02

02

ஒரு தமிழ்த் தலைவர் எப்படி வாழக்கூடாது என்பதற்கு சம்பந்தன் வாழ்க்கை வரலாற்றில் பதிவு செய்யப்படும். – மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர்

மனித உரிமைச் செயற்பாட்டாளர் சண் மாஸ்டர் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மரணத்தின் பின்னர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளதாவது,

இறந்தவர்களை தெய்வங்களாகவும், இறந்தவர்களை அடக்கம் செய்யும் இடங்களை புனித பிரதேசமாகவும் பூசிக்கும் வரலாற்று மரபிற்கு சொந்தக்காரர்கள் தமிழினம்.

இன்றும் நாம் இறந்தவர்களின் நீதிக்காக கண்ணீர் வடிக்கிறோம் அந்த கண்ணீர் விடும் உரிமைக்காகவும் சேர்த்து போராடுகின்றோம். எனினும் சில மரணங்கள் சுமை நீங்கியதாக மகிழ்வை தருகிறது. நரகாசூரன் வதத்தை இன்றும் தீபாவளியாக மக்கள் கொண்டாடுகிறார்கள்.

உலகிலே ஆளும் கட்சியால் உருவாக்கப்பட்ட அதிசயமான எதிர்க்கட்சி தலைவர் என்ற பதவியோடு, உல்லாச ஆடம்பர வாழ்க்கைக்காகவும் ஈழத்தமிழனத்தின் சுயநிர்ணய உரிமையை ஏக்கிய இராச்சியத்துக்குள்ளும், சிங்கள பௌத்த பேரினவாதத்தின் காலுக்குள்ளும் போட்டு மிதித்தவனின் மரணம். ஈழத்தமிழர்களுக்கு இன்னொரு மகிழ்ச்சி தரும் செய்தி தான் என்பதை சம்பந்தனின் மரணம் குறித்து தமிழ்த் தேசிய உணர்வோடு சமூக வலைத்தளங்களில் வெளிவரும் பதிவுகளே சாட்சியாகின்றன.

கதிர்காமர், நீலன் திருச்செல்வம் போன்றோர் தென்னிலங்கையின் முகத்துடனேயே தமிழ்த் தேசியத்தை கருவறுக்கும் வேலை செய்தார்கள். எனினும் சம்பந்தனோ தமிழ்த் தேசிய முகமூடியை அணிந்துகொண்டு தமிழ் சமூகத்திற்குள் ஆழவேருன்றிக்கொண்டு தமிழினத்தை கருவறுப்பதையே தனது முழுநேர பணியாகச் செய்திருந்தார்.

கதிர்காமர், நீலனை கூட புனிதமாக்குகிறது சம்பந்தனின் துரோகம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் எனும் மணிமுடி தரித்து அழகு பார்த்த தமிழீழ விடுதலைப் புலிகளின் எதிரானவர்களின் பட்டியலில் நானும் இருந்தேனென சிங்கள நாடாளுமன்றத்தில் தெரிவித்து சர்வதேச அரங்கில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பயங்கரவாத தடைநீடிப்புக்கு உரமூட்டி சிங்களத்தின் எல்லை தாண்டிய அனைத்துலக சட்டப்போராட்டத்திற்கும் இறுதிவரை துணைநின்றதை எப்படி நாம் மறக்க முடியும்?

சம்பந்தனின் மரணச் செய்தியை தமிழர்கள் அறிய முன்னரே சிங்களத் தலைவர்கள் தங்களின் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட அறிக்கைகளே அவரின் துரோகத்தின் ஆழத்திற்கு சாட்சியாகிறது. சர்வதேச விசாரணை என்ற விளிம்பிலிருந்து தமிழர்களின் நீதிக்கான கோரிக்கைளை இலங்கையின் நீதிப்பொறிமுறைக்குள் இழுத்துவருவதில் சம்பந்தனின் பங்களிப்பை காலம் கடந்தும் சிங்கள தேசம் நிச்சயம் நினைவுகூரும்.

சிங்கள மந்திரிமாரே பௌத்தத்தை அரச மதமாகவும், ஒற்றையாட்சிக்குள் சமஸ்டியை கனவு காணக்கூடிய சம்பந்தன் காலமே தமக்கு சாதகமான காலமென மகிழ்ந்தார்கள். நிச்சயம் அந்த மகிழ்ச்சி மறைவது அவர்களுக்கு கவலையே. எனினும் கவலைப்படாதீர்கள் சுமோ கவலை தீர்ப்பார்.

மரணம் நெருங்கிய இறுதி நாட்களிலும்,முள்ளிவாக்கால் சுடுபுழுதியிலே கொத்துக்குண்டுகளால் கருகிப்போன எமது ஈழத்தமிழ் குழந்தைகளின் மரணத்திற்கு நீதிகேட்க வேண்டும் என்று நினைக்காத 91 வயது முதியவரின் மரணம் காலம் தாழ்ந்து விட்டதோ என்று தமிழ் சமூகம் எண்ணுவதோடு, ஒரு தமிழ்த் தலைவர் எப்படி வாழக்கூடாது என்பதற்கும் சம்பந்தன் வாழ்க்கை வரலாற்றில் பதிவு செய்யப்படும்.தமிழினம் தியாகத்துக்கு சமாந்தரமாக துரோகத்துக்குள்ளும் சிக்கி சின்னபின்னமாகியதே வரலாறு. இன்று உயிரோடு இருக்கும் வரை சம்பந்தனை ஓய்வு பெறச் சொன்னவர்களும், துரோகி என்று வசை பாடிய சிலரும் உயிரற்ற சம்பந்தனை புனிதராக்கி நாகரீகம் கற்பிக்கிறார்கள் எனக்குள்ள ஒரே கேள்வி உயிரோடு இருக்கும்போது ஒருவர் துரோகியாகவும், உயிரற்ற பின்னர் அவர் தியாகியாகவும் பார்க்கும் சூத்திரத்தை நான் அறியேன் என்னை பொறுத்தவரை துரோகமும், தியாகமும் அவர் தம் வாழ்வே தீர்மானிக்கிறது.

