20ம் திருத்தச் சட்டத்தின் ஆபத்துக்களை அரசாங்கம் புரிந்துகொள்ளத் தவறிவிட்டது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் நீதி அமைச்சருமான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (06.10.2020) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன் போது கருத்து தெரிவித்த அவர்,
20ம் திருத்தச் சட்டத்தின் மூலம் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு பின்னர் பதவி ஏற்றுக் கொள்ளும் ஜனாதிபதி உச்சபட்ச நலன்களை பெற்றுக்கொள்வார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 19ம் திருத்தச் சட்டத்தின் குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், 19ம் திருத்தச் சட்டம் நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருக்காவிட்டால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஒருநாளும் இந்த நாட்டின் ஜனாதிபதியாகியிருக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் 20ம் திருத்தச் சட்டத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை புரிந்து கொள்ளத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.