இரா.சாணக்கியன்

இரா.சாணக்கியன்

“இலங்கையில் இடம்பெறுகின்ற மனித உரிமைக்கு எதிராக எம்முடன் இஸ்லாமிய நாடுகளும் ஒன்று சேர வேண்டும்” – இரா.சாணக்கியன்

“இலங்கையில் இடம்பெறுகின்ற மனித உரிமைக்கு எதிராக எம்முடன் இஸ்லாமிய நாடுகளும் ஒன்று சேர வேண்டும்” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை ஊடக அமையத்தில் நேற்று (01.01இ2021)  இடம்பெற்ற சமகால அரசியல் தொடர்பாக விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது,

“இந்த வருடம் மூன்றாவது மாதம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை கூடவுள்ளது. கடந்த அரசாங்கத்தில் இப்பேரவையில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பில் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.ஆனால் தற்போதைய புதிய அரசாங்கம் இப்பேரவையில் இருந்து வெளியேறுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் ஏனைய தமிழ் அரசியல் தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பாகிய நாமும் சகல தமிழ் தரப்பினரும் தற்போது இணைந்து ஒரு முன்மொழிவினை இப்பேரவையில் முன்வைக்கவே விரும்புகின்றோம்.

இது தொடர்பில் புலம்பெயர் அமைப்புகள் உள்ளிட்ட ஏனைய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். சில அரசியல் தரப்பினர் அரசியல் இலாபங்களுக்காக இவ்விடயத்தில் செயற்பட முயல்கின்றனர். இந்த பேரவையில் 47 நாடுகள் வாக்களிக்கவுள்ளன. இதில் 24 நாடுகளின் ஆதரவினை நாம் பெற்றால் மாத்திரமே இலங்கைக்கு எதிரான பிரேரணையை நகர்த்த முடியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த காலங்களில் காலஅவகாசம் கேட்டுள்ளதாக கருத்துக்கள் வெளிவந்தன. இவை முற்றுமுழுதான பொய்கள் ஆகும். இப்பொய்களை முழுமையாக நாம் நிராகரிக்கின்றோம். இப்பேரவையின் விடயங்கள் குறித்து அறிக்கை விடும் சிலருக்கு இப்பேரவை எவ்வாறு இயங்குகின்றது என கூட தெரியாமல் உள்ளது.

அண்மையில் ஒரு சிலர் சர்வதேச நீதிமன்ற விசாரணையை இவ்விடயத்தில் கோருகின்றனர். அவ்வாறு இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதென்றால் இன்னுமொரு நாடு பிரேரணையை முன்வைக்க வேண்டும். யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் கடந்தும் இனி ஒரு நாடு வந்து பிரேரணை சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்கும் என்பதை நாம் நம்பவில்லை. இதை சிலர் குறுகிய இலாப அரசியலுக்காக தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் புதிய அரசியல் சீர்திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்து நாம் இப்பேரவையினை பயன்படுத்த முடியும். 11 வருடங்களாக எமது உறவுகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மறக்காது இவ்விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும். நீதி கிடைக்கும் வரை நாம் போராட வேண்டும்.

இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் முஸ்லீம் நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையை இப்பேரவையின் நடவடிக்கையில் இருந்து காப்பாற்ற இலங்கை அரசாங்கம் முஸ்லீம் நாடுகளின் ஆதரவினை பெற இஸ்லாமிய மதகுருக்களை அங்கு அழைத்து சென்றிருந்துடன் ஆதரவு கோரிக்கையை முன்வைத்திருந்தது. இதனால் இஸ்லாமிய நாடுகளும் அதன்போது ஆதரவாக வாக்களித்திருந்தது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற போதிலும் அரசாங்கத்தை காப்பாற்ற வாக்களித்திருந்தனர். ஆனால் இன்று அச்சமூகத்திற்கு எதிராக மனித உரிமை மீறல் நடைபெறுகிறது. அதாவது நல்லடக்கம் செய்யும் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது.

இதனால் இலங்கையில் இடம்பெறுகின்ற மனித உரிமைக்கு எதிராக எம்முடன் இஸ்லாமிய நாடுகளும் ஒன்று சேர வேண்டும். 2013 ஆண்டு திகண அளுத்கம வில் தொடங்கி தற்போது ஜனாசா வரை இடம்பெற்று வருகின்ற மனித உரிமை மீறல்கள் குறித்து முறைப்பாடு செய்ய முன்வர வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்கும் வரையில் இந்த போராட்டத்தினை எந்த காலகட்டத்திலும் கைவிடாது முன்கொண்டு செல்வேன்” – இரா.சாணக்கியன் உறுதி !

“வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி கிடைக்கும் வரையில் இந்த போராட்டத்தினை எந்த காலகட்டத்திலும் கைவிடாது முன்கொண்டு செல்வேன்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கிலுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தக்கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

பல வருடங்கள் கடந்தாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதியினைப் பெற்றுக்கொடுக்கும் வரையில் தாம் தளர்வடைய போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீதி கிடைக்கும் வரையில் இந்த போராட்டத்தினை எந்த காலகட்டத்திலும் கைவிடாது முன்கொண்டு செல்வேன். பேரினவாத அரசாங்கம் நாட்டில் தலைதூக்கியுள்ள நிலையில், எமது நாட்டில் எமக்குரிய நீதி கிடைப்பதென்பது சந்தேகத்திற்குரியதாகும்.

எனவே தமிழ் மக்களின் போராட்டங்களை சர்வதேச பார்வைக்கு கொண்டுவருவது தலையாய கடமையாகும். பிரச்சினைகள் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டும். சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கொள்ளப்படும் போதே நீதிகிடைப்பது சாத்தியமாகும்” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

“நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவுள்ள தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் கட்டாயம் உயர்த்தப்பட வேண்டும்” – இரா.சாணக்கியன்

“நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவுள்ள தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் கட்டாயம் உயர்த்தப்பட வேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்று (18.12.2020) மலையகத்திற்கு விஜயம் செய்திருந்த நிலையில், அதுகுறித்து கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“இன்றைய தினம் மலையகத்திற்கு சென்ற வேளை, சில விசேட கோரிக்கைகளுக்கு அமைவாக பலரை சந்தித்து பேசினேன்.

பல பிரச்சினைகளை எனது கவனத்துக்கு கொண்டு வந்தனர். அதில் மிகவும் பிரதான பிரச்சினையானது எமது நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருளான தேயிலை உற்பத்தியில் மிக முக்கிய பங்கு வகிக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினை ஆகும்.

தற்போதைய அரசாங்கமானது, மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக உத்தரவாதம் அளித்துள்ளது. ஆனால் தொழிலாளர்களின் தற்போதைய கூற்றுப்படி மாதத்திற்கு 10,000 தொடக்கம் 12,000 கிடைப்பதாக சொல்கின்றனர்.

அதுவும் 26 வேலைநாட்களுக்குரிய தொகையாக இதனை வழங்குகின்றனர். இதனடிப்படையில் ஒருவரின் நாள் வருமானமானது 500 ரூபாய்க்கு குறைவாகவே காணப்படுகின்றது.

அதிலும் சில கழிவுகளை கழித்துவிட்டுத்தான் சம்பளத்தினை வழங்குகின்றனர். இவ்வாறான பிரச்சினைகளை அரசாங்கம் முக்கியமாக கவனித்து, அவர்களுக்கு உரிய சரியான சம்பளத்தை உறுதி அளித்தது போன்று மிக விரைவில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எமது நாட்டின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்று  தேயிலை ஆகும். அத்துடன் உலக சந்தையில் இலங்கை தேயிலைக்குரிய மதிப்பு மிக அதிகமாகும். இவற்றுக்கு பல தலைமுறைகளாக பெரும் பங்காற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் கட்டாயம் உயர்த்தப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களைக் கைது செய்ய முடியாத பொலிஸார் பிரபாகரனின் புகைப்படத்தை பிரசுரித்தவர்களைப் கைசெய்வது என்பது அரசின் இயலாமையை காட்டுகின்றது” – பாராளுமன்றில் இரா.சாணக்கியன் !

“போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களைக் கைது செய்ய முடியாத பொலிஸார் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை பிரசுரித்தவர்களைப் பொலிஸார் கைசெய்வது என்பது அரசின் இயலாமையை மூடி மறைக்கின்றனர்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று(05.12.2020) உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நான் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வந்ததாக சிலர் இங்கு கூறுகின்றனர். நான் தேர்தலில் போட்டியிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டே இந்த பாராளுமன்றம் வந்துள்ளேன் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

மட்டக்களப்பில் இளைஞர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் 26, 27, 28ஆம் திகதிகளில் முகப்புத்தகத்தில் சில பதிவுகளை இட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 29 வயதான அரச ஊழியர் ஒருவரும் அடங்குகின்றார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தையும், மாவீரர் நாள் பதிவுகளையும் முகப்புத்தகத்தில் பதிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களைக் கைதுசெய்துள்ள அரசு, அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

முகப்புத்தகத்தில் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை பிரசுரித்தவர்களைப் பொலிஸார் கைசெய்வது என்பது அரசின் இயலாமையை மூடி மறைக்கும்படியான செயலாகும். இவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாகப் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களைக் கைதுசெய்து சிறையில் அடையுங்கள்.

அரசின் மீது குற்றச்சாட்டுக்களை வைக்க வேண்டும் என்பதல்ல எனது நோக்கம். நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் இருக்கின்றது என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அதேபோன்று அரசு ஏனைய விடயங்களை மறைப்பதற்காக இவ்வாறு அப்பாவி இளைஞர்களைக் கைதுசெய்வதை நிறுத்த வேண்டும். கார்த்திகை விளக்கீடு என்பது ஒரு பண்டிகை. இப்படியான பண்டிகை நாளில் பொலிஸார் கார்த்திகை தீபம் ஏற்றத் தடை ஏற்படுத்தியுள்ளனர். இதனை ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒருசில இடங்களில் மக்கள் விளக்குகளை – தீபங்களை ஏற்றுவதற்காகச் சிறிய அலங்காரங்களைச் செய்திருந்தனர். இதனையும் பொலிஸார் எட்டி உதைத்துள்ளனர். நீங்கள் உண்மையான பெளத்தர் என்றால் மனிதத்துவத்துக்கு மரியாதை செலுத்த முதலில் பழகிக்கொள்ளுங்கள்.

உண்மையிலேயே இந்த நாட்டிலுள்ள சிங்கள மக்கள் பாவம். நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் உரையாற்றியபோது, சரத் வீரசேகர உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர். கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்தமை காரணமாகவே இவ்வாறு எதிர்ப்பை வெளியிட முடிந்தது எனக் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். இவ்வாறு செய்து கொண்டு நீங்களே நாட்டில் பிரச்சினைகளை உரூவாக்குகின்றீர்கள்.

நீங்கள் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து சஹ்ரானை உருவாக்கியதாகக் கூறுகின்றீர்கள். நீங்கள் நாட்டில் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றீர்கள். நீங்களே சஹ்ரானை உருவாக்கினீர்கள். நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைப் புதைப்பதற்குத் தொடர்ந்தும் மறுப்புத் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

அவர்கள் தங்களுக்கு இறுதியாகவுள்ள உரிமையையே கேட்கின்றனர். அதனை வழங்குவதற்குக்கூட இந்த அரசு தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.இவ்வாறான செயற்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” – என்றார்.

“நினைவேந்தல் தடைகளுக்கும் இளைஞர்கள் கைதுக்கும் ஆளும் கட்சியுடன் இணைந்துள்ள தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு வாக்களித்த மக்களும் இதற்கான பொறுப்பினை ஏற்க வேண்டும்” – இரா.சாணக்கியன் 

மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க முடியாது போனமைக்கு, அரசாங்கத்துக்கு வாக்களித்த தமிழ் மக்களும் பொறுப்புக் கூற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஊடக சந்திப்பில் இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது,

“மட்டக்களப்பு மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்னர் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெற்றோருக்கு எனது கவலையினை தெரிவித்துக்கொள்கின்றேன். மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமன்றி கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலைப்புலிகளின் தலைவரின் படத்தினை இணைத்து பதிவிட்டிருந்ததையும் குற்றமாக கொண்டு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, ஒரு சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நல்லாட்சி இருந்த காலப்பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சித்து ஒரு மாற்றம் உருவாகவேண்டும் என்று தமிழ் தேசியத்திற்கு எதிராக வாக்களித்த ஒவ்வொருவரும், இந்த இளைஞர் கைது விடயத்தில் பொறுப்புக்கூறவேண்டும். கடந்த ஆட்சிக்காலத்தில் நல்லிணக்கம் இருந்ததன் காரணமாக நாங்கள் சுதந்திரமாக செயற்பாடுகளை முன்னெடுத்தோம்.

மாவீரர் தின நாட்களில் வீடுகளில் தமது உறவுகளை நினைவுகூர்ந்ததை கூட வீடுகளுக்குள் புகுந்து தடைசெய்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. மாவீரர்களை நினைவுகூருதல் என்பது 1989ஆம்ஆண்டில் இருந்து நடைபெற்று வருகின்ற விடயம். ஆனால் இன்று மாவீரர்களை நினைவுகூருவதை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. தமிழர்களின் உணர்வின் அடையாளங்கள் அழிக்கவேண்டும் என்பதற்காக பல திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதற்கான பொறுப்பு  தற்போதைய அரசாங்கத்துக்கு வாக்களித்தவர்களையே சேரும்.

அதாவது, ஒரு தாய் தனது பிள்ளையினை நினைவுகூரமுடியாத சூழ்நிலையினை அமைத்துக்கொடுத்த ஆளும் கட்சியுடன்இணைந்துள்ள தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு வாக்களித்த மக்களும் இதற்கான பொறுப்பினை ஏற்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு ஒரு இலட்சம் ரூபாய் வாங்கப்பட்டுள்ளது” – பாராளுமன்றில் இரா.சாணக்கியன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பாராolgளுமன்றத்தில் நேற்றைய தினம் மாவீரர்களை நினைவு கூர்ந்திருந்து தன்னுடைய பாராளுமன்ற உரையை நிகழ்த்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“பிள்ளையான் சிறையிலிருந்து வருகை தந்து ஆணைக்குழுவுக்கு செல்கின்றார். பின்னர் கூட்டங்களில் கலந்துகொள்கின்றார். அதனைத் தொடர்ந்து காரியாலத்துக்கு செல்கின்றார். அங்கு மக்களை வருமாறு அழைத்து அவர்களுடன் கலந்துரையாடுகின்றார். இவ்வாறு சிறையிலுள்ள கைதிகளுக்கு செய்ய முடியுமா? ஏனைய குற்றங்கள் புரிந்த சிலரை அவர்களது பெற்றோரினால் கூட காண முடியாது. காரணம் கொரோனா அச்சுறுத்தலாகும்.

ஆனால், பிள்ளையான் மட்டக்களப்பு வருகின்றார், ஆலய வழிப்பாட்டுக்கு செல்கின்றார். நிகழ்வுகளில் பங்கேற்றுகின்றார். இதனை எவ்வாறு செய்ய முடியும். இவ்வாறான செயற்பாடுகளை செய்வதற்கு எவ்வாறு இடமளிக்க முடியும்.

83 கலவரத்தினைத் தொடர்ந்து நாட்டை விட்டுச் சென்றவர்கள் நாட்டுக்கு திரும்பிவர வேண்டுமாயின் முதலில் அவர்களுக்கு இங்கு வாழ்வதற்கு முடியும் என்ற எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும்.

