“அரசை ஆதரித்த காரணத்தால்தான் பிள்ளையான் பிணையில் விடுதலையாகியுள்ளார்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, தேசிய மரபுரிமைகள், அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு, இராஜாங்க அமைச்களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
சந்திரகாந்தன் எனும் பிள்ளையான் பயங்கரவாதத் தடைச் சட்டதின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அவர் சாட்சி இல்லாமல் சிறையில் இருந்துள்ளார் என்ற தர்க்கத்தை அரச தரப்பினர் முன்வைக்கின்றனர்.
இவர்களுக்கு நான் கூறுவது என்னவென்றால், எமது இளைஞர்கள் சாட்சிகள் இல்லாது வெறும் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்துடன் 20 வருடங்கள் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதனையும் அனைவரும் மறந்துவிடக்கூடாது. பிள்ளையானுக்குப் பிணை கொடுக்க முடியும் என்றால் 20 வருடங்களாக சிறையில் உள்ள எமது அரசியல் கைதிகளை ஏன் விடுவிக்க முடியாது.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்தவர்களுக்குப் பிணை வழங்க முடியாது என அரச தரப்பினர் எம்மிடம் கூறினார்கள். அப்படியென்றால் பிள்ளையான் எவ்வாறு பிணையில் விடுதலையாக முடியும். பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் எமது தமிழ் இளைஞர்கள் பொய்க் குற்றச்சாட்டில் வெறுமனே குற்ற ஒப்புதல் சாட்சியங்களை வைத்துக்கொண்டு தடுத்து வைத்திருப்பது நியாயமானதா? இது வெறுமனே அரசின் நிகழ்ச்சி நிரலில் நடைபெறும் செயற்பாடாகும். அரசை ஆதரித்த காரணத்தால்தான் பிள்ளையான் பிணையில் விடுதலையாகியுள்ளார்” என தெரிவித்துள்ளார்.