இரா.சாணக்கியன்

இரா.சாணக்கியன்

“அநியாயத்திற்கு எதிராக எப்போதும் குரல் கொடுப்பேன். அது யாராக இருந்தாலும் பரவாயில்லை.” – இரா.சாணக்கியன்

“அநியாயத்திற்கு எதிராக எப்போதும் குரல் கொடுப்பேன். அது யாராக இருந்தாலும் பரவாயில்லை.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மீனவர்களின் படகுகளிலிருந்து ஆழ்கடலில் வைத்து களவாடப்படும் மீன்கள், சுறுக்குவலைகள் தொடர்பில் இன்று (23.07.2021) மாளிகைக்காடு அந்நூர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற மீனவர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,

கல்முனை பிரதேச செயலக விவகாரத்தில் ஒன்றுமில்லை. அதை வைத்து அரசியலை மட்டுமே செய்கிறார்கள். அந்த செயலகத்தை தரமுயர்த்துவதனால் முஸ்லிம்களுக்கு எவ்வித நஷ்டமும் இல்லை. பெயர் பலகையில் மாற்றம் வருமே தவிர தமிழர்களுக்கும் பெரிதாக ஒன்றும் கிடைக்கபோவதுமில்லை.

இது தொடர்பில் நான் பெரிதாக பேசுவதில்லை என்கிறார்கள். இதில் பேச ஒன்றுமில்லை. இதனை வைத்து கொண்டு அரசியல் மட்டுமே நடக்கிறது. சந்தர்ப்பம் வரும் போது மீனவர்களின் பிரச்சினையை பற்றி நாடாளுமன்றத்தில் பேசுவேன். கல்முனை பிராந்தியத்திற்கு தடுப்பூசி வழங்கவேண்டும் என்று நான் மட்டுமே தான் நாடாளுமன்றத்தில் பேசினேன். அநியாயத்திற்கு எதிராக எப்போதும் குரல் கொடுப்பேன் அது யாராக இருந்தாலும் பரவாயில்லை என தெரிவித்துள்ளார்.

“சிங்கள மக்கள் மத்தியிலும் துரோகி எனப்படுகின்றேன் தமிழ் மக்கள் மத்தியிலும் துரோகியாக நான் சொல்லப்படுகின்றேன்.” – மட்டக்களப்பில் எம்.ஏ.சுமந்திரன் !

“சிங்கள மக்கள் மத்தியிலும் துரோகி எனப்படுகின்றேன் தமிழ் மக்கள் மத்தியிலும் துரோகியாக நான் சொல்லப்படுகின்றேன்.” என ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இன்று மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பிலான கலந்துரையாடல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பதில் வழங்கினார்.

IMG 0133

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

நாங்கள் சர்வதேசத்திடமே இன்று நீதிகோரி நிற்கின்றோம்,சர்வதேசத்தின் அறிக்கைகளை நாங்கள் சாதகமாகவே பாவிக்கின்றோம்.இந்த அறிக்கைகளுக்கு எதிராக யாரும் கருத்துகளை தெரிவித்ததாக நான் அறியவில்லை. இருதரப்பினரும் போர்க்குற்றம் செய்தார்கள் என்று நிபுணர்கள் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசத்திடமிருந்து எங்களுக்கு நீதியும் ஆனால் நாங்கள் சொல்வதையே அங்கிருந்து சொல்லவேண்டும் என்பதை யாரும் எதிர்பார்க்கமுடியாது. அனைத்து பக்கங்களையும் விசாரணைசெய்து சரியான தீர்மானங்களையே அவர்கள் எடுப்பார்கள். விசாரணைகள் நடந்துமுடிந்துவிட்டது.அதனை நீதிமன்ற பொறிமுறைக்குள் கொண்டுசெல்லவேண்டுமாகயிருந்தால் அது கட்டாயமாகும்.

வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றியது இனஅழிப்பு தீர்மானம் என்று நாங்கள் கூறினாலும் அதன் இறுதியில் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு என்று சொல்லப்பட்டுள்ளது. அது அவ்வாறானதொரு சர்வதேச குற்றம் இல்லை. அதிலேயே சொல்லப்பட்டுள்ளது கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு இன்னும் சர்வதேச குற்றங்களில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றுதான் அந்த தீர்மானம் முடிவுறுகின்றது.நாங்களே சொல்லுகின்றோம் இங்கு நடைபெற்றது சர்வதேச குற்றம் இல்லையென்று. அதனையே நாங்கள் இன அழிப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம் என தலையில் தூக்கிவைத்துகொண்டாடி வருகின்றோம்.

இன்று கிழக்கில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்புகள் இன அழிப்பின் ஒரு அங்கமாகவுள்ளது.நாங்கள் அதனை மறுக்கவில்லை. ஒருவரின் மனதில் உள்ள இன அழிப்பு எண்ணங்கள் மாறிமாறி வருவதையே கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு என்று சொல்லப்படும். எனினும் அவ்வாறான இன அழிப்பு சர்வதேச சட்டங்களில் இல்லை.எனினும் விக்னேஸ்வரன் ஐயா வடமாகாணசபையில் நிறைவேற்றியதை வைத்து இனிவரும் காலங்களில் சேர்த்துக்கொள்வார்களோ தெரியாது.

உண்மைகளை சொல்லவேண்டும். தமிழ் மக்களுக்கு நாங்கள் பாரிய எதிர்பார்ப்பினை கொடுத்துக்கொண்டிருக்கின்றோம். அவ்வாறு வழங்கி அவர்களுக்கு கிடைக்காததன் காரணமாகவே விரக்தி நிலையில் உள்ளனர். குறிப்பாக வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் மனநிலையில் உள்ள விரக்தி நிலையும் அதுதான். சர்வதேசம் எங்களை கைவிட்டுவிட்டது என்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றது. சர்வதேசம் கைவிடவில்லை. நாங்கள் தேவையற்ற வகையில் மக்களுக்கு கூடுதலான எதிர்பார்ப்பினை வழங்கிக்கொண்டிருக்கின்றோம்.

நாங்கள் உண்மை நிலையினை சொன்னால் இவர் அரசாங்கத்திற்காக பேசுகின்றார் என்பார்கள். நாங்கள் அரசாங்கத்திற்காக பேசவில்லை உண்மையினை சொல்லுகின்றோம்.பொய்யான எதிர்பார்ப்பினை வழங்குவது என்பது பிழையான விடயமாகும். 30ஆயிரம் பேர் காணாமல் போயிருக்கின்றதற்கான ஆதாரங்கள் சாட்சியங்கள் உள்ள நிலையில் காணாமல்போனவர்களை கண்டுபிடித்து தருவேன் என்ற எதிர்பார்ப்பினை ஒருதாயிக்கு கொடுப்பது என்பது மிகவும் கொடுமையான செயல். அதன் காரணத்தினால் உண்மையினை சொல்லவேண்டும்.
நீதிகிடைக்கவேண்டும், குற்றவாளிகளுக்கு தண்டனைவழங்கப்படவேண்டும். அதற்கு இயன்றதை நாங்கள் செய்வோம். உண்மையைச்சொல்வது ஒருபோதும் துரோகச்செயல் இல்லை.

ஐ.நா.தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நன்றி தெரிவித்து அறிக்கைவெளியிட்டபோது அதனை சிங்கள ஊடகங்கள் இலங்கைக்கு எதிராக செயற்பட்ட நாடுகளுக்கு நன்றி தெரிவித்த சுமந்திரன் எம்.பி என்று செய்திவெளியிட்டபோது சிங்கள மக்கள் மத்தியிலிருந்து எதிரான கருத்துகள் வெளிப்பட்டன. சிங்கள மக்கள் மத்தியிலும் துரோகி தமிழ் மக்கள் மத்தியிலும் துரோகியாக நான் சொல்லப்படுகின்றது. தமிழ் மக்களின் எதிர்பார்ப்பிற்காக நாங்கள் தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும் என்று உழைத்தோம். அதனை நாங்கள் மறுக்கவில்லை.

இது இலங்கைக்கு எதிரான தீர்மானம் இல்லை. இலங்கை சரியான வழியில் பயணிக்கவேண்டுமாகயிருந்தால் இலங்கையில் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.அதுவே இலங்கைக்கு நல்லதாகும்.இலங்கையில் குற்றம் செய்தவர்கள் தப்பிச்செல்வது இலங்கைக்கு நல்லதல்ல.அதற்கு உதவியாக சர்வதேசம் வருகின்றபோது அது இலங்கைக்கு எதிரான தீர்மானம் இல்லை.ஆனால் இலங்கை ஆட்சியாளர்களுக்கு அது எதிரான தீர்மானம்.ஆட்சியாளர்கள் அதனை தடுக்கின்றனர்.செய்யவிடாமல் குறுக்கே நிற்கின்றனர்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்த தடவை நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மிகவும் முக்கியமான தீர்மானம்.இப்படியான தீர்மானமொன்று நிறைவேற்றப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. காரணம் 47நாடுகளை நாங்கள் எடுத்துப் பார்த்தபோது அது சாதகமாக இருக்கவில்லை. ஆனபடியால் இம்முறை மிகவும் கடினம் என நினைத்திருந்தோம். மனிதவுரிமை உயர் ஸ்தானிகர் மிச்சேல் பச்லட் அம்மையார் மிகமிக சக்தி வாய்ந்த காட்டமான ஒரு அறிக்கையை முதலில் வெளியிட்டார். டிசம்பர் மாதமே இவ் அறிக்கை இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்டது.

மனிதவுரிமை உயர் ஸ்தானிகர் மிச்சேல் பச்லட் அவர்களும் சித்திரவதையால் பாதிக்கப்பட்ட ஒருவராவார். சிலி நாட்டிலே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி அந்த நாட்டின் ஜனாதிபதியாகவும் இருந்தவராவார். அவருக்கு சர்வதேசத்தில் விஷேடமாக மனித உரிமைகள் ஆணையகத்தில் மிகப் பெரிய மதிப்பு இருக்கின்றது. அந்த அம்மையாரின் அறிக்கை காரணமாக பல நாடுகள் அதற்கு மாறாகச் செல்லத் தயாராக இல்லை. அதனால் தான் தென்னமெரிக்காவில் பல நாடுகள் இதற்கு சாதகமாக வாக்களித்தார்கள். ஏனென்றால் மிச்சேல் பச்லட் அம்மையாரைப் பற்றி அந்த நாட்டின் பலருக்குத் தெரியும். 47நாடுகள் கொண்ட சபையில் எங்களுக்கு ஆதரவு குறைவாக கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தவேளையில் அவரின் அறிக்கை காரணமாக அது மாற்றம்பெற்றது.

