்கூடாக சோல்பரி பிரபுவைச் சந்தித்து தமது வரைவே இலங்கைக்குச் சிறந்தது என்ற கருத்தை முன்கூட்டியே ஆணைக்குழுத் தலைவரின் மனத்தில் ஆழப்பதியப் பண்ணினார்.

இவ்வளவையும் மறைமுகமாகச் செய்துவிட்டு இருவரும் மூன்றாவது சதியில் இறங்கினார்கள். 22.12.1944ல் சோல்பரி ஆணைக்குழுவினர் இங்கு வந்தபோது டி.எஸ். சேனநாயக்கா ‘இந்த ஆணைக்குழு எமக்கு வேண்டாம்’ என்ற ஸ்லோகத்தை எழுப்பி அதிகாரபூர்வமாக ஆணைக்குழுவை பகிஷ்கரித்தார்.

இதன் காரணம் கண்டியர்களாலும் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க போன்றவர்களாலும் தமிழர்களாலும் சமஷ்டி முறை பற்றி சமர்ப்பணங்கள் எழலாம் என்பதால். அவ்வாறான சமர்ப்பணங்களைத் தடுக்கவே இவ்வாறு செய்தார்.

ஆகவே கண்டியர்களும் பண்டாரநாயக்கவும் பொன்னம்பலமும் சமஷ்டியை முன்வைக்க முன் பகிஷ்கரிப்பின் மூலமாக அவர்களின் வாய்களை டி.எஸ்.சேனநாயக்க அடைத்துவி;ட்டார். இவ்வளவுக்கும் ஏற்கனவே தமது வரைவை ஆணையாளர்கள் ஏற்கவேண்டும் என்பதற்கான பூர்வாங்க ஆயத்தங்களை டி.எஸ்.சேனநாயக்கவும் சேர் ஒலிவரும் சேர்ந்து செய்த பின்னர் தான் பகிஷ்கரிப்பு நடந்தது.

சமஷ்டியை ஆதரிக்கவேண்டிய ஜி.ஜி.பொன்னம்பலம் தன் கெட்டித்தனத்தை வெளிக்கொண்டு வருவதுபோல் 50 க்கு 50ஜ முன்வைத்தார். அவர் சமஷ;டியை முன்வைத்திருக்கலாம். ஆனால் அவரின் 50க்கு 50ஐ ஆணைக்குழு நிராகரித்தது.

ஒற்றையாட்சி முறையை ஆதரித்து தமது அறிக்கையை அவர்கள் வெளியிட்டனர். சேனநாயக்க மீனுக்கு வாலையும் பாம்புக்குத் தலையையும் காட்டி தனது காரியத்தைச் சாதித்துக் கொண்டார்.

சேர் ஐவோர் ஜெனிங்ஸ் ஒருமுக்கிய கருத்தை அப்போது வெளியிட்டிருந்தார்-‘சோல்பரி ஆணையாளர்களின் சிபார்சு என்று புதிய அரசியல் யாப்பு வரைவு அழைக்கப்பட்டாலும் உண்மையில் திரு.சேனநாயக்காவின் வரைவே அது’ என்றார்.

‘செனட் சபை மட்டுந்தான் ஆணையாளர்களின் சிபார்சு’ என்று கூறினர். (ஹுலுகல்ல 2014 ல் எழுதிய நூலின் 177ம் பக்கத்தில் இவையாவும் கூறப்பட்டுள்ளன.

திரு.செல்வேந்திரா சபாரட்ணம் அவர்களால் விரைவில் வெளியிடப்படப் போகும் நூலிலும் இவை முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளன.

ஆகவே பாராளுமன்றத்தின் வகிபாகம் என்று நாங்கள் ஆராயும் போது அதன் பின்னணியில் நடைபெற்ற பல திருகுதாளங்களை நாங்கள் மனதில் வைத்தே இக் கருப்பொருளை நோக்கவேண்டும்.

பாராளுமன்றத்தின் வகிபாகம் பற்றிப் பார்க்கும் போது 1972ம் ஆண்டின் குடியரசு அரசியல் யாப்பு பாராளுமன்றத்தில் இயற்றப்படும் வரையில் பாராளுமன்றமே தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் முக்கிய பங்கு வகித்தது. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. 1948ம் ஆண்டின் அரசியல் யாப்பு தனது உறுப்புரை 29(2)ன் மூலமாக சிறுபான்மையினரின் உரித்துக்களை ஓரளவு பாதுகாக்க எத்தனித்தது.

