யாழ்ப்பாணத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி நடைபெற்ற கிராமிய பொருளாதார மேம்பாட்டு கூட்டம் – வலுக்கும் எதிர்ப்புக்கள் !

கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்டங்களுக்கான கூட்டம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகியது.

தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு ஏற்ப கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய திட்டத்துக்கு அமைச்சுகள், இராஜாங்க அமைச்சுக்களை உள்ளடக்கி 4 குழுக்கள் அமைக்கப்பட்டன.

1. சமூக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழு,
2. வாழ்வாதார மேம்பாட்டு குழு,
3. உள்நாட்டு உற்பத்தி துறையை ஊக்குவிப்பதற்கான அபிவிருத்தி குழு,
4. கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழு,

இதில் கிராமப்புற உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு குழுவின் கூட்டமே யாழ்ப்பாணம்- கிளிநொச்சி மாவட்டங்களை உள்ளடக்கி இன்று இடம்பெறுகிறது.

நீர்ப்பாசனம் மற்றும் உள்ளகப் பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச, மின்சக்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோ ஆகியோர் உள்ளடங்களாக இராஜாங்க அமைச்சர்கள் இந்தக் குழுவில் உள்ளனர்.

அவர்களின் தலைமையில் நடைபெறும் இன்றைய கூட்டத்தில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் முன்னெடுக்கப்படவேண்டிய உள்கட்டமைப்பு வசதிகள் தொடர்பில் மாவட்டச் செயலாளர்கள் தரவுகளை முன்வைப்பர்.

இன்றைய கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரும் கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், யாழ்ப்பாணம் – கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர்.

நாட்டில் நிலவும் கோவிட் -19 தொற்று நோய் பரவல் காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி இந்தக் கூட்டம் நடத்தப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் அலுவலகர்கள் உள்பட பலர் தென்பகுதியிலிருந்து வந்து இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளமை தொடர்பில் சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் பதிவிடப்பட்டுள்ளன.

குறிப்பாக மக்களுடைய மரணச்சடங்குகளிலும், திருமண நிகழ்வுகளிலும் வெறும் 25-30 பேரை மட்டுமே பங்கு கொள்ளச் சொல்லி இறுக்கமான நடைமுறைகளை விதித்துவிட்டு அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியோரே இவ்வாறு செயற்படுவது எந்த வகையில் நியாயமானது ? என சமூக வலைத்தளங்களில் அனைவரும் விமர்சனங்களை வெளியிட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *