“யாழ்.மாநகர முதல்வருக்கான தேர்தலில் மணிவண்ணனுக்கு ஆதரவாக வாக்களித்த அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவர்” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 23ஆவது முதல்வராக சட்டத்தரணி வி.மணிவண்ணன் பதவியேற்றுள்ளார். அவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் இம்மானுவேல் ஆர்னல்டை விட ஒரு மேலதிக வாக்கைப் பெற்று மேயராக தெரிவாகியிருந்தார்.

இந்நிலையில் வி.மணிவண்ணனுக்கு ஆதரவளித்த தங்களுடைய கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ,

“தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியிலிருந்து நீக்கப்பட்ட வி.மணிவண்ணன் யாழ். மாநகர சபையின் மேயராகத் தெரிவாக ஆதரவு வழங்கி கட்சியின் கொள்கைக்குத் துரோகம் செய்த யாழ்ப்பாண மாநகர சபையின் 10 உறுப்பினர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள்.மணிவண்ணனை ஆதரித்ததன் மூலம் கட்சியின் கொள்கைக்குத் துரோகம் இழைத்து, யாழ்ப்பண மாநகர சபையின் எமது கட்சியைப் பிரதிநித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் 10 பேர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கைகோர்த்து கட்டிப்பிடித்துக் கொண்டுள்ளனர். அவர்களை எமது கட்சியிலிருந்து நீக்குவோம். இந்த நிலைப்பாட்டில் நாம் மிகவும் உறுதியாக இருக்கின்றோம்”  என்றார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *