இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இலங்கையில் கஞ்சா செடி வளர்ப்பை சட்டபூர்வமாக்குவதன் மூலமாக அதிகளவு லாபமிட்ட முடியும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார்.
அதே போல மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சாவை வளர்ப்பதற்கான சட்டத்தை உருவாக்கவுள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் அதிகாரிகளின் நடவடிக்கையை எதிர்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கஞ்சா ஆயுர்வேத சட்டத்தின் கீழ் வருவதால், பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி மேலும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் நிதி நலன்களின் அடிப்படையில் மாத்திரம் அதிகாரிகள் தீர்மானங்களை எடுக்க முடியாது என திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இது அந்நியச் செலாவணியை கொண்டு வரும் என்றாலும், இலங்கையின் கலாசாரத்திற்கு எதிரானது என்பதால், இந்த பிரேரணைக்கு உடன்பட முடியாது என தெரிவித்துள்ளார்.