ஆகவே சிங்கள பெரும்பான்மையினரின் ஆதிக்க நடவடிக்கைகளைப் பாராளுமன்றத்தில் சுட்டிக் காட்டி பெரும்பான்மையினரை ஓரளவு பின்வாங்கச் செய்யக் கூடியதாக இருந்தது. அப்படியிருந்தும் ‘சிங்களம் மட்டும்’ சட்டம் உறுப்புரை 29(2)ன் ஏற்பாடுகளுக்கு முரணாக பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இது சிறுபான்மையினருக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தாலும் தொடர்ந்து பாராளுமன்றமே தமிழ் மக்களின் உரித்துக்களுக்கான போராட்டத் தளமாக தொடர்ந்து இருந்து வந்தது.

அடுத்த காரணம் 1972 வரையில் கூட பாராளுமன்றத்தில் ஆங்கில மொழியே கோலோச்சி வந்தது. அதன் காரணத்தினால் சகல இன மக்களும் பெரும்பாலும் ஆங்கில மொழியிலேயே பேசியதால் உடனுக்குடன் இரு தரப்பாரின் கருத்துக்களும் மற்றையவர்களால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. கருத்துப் பரிமாற்றங்கள் மூன்றாம் நபரான மொழி பெயர்ப்பாளர் உதவியின்றி நேரடியாக நடைபெற்றன.

1972ம் ஆண்டின் முதல் குடியரசு அரசியல் யாப்பு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. வெளிநடப்பு செய்தனர்.

அப்பொழுதிருந்து பாராளுமன்ற தமிழ் உறுப்பினர்களுக்கு பாராளுமன்றம் ஒரு அரசியல் பேசும் தக்க புகலிடமாகத் தென்படவில்லை. சிங்கள ஆதிக்கம் பெருகியது. அதே நேரம் காணி உச்ச வரம்புச் சட்டம், வீடுகள் உச்ச வரம்புச் சட்டம் ஆகியன 1972ம் ஆண்டின் பின்னர் வெளிவந்து சமூகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆகவே 1972ன் பின்னர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றமானது வெறும் அரசியல் பேசும் அரங்கமாகவே அமைந்தது. ஆனால் அவர்கள் பேச்சுக்கள் சிங்கள மக்களைப் போய் அடையவில்லை. இதற்குக் காரணம் எமது பாராளுமன்றமானது பெரும்பான்மையினரது அடாவடித்தனத்துக்குத் துணை போக சம்மதித்தமையே. ஜனநாயக முறைமைகள் பேணப்படவில்லை.

சிறுபான்மையினரின் கருத்துக்கள் பொருட்படுத்தப்படவில்லை. அத்துடன் சிங்கள ஊடகங்கள் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்களைத் தமது ஊடகங்களில் வெளியிடப் பின்நின்றனர்.

அவர்களின் ஆங்கிலப் பேச்சுக்கள் கூட கொழும்பு ஊடகங்களில் வெளிவருவது மிக அரிதாகவே இருந்தன. இதனால் தமிழ்ப்பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் சிங்கள மக்களைச் சென்றடையவில்லை. எவ்வளவு தான் உண்மைகளைத் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் எடுத்துரைத்தாலும் அவை சிங்கள மக்களைச் சென்றடையவில்லை என்பதே உண்மை.

தமிழர்கள் யாவரும் பயங்கரவாதிகளே என்ற எண்ணந்தான் சிங்கள மக்களிடையே மேலோங்கியது. இதனால் தமிழ் மக்களின் உண்மை நிலை பாராளுமன்றத்தினுள் முடங்கிக் கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு முறை சிங்கள ஊடகத்தின் கேள்விக்கு சிங்களத்தில் பதில் அளித்தேன். அப்போது அந்த சிங்கள ஊடகவியாளர் உங்கள் உறுப்பினர்கள் இது பற்றி எதுவுமே கூறவில்லையே என்றார்.

அப்போது நான் கூறினேன் ‘நாங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கூறிக்கொண்டு தான் இருக்கின்றோம். உங்களுக்குத்தான் விளங்கவில்லை’ என்றேன்.

ஆனால் 1972ன் முன்னர் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் பேசியவை பொதுமக்களைப் போய் அடைந்தன. இன்றோ ஆங்கிலத்தில் பேசினாலும் சிங்கள மக்களைச் சென்றடைவதில்லை. தமிழில்ப் பேசினாலும் எமது கருத்துக்கள் சிங்களப் பெரும்பான்மை மக்களை அடைவதில்லை.

