அரச பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் – அதிபர்கள் தனியார் கட்டண வகுப்புகளில் பணியாற்ற தடை விதித்து சுற்றறிக்கை வெளியீடு!

வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் அதிபர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டண வகுப்புகளில் பணியாற்றுவதை முற்றாக தடை செய்து வடமத்திய தலைமை அமைச்சின் செயலாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

வடமத்திய மாகாண முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன, மாகாணக் கல்விப் பணிப்பாளர், அனைத்து பிராந்தியப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிப்பாளர்கள், பாடசாலை அதிபர்கள் ஆகியோருக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

 

சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

 

வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கடமையாற்றும் சில அதிபர்கள், ஆசிரியர் ஆலோசகர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமது வகுப்புகள் மற்றும் பாடசாலைகளில் மாணவர்களிடம் பணம் வசூலித்து தனியார் பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை பாடசாலை நேரத்திலோ, பாடசாலை நேரம் முடிந்ததும் அல்லது வார இறுதி நாட்களிலோ நடத்துவதாக தொடர்ந்து முறைப்பாடுகள் உள்ளன.

 

சில ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் பாடசாலையில் கற்பித்தல் பணியை சரிவர செய்யாததுடன், தங்களின் தனிப்பட்ட உதவி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்குச் செல்லாத பிள்ளைகளை உதாசீனப்படுத்துவதுடன், பாடசாலையில் பல்வேறு உடல் மற்றும் மன உபாதைகளுக்கும், துன்பங்களுக்கும் உள்ளாக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி, வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களிடம் பணம் வசூலிப்பதும், பாடசாலை நேரத்திலோ, பாடசாலை நேரத்திற்குப் பின்னரோ அல்லது வார இறுதி நாட்களிலோ தனியார் பயிற்சி வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்துவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்களை பின்பற்றாத ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் அதிபர்களுக்கு எதிராக கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என வடமத்திய மாகாண முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன அந்த சுற்றறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *