June

June

தன்கட்சியை சேர்ந்த குடுமி ஜெயாவின் ஊழல்களை கேள்வி கேட்க முடியாத உமாசந்திரா பிரகாஷ் வடமாகாண ஆளுநர் நியமனத்துக்கு எதிராக போர்க்கொடி !

அண்மையில் வடக்கு மாகாண ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள  பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் உள்ளூராட்சி சபை தேர்தல் அண்மித்துக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், ஜனாதிபதி  ரணிலை கைப்பொம்பையாக பாவித்து தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து பதவி விலகி, வட மாகாண ஆளுநர் பதவியை அரசியல் இலஞ்சமாக பெற்றுக்கொண்டுள்ளார் என்ற குற்றச்சாட்டை ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளர் உமாசந்திரா பிரகாஷ் முன்வைத்துள்ளார்.

இலஞ்சமாக வழங்கப்பட்டதா வட மாகாண ஆளுநர் பதவி | Bribery Charges Against Northern Governor

தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார். குறித்த செவ்வியில் மேலும் பேசிய அவர்,

“ தேர்தல் ஆணைக்குழுவில் இருந்து பதவி விலகியமைக்காக கொடுக்கப்பட்ட இலஞ்சத்தை பதவியாக பெற்றுக்கொண்டவரே தற்போதைய வடக்கு ஆளுநர். அவர் நிச்சயம் பெற்றிருக்கக் கூடாது, வடக்கு மாகாண ஆளுநர் பதவியை பெறுவதற்காகவே தேர்தல் ஆணைக்குழுவில் இருந்த பதவியை இழந்தது உண்மை.

ஒரு பதவியை பெறுவதற்காக இன்னுமொரு பதவியை இழந்து இருப்பது மக்கள் நலன் சார்ந்த விடயமாக எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில், ஆளுநர் பதவியை விட ஜனநாயக முறைமையோடு சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைக்குழுவின் பதவியென்பது முக்கியமான ஒன்று.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் எனும் முக்கியமான பதவியை துறந்து, இந்த ஆளுநர் பதவியை இலஞ்சமாக பெற்றுக்கொண்ட அம்மையாரை நான் கவலையோடு பார்க்கிறேன்.” என அவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை நாட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்கு எதிராக உடனடியாக குரல் கொடுக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளர் உமாசந்திரா பிரகாஷ் தன்னுடைய கட்சிக்காரர் செய்த ஊழல்களுக்கு மட்டும் துணைபோகின்ற ஒரு அவலமான நிலையும் – அதனை கண்டிக்காத நிலையம்  காணப்படுகின்றது.

இலங்கையில் ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்புள்ள சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் வெற்றிவேலு ஜெயந்திரன் ஒரு பெரும் ஆள்மாறாட்டம் செய்துள்ளதுடன் இளம்பெண்களை ஆசைகாட்டி மோசம் செய்யும் மோசடியாளார் என்பதும் பிரான்ஸில் குற்றவாளியாகத் தண்டனை அனுபவித்துள்ளார் என்பதும் தேசம்நெற் க்கு ஆதாரங்களுடன் தெரியவந்திருந்தது.  ஒரு தேசியக் கட்சி, தேசிய சிறுபான்மை இனத்தின் பிரதான அமைப்பாளரை நியமிக்கின்ற போது, அந்நபர் பற்றி எவ்விதமான விசாரணைகளும் ஆய்வுகளும் இல்லாமல் அச்சமூகத்தில் உள்ள ஒரு அயோக்கியரை கலாச்சாரத் தலைநகர் என்று சொல்லப்படுகின்ற யாழ் மாவட்டத்தின் அமைப்பாளராக நியமித்திருப்பது யாழ் மாவட்டத் தமிழர்களை அவமானப்படுத்துகின்ற செயல் என யாழ் கல்வியியலாளர்கள் தெரிவிந்திருந்த நிலையில் இந்தப் பிரச்சனை தொடர்பிலும் – பாதிக்கப்பட்ட பெண்களின் நிலை தொடர்பிலும் தேசம் நெட் அதிக கவனம் செலுத்தி இருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் மாவட்ட அமைப்பாளராக உள்ள ஜெயசந்திரன் எனும் குடுமி ஜெயா தொடர்ச்சியாக பெண்கள் மீதான பாலியல் அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டவர் என்பதுடன் – சாதிய மனோநிலையில் இருந்து கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களை குறிப்பாக அச்சமுதாயத்தின் பெண்களை தன்னுடைய இச்சைகளுக்காக பயன்படுத்துகின்ற ஒரு அராஜகப் போக்கில் செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றார். பொதுவெளியில் கூட பெண்களை மிக இழிவாக தரக்குறைவாக கதைக்கக்கூடிய மனோநிலையில் உள்ள குறித்த ஜெயச்சந்திரன் என்பவரை ஆதரிக்கின்ற –  அவருடைய சக பாடிகளுள் ஒருவரே ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரான  உமாசந்திரா பிரகாஷ் ஆவார்.

