04

04

மீண்டும் அதே முகங்கள் – அமைச்சுக்களில் மட்டுமே மாற்றம் – புதிய அமைச்சரவை விபரங்கள் இதோ !

ஜனாதிபதி கோட்டாபய தலைமையிலான இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில், மக்கள் போராட்டங்கள் ஆரம்பித்துள்ள நிலையில், நாடே போராட்டக்களமாக மாறியுள்ளது.

இந்நிலையில், கடுமையான அரசியல் ஸ்திரமின்மைக்கு மத்தியில் முழு அமைச்சரவையும் இராஜினாமா செய்ததன் பின்னர், நான்கு புதிய அமைச்சர்கள் சற்று முன்னர் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அதனடிப்படையில், பசில் ராஜபக்ஷவுக்கு பதிலாக புதிய நிதி அமைச்சராக அலி சப்ரியும், வெளிவிவகார அமைச்சராக ஜி.எல்.பீரிஸ் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

அதேவேளை கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தனவும், நெடுஞ்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவும் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி விலகியமை தொடர்பில் ஊடகங்களிடம் பேசியுள்ள நாமல் ராஜபக்ச !

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டத்துக்குத் தலைவணங்கி தனது அமைச்சுப் பதவியைத் துறந்துள்ளதாக நாமல் ராஜபக்ச  தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடியால் மக்கள் மிகவும் கொதிப்படைந்துள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கி அவர்கள் போராடி வருகின்றனர். இந்த நிலைியில் அனைத்து அமைச்சர்களும் பதவி விலகியுள்ளதாக தினேஷ்குணவர்த்தன அறிவித்திருந்தார்.

ஊடகங்களிடம் இது தொடர்பில் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளதாவது,

“நாடு என்றுமில்லாத பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. இன்னமும் உரிய தீர்வு காணப்படவில்லை. இதற்கு அரச தலைவர் தலைமையிலான அமைச்சரவை தான் பொறுப்புக்கூற வேண்டும். இந்நிலையில், மக்களின் போராட்டத்துக்குத் தலைவணங்கியும் , புதிய அமைச்சரவையை நியமிக்குமாறு வலியுறுத்தியும் அமைச்சுப் பதவியைத் துறந்துள்ளேன்.

புதிய அமைச்சரவை தொடர்பிலும், பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு குறித்தும் அரச தலைவரும் பிரதமரும் இணைந்து உரிய நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்று நம்புகின்றேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தங்களது அமைச்சு பதவிகளையும் இராஜினாமா செய்த அமைச்சர்கள் – பதவியேற்கிறது புதிய அமைச்சரவை !

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைத் தவிர அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளனர்.

“பிரதமர் தொடர்ந்து செயல்படுவார் மற்றும் அமைச்சரவையில் உள்ள மற்ற அனைத்து உறுப்பினர்களும் தங்கள் இராஜினாமா கடிதங்களை பிரதமருக்கு கையளித்துள்ளனர்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக மக்களின் கோபத்திற்கு மத்தியில் புதிய அமைச்சரவை அமைக்கப்படுவதற்கு வழிவகை செய்யும் வகையில் அனைத்து அமைச்சர்களும் பதவி விலக சம்மதித்துள்ளனர்.

இதன்படி தற்போதைய அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் பதவி விலகும் பொதுக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.

இந்த கடிதம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் உள்ளதுடன், அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.