“குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை விடுவிப்பதற்காக 69 இலட்சம் மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்துள்ளனர்” என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று(07.12.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் ஊடகங்களிடம் மேலும் கூறும்போது,
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தோல்வியடைந்தாலும் வெற்றியடைந்துள்ளதைப் போலவே காண்பித்துக்கொள்வார்கள். இவர்கள் தோல்வியடைந்தாலும் நாடு தோல்வியடைய நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.
பிள்ளையான் மற்றும் சில் துணி விவகாரத்துடன் தொடர்புடையவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது தவிர பசில் ராஜபக்ஷவின் பயணத்தடை நீக்கம் மற்றும் அரச தரப்பிலுள்ள வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டமை என அரசாங்கத்தினது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதில் மாத்திரமே ஆளுந்தரப்பு வெற்றிகண்டுள்ளது. அவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நாட்டை தோல்வியடைச் செய்ய நாம் தயாரில்லை.
இவ்வாறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை விடுவிப்பதற்கா 69 இலட்சம் மக்கள் ஜனாதிபதிக்கு வாக்களித்தார்கள்? தற்போது பல அரச அதிகாரிகள் தானாக பதவி விலகியுள்ளனர். அந்த வெற்றிடங்களுக்கு ராஜபக்ஷ குடும்பத்தினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் கொவிட் தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் உண்மையான மருந்து நாட்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டால் அது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். ஆனால் போலியான மருந்துகளால் மக்களால் ஏமாற்ற வேண்டாம். இவ்வாறான தவறுகளை மக்களுக்கு காண்பிக்கும் ஊடகங்களும் நாடு அபாயத்திற்குச் செல்லும் போது பொறுப்பு கூற வேண்டும்” என தெரிவித்துள்ளார்.