அரசசேவையில் இணைந்துள்ள உத்தியோகத்தர்கள் எதையாவது இந்தச் சமூகத்திற்கு செய்ய வேண்டும் என்ற மனப்பாங்கோடு இருக்க வேண்டும் என யாழ். மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் குருதி கொடையாளர்கள் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நான் கடமையாற்றிய திணைக்களங்கள் மற்றும் காரியாலயங்களில் அந்தந்த நலன்புரி அமைப்புகளில் ஊடாக இரத்ததான முகாம்களை கட்டாயமாக செய்ய வேண்டும் என அறிவுறுத்தி அந்த நடவடிக்கைக்கு அவர்களை உள்வாங்கும் நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தேன்.
தற்பொழுது நான் அரசாங்க அதிபராக பதவி ஏற்றபின் சகல பிரதேச செயலக பிரிவுகளுக்கும் அந்தந்த பிரிவுகளில் இரத்ததான முகாம்களை நடாத்தி செயற்படுத்த வேண்டும் என்று கோரி இருக்கின்றேன்.
அண்மையிலும் சில பிரதேச செயலகங்களில் இரத்ததான முகாம்கள் இடம்பெற்றிருந்தமை நீங்கள் அறிந்த விடயம்.
இந்த இரத்ததான பணியானது தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்கு அரசாங்க உத்தியோகத்தர்கள் என்ற வகையில் எங்களுடைய அலுவலகங்கள் தொடர்ச்சியாக தங்களுடைய பங்களிப்பை வழங்குவார்கள் என கூறி வைக்க விரும்புகின்றேன்.
இந்தச் சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற அந்த மனப்பாங்கு குருதிக்கொடை வழங்குவதிலும் காணப்பட வேண்டும் – என்றார்.