மனித உரிமை பேரவையினால் இலங்கையினை குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டுசெல்லமுடியாது.அதற்கான அதிகாரம் மனித உரிமை பேரவைக்கு இல்லை.நாங்கள் போராட்டங்களை நடாத்தி,சுழற்சிமுறையிலான உண்ணாவிரத போராட்டத்தினை நடாத்தி,உண்ணாவிரத போராட்டத்தில் பத்து பேர் உயிரிழந்திருந்தாலும் மனித உரிமை பேரவையினால் அதனை செய்யமுடியாது.பாதுகாப்பு சபைக்கு மட்டுமே குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டுசெல்வதற்கான அதிகாரம் உள்ளது.

நாங்கள் கேட்டது பாரப்படுத்தலுக்கான பொறுப்புக்கூரலுக்கு ஏதுவான காரணியை மனித உரிமை பேரவைக்கு வெளியில் கொண்டுசெல்லுங்கள் என்று கோரியிருந்தோம்.அதுவெளியே விடப்பட்டுள்ளது.நாங்கள் கேட்டதற்கு அமைவாக அதுவெளியே விடப்பட்டுள்ளது.

முன்னைய 30 ஒன்று 34ஒன்று 40ஒன்று தீர்மானங்களில் கலப்பு நீதிமன்ற முறை சொல்லப்பட்டிருந்தது.இந்த தடவை அது சொல்லப்படவில்லை. அதுமட்டுமன்றி ஒரு முழுமையான நீதிமன்ற பொறிமுறையின் கீழ் பொறுப்புக்கூறல் கொண்டுசெல்லப்படவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.

முதல் வரைவில் சாட்சிங்களை பாதுகாப்பதும்,அதை பரிசீலிப்பதற்கு என்ற இரண்டு சொற்கள் மட்டுமே இருந்தது. ஆனால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சாட்சியங்களை சேகரிப்பதற்கும் என்று சொல் சேர்க்கப்பட்டுள்ளது.இது மிகவும் முக்கியமானது.நாங்கள் கேட்ட முக்கியமான தீர்மானங்களில் இரண்டு தீர்மானத்தில் இருக்கின்றது.அதனால்தான் நாங்கள் தீர்மானத்தினை வரவேற்றோம்.

சிலர் இந்த தீர்மானத்தில் எதுவும் இல்லை,பிரயோசனமற்றது என கூறுகின்றனர்.மக்கள் மத்தியில் தேவையற்ற அதிர்ப்தியை ஏற்படுத்துவதற்கான பொறுப்பற்ற செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது. பொறுப்பாக மக்கள் மத்தியில் செயற்படுவோர் எந்த விடயத்தில் எவ்வளவு சாதிக்கமுடியும் என்ற விடயம் தெரிந்திருக்கவேண்டும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சாதிக்ககூடியவற்றினை உச்சக்கட்டம் நாங்கள் சாதித்திருக்கின்றோம்.இந்த பேரவை கூட்டத்தொடர் தொடங்கும்போது இதனைக்கூட நாங்கள் சாதிக்கமுடியும் என நாங்கள் நினைக்கவில்லை.நாங்கள் பல விடயங்களை முயற்சி செய்துவருகின்றோம்.

சில நாட்களில் சில விடயங்கள் மக்களுக்கு தெரியவரும்.எங்கள் முயற்சிகளை நாங்கள் பகிரங்கமாகவும் சொல்லமுடியாது.தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது முழுமையான முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.வெறுமனே மக்களுக்கு பொய் சொல்லி அவர்களின் எதிர்பார்ப்பினை உச்சக்கட்டத்திற்கு கொண்டுசென்று அவர்களை ஏமாற்றமடையும் செயற்பாட்டை நாங்கள் முன்னெடுக்கவில்லை.

இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய அழுத்தம் வந்திருக்கின்றது.குற்றச்சாட்டவர்கள் மீதான தடைகள் கொண்டுவரப்படுகின்றது.பொருளாதார தடைகள் குறித்து பல்வேறு தரப்பினரும் கேட்டிருந்தனர்.இலங்கைக்கு எதிரான பொருளாதார தடையினை நாங்கள் கோரவில்லை.இலங்கைக்கு எதிரான பொருளாதார தடைவரும்போது அதில் முதலாவதாகவும் மிகவும் மோசமாகவும் பாதிக்கப்படப்போவது தமிழ் மக்களாகும்.சிலவேளைகளில் பொருளாதார தடையினை கோரவேண்டிய சூழ்நிலை வரலாம்.அதனை நாங்கள் மறுக்கவில்லை.ஆனால் இன்று நாங்கள் அதனை கோரவில்லை.

இலங்கைக்குள் தீர்வொன்றினை ஏற்படுத்தவேண்டுமானால் சிங்கள மக்கள் மத்தியிலிருக்கின்ற முற்போக்கு சக்திகளும் எங்களுக்கு ஆதரவாக செயற்பட வேண்டும். அவர்களுடைய ஆதரவையும் நாங்கள் தக்கவைக்க வேண்டும். இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை வருவது ஆட்சியாளர்களுக்கு ஒரு பிரச்சினையே அல்ல. அவர்களுக்கு அது அழுத்தமல்ல. அவர்களுக்கு போதுமானளவு வளம் இருக்கின்றது. ஆனால் ஆட்சியாளர்களை குறிவைத்து தடைகள் வருமானால் அதுதான் அழுத்தமாகும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமாகத்தான் இன்று இருக்கின்றது.மற்றைய கட்சிகளை இணைத்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலவீனமடைந்திடும் என்ற அச்சம்தான் இருக்கின்றதே தவிர எங்களை பலப்படுத்துவதற்கு அவர்கள் தேவையில்லை.

தமிழ் மக்களின் நன்மைக்காக ஒற்றுமை தேவை.ஆனால் அடிப்படை கருத்துகளில் வித்தியாசமாக இருக்குமானால் நாங்கள் இணையமுடியாது.ஒற்றுமை ஒரு கொள்கையில்லை.கொள்கையுடன் ஒன்றுபடுபவர்கள் ஒன்றுசேர்ந்து பயணிக்கமுடியும்.” என்றார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,பா.அரியநேந்திரன் மற்றும் கட்சி ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

“இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு செல்ல விடாது தடுத்த துரோகிகள் அதனை மக்களிடம் மறைக்கும் முயற்சியிலும் ஈடுபடுகின்றனர்.”- சுமந்திரன், சாணக்கியன் தொடர்பில் கஜேந்திரன் !

“இலங்கையை சர்வதேச நீதிமன்றுக்கு செல்ல விடாது தடுத்த துரோகிகள் அதனை மக்களிடம் மறைக்கும் முயற்சியிலும் ஈடுபடுகின்றனர்.” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

அம்பாறை – பாண்டிருப்பு பகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று சனிக்கிழமை(3.04.2021) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது,

இந்தியாவின் எடுபிடிகளான தமிழ் தேசிய கூட்டமைப்பினை வைத்து மைத்திரியை வெல்ல வைத்தார்கள். இதனால் ரணில் மைத்திரி நல்லாட்சி வருகின்றது. இது அவர்களுக்கு வேண்டப்பட்ட ஆட்சி. இந்த அரசின் 5 ஆண்டு காலப்பகுதியில் எவ்வித உள்ளக விசாரணையும் நடத்தப்படவில்லை. சுமந்திரன் தற்போது கூறுகின்றார் – உள்ளக விசாரணை தான் வேண்டும்.

காரணம் இந்த நாட்டில் தான் நாம் சேர்ந்து வாழ வேண்டும். ஆகவே இந்த நாட்டில் குற்றங்கள் நடந்திருந்தால் அவை விசாரிக்கப்பட வேண்டும். விசாரிக்கப்படுவது தான் நாட்டிற்கு நல்லது. ஆகவே தான் இந்த தீர்மானத்தை வரவேற்றதாக குறிப்பிடுகின்றார். ஆனால் 2015 ஆண்டு ராஜபக்சவினை தேர்தலில் வீழ்த்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வோம் எனக் கூறினார்கள்.

இதனை நம்பி சகல மக்களும் விழுந்தடித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றித்திற்கு அவரை(ராஜபக்ச) கொண்டுசெல்ல வேண்டும் என்பதற்காக மைத்திரிக்கு வாக்களித்தார்கள்.

இதன் பிறகு 2019 வரை இந்த ஆட்சியில் ஏன் உள்ளக விசாரணையை வலியுறுத்தவில்லை என்பதை கேட்க விரும்புகின்றேன். நம்பிக்கை இருக்கின்றது எனக் கூறி கால நீடிப்பினை தானே வழங்கி கொண்டிருந்தீர்கள். உங்களுடைய நோக்கம் குற்றங்கள் விசாரிக்கப்படுவதற்கல்ல. உங்களுடைய நோக்கம் குற்றங்கள் நடைபெற வேண்டும். அந்த குற்றங்களை வைத்துக்கொண்டு சர்வதேச நாடுகள் ஆவணங்களை தயார் செய்ய வேண்டும். மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கம் அவர்களுக்கு இல்லை.

சுமந்திரனிடம் 2015 தொடக்கம் 2019 வரை ஜெனிவாவில் இலங்கையை எந்த அளவில் மீட்டு கொண்டு வந்தீர்கள் என கேட்கின்றேன். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இலங்கையை கொண்டு செல்லுவம் வாய்ப்பு சுமந்திரன், சாணக்கியன், சம்பந்தன் ஆகியோரினால் வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற கூட்டமைப்பினால் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

அங்கே டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன், பிள்ளையான், வியாழேந்திரன், திலீபன் போன்றோர் பேரினவாத கட்சியின் முகவர்கள். இதில் பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா போன்றவர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

அவர்கள் அரசாங்கத்தோடு இருப்பவர்கள். ஏனைய 13 பேரில் அறுதிப்பெரும்பான்மையுடன் உள்ள கூட்டமைப்பினர் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் என்ற வகையில் 46:1 தீர்மானத்தை நிறைவேற்றுங்கள் எனக் கூறியதன் மூலம் அது உள்ளக விசாரணையை வலியுறுத்தி இருக்கின்றது.

உள்ளக விசாரணையை வரவேற்பதாக இவர்கள் கேட்டுக்கொண்டதனால் தான் இந்த தீர்மானம் நிறைவேறி இருக்கின்றது. இதனால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு செல்லும் வாய்ப்பு இவர்களின் செயற்பாட்டினால் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது.

