கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட்டின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் மோதின. நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடச் செய்த ஆஸ்திரேலியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 356 ஓட்டங்கள் குவித்தது. தொடக்க வீராங்கனை அலீசா ஹீலி சதமடித்து, 170 ஓட்டங்கள் குவித்தார். ஹெய்ன்ஸ் 68 ஓட்டங்களிலும், பெத் மூனி 62 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து, 357 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இதனால் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தது.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் நடாலி சீவர் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 121 பந்துகளில் ஒரு சிக்சர், 15 பவுண்டரி உள்பட 148 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், இங்கிலாந்து 43.4 ஓவரில் 285 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 71 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன், உலக கோப்பையில் 7வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.