நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன.
குறிப்பாக தென்னிலங்கையில் பெருமளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது வடக்கிலும் ராஜபக்க அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் “பருத்தித்துறை தொடக்கம் தெய்வேந்திரமுனை நோக்கிய பேரணி” என்ற தொனிப்பொருளில் ஐக்கிய பெண்கள் சக்தியினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக இன்று காலை கச்சேரியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிய இந்த பேரணி செல்கின்றது. அதன் பின்னர் அநுராதபுரம் ஊடாக கொழும்பு நோக்கி கட்டம் கட்டமாக ஏழு நாட்களுக்கு கொழும்பைச் சென்றடையும் என ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
குறிப்பாக பொருளாதார நெருக்கடியினால் குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுவரும் நிலையில் தீர்வு வழங்க வேண்டும் என கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
செயலகத்தில் இருந்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை வந்தடைந்த இறுதி நேரத்தில் அங்கு அரசாங்கத்துக்கு ஆதரவாக ஒரு ஒரு குழு செயற்படவே அங்கு முறுகல் நிலை உருவானது.
முறுகல் நிலை ஏற்பட்டதுடன் கைகலப்பும் உருவானது. பதற்றத்தை தணிப்பதற்காக பொலிஸார் குவிக்கப்பட்டு அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதுடன் கைகலப்பில் சிலர் காயமடைந்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் கட்சியினர் தொடர்ந்தும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்ததுடன் குழப்பவாதிகளுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.
அரசாங்கத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் குழப்பம் விளைவித்த ஆளும் தரப்பு ஆதரவாளர் மீது இளைஞர் ஒருவர் செருப்பினால் தாக்கியுள்ளார்
குழப்பத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் அங்கிருந்து பாதுகாப்பாக முச்சக்கர வண்டியில் அனுப்புவதற்கு முயற்சித்த வேளை போராட்டக்காரர்கள் முச்சக்கர வண்டியையும் கடுமையாகத் தாக்கினர். பெரும் பிரயத்தனத்திற்கு மத்தியில் பொலிஸாரே முச்சக்கர வண்டியை செலுத்தி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.