அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்திருந்தாலும், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாக கூறி தோல்வியை ஏற்க டிரம்ப் மறுத்து வருகிறார். தேர்தல் தொடர்பாக அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் டிரம்ப் பிரசார குழு வழக்கு தொடுத்து உள்ளது.
இந்நிலையில்,வெல்லிங்டன் மாகாணத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஜோ பைடன், “டிரம்ப் தோல்வியை ஏற்க மறுப்பது தர்மசங்கடமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக பைடன் மேலும் கூறுகையில்,
“டிரம்பின் நடவடிக்கை ஜனாதிபதியின் பாரம்பரியத்திற்கு உகந்ததாக இருக்காது. ஜனவரி மாதத்தில் அனைத்தும் பலனளிக்கும் விதமாகவே அமையப் போகிறது. நம்பிக்கையான எதிர்பார்ப்பு என்னவென்றால், ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை அமெரிக்க மக்கள் புரிந்து கொள்கிறார்கள். கடந்த 5,6 ஆண்டுகளில் நாம் கண்டு வந்த கசப்பான அரசியலில் இருந்து நமது நாட்டை நாம் விடுவிப்போம் என்று நான் நம்புகிறேன்.
நடந்து விடும் என்ற பார்வையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது என நான் நினைக்கிறேன். ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி மைக் பொம்பியோ தரப்பு இதுவரை கூறி வரும் குற்றச்சாட்டுகளுக்கு தற்போது வரை எந்த ஆதாரங்களும் இல்லை. குடியரசுக் கட்சியினர் எனது வெற்றியை நிச்சயம் ஏற்றுக்கொள்வார்கள்” என தெரிவித்தார்.
இந்த நிலையில் தேர்தல் முடிவுகளை எதிர்த்து முக்கிய மாகாணங்களில் தேர்தல் பிரசார பாணியில் பிரமாண்ட பேரணிகளை நடத்த டிரம்ப் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக தான் கூறும் மாகாணங்களில் மறு வாக்கு எண்ணிக்கையை வலியுறுத்தி அவர் இந்த பேரணிகளை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.