இரா.சாணக்கியன்

இரா.சாணக்கியன்

தமிழ் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டல் விடுத்த அமைச்சருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.? – சபையில் சாணக்கியன் கேள்வி !

தமிழ் அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டல் விடுத்த அமைச்சருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்.?  என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சபையில் வைத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக மேலும் உரையாற்ற அவர்,

“இன்று கொலை செய்து, கற்பழித்து, களவெடுத்த குற்றத்தில் சிறைத்தண்டனைப் பெறும் கைதிகளுக்காக சபையில், இன்று பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தங்களுடைய இனத்தின் விடுதலைக்காக போராடி, தன்னுடைய இனத்தின் அரசியல் உரிமைக்காகப் போராடி, 20 – 30 வருடங்களாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக நாம் சிந்திக்க வேண்டும்.

அண்மையில், அநுராதபுர சிறைச்சாலையில் துரதிஷ்டவசமானதொரு சம்பவம் இடம்பெற்றது. அரசியல் கைதிகளின் தலையில் துப்பாக்கி வைத்து மிரட்டல் விடுத்த குறித்த அமைச்சர் பதவி விலகியதாகக் கூறப்பட்டது. ஆனால், அவருக்கு எதிராக கட்சி என்ற ரீதியில் என்ன ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது?
சிறைச்சாலைக்குள் சவர்க்காரம் மற்றும் நீர் இல்லை என்று கூறுகிறார்கள். ஆனால் தமிழ் அரசியல் கைதிகளுக்கு இரவில் உறங்கக்கூட முடியாத நிலைமைக் காணப்படுகிறது.

இதுதொடர்பாக நீதி அமைச்சர் என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்? நாம் அவர்களுக்கு சவர்க்காரம் வேண்டும், நீர் வேண்டும் என்றுக் கூறவில்லை.

மாறாக அவர்களை நிம்மதியாக உறங்கவேனும் விட வேண்டும் என்று தான் கோருகிறோம்.
அவர்களின் வழங்குகளைத் தான் விரைவில் முடிக்க முடியாதுள்ளது. குறைந்தது இந்த நடவடிக்கையையேனும் செய்ய வேண்டும் என்று தான் அரசாங்கத்திடம் கேட்கிறோம்.

அதேநேரம், பதுளை சிறைச்சாலையில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இஸ்லாமிய கைதிகளும் தாக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் தொடர்பாக நீதி அமைச்சர் எடுத்த நடவடிக்கை என்ன? நிம்மதியாக சிறையிலேனும் அவர்களை இருக்க விட வேண்டும்.

மேலும், முகநூலில் கருத்துக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்ட குற்றத்திற்காக பல இளைஞர்கள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு பிணை வழங்க ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?

ஒருசிலருக்கு அரசாங்கம் பிணை வழங்கியிருக்கலாம். இவை ஐ.நா. மனித உரிமை பேரவையை ஏமாற்ற செய்த செயற்பாடுகளாகும். எனவே, அநுராதபுரம் மற்றும் பதுளை சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகளுக்கு நடந்த தாக்குதலுக்கான பதிலை அரசாங்கம் வழங்க வேண்டும்.

அவர்களை நிம்மதியாக சிறைகளில் உறங்கவேனும் அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும்” – எனத் தெரிவித்தார்.

“ ´ஹபாயா´ சர்ச்சை – சுயலாப அரசியலுக்காக பிரச்சினையாக்காதீர்கள்.” – இரா.சாணக்கியன்

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள சர்ச்சை குறித்து சுயாதீனமான முறையில் பக்கசார்பின்றி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இரா.சாணக்கியனின் பெயரை பயன்படுத்தி குறித்த விடயம் தொடர்பாக பகிரப்பட்டு வரும் கருத்துக்கள் குறித்து இன்று (05) ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள ´ஹபாயா´ சர்ச்சை பற்றிய உண்மைத்தன்மை குறித்து சரிவர தெரியாமையினாலேயே நான் அதுகுறித்து இதுவரை பேசாமல் இருந்தேன்.

எனினும் எனது பெயரினை பயன்படுத்தி சில விசமிகள் இனங்களுக்கிடையில் பிரிவினையினை வெளியிடும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதன்காரணமாகவே நான் தற்போது இதுகுறித்து சில கருத்துக்களை வெளியிட விரும்புகின்றேன்.