ஆகவே இந்த துரோக செயலுக்கு சாணக்கியனும் சுமந்திரனும் கூட்டாக மிகத் தீவிரமாக செயல்பட்டது மட்டுமல்லாமல், அவர்கள் அந்த துரோகத்தை மறைக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டுள்ளனர் என்பதை மக்கள் மத்தியில் நான் தெளிவு படுத்த விரும்புகின்றேன்.”என்றார்.

“ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் என யாரின் அனுசரணை இருந்தாலும் சரி  சட்டவிரோத மண் அகழ்வு செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்.”  – இரா.சாணக்கியன்

“ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் என யாரின் அனுசரணை இருந்தாலும் சரி  சட்டவிரோத மண் அகழ்வு செயற்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில் இன்றைய தினம் வேப்பவெட்டுவான் பிரதேசத்திற்கு மேற்கொண்ட கள விஜயத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக சட்டவிரோதமாக மண் அகழ்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் இடங்கள் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களுக்கு களவிஜயத்தினை மேற்கொள்வதற்காக நாங்கள் வந்திருந்தோம்.

நாங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வந்து பார்த்ததற்கும் இன்றைய தினம் வந்து பார்த்ததற்கும் சில வேலைத்திட்டங்கள் இங்கு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.  சட்டவிரோதமாக மண் எடுத்ததாகச் சந்தேகப்படும் இடங்களை திரும்பவும் மூடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அதற்கான மண் எங்கே இருந்து வந்தது என்று கேட்டால் அந்தக் கேள்விகளைக் கேட்டதற்காக தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு எங்களையே ஒரு அச்சுறத்தலுக்குள் உள்ளாக்கும் செயற்பாடுகள் இடம்பெற்றன.

இன்று இன்னுமொரு பிரதேசத்தையும் நாங்கள் வந்து பார்த்தோம். இது அணைக்கட்டுக்கு அருகாமையில் இருக்கும் பிரதேசம். இதில் மண் அகழ்வு மேற்கொண்டமையால் 2500 ஏக்கருக்கு தண்ணீர் பாய்ச்சலைக் கூடச் செய்ய முடியாத நிலைமை இன்று இருக்கின்றது.

எமது மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டம் எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறுவதாக இருந்தது. அது ஒத்திவைக்கப்படுவதாக இன்று கடிதம் கிடைத்தது. இவ்வாறாக மாவட்டத்தில் முக்கிய விடயங்களைத் தீர்மானிக்க முடியாத மாவட்ட அபிவருத்திக் குழுத் தலைவரும், மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டமும் அவசியம் இல்லாத ஒரு விடயமாகவே தென்படுகின்றது.

நாளைய தினமும் மூன்று  அமைச்சர்கள் மட்டக்களப்பிற்கு வருகை தந்து கூட்டம் வைக்கப் போகின்றார்கள் என்று அறிகின்றேன். இந்த மாவட்டத்தில் மேலதிகமாக ஏதேனும் வளங்களைச் சூரையாடலாம் என்று பார்ப்பதற்காகத்தான் இந்த விஜயம் மேற்கொள்ளப்படுகின்றதா என்றும் என்று நினைக்கத் தோணுகின்றது.

இவ்வாறான சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும். இது எவருடைய அனுமதிப்பத்திரமாக இருந்தாலும் சரி. ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர் என யாரின் அனுசரணை இருந்தாலும் சரி இதனை உடனடியாக நிறுத்த வேண்டும். ஏனெனில் இது இந்தப் பிரதேச மக்களின் வளம். இந்த வளங்களை அழித்தால் இந்தப் பிரதேசத்தில் இனி வாழும் மக்களுக்கு எந்தவித எதிர்காலமும் இல்லாமல், குடிநீரும் இல்லாமல், எவ்வித வளமும் இல்லாமல் போகும். இப்பிரதேசம் ஒரு பாலைவனமாகப் போவதற்கும் சாத்தியங்கள் இருக்கும். எனவே இதனை உடனே நிறுத்த வேண்டும் என்று உரிய அதிகாரிகளிடம் மிகத் தாழ்மையாகக் கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்தார்.

“தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து நாம் நாடாளுமன்றத்தில் பேசும் போது, அதற்கு எதிராக குரைப்பதை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிறுத்த வேண்டும்” – நாடாளுமன்றில் இரா.சாணக்கியன் !

“தமிழ் மக்களின் உரிமைகள் குறித்து நாம் நாடாளுமன்றத்தில் பேசும் போது, அதற்கு எதிராக குரைப்பதை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிறுத்த வேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (10.02.2021)  இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

அரசியல் கைதிகளில் பலர் நான் பிறப்பதற்கு முதல் இருந்தே சிறைச்சாலைகளில் இருக்கின்றார்கள். அதிலும் தற்போது ஒரு சில வருடங்களாக அவர்கள் இறந்து கொண்டு வருகிறார்கள்.

உங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் ஒன்று அரசியல் கைதிகளை விடுவிப்பது ஆகும். வட கிழக்கு முழுவதிலும் இதனை சொல்லி இருந்தீர்கள். நாமல் ராஜபக்க்ஷ அவர்களும் சிறைச்சாலையில் இருந்து வெளிவரும்போது இதனை வலியுறுத்தி இருந்தார். அதிலும் ஜே.வி.பி காலத்தில் நடந்த விடயங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட்டிருந்தார்கள்.