உண்மையாக இங்கு இருக்கின்றவர்கள் ஜனாதிபதி, தோல்வியடைந்துள்ளார். தோல்வியடையவில்லை என பேசுகின்றார்கள். ஜனாதிபதி இன்னும் தோல்வியடையவில்லை. ஏனென்றால் ஒரு வருடம் தான் கடந்துள்ளது. இன்னும் 4 வருடங்கள் இருக்கின்றன. ஆனால், தற்போதைய நிலைமை தொடர்ந்து நீடித்தால் ஜனாதிபதி நிச்சயம் தோல்வியடைவார்.

மட்டக்களப்பில் உள்ள அமைச்சர் ஒருவர், மண் அகழ்வுக்கு அனுமதி வழங்கியுள்ளார். மஹிந்த அமரவீர மட்டக்களப்புக்கு வருகை தந்தபோது, அவரை சந்தித்து இதுபற்றி கூறினேன். மணல் அகழ்வுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என வலியுறுத்தினேன்.

ஆனால் புதிதாக 32 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு அனுமதிக்கு 5 இலட்சம் ரூபாய் பணம் வாங்கியுள்ளனர். அதாவது மாதம் ஒன்றுக்கு ஒரு அனுமதிக்கு 2 இலட்சம் கொடுக்க வேண்டும்.

இவ்வாறு ஒரு வருடத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 22 கிலோ மீற்றர் உள்ள ஆற்றில் விரும்பிய எந்த பகுதியிலும் மணல் அகழ்வில் ஈடுபட முடியும்.மணல் அகழ்வில் ஈடுபடுவது பிரச்சினை இல்லை. குறித்த பகுதி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்களுக்கு உரித்தான பகுதி. இங்கு ஒருவருக்கு 2 இலட்சத்தை கொடுத்து அவரிடம் மண்ணினை பெறுவதற்கு என்ன அவசியம் இருக்கின்றது.

அதாவது வருடம் ஒன்றுக்கு 10 இலட்சத்தை பெறுவதற்காகவா இவர்கள் நாடாளுமன்றம் வருகின்றார்கள் என கேட்க விரும்புகின்றேன்.

அத்துடன், ஒரு இலட்சம் வேலை வாய்ப்பினை வழங்கும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்கமைய மட்டக்களப்பில் 250 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்கு சிலரிடம் ஒரு இலட்சம் வரை பணத்தினைப் பெற்றுக் கொண்டே வேலையினை வழங்கியுள்ளனர்.

யார் இதனை கூறியுள்ளது என பார்த்தால் பிரதமரின் கிழக்கு மாகாண இணைப்புச் செயலாளராகவுள்ள கருணா அம்மானே இதனைக் கூறியுள்ளார்.

இந்த விடயங்களை நன்றாக தேடிப்பாருங்கள். இத்தகையவர்களுடன் இணைந்து சேவையாற்ற வேண்டாம் என ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கின்றேன்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

“தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை அரசாங்கம் ஏற்படுத்துமானால் தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும்” – இரா.சாணக்கியன்

“தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை அரசாங்கம் ஏற்படுத்துமானால் தமிழ் தாய்க்கு பிறந்தவர்கள் அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும்”  என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  இரா.சாணக்கியன்  தெரிவித்துள்ளார்.

இன்று(10.11.2020) அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச சபையின் 33 ஆவது மாதாந்த அமர்வில் புதிய ஆண்டிற்கான வரவு செலவு திட்டம் வெற்றி பெற்ற நிலையில் அதில் கலந்து கொண்ட பின்னர் , ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இரா. சாணக்கியன் மேற்கண்டவாறு குறிப்பிடடடுள்ளார்.

IMG 20201110 104333

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“ தமிழ் மக்கள் வாழும் அனைத்து பிரதேசங்களிலும் காணி அபகரிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இதற்கு எதிராக தமிழ் பேசும் மக்கள் ஒன்று படவேண்டும். எமது பகுதிகளில் திட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது இதற்கு எதிராக நாங்கள் குரல் கொடுக்க வேண்டும்.