இது குறித்து சுயாதீனமான முறையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அத்துடன், பெரும் சர்ச்சையாகியுள்ள ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி விவகாரத்தினை சுயலாப அரசியலுக்காக பயன்படுத்துவதனை கைவிட வேண்டும்.

இவ்வாறான பிரச்சனைகள் இரு சமூக இணைப்பாட்டுடன் தீர விசாரிக்கப்பட்டு தீர்க்கப்பட வேண்டும்.’ எனத்தெரித்துள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மதுபோதையில் எனக்கூறிய அமைச்சர் டக்ளஸை சாடிய இரா.சாணக்கியன் !

யாழ்ப்பாணத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மீனவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறல்களுக்கு நிரந்தரமான தீர்வு மற்றும் வடமராட்சி கிழக்கு கடலில் இடம்பெற்ற மீனவர்கள் உயிரிழப்புக்கு நீதி ஆகியவற்றை கோரி தொடங்கப்பட்ட போராட்டம் 4வது நாளாக இன்றும் முழு வீச்சுடன் இடம்பெற்று வருகின்றது.

இந்தநிலையில் இன்றைய தினம் பருத்தித்துறை – சுப்பர்மடம் பகுதியில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள மீனவர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரனும், இரா.சாணக்கியனும் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதன்போது மீனவர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கருத்து வெளியிட்டிருந்தார்.

மீனவர்கள் மதுபோதையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த கருத்து குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீனவர்கள் மத்தியில் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்.

அத்துடன், மீனவர்களின் கோரிக்கையினை நிறைவேற்ற முடியாத அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடியாக பதவி விலக வேண்டும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

“ஜனாதிபதிக்கும் அவர் சார்ந்த கூட்டத்துக்கும் அறிவேயில்லை.” – இரா.சாணக்கியன்

“இன்று இந்த நாட்டிலே ஜனாதிபதிக்கும் அறிவில்லை, நிதியமைச்சருக்கும் அறிவில்லை, அவர்களின் பிரதிநிதிகளாக எமது மாவட்டத்தில் இருப்பவர்களுக்கு அறிவில்லை என்ற நிலைமையே இருக்கின்றது.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்று இந்த நாட்டிலே ஜனாதிபதிக்கும் அறிவில்லை, நிதியமைச்சருக்கும் அறிவில்லை, அவர்களின் பிரதிநிதிகளாக எமது மாவட்டத்தில் இருப்பவர்களுக்கு அறிவில்லை என்ற நிலைமையே இருக்கின்றது இன்று மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் என்று சொல்லி ஒரு கூட்டம் இங்கு இடம்பெற்றது. மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் எதுவும் இக்கூட்டத்தில் ஆராயப்படவில்லை. அதற்குக் காரணமாக நிதி இல்லை என்று சொல்லப்படுகின்றது.

அண்மையில் கௌரவ நீதியமைச்சர் வடக்கிற்கு சுற்றுப் பயணமொன்றை மேற்கொண்டிருந்தார். இதில் காணாமல் போனவர்களின் விடயம் தொடர்பில் ஆராய்ந்துள்ளதாகவும் சொல்லப்படுகின்றது. உண்மையில் இந்த உறவுகள் காணாமல் போனவர்கள் அல்ல அவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்பதை அவர் மறந்துவிடக் கூடாது. காணாமல் போனவர்களுக்கு ஒரு லட்சம் ரூபா வழங்குவதாகத் தெரிவித்துள்ளார். இந்த ஒரு லட்சம் ரூபாய்க்காக தாய்மார் இன்று வரை வீதியில் போராடவில்லை என்பதையும் அவர் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அத்துடன் நேற்றைய செய்தியில் பார்த்திருந்தேன் கௌரவ நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் தாங்கள் வடகொறியாவில் இருந்து கறுப்பு டொலர்களைப் பயன்படுத்தி யுத்தத்திற்கு ஆயுதங்கள் பெற்றுள்ளதாகத் தெரிவித்திருந்தார். ஒரு நாட்டின் நிதி அமைச்சர் அவர்கள் எவ்வாறு இவ்வாறானதொரு கருத்தைச் சொல்ல முடியும்.

பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ஒருநாட்டில் கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தி ஆயுதம் வாங்கி இந்த யுத்தத்தை நடாத்தியதாகச் சொல்லுகின்றார்கள். இனிவரும் காலங்களில் இன்னும் இன்னும் எத்தனை உண்மைகளை நாங்கள் அறியக் கூடியதாக இருக்குமோ தெரியவில்லை.