அதாவது கடந்த மூன்றாம் திகதி முதல் ஏழாம் திகதி வரை நடந்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் மிக முக்கியமாக உரைக்கப்பட்ட விடயம் அரசியல் கைதிகளின் விடுதலை ஆகும்.ஆனால் கொடுத்த வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை. இதனைக் கொண்டு நீங்கள் எவற்றை சாதிக்கப்போகின்றீர்கள்? மற்றும்  முன் நிறுத்தப் போகின்றீர்கள்? அவர்களை உள்ளே வைத்திருப்பது உங்கள் அரசியல் இலாபத்துக்கான  திட்டமா?. அல்லது  நீண்ட கால உங்கள்  திட்டத்துக்காக வைத்திருக்கிறீர்களா?

இது என்னுடைய தனிப்பட்ட கருத்து இல்லை. இது பொதுவாக மக்களால் முன்வைக்கப்படும் பொதுவான கருத்துக்கள் ஆகும்.  எனது குடும்பத்தார் அல்லது நண்பர்களோ உறவினர்களோ அரசியல் கைதிகளாக இல்லை. இவற்றை நான் கேட்பது பாதிக்கப்பட்ட எனது மக்களுக்காக மாத்திரமே.

இவற்றை நாம் கூறிக் கொண்டு இருக்கும்போது என்னை பல உறுப்பினர்கள் இடைமறித்து என்னை கதைக்க விடாமல் செய்து கொண்டிருக்கின்றனர். இங்கே நான் கேட்கும் கேள்விகள் மக்களால் எனக்கு வழங்கப்பட்டு கேட்க வைக்கப்படும் கேள்விகள். இவற்றை நான் இங்கு கேட்பதற்கான முழு உரிமையும் உண்டு. என்னை குழப்பாதீர்கள்.

உங்களுடைய வேலை எதுவோ?  அதனை சரியாக செய்யுங்கள். நீங்கள் எனக்கு எதிராக கதைக்க விடாமல் செய்வதற்கு இவற்றுக்கான மறுப்பு கூறுவதற்கு நீங்கள் பிரதமர் அல்ல, நான் அவரிடமே இக்கேள்விகளை தொடுகின்றேன்.

உங்களிடம் அல்ல அவர் அதற்கு பதில் சொல்லட்டும் நீங்கள் சும்மா இங்கு கூச்சலிட்டு நான் கேட்க வந்த விடயத்தை கேட்க முடியாதபடி செய்யாதீர்கள்.

இங்கு நான் பிரதமருடன், கதைப்பது சில நேரங்களில் ஒரு வருடங்களுக்கு ஒரு முறையாவது கிடைக்கும் சந்தர்ப்பமாக இருக்கும். அப்படி இருக்கையில் இவர்கள் வேண்டும் என்றே குழப்பினால் என்னால் எனது மக்களின் உரிமைகள் சம்மந்தமான பிரச்சினைகளை எவ்வாறு இங்கு எடுத்துரைக்க முடியும்? என தெரிவித்தார்.

“எங்களுடைய உரிமை சார்ந்த கவனஈர்ப்பு போராட்டமான P2P போராட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்படுகின்றதே தவிர மக்கள் வாழ்வை முன்னேற்ற ஒரு திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை” – பாராளுமன்றில் இரா.சாணக்கியன் !

“எங்களுடைய உரிமை சார்ந்த கவனஈர்ப்பு போராட்டமான P2P போராட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்படுகின்றதே தவிர மக்கள் வாழ்வை முன்னேற்ற ஒரு திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கவலை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(09.02.2021) இடம்பெற்ற கேள்வி நேரத்தின் போதே அவர் இந்த விடயத்தினை அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

நவகிரி என்ற செயற்திட்டத்தில் அவசர வான்கதவு என்பதொன்று காணப்படுகிறது. 2010ஆம் ஆண்டிலிருந்து அவசர வான்கதவு என்பது எமக்கு கிடையாது. இவ்வாறான நிலையில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது குளத்தை அண்மித்த பகுதிகள் பாரியளவில் பாதிக்கப்படும். 2010ஆம் ஆண்டிலிருந்து பல கோரிக்கை விடுக்கப்பட்டும் இதுவரையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஒவ்வொரு வருடமும் மட்டக்களப்பு மாவட்டம் வெள்ளத்தால் பாதிக்கப்படுகிறது வெள்ளத்தால் மூழ்கடிக்கப்படுகின்றது. மக்கள் ஒவ்வொரு வருடமும் பல இன்னல்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குளங்கள் முறையாக புனரமைக்கப்படாமை வெள்ளப்பெருக்கிற்கான பிரதான காரணமாகும்.

அத்துடன் மட்டக்களப்பு முகத்துவாரத்தை அண்மித்த ஆறுகளையும் மறுசீரமைப்பு செய்ய வேண்டும். ஆழம் குறைந்தமையானது இதற்கான காரணம் ஆகும். குறைந்தளவு மழை பெய்தாலும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படுகின்றனர். இவ்வருடமும் மக்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டனர்.

இதனால் எம்மக்களுக்கான வெள்ள நிவாரண நிதியானது ஒவ்வெரு வருடமும் ஒதுக்கப்பட வேண்டும் நவகிரியும், குளபுணரமைப்பும் இத்திட்டத்தில் காணப்படுகிறதா? ஆறுகள், மற்றும் குளங்களை முறையாக புனரமைத்தால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை தடுக்க முடியும்.

