“52 சதவீத மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியமை தவறு.“என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இந்தியாவின் தந்தி டி.வி.க்கு வழங்கிய நேர்காணலிலேயே பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அரசியல், பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியமையை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் அல்லது அந்த நிலையப்பாட்டை சரியென நினைக்கிறீர்களா? என்று தந்தி டி.வி.யின் நேர்காணலில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நாமல்,
அது தவறானது, இது என்னுடைய தனிப்பட்ட கருத்து. எமது மக்கள் ஜனநாயகத்தை விரும்பும் மக்கள், கோட்டாபய ராஜபக்ஷ 52 சதவீத மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதி. வேறு எந்த ஜனாதிபதியும் அவ்வாறு வெற்றிபெறவில்லை.
நாங்கள் நாட்டை பொறுபேற்ற போது நாடு மிகவும் நெருக்கடியான சூழலிலேயே இருந்தது. துரதிஷ்டவசமான பொருளாதார நெருக்கடி, கொரோனா பெருந்தொற்று, வேலையில்லாப் பிரச்சினை, வட்டி வீதங்கள் அதிகரிப்பு, டொலர் கையிருப்பில்லாத காலப்பகுதியிலேயே நாம் நாட்டை பொறுப்பேற்றோம் என்று பதிலளித்தார்.
ராஜபக்ஷர்களின் ஆட்சியை கவிழ்க்க சர்வதேச ஆதரவுடன் சதி நடைபெற்றுள்ளது என்றும் கூறியுள்ளார்.
இதேவேளை, தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க. வெற்றி பெறாமல் போனதைப்போல்தான் எம்மாலும் தமிழர்களின் மனங்களில் நம்பிக்கையை பெறமுடியாமல் போனது. எப்போது பா.ஜ.க. தமிழகத்தில் வெற்றி பெறுமோ அப்போது நான் நமது கட்சியை வடகிழக்கில் வெற்றிபெற செய்வேன் என்று சொல்லியுள்ளேன். என்றும் கூறியுள்ளார்.
மேலும், என்னுடைய தந்தை சொல்வார் இந்தியாவும் இலங்கையும் உறவினர் என்று. உறவினர் என்பதால் ஏற்றம் இறக்கம் இருக்கத்தானே செய்யும். மோடியின் தமிழ் பேசும் விதமும் அப்பாவின் தமிழ் பேசும் விதமும் கிட்டத்தட்ட ஒன்றுதான்.
இதேவேளை எனக்கு டென்டுல்க்கரை எப்பவும் பிடிக்கும் யுவராஜையும் பிடிக்கும் இப்போது ரோகித் சர்மா, கோலி, பும்ரா, அதேபோல் சினிமாவில் விஜய்யை மிகவும் பிடிக்கும் ஆனால் என்னுடைய அப்பாவுக்கு ரஜினியை பிடிக்கும் என்றும் நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.