தமிழீழ விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் ஸ்ரீசபாரெத்தினம் அவர்களின் 35வது ஆண்டு வீரவணக்க நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் , மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் ஸ்ரீ சபாரத்தினம் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட இடத்திலேயே குறித்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.
அஞ்சலி நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சிமன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், கட்சியின் ஆதரவாளர்கள் என்போர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்க காரியாலயத்தில் அதன் உபதலைவரும், கிழக்கு மாகாணசபை முன்னாள் பிரதித் தவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபை பிரதி மேயர் க.சத்தியசீலன், மண்முனை தென்எருவில் பற்றுப் பிரதேச சபைத் தாவிசாளர் ஞா.யோகநாதன், மாநகரசபை உறுப்பினர்களான த.இராஜேந்திரன், சீ.ஜெயந்திரகுமார், பு.ரூபராஜ், ச.கமலரூபன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது மறைந்த தலைவரின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, ஈகைச் சுடரேற்றப்பட்டதுடன், தலைவருடன் இணைந்து மறைந்த அத்தனை இயக்க உறுப்பினர்களுக்குமாக அகவணக்கம் செலுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.