“ஆம், தமிழ் ஒரு பொது உடமை, உலகத்தில் முதல் முதலாக தோன்றிய மொழி தமிழ்” என்ற வாக்கியத்தோடு முகநூலில் வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளரான உமாசந்திரா பிரகாஷ் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளராகவும் உள்ளார். ஜெயந்திரனை அரசியலுக்குள் கொண்டு வந்ததில் இவருக்குள்ள பங்கை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் தான் ஜெயந்திரனை அரசியலுக்குள் கொண்டுவரவில்லை என்றும் ஆனால் ஜெயந்திரனுடைய உறவுகள் பற்றித் தனக்குத் தெரியும் என்றும் அவருடைய சினேகிதிக்குத் தெரிவித்துள்ளார். ஜெயந்திரனுடைய தனிப்பட்ட வாழ்க்கை வேறு அரசியல் வேறு அதனால் தான் அவருடன் சேர்ந்து அரசியலில் பயணிக்க தான் முன்வந்தாக இவர் தன்னுடைய சினேகிதிக்கு விளக்கமளித்துள்ளார். தன்னை பெண்ணியவாதியாகவும் காட்டிக்கொள்ளும் உமாசந்திர பிரகாஷ் ஜெயந்திரனின் தாய்வழி உறவுக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

உமாசந்திர பிரகாஷ் தற்போது பாதிக்கப்பட்டுள்ள மூன்று பெண்களின்: ஜெயந்திரனின் கொடுமை தாங்காமல் விவாகரத்துக்குக் கோரி நிற்கும் இரு பிள்ளைகளின் தாய், திருமணமாகாமலேயே குழந்தையுடன் தற்போது ஜெயந்திரனின் கீழ் அடி உதை வாங்கி வாழும் ஒரு பெண் குழந்தையின் தாய், குழந்தை முகம் கலையாத தற்போது வசீகரிக்கப்பட்ட பெண் – என அனைவரின் அவலத்தையும் நன்கு அறிந்தவர். ஆனாலும் ஜெயந்திரனின் பணத்துக்காக லக்ஸ் ஹொட்டலுக்காக இவற்றை சகித்துக்கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அலுவலகம் லக்ஸ் ஹொட்டலிலியே இயங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் நேற்றையதினம் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் உமாசந்திர பிரகாஷ் மேற்கண்டவாறு ஆளநர் நியமனம் பற்றி விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

பிரித்தானியாவின் வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தில் இலங்கையும் உள்ளடக்கம் !

பிரித்தானியா இன்று நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ள வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள பிரித்தானிய தூதரகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

பிரித்தானியா நடைமுறைப்படுத்தியுள்ள வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தில் 65 நாடுகள் உள்ளடங்குவதாக ஸ்ரீலங்காவிலுள்ள பிரித்தானிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பயனடையும் நாடுகளுக்கு கட்டணக் குறைப்பு மற்றும் எளிமையான வர்த்தக விதிமுறைகள் போன்ற சலுகைகள் வழங்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இலங்கையின் இரண்டாவது பெரிய வர்த்தக ஏற்றுமதி சந்தையாக பிரித்தானியா இருப்பதாக பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் சுட்டிக்காட்டியுள்ளதுடன், இந்த உறவை மேலும் வலுப்படுத்த பிரித்தானியா ஆர்வம் காட்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், கட்டணக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ள பொருட்களை இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் அதிகளவில் ஏற்றுமதி செய்வார்கள் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை உள்ளிட்ட நாடுகளின் சுதந்திரமான மற்றும் நியாயமான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக பிரித்தானியா அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் சாரா ஹல்டன் மேலும் கூறியுள்ளார்.

வெளிநாட்டுப்பயணங்களுக்காக 5 கோடி ரூபாய்களை செலவிட்ட அமைச்சர் அலி சப்ரி..?

வெளிநாட்டுப் பயணங்கள் மூலம் 5 கோடி ரூபாய்களை தாம் செலவிட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மறுத்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, வெளிநாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணங்களுக்காக மில்லியன் கணக்கான ரூபாவை செலவிட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

அமைச்சர் இந்த பணத்தை 7 வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த தகவல் தவறானது என்று அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபை உட்பட்ட ஐந்து உத்தியோகபூர்வ தேசிய தூதுக்குழு பயணங்களுக்கும், அமெரிக்காவிற்கும் சவுதி அரேபியாவிற்குமான இரு தரப்பு பயணங்களின் மொத்த செலவாகும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பயணங்களின்போது தாம் தூதுக்குழுக்களுக்கு தலைமை ஏற்றுச் சென்றதாக தெரிவித்துள்ள அலி சப்ரி, தம்மை தவிர மேலும் 22 அதிகாரிகள் இந்த பயணங்களில் இணைந்திருந்ததாகவும் ட்விட் செய்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளருக்கு எதிராக போராட்டம் – விமல் வீரவன்சவை கைது செய்ய உத்தரவு !

