December

December

அடுத்த ஆண்டு இலங்கையில் அரிசியின் விலை 200 ரூபாய் வரை அதிகரிக்கும் !

எதிர்வரம் ஆண்டு உணவு பொருட்களின் விலைகள் வெகுவாக அதிகரிக்கக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயத் துறைசார் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய இந்த நிலை குறித்து கண்டறியப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள நிலைக்கு உடனடியாக தீர்வு வழங்கப்படாவிடில், அடுத்த ஆண்டு மார்ச் மாதமளவில் ஒரு கிலோகிராம் அரிசியின் விலை 200 ரூபாய் வரை அதிகரிக்கக்கூடும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தவிடயம் தொடர்பாக கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விவசாய திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர், விவசாயத்துறை நிபுணர் கே.பீ.குணரத்ன, உரத்தட்டுபாடு காரணமாக பெரும்போக விளைச்சல் உரிய முறையில் இல்லை என தெரிவித்துள்ளார்.

நெல் பயிரிடப்பட்டுள்ள போதிலும் உரத்தட்டுப்பாடு காரணமாக பயிர்களில் வளர்ச்சி போதிய அளவில் காணப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் இதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனித கடத்தலைத் தடுக்க பல நடவடிக்கைகளை எடுக்கத் அரசு திட்டம் !

மனித கடத்தலைத் தடுக்க எதிர்வரும் ஆண்டு பல நடவடிக்கைகளை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மனித கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினரால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கபட்டுள்ளதாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதக் கடத்தலைத் தடுக்க புலனாய்வு அதிகாரிகள் மற்றும் புலனாய்வு அமைப்புகளுடன் நேரடி ஒருங்கிணைப்பில் வலுவான நிறுவன பொறிமுறையை நிறுவ கடந்த ஜூலை மாதம் மனித கடத்தல் தடுப்பு பணிக்குழு அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

“விலை தொடர்ந்தும் உயரும். வீட்டில் எதையாவது பயிரிடுங்கள்.” – பந்துல குணவர்த்தன அறிவுரை

பொருட்களின் விலை அதிகரிப்பை இந்த தருணத்தில் கட்டுப்படுத்துவது கடினம் என்பதால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் எதனையாவது பயிர்செய்யவேண்டும் என அமைச்சர் பந்துல குணவர்த்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகசந்தையிலும் உள்நாட்டிலும் பொருட்களிற்கு தட்டுப்பாடு காணப்படுவதால் பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவது கடினம் என தெரிவித்துள்ள அவர் தட்டுப்பாடு காணப்பட்டால் பாரிய கள்ளச்சந்தை விலை காணப்படும்.

இதன் காரணமாக அரசாங்கம் சந்தையில் தலையிட்டு சந்தையை போட்டித்தன்மை மிகுந்ததாக மாற்றுவதை மாத்திரமே அரசாங்கத்தினால் செய்ய முடியும்.

குறுகிய காலத்திற்குள் பயன்தரக்கூடிய காய்கறிகளை உருவாக்கும் திட்டம் உள்ளது இதன் மூலம் ஏப்பிரல் புத்தாண்டிற்கு முன்னதாக பயன் பெறும் நோக்கம் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் காணாமல் போன விக்கிரகங்கள் – கொழும்பிலிருந்து மீட்பு !

காங்கேசன்துறை காவற்துறை பிராத்தியத்தில் இராணுவ மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் உட்பட பல இடங்களில் இந்து ஆலயங்களில் திருடப்பட்ட 20 மேற்பட்ட விக்கிரகங்கள் கொழும்பில் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் காங்கேசன்துறை நல்லிணக்கபுரம் மற்றும் நவக்கிரி ஆகிய இடங்களைச் சேர்ந்த இருவர் காவற்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் இந்த விக்கிரகங்கள் தென்னிலங்கையில் உள்ள வர்த்தகர்களுக்கு விற்பனை செய்ய முகவர்களாக செயற்பட்டுள்ளனர் என்று ஆரம்ப விசாரணைகளின் அடிப்படையில் காவற்துறையினர் தெரிவித்தனர்.

