கடந்த நல்லாட்சி காலத்தில் அரசோடு சேர்ந்து இயங்கிய கூட்டமைப்பினர் தனது நண்பரை பாதுகாக்கவே பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரவில்லை என வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான க வி விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அவரது வாசஸ்தலத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நல்லாட்சி அரசின் போது அரசாங்கத்தோடு சேர்ந்து பயணித்த கூட்டமைப்பினர் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கும் செயற்பாட்டை அப்போதே நிறைவேற்றி இருக்கலாம். ஆனால் தமது நண்பருக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதற்காக அதனை செயற்படுத்தாமல் விட்டிருக்கிறார்கள். கடந்த 43 வருடமாக மக்களுக்கு எதிரான ஒரு சட்டமாக பயங்கரவாத தடைசட்டம் இருந்து வருகின்றது
எனினும் காலம் கடந்தும் கூட்மைப்பின் இளைஞர் அணி இதையாவது செய்து கொண்டு போகிறார்கள் என்பதை நாங்கள் நல்ல விதத்திலே பார்ப்போம். ஆனால் அரசியல் ரீதியாக பிழையான கருத்துக்களை முன்வைக்கவில்லை.
மேலும் இந்தியா இலங்கைக்கு பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குவதற்கு இலங்கை அரசுக்கு நிபந்தனை விதித்திருப்பதற்கு தமிழ் பேசும் அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து இந்தியாவை 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்த கோரி கடிதம் கையளித்தமையும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இலங்கைக்கு பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குவதற்கு இலங்கை அரசுக்கு இந்திய அரசாங்கமானது கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. அத்தோடு 13வது திருத்தச் சட்டத்தினை கட்டாயமாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என கோரியிருக்கின்றது. இதற்கு தமிழ் கட்சிகள் அனைவரும் ஒன்றிணைந்து 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப் படுத்துமாறு இந்தியை கோரி இந்திய பிரதமருக்கு கடிதம் அனுப்பியமையும் ஒரு காரணமாக இருக்கலாம்.
ஆனால் அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து செயற்படுவோமாக இருந்தால் காலம் கனிந்து நல்லதே நடக்கும் என ஏற்கனவே கூறியிருந்தோம் அதன் ஒரு அங்கமாக கூட இது இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.