நீதி அமைச்சர் சொல்லுகின்றார் காணாமல் போனாருக்கு நட்டஈடு கொடுப்பதாக, அதே நேரத்தில் நிதி அமைச்சர் வடகொறியாவில் இருந்து கறுப்பு டொலர் மூலம் ஆயுதம் வாங்கியதாகச் சொல்லுகின்றார். இந்த கருத்தைக் கொண்டு கறுப்புப் பணத்தைப் பயன்படுத்தியமை தொடர்பில் அவரை முதலில் விசாரணை செய்ய வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகள் இதனைக் கவனிக்க வேண்டும்.

தொடர்ந்தும் இந்த அரசாங்கம் இவ்வாறு ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற விடயங்களை வன்மையாகக் கண்டிக்க வேண்டும். எமது மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் சொன்னார் பொங்கலுக்குப் பிறகு எமது மாவட்டத்தில் பல மில்லியனர்கள் உருவாகுவார்கள் என்று. ஆனால் இன்று மாவட்டத்தில் உருவான ஒரு மில்லினர் கூட இல்லை. இன்று மாவட்ட விவசாயிகள் எல்லாம் மிக மோசமான நிலையில் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இன்று இந்தக் கூட்டத்தில் கூட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்குவதைக் கூட நாங்களே முன்வைக்க வேண்டி இருக்கின்றது.

அதே நேரத்தில் இன்று ஒமிக்கறோன் மட்டக்களப்பில் அதிகமாக இருக்கும் என்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அப்படியான ஒரு நேரத்தில் அவசரமாக இந்தக் கூட்டம் எதற்காக? இன்று முக்கியமானவர்கள் பலரை இந்தக் கூட்டத்திற்கு அழைக்கவும் இல்லை.

வழமையாகப் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் நடைபெற்று அதில் தீர்மானிக்கும் விடயங்களை மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கொண்டு வருவதுதான் வழமை. ஆனால் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று நடந்திருக்கின்றது. பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் நாளையும் இனிவரும் காலங்களிலும் நடக்க இருக்கின்றன. இவ்வாறானதொரு குழப்ப நிலை இந்த மாவட்டத்தில் இருக்கின்றது.

கூட்டங்களில் பாராளுமன்ற உறுப்பினர்கள் நாங்கள் கதைக்க வேண்டும் என்றால் கையை உயர்த்திக் கதைக்க வேண்டுமாம். இது சந்திரகாந்தன் அவர்களின் பிறந்தநாள் விழா அல்ல நாங்கள் கையை உயர்த்திவிட்டுக் கதைப்பதற்கு.

இன்று இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் பல விடயங்களுக்குத் தீர்வுகளைத் தருவதாகச் சொல்லியிருந்தார். விசேடமாக ஐ புரொஜக்ட் நிதியினை வைத்திருக்கும் நபரிடமிருந்து அந்த நிதியை மீள எடுத்து அந்தத் திட்டத்திற்கு வழங்குவதற்கான அனுமதியை அவர் வழங்கியிருந்தார். அதேவேளை கெவிலியாமடுவில் இடம்பெறும் சட்டவிரோத குடியேற்றங்களைத் தடுப்பது தொடர்பில் ஆராய்வதற்கு நாங்கள் விலியுறுத்தயிருந்தோம். அம்பிட்டிய சுமணரத்தின தேரர் எமது பண்ணையாளர்களின் மாடுகளை வலுக்கட்டாயமாகப் பறித்தமை தொடர்பிலும் நாங்கள் தெரியப்படுத்தியிருந்தோம். ” எனத்தெரிவித்தார்.

கணக்கு பார்க்க தெரியாத ஜனாதிபதி கோட்டாபாயராஜபக்ஷ !

ஜனாதிபதிக்கு கணக்கு பார்ப்பதற்கு தெரியாது போல் விளக்குகின்றது என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற கருப்பு பொங்கள் நிகழ்வில் கலந்துகொண்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நேற்றைய தினம் ஜனாதிபதி அவருடைய விசேட உரையில் ஆவேசமாக பல கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றார். தனது அரசாங்கத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து 95 ரூபாய்க்கு நெல்லினை கொள்வனவு செய்வதாக தெரிவித்திருக்கின்றார்.

