நாட்டில் கொரோனா தொற்று தொடர்பான உண்மையான நிலைமையை மக்களிடம் மறைக்க அரசாங்கம் எப்போதும் முயற்சிக்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக ஊடக சந்திப்பின் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்ததாவது,
“சமூகத்தில் ஏராளமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டபோதிலும் கொரோனா வைரஸ் சமூக ரீதியாகப்பரவவில்லை என அரசாங்கம் அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாகத் தொழிற்சாலைகளில் பணிபுரியும் நகரம் மற்றும் கிராமங்களிலுள்ள இளைஞர், யுவதிகள் முழுமையாக அநாதையாக்கப்பட்டுள்ளார்கள். தொழிலை இழந்த நிலையில் அவர்கள் உட்கொள்ள உணவு , தங்கி இருந்த விடுதிகளுக்குச் செலுத்தப் பணம் இல்லை, முதலாளிமார்கள் குறித்த விடுதியிலிருந்து யுவதி, இளைஞர்களை அகற்ற முயற்சிக்கிறார்கள்.
எனவே, அரசாங்கம் தற்போதைய நிலையைக் கருத்திற்கொண்டு பொதுமக்களுக்கு உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்“ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.