இந்த கால கட்டத்தில்த் தான் தமிழ் இளைஞர்கள் அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்திக்கத் தொடங்கினர். பாராளுமன்றத்தில் எத்தகைய அறிவுக் கூர்மைசார் பேச்சுக்களை நிகழ்த்தினாலும் அவற்றால் பயன் ஏதும் புலப்படவில்லை என்று கண்டு வன்முறையை விடுதலை ஆயுதமாக்கினர்.

2009ல் இளைஞர்களின் ஆயுதங்கள் மௌனிக்கப்படும் வரை தமிழ்ஈழத் தமிழ் மக்களின் தீர்வு தொடர்பாக நாடாளுமன்றத்தின் வகிபாகம் மிகக் குறைந்தே காணப்பட்டது. எனினும் தமிழ்ப் பிரதிநிதிகள் 22 பேர் அப்போது இருந்துங்கூட அவர்களால் பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் தீர்வு தொடர்பாக எதுவும் செய்ய முடியவில்லை. காரணம் போர் நடந்துகொண்டிருந்தமையே.

2009ம் ஆண்டின் பின்னரான பாராளுமன்றத்தை எடுத்துப் பார்த்தோமானால் பாராளுமன்ற தமிழ் சிங்கள உறுப்பினர்களுக்கிடையேயான இடைவெளி நீண்டு கொண்டு செல்வதை அவதானிக்கலாம். மலையகத் தமிழர்கள் சிலர் சிங்களத்தில் பேசுவதை சிங்கள உறுப்பினர்கள் புரிந்து கொள்கின்றார்கள். ஆனால் தமிழில் பேசுவோரின் பேச்சின் மொழிப் பெயர்ப்பைக்கூட கேட்கும் பொறுமை சிங்கள உறுப்பினர்களுக்கு இல்லை என்றே சொல்லலாம்.

அடுத்து தமிழ்ப் பேசும் உறுப்பினர்களின் தொகை குறைந்து வருகின்றது. அரசாங்கம் தமிழ்ப் பேசும் உறுப்பினர்களின் கருத்துக்களைப் பொருட்படுத்துவதில்லை. ஆங்கிலம் கூட பல சிங்கள உறுப்பினர்களுக்கு புரிவதில்லை. ஆகவே தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தைப் பொறுத்த வரையில் பாராளுமன்றத்தின் வகிபாகம் குறைந்து கொண்டே செல்கின்றது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினரின் ஆர்ப்பாட்டங்கள், காணி அபகரிப்பை எதிர்க்கும் கிராமத்தவரின் எதிர்ப்புப் போராட்டங்கள், மீனவர்களின் போராட்டங்கள், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான நடைபவனி போன்றன மக்கள் தாங்களே களத்தில் முன் நின்று போராட வேண்டிய அத்தியாவசியத்தை அவரகளுக்கு உணர்த்தியுள்ளன.

மக்கட் தலைவர்களும் இதையுணர்ந்து பாராளுமன்றத்தில் இருந்து கொண்டே சர்வதேச ரீதியாக எவ்வாறு தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லலாம் என்;பது பற்றி சிந்தித்து செயலாற்றி வருகின்றார்கள்.

பாராளுமன்றத்தின் வகிபாகத்தை ஆராயும் போது ஒன்றை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பது ஒற்றையாட்சியின் கீழ்; நாம் கோருவது சமஷ;டி அல்லது இணைப்பாட்சியையே!

ஒற்றையாட்சி முறையைக் கைப்பற்றிக் கொண்டவர்கள் ஒரு போதும் அதன் இறுக்கத்தைத் தளரவிட முன்வரமாட்டார்கள். சமஷ;டி என்பது அந்த இறுக்கப் பிடியைத் தளரச் செய்வது. பாராளுமன்றத்தில் பங்கு சிங்களப் பிரதிநிதித்துவம் இருக்கும் போது சிங்கள மக்களின் அளுங்குப் பிடிக்குப் பாதிப்பு ஏற்படும் வண்ணம் எதனையும் செய்ய சிங்களப் பிரதிநிதிகள் எவரும் முன்வரமாட்டார்கள். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு உதாரணம் கூறுகின்றேன். பேரூந்தில் பயணம் செய்யும் போது பெண்களுக்கென்று சில ஆசனங்கள் அவற்றில் ஒதுக்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். அந்த ஆசனங்களில் ஆண்கள் உட்கார்ந்திருக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்.

கேட்டால் ‘இப்பொழுது தானே ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமஉரிமை தந்தாகிவிட்டதே. பின் எதற்கு உங்களுக்கு பிரத்தியேக ஆசனங்கள்’ என்று கூறி இருக்கைகளைத் தர மறுக்கின்றார்கள் ஆண்கள்.