நான் நினைக்கின்றேன் ஜனாதிபதிக்கு கணக்கு பார்க்க தெரியாது போல் விளங்குகின்றது. விவசாயிகளின் ஒரு கிலோ நெல்லுக்கு 95 ரூபாய் கூட கொடுத்தால் அவர்களுடைய முதலீடு கூட பெற முடியாது என்பது ஜனாதிபதிக்கு விளங்கவில்லை. கணக்கு வழக்கு தெரியாத ஒருவர் ஜனாதிபதியாக வந்தால் இந்த நிலை தான் வரும் .

அதுபோன்று அவருடைய அல்லக்கைகள் இந்த மாவட்டத்தில் இருக்கும் அரசியல்வாதிகளுக்கு ஒரு கணக்கும் தெரியாமல் போயுள்ளது என தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் நெல்லின் விலை அதிகரித்து பஞ்சம் ஏற்படும்.” – சாணக்கியன் எச்சரிக்கை !

நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்கக்கூடிய நிலை ஏற்படும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எச்சரித்துள்ளார்.

திருக்கோவில் காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த கல்முனை பாண்டிருப்பு பகுதியைச் சேர்ந்த காவல்துறை உத்தியோகத்தரின் இறுதி கிரியை நேற்று (27) இடம்பெற்றது.

அதில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், தேசியப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதாக அறிவித்த அரசாங்கம், அதனைச் செய்வதற்குத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

நெல்லின் விலை அதிகரித்து பஞ்சம் ஏற்படுவதோடு இதன் காரணமாகக் கொள்ளை சம்பவங்களும் அதிகரிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

“நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் என்னால் படம் பார்க்க முடியவில்லை.” – இரா.சாணக்கியன்

“தமிழ் இளைஞர்கள் எதிர்காலத்தில் ஒன்றுபட்டு செயற்படாவிட்டால் இன்னும் 20வருடத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் இல்லாமல்போகும் நிலையே ஏற்படும்.” என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு பகுதிக்கு நேற்று முன்தினம் (செவ்வாய்கிழமை) விஜயம் செய்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து மேலும் வெளியிட்ட இரா.சாணக்கியன்,

“நாங்கள் நாடாளுமன்ற தேர்தலின்போது எதிர்பார்க்கவில்லை இந்த மொட்டு அரசாங்கம் கிட்டத்தட்ட மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்று. தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு 20ஆசனங்கள் கிடைக்கும், நாங்கள் தீர்மானிக்கும் சக்தியாககூட இருக்கலாம் என்று நம்பிக்கையுடனே நாங்கள் அந்த தேர்தலில் போட்டியிட்டோம்.

நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்டனர். நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருவர் அரச தரப்பிலும் இருவர் தமிழ் தேசிய கூட்டமைப்பிலும் உள்ள நிலையில் அதுவே இந்த மாவட்டத்தின் துரதிர்ஸ்டவசமாக மாறியுள்ளது.

இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலே இந்த மாவட்டத்தில் உள்ள அரசாங்க அதிபரே முதலாவது அரசியல் கைதியாகவுள்ளார். சிறையில் அரசியல் கைதியைவிடவும் அவர் ஒரு அரசியல் கைதியாகவுள்ளார். நாங்கள் சிலவேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு முன்மொழிவுகளைக்கேட்டால் அது அரசாங்கத்துடன் உள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிரச்சினையாகவுள்ளது. அவ்வாறு வழங்ககூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாங்கள் நடைமுறைக்கு சாத்தியமான விடயங்களை நாங்கள் பேசவேண்டும். அரசியல் தீர்வுக்கான ஆதரவினை நாங்கள் இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கவேண்டும். தேசிய ரீதியான பொறிமுறையொன்றை நாங்கள் மாகாணசபை ஊடாக உருவாக்கமுடியும்.

இன்று தீர்மானங்கள் கொழும்பிலிருந்தே எடுக்கப்படுகின்றன. எங்களது கைகளில் அதிகாரம் இருக்குமானால் நாங்கள் எதனையும் செய்யமுடியும். இன்று கிழக்கு மாகாணசபைக்கு மத்திய அரசாங்கத்தினால் 10இலட்சம் ரூபாய் நிதிமட்டுமே வழங்கப்படுகின்றது. இதனைவைத்து எதனையும் செய்யமுடியாது.