ரூகம் செயற்திட்டத்தின் MCM இனது அளவானது 58. என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அனால் இதன் தேவையான அளவானது MCM 90 ஆக செயல்படுத்தப்பட வேண்டும். அத்துடன் இத் திட்டத்துக்கான போதியளவு கடன் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெறாததன் காரணமாக இச்செயற்திட்டத்தை இடைநிறுத்துவதாக குறிப்பிடப்படுகிறது.

உண்மையாகவே இத் திட்டமானது கைவிடப்படக் கூடாது. 90 Mcm அளவினை நாங்களும், மக்களும் கேட்கின்றோம். இடை நடுவில் இவ் திட்டத்தை நிறுத்தக் கூடாது. இத் திட்டமானது எம் மக்களுக்கான ஓர் அத்தியாவசிய தேவை ஆகும்.

இந்தத் திட்டமானது சரியான முறையில் செய்யப்படுமிடத்து 15,000 தொடக்கம் 20,000 ஏக்கர் அளவில் வருடங்களுக்கு இரண்டு முறை விவசாயம் மேற்கொள்ள முடியும். மீன் பிடி துறையையும் அபிவிருத்தி செய்ய முடியும்.

இதைத் தவிர பிற தொழில்களையும் மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்திக்கொள்ள முடியும். ஆனால் தற்போதுள்ள முந்தினா ஆறு திட்டத்தினை நிறுத்தியே இதனை செய்ய வேண்டும். இப்போது இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது நிச்சயமற்றதாக காணப்படுகின்றது.

ஏனெனில் ஆற்றுப் படுக்கையில் சட்ட விரோதமாக மணல் அகழ்வதைத் தவிர வேறு செயற்பாடுகள் இத் திட்டத்திற்காக முன்னெடுக்கப்படவில்லை முன் எடுக்கப்பட்டதாகவும் தெரியவில்லை.

எங்களுடைய உரிமை சார்ந்த கவனஈர்ப்பு போராட்டமான P2P போராட்டத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்படுகின்றதே தவிர இவ்வாறான எமது மக்களுக்கு பயனுள்ள பொருளாதாரத்தை மற்றும் வாழ்வாதாரத்தை கட்டமைக்கும் சிறந்த திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படுவதில்லை. எமது மக்களுக்கு உரிமையும் இல்லை அபிவிருத்தியும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்து்ளளார்.

“யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணி திரளவேண்டும்” – போராட்டத்துக்கு இரா.சாணக்கியன் அழைப்பு !

“யாழ்ப்பாணத்தினை முழுமையாக முடக்க அனைவரும் அணி திரளவேண்டும்”  என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அழைப்பு விடுத்துள்ளார்.

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி மன்னார் நகருக்குள் சென்றுள்ளதுடன், தற்போது பேரணி மன்னார் மத்திய பேருந்து நிலையத்தைச் சென்றடைந்துள்ளது.

இதன்போது, அங்கு கருத்து வெளியிடும் போதே, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

மன்னாரில் கிடைத்த பாரிய ஆதரவு கண்டு தாம் நெகிழ்ச்சியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இது நகைச்சுவையான விடயம் இல்லை எனவும், மக்கள் உணர்ச்சி பெருக்குடன் குறித்த பேரணியில் பங்கேற்க வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

“பதவி உயர்வுகளோ அல்லது பதவிகளோ கிடைப்பது போன்று எனக்கு நீதிமன்ற தடை உத்தரவுகள் கிடைத்துக் கொண்டிருகின்றன” – இரா.சாணக்கியன்

“பதவி உயர்வுகளோ அல்லது பதவிகளோ கிடைப்பது போன்று எனக்கு நீதிமன்ற தடை உத்தரவுகள் கிடைத்துக் கொண்டிருகின்றன” என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்  இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொள்வற்கு தடை உத்தரவுகள் வருகின்ற என்று குறிப்பிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ஆனால், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களுக்கு எதிராகவே தடை உத்தரவுகள் போடப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையென திட்டமிடப்பட்ட போராட்டத்தில் கலந்துகொள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அமர்வின் போது, மக்களைத் தூண்டிவிட தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் இந்தப் போராட்டத்தை நடத்துவதாகத் தெரிவித்து பொலிஸார் தாக்கல் செய்த அறிக்கையின் பிரகாரம், களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் போராட்டங்களை நடத்த நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

அத்துடன், இது குறித்த அறிவிப்புக்கள் பல்வேறு அரசியல் பிரமுகர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள இரா.சாணக்கியன் மேலும் கருத்து தெரிவித்த போது,

“இன்று களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவினால் எனக்கு மூன்றாம் திகதி முதல் ஆறாம் திகதி வரையிலான போராட்டத்தில் கலந்து கொள்வதனைத் தடை செய்யுமாறு களுவாஞ்சிக்கொடி பொலிஸாரினால் நீதிமன்றங்களை நாடி பெற்றுக்கொள்ளப்பட்ட உத்தரவு என்னிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதில், மிகவும் வேடிக்கையான விடயம், கொரோனாவினைக் காரணம் காட்டி நீதிமன்றங்களை நாடியுள்ளனர்.

ஆனால், கொழும்பில் கிழக்கு முனையம் துறைமுகத்தினை இந்தியாவிற்கு வழங்குவதற்கு எதிராக ஆயிரக்கணக்கானவர்கள் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு பொலிஸாரினால் தடை உத்தரவு வழங்க முடியாது. ஏனென்றால் அது அரசாங்கத்துடன் தொடர்புடைய விடயம்.

கடந்த காலத்தில் அரசியல்வாதிகளுடைய விடுதலை குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பிள்ளையானை விடுதலை செய்த போது நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இணைந்து முன்னெடுத்த வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு பொலிஸாரினால் எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

ஜெனீவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரின் போது இலங்கைக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டு இனங்களுக்களுகு எதிராக, மதங்களுக்கு எதிராக பிரச்சினைகளைத் தூண்டும் விவமாக நாங்கள் செயற்படுவோம் எனக்கூறி இந்த தடை உத்தரவினை எடுத்திருந்தாலும் கூட, அப்படியிருந்தால் இந்த நாட்டில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களுக்கு எதிராகவே இந்தத் தடை உத்தரவு எடுக்கப்பட வேண்டும்.

இனங்களுக்கு எதிரான குழப்பங்களை அவர்களே செய்கின்றனர். அதாவது, எங்களுடைய தமிழ் ஆலயங்களில் மத வழிபாடுகள் செய்வதைத் தடை செய்து, அந்த இடங்களில் பௌத்த விகாரைகளை அமைத்து இந்த அரசாங்கம், இந்த ஜனாதிபதி, ஆளுநர் போன்று தொல்பொருள் அதிகாரிகளே இனங்களுக்கெதிரான பிரச்சினைகளைத் தூண்டிவிடுகின்றனரே தவிர நாங்கள் செய்யவில்லை.

இந்தப் போராட்டம் கூட அமைதியான போராட்டம். மூன்றதம் திகதி முதல் ஆறாம் திகதி வரை பல்வேறு விடயங்களை முன்வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அதிலும் குறிப்பாக, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான நீதி, ஜனாசா எரிப்பு, மாவீரர் தினத்தன்று முகப்புத்தகத்தில் பதிவிட்ட 40 இளைஞர்களின் விடுதலை, தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் விவகாரம் உள்ளிட்ட ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராகவே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது” என்று குறிப்பிட்டார்.

“எவ்வளவு காலத்திற்கு தப்பினாலும் என்றாவது ஒருநாள் அரசாங்கம் பொறியில் சிக்கியேயாக வேண்டும்” – இரா.சாணக்கியன் எச்சரிக்கை !

“எவ்வளவு காலத்திற்கு தப்பினாலும் என்றாவது ஒருநாள் அரசாங்கம் பொறியில் சிக்கியேயாக வேண்டும்” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவடைந்து 11வருடங்கள் கடந்துள்ள நிலையில் புதிய ஆணைக்குழுவினை நியமித்து எதனையும் கண்டுபிடிக்க முடியாது. இந்த நாட்டில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலை மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக அநீதிகள் நடந்துள்ளன. இவையெல்லாம் உலகெங்கும் அறிந்த உண்மை. இது தொடர்பில் ஒரு குழுவினை நியமித்து ஆராயவேண்டிய அவசியம் இல்லை.

இந்த நாட்டில் ஜனாதிபதி குழுக்களை அமைப்பது தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். கிழக்கில் தொல்பொருள் செயலணி ஒன்று உருவாக்கப்பட்டது அதில் தமிழர்கள் எவரும் இல்லை.

புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஆராய்வதற்கான குழுவில் பெயரளவில் ஒரு தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுவாக ஜனாதிபதி நியமிக்கும் ஆணைக்குழுக்களை ஏற்றுக் கொள்ளமுடியாத நிலையே உள்ளது.

இம்முறை ஜெனிவாவில் அரசாங்கத்திற்கு எதிரான கடுமையான தீர்மானங்கள் வரும், அதிலிருந்து தப்ப வேண்டும் என்பதற்காக இவ்வாறான ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன.

அத்துடன் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை தொடர்பாக சிறுபிள்ளைத்தனமான கருத்துகளை வெளியிடுவதை விடுத்து, இந்த நாட்டினை கட்டியெழுப்ப வேண்டுமானால் அங்கு நீங்கள் செய்யவேண்டிய உண்மையான செயற்பாடுகளை செய்யவேண்டும். எவ்வளவு காலத்திற்கு தப்பினாலும் என்றாவது ஒருநாள் பொறியில் சிக்கியேயாக வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“எமது உரிமைகள், உணர்வுகளை அழிக்க முடியாது” – இரா.சாணக்கியன் கண்டனம் !

“எமது உரிமைகள், உணர்வுகளை அழிக்க முடியாது” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டுள்ளமை மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட சம்பவத்திற்கு எனது வன்மையான கண்டனங்கள்!

போர் வெற்றியைக் கொண்டாடும், பறைசாற்றும் தூபிகள் மற்றும் சின்னங்கள் வட மாகாணத்தில் பல இடங்களில் காணப்படும் நிலையில், இறுதி யுத்தத்தில் இறந்த எமது உறவுகளை நினைவுகூரும் தூபிகள் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன.

இதன்மூலம், அவர்கள் எதனை வலியுறுத்த முயல்கின்றனர்? இதில்கூட எமது மக்களுக்கான உரிமை இல்லையா? ஆட்சி மாற்றமும் அடிப்படை உரிமையில்லா அபிவிருத்திக்கான மாற்றமுமே இதற்கான காரணம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.