வாகன சாரதி, கண்டக்டர் யாவருமே ஆண்கள். அவர்களும் சம உரிமை பற்றிக் கூறி எந்த நடவடிக்கைகளையும் எடுக்க மறுக்கின்றார்கள்.

ஆகவே அங்குள்ள பெரும்பான்மையினரான ஆண்களிடம் பேசிப் பயனில்லை. வேறு வழிமுறைகளையே பெண்கள் கையாள வேண்டும்.

நான் என்ன கூற வருகின்றேன் என்றால் ஒற்றையாட்சியின் கீழ் அதிகாரமும் பலமும் கொண்டவர்கள் இணைப்பாட்சிக்கு ஒத்துக் கொள்ளமாட்டார்கள். ஆகவே தான் சர்வதேச கருத்துப் பரிமாற்றங்களின் மூலம் நெருக்குதல்களை ஒற்றையாட்சியின் மீது ஏற்படுத்த வேண்டிய காலகட்டம் தற்போது உருவாகியுள்ளது. இதை உணர்ந்து தான் முதலமைச்சர் என்ற எனது பதவியைப் பயன்படுத்தி இங்கு வந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபை அலுவலர்களுக்கும் எமது நிலை பற்றிய விரிவான விபரங்களையும் புள்ளி விபரங்களையும் என் பதவியின் போது தந்துதவினேன். அப்போதைய செயலாளர் நாயகம் ஹுசெயின் அவர்கள் எமது ஆவணங்களைப் பரிசீலித்ததின் பலனாக எமக்கு சாதகமான கருத்துக்களை அக்காலகட்டத்தில் எடுத்தியம்பினார்.

சர்வதேச ரீதியாக நாங்கள் எமது அரசியல் நடவடிக்கைகளை எடுப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒரு சார்பான ஏதுவாக அமைகின்றது. அன்றாடப் பிரச்சனைகளை பாராளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து அவற்றைத் தீர்க்க முடியும். ஆனால் தமிழீழத் தமிழர்களின் அரசியல் தீர்வில் பாராளுமன்றத்தின் வகிபாகம் தற்போது மிகவும் வேதனைக்குரிய அவல நிலையையே அடைந்துள்ளது.

அத்துடன் இன்னுமொரு விடயம் ஆராயப்பட வேண்டியுள்ளது. வெளிநாடொன்றுடன் 13வது திருத்தச்சட்டம் பற்றிப் பேசி எமது ஆறு கட்சிகளும் துரோகம் இழைத்துவிட்டன என்று ஒரு சாரார் குற்றம் சாட்டி வருகின்றார்கள். அவர்கள் அவ்வாறு கூறுவதற்குக் காரணம் அரசாங்கத்தின் புதிய அரசியல் யாப்பு தமிழ் மக்கள் கோரிக்கைகளுக்கு இடமளிக்கும் என்று அரசாங்க அமைச்சர் ஒருவர் கூறியமையே.

இவர்களின் அரசியல் அப்பாவித்தனம் இதில் இருந்து புலப்படுகின்றது. புதிய அரசியல் யாப்பானது அதிகார மையத்தை மாகாணத்தில் இருந்து மாவட்டத்திற்கு மாற்ற இருக்கின்றது. மாவட்டங்களுக்கு அதிகாரப் பரவலாக்கத்தை உண்டுபண்ணி ‘பார்த்தீர்களா! உங்கள் கிராமங்கள்,மாவட்டங்கள் இனித் தம்மைத்தாமே ஆளப் போகின்றன’ என்று கூறப் போகின்றார்கள். வட கிழக்கு இணைப்பு, மாகாண அரசாங்கம் அல்லது அரசாங்கங்கள் என்பவற்றைத் தாண்டி மத்தியின் கைப்பொம்மைகளாக மாவட்டங்களை ஆக்கவிருக்கின்றார்கள்.

எம்மைக் குறை கூறுவோர் இலவு காத்த கிளிகளாக மாறப் போகின்றார்கள். புதிய அரசியல்யாப்பு எமது மாகாணசபை முறைமையை அடியோடு அழித்து இந்தியாவின் தலையீட்டையும் அண்டவிடாமல் செய்துவிடும். இதை உணர்ந்து எம்மைக் குறைகூறுவோர் விழித்துக் கொள்ள வேண்டும். பதின்மூன்றுக்குப் பதில் மாவட்ட அரசாங்கமே வரவிருக்கின்றது. மாவட்டங்கள் மத்தியின் அதிகாரத்தினுள் சிறைப்பட்டிருப்பன.