எனக்கு தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராகயிருக்கவேண்டும் என்று ஆசையில்லை. நான் எனது வயதில் நாடாளுமன்ற உறுப்பினராகயிருப்பதன் காரணமாக பல இழப்புகளை எதிர்கொண்டுள்ளேன். ஒரு படம் பார்க்கமுடியாது நண்பர்களுடன் சுற்றுலா செல்லமுடியாது. அவ்வாறு தெற்கு பக்கம் சென்றால் புகைப்படம் எடுப்பதிலேயே எனது நேரம் செலவாகிறது.

சர்வதேசம் மூலமே எமக்கான தீர்வுக்கான அழுத்தங்களை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கமுடியும். அதற்கான ஆதரவு தளம் இளைஞர் மத்தியில் இருக்கவேண்டும். அபிவிருத்தி என்பது மழைகாலத்தில் ஆட்டுக்குட்டி போடுவதும் கொங்கிரி ரோட் போடுவது மட்டுமல்ல.

தமிழ் இளைஞர்கள் எதிர்காலத்தில் ஒன்றுபட்டு செயற்படாவிட்டால் இன்னும் 20வருடத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் இல்லாமல்போகும் நிலையே ஏற்படும். கிழக்கு மாகாணத்தினைப்பொறுத்தவரையில் 2008 தொடக்கம் 2012ஆம் ஆண்டுவரையிலிருந்தது தமிழ் முதலமைச்சர், 2012 தொடக்கம் 2017வரையிலிருந்தது முஸ்லிம் முதலமைச்சர், இன்று அரசாங்கத்தின் திட்டம் கிழக்கு மாகாணத்தில் மூவின மக்களும் வாழும் என்ற அடிப்படையில் எந்த சமூகத்திலிருந்து முதலமைச்சர் வரவில்லையோ அந்த சமூகத்திலிருந்து முதலமைச்சர் வரவேண்டும் என்ற இலக்குடனேயே செயற்பட்டுவருகின்றது.’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

“வடக்கிலும், கிழக்கிலும் தமிழர்கள் இல்லாத நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம்.” – இரா. சாணக்கியன்

“வடக்கிலும், கிழக்கிலும் தமிழர்கள் இல்லாத நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம்.” என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்தார்.

இன்று (19) பாடசாலை நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

எங்கள் கைகளில் அதிகாரம் கிடைக்கவில்லை. கிடைக்கவில்லை என்பதற்காக அதிகாரம் வேண்டாம் என்று எங்களினால் கூற முடியாது. அதிகாரம் எங்களுக்கு தேவையாக இருக்கிறது. மயிலத்தமடு பிரச்சினைக்கு நானும் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாவும் இணைந்து வழக்கு தாக்கல் செய்துள்ளோம். எங்களின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆஜராகி வழக்கு பேசி வருகிறார். அந்த வழக்கை கொண்டு இவர்களை வெளியேற்றுவது மட்டுமல்ல நோக்கம். அந்த இடத்தை மேய்ச்சல்தரையாக்க வேண்டும்.

தமிழர்களின் மேச்சல்தரையான மயிலத்தமடு மாதவனை, கெவிலியாமடு திபுலான, வட்டமடு போன்ற அனைத்தையும் பிரித்து ஏனைய சமூகங்களுக்கு கொடுக்க முனைப்பு நடந்துகொண்டிருக்கிறது. இதனை எங்கள் மக்கள் உணரவேண்டும். இவற்றெல்லாம் மாற்றியமைக்க அரசியல் அதிகாரம் எங்களின் கைக்கு வரவேண்டும். காணியதிகாரம், பொலிஸ் அதிகாரம் எங்களுக்கு தேவை. பொலிஸ் அதிகாரம் எங்களிடம் இருந்தால் நாங்கள் விடயங்களை கையாளுவோம். இப்போது எங்களின் பிரச்சினைகளுக்கு கொழும்பில் இருந்துதான் அறிவித்தல்கள் வருகிறது.

வடக்கிலும், கிழக்கிலும் தமிழர்கள் இல்லாத நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம். வடக்கு கிழக்கு என்று நாங்கள் பார்க்க முடியாது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் தமிழர்கள் பூர்விகமாக வாழ்ந்த பிரதேசங்கள். அது எங்களின் நிலம் அதனை பாதுகாக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு சில வேலைத்திட்டங்களை செய்து கொண்டிருக்கிறது என்றார்.

“கனடாவில் அடி வாங்கிவிட்டு இங்கு வந்து பேசிக்கொண்டிருக்கிறார் சாணக்கியன்.” – ஹாபீஸ் நஷீர் அஹமட்

“கனடாவில் அடி வாங்கிவிட்டு இங்கு வந்து பேசிக்கொண்டிருக்கிறார் சாணக்கியன்.” என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்தி குழு தலைவருமான ஹாபீஸ் நஷீர் அஹமட் தெரிவித்தார்.

ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் 2020ம் ஆண்டு சாதனை படைத்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று இடம் பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக காணி பங்கீட்டில் பெரிய இனவாதம் இடம் பெற்றுள்ளது. ஒரு சமூகத்தை படுகுழியில் தள்ளிய விடயம் வடக்கில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இருக்கலாம், அது ஆயுத கலாசாரத்தில் இடம் பெற்றது.

ஆனால் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம் பெற்றது வேறு. அரசியல் அதிகாரங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக முஸ்லிம் ஒருவர் இல்லாமல் போனது இந்த முறை மாத்திரம் தான் அப்படி இருந்த போதும் கடந்த காலங்களில் எமது காணிகள் எப்படி பறிபோனது இது ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயம்.

இதனை பேச வேண்டிய தேவை உள்ளது ஏன் என்றால், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் கனடாவில் அடிவாங்கி விட்டு இங்கு வந்து நாடாளுமன்றத்தில் பேசுகிறார்.  “முஸ்லிம்களுக்கு நாட்டில் காணிகள் இல்லை மட்டக்களப்பில் பிரச்சினை இல்லை. முஸ்லிம்கள் பிள்ளையானுடன் சேர்ந்து காணி இல்லை என்று சொல்லி நாடகம் ஆடுகிறோம். காணி இல்லை என்று சொல்லி அவர் சொன்னது பிரச்சினை இல்லை.

அவர் சொன்ன கருத்திற்கு இந்த பிரதேசத்தில் இருந்து எவராவது ஏன் என்று கேட்காமல் கோமா நிலையிலா இருந்தீர்கள் என்ற கவலை தான் எனக்கு உள்ளது.ஒரு இனத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமையை கேட்பது இனவாதம் அல்ல மாறாக இன்னும் ஒரு இனத்துக்கு கிடைக்க இருக்கின்ற நியாயமான உரிமையை கிடைக்காமல் தடுப்பதுதான் இனவாதமாகும் ” என அவர் தெரிவித்துள்ளார்.

“நசீர் அஹமட் உடான பகிரங்க விவாதத்திற்கு தான் தயார்.” – இரா.சாணக்கியன்

நசீர் அஹமட் உடான பகிரங்க விவாதத்திற்கு தான் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அழைப்பு விடுத்திருந்தார்.

வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கடந்த 10ஆம் திகதி நடத்தப்பட்ட விவாதத்தின் போது இரா.சாணக்கியன் வெளியிட்ட கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு பகிரங்க விவாதத்திற்கான அழைப்பை விடுப்பதாக நசீர் அஹமட் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்கள், நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையானுடன் சேர்ந்து காணி பிரச்சினை தொடர்பில் நாடகம் ஆடுகின்றனர் என இரா.சாணக்கியன் தெரிவித்த கருத்து தொடர்பில் பகிரங்கமாக விவாதிக்க வேண்டும் என தாம் விரும்புவதாக நசீர் அஹமட் கூறியிருந்தார். மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதி என்ற வகையில், மாவட்ட முஸ்லிம்களுக்கு காணி தொடர்பில் இழைக்கப்பட்ட அநீதிகளை நாட்டு மக்களுக்கு வெளிக்கொணர வேண்டிய தேவை தமக்குள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் இதுகுறித்து இன்று(புதன்கிழமை) ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இரா.சாணக்கியன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நசீர் அஹமட்டினை கண்டால் கூட்டி வாருங்கள், அவரை விவாதத்திற்கு அழைத்து வாருங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிரங்க வெளியில் விவாதத்திற்கு அழைப்பு விடுத்ததன் பின்னர், நசீர் அஹமட் ஊடகவியலாளர்களின் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்க மறுப்பது ஏன் எனவும் இரா.சாணக்கியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

எந்தவொரு ஊடகமாக இருந்தாலும், குறித்த ஊடகம் ஏற்பாடு செய்யும் பகிரங்க விவாதத்தில் பங்கேற்பதற்கு தான் தயாராகவே இருப்பதாகவும் இரா.சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.