யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியான ஹெரோயின் போதைப் பாவனைக்கு அடிமையாகியிருந்த ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம், வரணி இயற்றாலையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை ராஜ்குமார் (வயது-37) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்தவராவார். இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார்.
போதைப் பொருள் குற்றச்சாட்டில் கடந்த நவம்பர் மாதம் 26ஆம் திகதி யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட இவர் , கடந்த 10ஆம் திகதி வயிற்று வலி காரணமாக யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
எனினும் சிகிச்சை பயனின்றி இவர் நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார் என மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இறப்பு விசாரணைகளை யாழ். போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார். தொடர்ச்சியான ஹெரோயின் பாவனையே இவரது உயிரிழப்புக்குக் காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கடந்த வாரம் வவுனியாவிலும் போதைக்கு அடிமையாகியிருந்த நபர் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.