“முகமது நபி குறித்த கேலிச்சித்திர விவகாரத்தை முன்வைத்து பிரான்ஸில் நடைபெறும் வன்முறை வெறியாட்டங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அந்நாட்டு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் இருந்து வெளியாகும் ‘சார்லி ஹெப்டோ’ என்ற வார இதழில் முகமது நபிகள் குறித்த கேலிச்சித்திரம் கடந்த மாதம் மறுபிரசுரம் செய்யப்பட்டது. இது அங்குள்ள முஸ்லிம்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், கடந்த மாதம் 17-ம் தேதி பாரிசில் உள்ள பள்ளி ஒன்றில் வரலாற்று ஆசிரியர் ஒருவர், முகமது நபிகளின் கேலிச்சித்திரத்தை மாணவர்களுக்கு காண்பித்து கருத்து சுதந்திரம் குறித்து பேசியதாக தெரிகிறது. இந்த தகவல் அங்கு காட்டுத் தீயாக பரவியதை அடுத்து, அன்றைய தினமே அந்த ஆசிரியரை ஒரு கும்பல் தலையை வெட்டிக் கொலை செய்தது. போலீஸ் விசாரணையில், அவர்கள் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த பரபரப்பு தணியும் முன்பாகவே, பாரிஸின் நைஸ் நகரில் உள்ள தேவாலயத்தில் கடந்த வாரம் மர்ம நபர் ஒருவர் புகுந்து அங்கிருந்த 3 பேரை கத்தியால் தாக்கினார். இதில் அவர்கள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக, போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த கொலையாளி, மருத்துவமனையில் தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரும் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் நடந்த அன்று ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், இஸ்லாம் மதம் குறித்து சில கருத்துகள் கூறியிருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரான்சிலும், மற்ற முஸ்லிம் நாடுகளிலும் போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில், பாரிஸில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான்நேற்று பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘‘முகமது நபி குறித்த கேலிச்சித்திரம் முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதை புரிந்துகொள்ள முடிகிறது. அதேநேரத்தில், இந்த விவகாரத்தை முன்வைத்து நடைபெறும் வன்முறை வெறியாட்டங்களை ஒருபோதும் ஏற்க முடியாது” என்றார்.