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (19) பிடியாணை பிறப்பித்துள்ளது. இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதன் காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு முன்பாக வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது 2016 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராத் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்த போது, ​​விமல் வீரவன்ச இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தார். இந்தநிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் செப்டம்பர் 11ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இலங்கை ஐ.நாவின்  பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் – மனித உரிமை ஆணையாளர்

இலங்கை ஐநாவின்  பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவேண்டும் என மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

ஐக்கியநாடுகளின் விசேட அறிக்கையாளர்கள் முன்வைத்துள்ள பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்தவேண்டும் என மனித உரிமைகள் ஆணையாளர் வோல்க்கர் டேர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் பெ தீர்மானத்தில் இடம்பெற்றுள்ள பொறுப்புக்கூறல் தொடர்பான அம்சங்களை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ள போதிலும் மனித உரிமை பேரவையுடன் தொடர்ந்து ஈடுபாட்டை பேணுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு ஐநாவின் அறிக்கையாளர்கள் பலர் கடந்தகாலங்களில் விஜயம் மேற்கொண்டுள்ளனர் அவர்களின் பரிந்துரைகளை இலங்கை அதிகாரிகள் நடைமுறைப்படுத்தவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

“நான்கு மாதங்களுக்குள் 8000 விபத்துக்கள் – நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்கள் ” – தேசம் திரை காணொளி இணைப்பு !

நாட்டில் கடந்த ஆறு மாதங்களில் மொத்தம் 8,875 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் இந்த விபத்துகளில் 1,043 உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை பேருந்துகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளால் ஏற்பட்டதாக அரச போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பொலிஸாரால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, இவ்வருடம் ஜூன் 18ஆம் திகதி வரை வாகன விபத்துக்கள் மற்றும் விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கையில் அதிகரித்துள்ள விபத்துக்கள் தொடர்பில் தேசம் திரை YouTube பக்கத்தில் வெளியான காணொளியை காண கீழேயுள்ள Link ஐ Click செய்யவும்..!

வடக்கில் அதிகரிக்கும் தற்கொலைகள் – ஒரு வாரத்தில் ஆறு தற்கொலைகள் !

அண்மையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக தவறான முடிவுகளை எடுத்து தங்கள் உயிரினை மாய்த்க்கொள்ளும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு செல்கின்றது.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் 1 வாரத்தில் மாத்திரம் நான்கு தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மூன்றும் குமுழமுனை பிரதேசத்தில் ஒன்றும் என பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இரண்டு பல்கலை மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளார்கள்.

அண்மைய காலப்பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் தமிழ் சமூகத்தில் என்ன நிலை என்பதை எடுத்து காட்டுகின்றன.

 

ஆறு மாதங்களில் மொத்தம் 8,875 வீதி விபத்துக்கள் – சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

நாட்டில் கடந்த ஆறு மாதங்களில் மொத்தம் 8,875 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் இந்த விபத்துகளில் 1,043 உயிர்கள் பலியாகியுள்ளன. இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை பேருந்துகள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளால் ஏற்பட்டதாக அரச போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பொலிஸாரால் வெளியிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி, இவ்வருடம் ஜூன் 18ஆம் திகதி வரை வாகன விபத்துக்கள் மற்றும் விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புக்கள் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன்படி, கடந்த ஆறு மாதங்களில் 902 விபத்துகளில் மரணங்கள் சம்பவித்துள்ளன , 1,856 விபத்துகளில் பாரிய காயங்களும், 3,951 விபத்துகளில் சிறு காயங்களும், 2,096 விபத்துகளில் சேதங்களும் பதிவாகியுள்ளன.

எனவே, இந்த விபத்துகளுக்கான காரணங்கள் குறித்து அரசு மற்றும் அனைத்து அரசு உதவி நிறுவனங்களும் தற்போது கவனம் செலுத்தி வருகின்றன.

குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவது மற்றும் போதைப்பொருள் பாவனையே விபத்துக்களின் முக்கிய அம்சமாகவும், விபத்துக்கள் அதிகரிப்பதற்கும் காரணம் என கண்டறியப்பட்டது.
இதன்படி, பொது பாதுகாப்பு அமைச்சு, இலங்கை பொலிஸ், தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு சபை, சுகாதார அமைச்சு, வீதி பாதுகாப்புக்கான தேசிய சபை, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம், அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் (DMT) ஆகியவை இணைந்து மது அல்லது போதையில் வாகனம் செலுத்தும் ஓட்டுநர்களை அடையாளம் காணும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளன.

மே 18 அன்று மேல் மாகாணத்தில் இந்த முன்னோடித் திட்டம் தொடங்கப்பட்டது. ஜூன் 12 முதல் 6 நாட்களுக்கு போதையில் வாகனம் ஓட்டிய ஓட்டுநர்கள் மீது மொத்தம் 1,781 பேருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. போதையில் வாகனம் செலுத்தியதற்காக கைது செய்யப்பட்ட 41 பேரில் பொது போக்குவரத்தில் ஈடுபட்டிருந்த 19 பேரூந்து சாரதிகள், 13 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் ஒன்பது முச்சக்கர வண்டி சாரதிகள் அடங்குகின்றனர்.

இந்த சாரதிகளின் ஓட்டுநர் உரிமங்கள் நீதிமன்றத்தால் ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை இடைநிறுத்தப்பட்டதுடன், அவர்களில் பலருக்கு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பொறியியல் மாணவர்கள் இருவர் தற்கொலை – பொறுப்புக் கூறவேண்டியது யார்?

தமிழ் சமூகத்தில் இடம்பெறும் தற்கொலைகளுக்கு பொறுப்புக் கூறவேண்டிய இடத்தில் பலர் உள்ளனர். அதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு பெரும் பங்குண்டு. ஆனால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடப்பதோ வேறு. 2022ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் துறைத் தலைவர் நியமனத்தில் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக யாழ். பல்கலைக்கழக பொருளியல் துறை பேராசிரியர் ஒருவர் துணைவேந்தர் முன்னிலையில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அதனை அவதானித்த துணைவேந்தர் விரைந்து செயற்பட்டு, அவரை தடுத்து நிறுத்தி , சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தார். இவ்வாறான துர்ப்பாக்கிய நிலையிலேயே யாழ்ப்பாண பல்கலைக்கழகம் உள்ளது. ஆனாலும் அது தன் சமூகப் பொறுப்பிலிருந்து விடுபட முடியாது.

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் வருடாந்தம் ஒரு மாணவராவது தற்கொலை செய்துகொள்ளும் அவல நிலையுள்ளது.

 

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட 4ஆம் வருட மாணவனான மன்னாரைச் சேர்ந்த கியூமன் மருத்துவ பீட மாணவர் விடுதியின் அறையில் தூக்கிட்டு உயிர் மாய்த்திருந்தார்.

 

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட மூன்றாம் வருட மாணவனான துன்னாலை வடக்கை சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் தங்கியிருந்து கல்வி கற்று வந்த கோண்டாவில் கிழக்கு வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீட்டில் தூக்கிட்டு உயிர் மாய்த்திருந்தார்.

 

இது தொடர்பான மேலதிகமான தகவல்களை அறிய கீழுள்ள தேசம் திரை Link ஐ Click செய்யவும்.

 

மன்னாரில் 25வயது குடும்பஸ்தர் வெட்டிப்படுகொலை – வெளியாகியுள்ள காரணம்!

மன்னார்- நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் நேற்று சனிக்கிழமை (17) காலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் குறித்த கொலைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

தாக்குதல் சம்பவத்தின் போது உயிரிழந்த 25 வயதுடைய இளம் குடும்பஸ்தர் உடைய 23 வயதுடைய சகோதரர் அச்சங்குளம் கிராமத்தில் யுவதி ஒருவரை காதலித்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் சனிக்கிழமை காலை குறித்த யுவதியின் வீட்டுக்குச் சென்ற 23 வயதுடைய குறித்த இளைஞனை யுவதியின் உறவினர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதன் போது காயமடைந்த குறித்த இளைஞர் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனது சகோதரர் தாக்கப்பட்ட விடயம் குறித்து அறிந்த கொண்ட 25 வயதுடைய இளம் குடும்பஸ்தரான இளைஞன் யுவதியின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

இதன் போது யுவதியின் உறவினர்களுக்கும்,தாக்குதலுக்குள்ளான இளைஞனின் சகோதரனுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கை கலப்பாக மாறியது.

இதன் போது இளம் குடும்பஸ்தரான குறித்த சகோதரர் மீது கூரிய ஆயுதத்தினால் தலையில் தாக்கியுள்ளனர். படு காயமடைந்த இளம் குடும்பஸ்தர் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மரணித்தவர் அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் 25 வயதுடைய ஒரு குழந்தையின் தந்தை என தெரிய வருகிறது.

உயிரிழந்தவரின் சடலம் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. கொலை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.