நாங்கள் எங்கள் மக்களுக்கு உணர்வூட்டுவதிலும் பார்க்க அவர்களுக்கு அறிவூட்ட வேண்டும். எமது அரசியல் போராட்டங்களுக்கு மக்களின் நேரடி நடவடிக்கைகளே வலுச் சேர்க்கக்கூடும். இனிவருங்காலத்தில் பாராளுமன்றத்தில் பேசுவதால் விளையும் நன்மை மிகக் குறைவே. ஆனால் மக்களுக்குப் பிழையான அரசியல் அறிவைப் புகட்டக்கூடாது. ஆகவே பாராளுமன்றம் தமிழீழத் தமிழர்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு தீர்வைத் தராது ஆட்சியில் உள்ளவர்களுக்கு நெருக்குதல்களை நாம் உருவாக்காவிட்டால்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கை பாராளுமன்றத்தில் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் !

பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வார்த்தை ரீதியான துன்புறுத்தலுக்கு உள்ளாவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிய தலைவர் இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, சபாநாயகருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சட்டத்தை உருவாக்கும் செயற்பாடுகளில் பங்களிப்பு செய்யும் பெண்களான மக்கள் பிரதிநிதிகள், அவ்விடத்திலேயே வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டால் அது ஒட்டுமொத்த சமூகத்துக்கும் ஒரு சீரழிவை ஏற்படுத்துவதாக அமையும் எனத் தெரிவித்துள்ளார்.

…………………………………………………………………………………………………………………………………………………………………………..

உலகின் பல நாட்டு பாராளுமன்றங்களுடன் ஒப்பிடும் போது இலங்கையின் பாராளுமன்றத்தில் பெண்கள் பிரதிநிதித்துவம் மிகக்குறைந்தளவானதாகவே உள்ளது. இது தொடர்பில் இலங்கை அரசியல் தலைவர்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. ஒரு நாட்டின் சட்ட உருவாக்க பீடத்திலேயே பெண்களுக்கான அங்கீகாரம் கிடைக்காது பெண் அடக்குமுறைகள் தொடருமாயின் சாதாரணமான இடங்களில் பெண்கள் மீதான அடக்குமுறைகள் எப்படி இருக்கும் என்பதை சொல்லித்தெரிந்து கொள்ளத்தேவையில்லை. இது தொடர்பில் அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் செயற்படுவது அவசியமாகும்.

“புலம்பெயர் தமிழர்கள் பலரும் இரட்டை பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ளவதில் ஆர்வமாகவே உள்ளனர்..” – நாடாளுமன்றில் இரா.சாணக்கியன் !

“புலம்பெயர் தமிழர்கள் பலரும் இரட்டை பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ளவதில் ஆர்வமாகவே உள்ளதால்  வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களுக்கு விரைவில் இரட்டைப் பிரஜாவுரிமையினை வழங்கி, தபால் மூலமாகவேணும் வாக்களிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(10) உரையாற்றிய போதே அரசாங்கத்திடம் அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

“அரசாங்கத்திடம் மிக முக்கியமான கோரிக்கை ஒன்றினை இந்த வேளையில் முன்வைக்க விரும்புகின்றேன். வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் பலரும் இரட்டைப் பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ளவதில் ஆர்வமாகவே உள்ளனர்.இரட்டைப் பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்வது இலகுவாக இருந்தாலும், அதற்கான கட்டணத்தினை குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும்.

இலங்கையில் தற்போது டொலருக்கான பெறுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்ற நிலையில், அரசாங்கம் இரட்டைப் பிரஜாவுரிமைக்கான கட்டணத்தினை குறைப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இரட்டைப் பிரஜாவுரிமையுள்ள அமைச்சர் உள்ள நாட்டில், வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர் தமிழர்கள் பலரும் இரட்டை பிரஜாவுரிமையினை பெற்றுக்கொள்ளவதில் ஆர்வமாகவே உள்ளனர். எனவே அவர்களுக்கு விரைவாக இரட்டைப் பிரஜாவுரிமையினை வழங்கி, வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

குறிப்பாக தபால் மூலமாகவேணும் அவர்கள் வாக்களிப்பதற்கு தேவையான நடவடிக்கையினை அரசாங்கம் செய்ய வேண்டும். இதுகுறித்து அரசாங்கம் உடனடியாக கவனம் செலுத்தும் என நம்புகின்றேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.