இராணுவ வாகனமொன்றில் 45 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற போது ஹொரன பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் மற்றும் இராணுவத்திலிருந்து விலகிச் சென்ற சிப்பாய் ஆகியோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அவசியமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
கொழும்பில் இராணுவத்தின் நிர்வாக நோக்கங்களுக்காக குத்தகை அடிப்படையில் பயன்படுத்தப்படும் இந்த வாகனம் தம்புளை இயந்திரவியல் காலாட்படை பிரிவுக்கு சொந்தமானது என்பதுடன் நிரந்தர வாகன ஓட்டுனர் விடுமுறையில் சென்றிருந்தமையால் அவருக்கு மாறாக நியமிக்கப்பட்ட சாரதியால் இந்த வாகனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவல் கிடைத்தவுடன், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, மேற்படி இராணுவ சிப்பாய் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் சட்ட விதிகளின் படி அவருக்கு எடுக்ககூடிய அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கும் இராணுவ பொலிஸ் பிரிவின் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.