கவிஞர் தாமரை கூறியது போல் மரணங்கள் யாரையும் யோக்கியன் ஆக்குவதில்லை சம்பந்தனின் மரணக் கொண்டாட்டத்தை அவரே தீர்மானித்துள்ளார்.

 

அந்தவகையில் சம்பந்தனின் துரோகம் மரணத்தால் புனிதம் அடையப்போவதில்லை. இன்னுமொரு சம்பந்தனை சுமோ உருவில் செதுக்கிவிட்டே அய்யா தூங்கியுள்ளார்.

மரணத்தின் பின்னும் தமிழினத்தை அழிக்க வேண்டும் என்று கருதியவருக்காய் எவ்வாறு ஈழத்தமிழனின் கண்ணீர் சிந்தும்?

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு மூன்று மாத விடுமுறை !

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு  நாடாளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அந்த வகையில், நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (02) சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடிய போதே இது தொடர்பில் முன்மொழியப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், பிரதான நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்ததையடுத்து எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்லவினால்  கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ஜூலை 2 ஆம் திகதியிலிருந்து 3 மாத காலங்களுக்கு விடுமுறையளிக்குமாறு முன்மொழியப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில், இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைச்சரான செல்வராசா கஜேந்திரன்  வழிமொழிந்துள்ளார்.

இதனையடுத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நாடாளுமன்றத்தினால் மூன்று மாதங்களுக்கு விடுமுறை வழங்க சபை இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தினால் யாழ். மாவட்டத்தில் 934 மழைநீர் சேகரிப்புத் தாங்கிகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இந்திய அரசாங்கத்தினால் யாழ். மாவட்டத்தில் 934 மழைநீர் சேகரிப்புத் தாங்கிகளை அமைப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

யாழ்.மாவட்டத்திற்கு சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக இந்திய அரசினால் வழங்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி மாவட்டத்தில் 3,000 மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளை அமைப்பதற்கு இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு 25-10-2016 அன்று அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

மூன்று ஆண்டுகளில் இத்திட்டம் முடிக்கப்படவிருந்தது ஆனால் நிதி மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக, திட்ட காலத்தை ஜூன் 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்திட்டத்தின் கீழ் மீதமுள்ள நிதியில் 934 மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைக்க நீதி, சிறைத்துறை மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

எமக்கு பாரபட்சம் காட்டாதே – மட்டக்களப்பில் பட்டதாரிகள் கவனயீர்ப்பு!

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். மட்டக்களப்பு, காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத்தூபிக்கு அருகில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பட்டத்தினை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கு அரச நியமனத்தினை வழங்க கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நீண்ட காலமாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளதாகவும் அவர்களுக்கான அரச நியமனங்கள் தொடர்பாக அரசியல்வாதிகளும் அரசாங்கமும் பாராமுகமாக இருப்பதாகவும் இதன்போது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த போராட்டத்தில் இரு நூறுக்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் கலந்துகொண்டதுடன் பட்டதாரிகளுக்கு ஆதரவு தெரிவித்து கிழலக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேச லோகநாதன் குருக்கள் கலந்துகொண்டதுடன் ஜேசு சபை துறவி அருட்தந்தை ஜோசப்மேரியும் கலந்துகொண்டிருந்தார்.

“ரணில், நான் நாட்டைப் பிரிப்பேன் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?” என்னிடம் சம்பந்தன் கேட்டார் – நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், மறைந்த நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் எப்பொழுதும் இலங்கையின் ஆள்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றியதாவும், அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டிய விதம் தொடர்பில் அவருக்கு தனியான நிலைப்பாடு இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இரா.சம்பந்தனின் மறைவு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

நான் இந்த உரையாற்றும் போது, ​​அன்று என்னுடன் நாடாளுமன்றத்திற்கு வந்தவர்களில் எஞ்சியிருந்த எனது சகாக்களில் ஒருவரான சம்பந்தன் இப்போது எங்களுடன் இல்லை.

மிகவும் கடினமான காலகட்டங்களில் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் ஆற்றிய பங்களிப்பை நன்றியுடன் நினைவு கூர்கிறேன். அவர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு (TNA) ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்திய போதிலும், அவர் எப்போதும் இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டிற்காக பங்காற்றினார்.

ஒருமுறை அவர் என்னுடன் உரையாற்றும் போது “ரணில்,நான் நாட்டைப் பிரிப்பேன் என்று நினைக்கிறீர்களா? நான் சிறுவனாக இருந்த போது, 1948ல் நாடு சுதந்திரம் பெறுவதைப் பார்க்கச் சென்றிருந்தேன்” என்று அவர் என்னிடம் குறிப்பிட்டார்.

அதனைக் காணும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை. நம்மில் பலர் அப்போது பிறக்கவே இல்லை. ஆனால் அதிகாரப் பகிர்வு தொடர்பில் அவர் தனித்துவமான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். அதைப் பற்றி விவாதம் செய்ய அவசியமில்லை. அவர் அதற்கான போதுமான பங்கை செய்துள்ளதாக நினைக்கிறேன். அதனை நிறைவு செய்ய இன்னும் கொஞ்சம் பங்காற்ற வேண்டியுள்ளது. மேலும் அந்த வேலைகளை நிறைவு செய்வதே அவருக்கு செய்யக்கூடிய மிக உயர்ந்த பங்களிப்பாக இருக்கும்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.