பொசன் பூரணைத் தினத்தன்று ‘மதுபான தன்சல் ‘ வழங்கியதாக கருதப்படும், காட்சியை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்ததாகக் கூறப்படும் ஆறு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுபானத்தை விளம்பரப்படுத்திய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்களை, பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்த காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதால், பொலிஸ்மா அதிபர், இது தொடர்பான விசாரணைகளை கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து, கட்டுநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த 20 முதல் 25 வயதுக்குட்பட்ட 6 பேர், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து காணொளி தொடர்பாக நீண்ட நேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.
இதன்போது, தங்களது உறவினர் ஒருவரால் கொண்டு வரப்பட்ட வெற்று வெளிநாட்டு மதுபான போத்தலில் தேநீரை ஊற்றி டிக்டோக்கில் காணொளி தயாரிப்பதற்காக தாம் இந்த செயலை செய்ததாக குறித்த இளைஞர்கள் தெரிவித்துள்ளனர் இந்தநிலையில், குறித்த ஆறு பேரையும் கைது செய்த புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், கொழும்பு நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்தனர்.