இலங்கையில் பல பிரதேசங்களிலும் வீதிகளில் திடீரென நபர்கள் விழுந்து உயிரிழப்பது தொடர்பிலான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவிவருகின்றன.
இதனால் மக்கள் இடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளதுடன், சிலர் கொரோனா வைரஸினால்தான் இந்த உயிரிழப்புக்கள் ஏற்படுவதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் வெளியிட்டு வருகின்றனர். பாணந்துறை, புத்தளம் மற்றும் கண்டி ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில் இதுசம்பந்தமாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜயருவன் பண்டாரவிடம் வினவியபோது, இந்த மரணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், அதுவரை இது கொரோனா வைரஸ் மரணங்கள் எனக் கூறமுடியாது எனவும் தெரிவித்திருக்கின்றார்.
இதே நேரத்தில் வீதிகளில் கிடைக்கும் சடலங்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் என சமூக ஊடகங்களில் பொய்யான பிரச்சாரங்களை முன்னெடுத்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (சனிக்கிழமை) குறித்த சம்பவம் தொடர்பாக கடுகண்ணாவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய ஒருவர் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக குற்றவியல் விசாரணை திணைக்ககளம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.