தமிழ் பேசும் மக்கள் இனிவரும் காலங்களில் பிரிந்து நிற்க கூடாது. தற்போது சிறுபான்மையினருக்கு எதிராக இந்த அரசாங்கம் செயற்பட ஆரம்பித்துள்ளது.

உண்மையில் நீங்கள் தமிழராக இருந்தால், தமிழ் தாய்க்கு பிறந்தவர்களாக இருந்தால் இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக இடம்பெறும் அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுத்து அரசாங்கத்திலிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

“தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்ன காரணத்துக்காக இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கினர் என்பதை தெளிவு படுத்த வேண்டும்” – இரா.சாணக்கியன்

“தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி என்ன காரணத்துக்காக இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கினர் என்பதை தெளிவு படுத்த வேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “20ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக வாக்களிக்கும்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது ஜனநாயக விரோதமான செயல், இந்த நாட்டை பின்கொண்டுசெல்லும் செயல் என்ற அடிப்படையில் அதற்கு எதிராக வாக்களித்திருந்தோம். இதன்போது, இஸ்லாமிய சகோதரர்கள் சிலர் அதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றார்கள். அது தொடர்பாக பல கருத்துகளை பலரும் கூறிவருகின்றனர்.

என்னைப் பொறுத்தவரையில் இஸ்லாமிய சகோதரர்கள், தங்களுடைய எதிர்காலம் தொடர்பாக ஏதேனும் ஒப்பந்தங்கள் செய்து அதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கலாம் என நான் கருதுகின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இருவரும் 20ஆவது திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். வியாழேந்திரன் மொட்டுக்கட்சியை சேர்ந்தவர், அதனால் அவர் அதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கலாம். ஆனால் பிள்ளையானுடைய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது ஒரு தனிக்கட்சியாகும் அவர்கள் ஏதாவது ஒப்பந்தங்கள் செய்தார்களா? என்ற கேள்வி எங்கள் மனதில் இருக்கின்றது.

மயிலந்தனை, மாதவனை பிரச்சினையை மகாவலி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சென்று, அதனை நிறுத்தச்சொல்வதை விட 20வது திருத்த சட்டத்திற்கு ஆதரவு தருவதாகயிருந்தால் இந்த பிரச்சினையை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்திருக்க முடியும்.

மேலும், கல்முனை- வடக்கு பிரதேச தரமுயர்த்துவது தொடர்பிலான கோரிக்கையினை முன்வைத்திருக்கலாம் அல்லது அரசியல் கைதிகள் 62பேர் இன்னும் உள்ளனர் அவர்களை விடுதலைசெய்தால் ஆதரிப்போம் என்றிருக்கலாம், தமிழ் பகுதிகளில் பாதுகாப்பு பிரிவினர் வைத்திருக்கும் காணிகளை விடுவிக்குமாறு கோரியிருக்க முடியும் இவ்வாறு பல நிபந்தனை முன்வைத்து வாக்களித்திருக்க முடியும்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தனிக்கட்சி என்ற அடிப்படையில் பேரம்பேசும் சக்தி இலகுவாக இருந்திருக்கும். அவ்வாறான ஒப்பந்தங்களை ஏதும் செய்ததாக தெரியாது. தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரை வெளியில் விடுவதற்கான ஒப்பந்தமோ? அல்லது அக்கட்சியின் தலைவர் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கான அனுமதியை வழங்கவேண்டும் என்ற ஒப்பந்தங்களை செய்தார்களா?மக்களுடைய நலனைக்கொண்டா? அல்லது தங்களது நலனைக்கொண்டா? ஒப்பந்தங்கள் செய்யப்பட்டது என்பதை வெளிப்படுத்த வேண்டும்.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவரின் பதவி ஆசை காரணமாக மாவட்ட மக்கள் மிகவும் கஸ்டங்களை எதிர்கொண்டு வருகின்றனர்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.