டிசம்பர் 9 ஆம் திகதிக்கும் டிசம்பர் 23 ஆம் திகதிக்கும் இடையே தெல்லிப்பழை மற்றும் காங்கேசன்துறை காவற்துறை பிரிவுகளில் உள்ள இந்து ஆலயங்களில் விக்கிரகங்கள் திருடப்பட்டன. இந்தச் சம்பவங்கள் தொடர்பில் காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த காவற்துறை அத்தியட்சகரின் கீழ் உப காவற்துறை பரிசோதகர் நிதர்சன் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த நிலையில் காங்கேசன்துறை நல்லிணக்கபுரத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவரது அலைபேசியில் திருடப்பட்ட விக்கிரகங்கள் பலவற்றின் ஒளிப்படங்களும் காணப்பட்டன. தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் நேற்றைய தினம் 2 விக்கிரகங்கள் கைப்பற்றப்பட்டன.

அவை இரண்டும் தெல்லிப்பளை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன. சந்தேக நபரும் தெல்லிப்பளை காவற்துறை நிலையத்தில் முற்படுத்தப்பட்டார். இந்த நிலையில் கொழும்புக்கு விரைந்த உப காவற்துறை பரிசோதகர் நிதர்சன் தலைமையிலான குழுவினர் அங்கு வர்த்தகர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட மேலும் 20 இற்கு மேற்பட்ட விக்கிரகங்களை மீட்டனர்.

அவற்றை கொள்வனவு செய்த வர்த்தகர்கள் தலைமறைவாகியுள்ளனர் என்று காவற்துறையினர் தெரிவித்தனர். அவற்றில் பல இராணுவ மற்றும் கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களின் இந்து ஆலயங்களின் விக்கிரகங்கள் என காவற்துறையினர் தெரிவித்தனர்.

இந்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையோரைக் கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்பட்ட விக்கிரகங்கள் யாழ்ப்பாணத்துக்கு எடுத்து வரப்படுகின்றன என்று காவற்துறையினர் கூறினர்.

ஆழிப்பேரலை தாக்கி இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவு – 2 நிமிடங்கள் மௌன அஞ்சலிக்கு அழைப்பு !

சுனாமி பேரலையால் உயிர்நீத்த மக்களை நினைவுகூர்ந்து இன்று காலை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 09.25 தொடக்கம் 9.27 வரை 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி உலகையே ஆட்டிப்படைத்த கறுப்பு தினமாக பதிவாகிய சுனாமி ஆழிப்பேரலை தாக்கி இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

இதேபோன்றதொரு நாளில் இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக இந்து சமுத்திரத்தில் ஆழிப்பேரலை ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 9.1 முதல் 9.3 மெக்னிடீயூட்டாக பதிவாகிய அந்த நில அதிர்வு காரணமாக ஏற்பட்ட பேரலையால், ஆசிய நாடுகளில் வரலாறு காணாத அழிவு ஏற்பட்டது.

இதன் காரணமாக இந்து சமுத்திர பிராந்தியத்தில் சுமார் 100 அடி உயர்த்திற்கு ஆழிப்பேரலை உருவாகியது.

இலங்கை, இந்தியா, மலேசியா, மியன்மார், அந்தமான், தாய்லாந்து உள்ளிட்ட 14 ஆசிய நாடுகளின் கரையோரங்களை இந்த ஆழிப்பேரலை தாக்கியது. ஆசிய நாடுகளில் 2 இலட்சத்து 27 ஆயிரத்து 898 உயிர்களை காவுகொண்ட இந்த ஆழிப்பேரலை, 5 இலட்சத்துக்கும் அதிகமான மக்களை  நிர்க்கதியாக்கியது.

இலங்யைில் மாத்திரம் 30 ஆயிரத்து 196 உயிர்கள் காவுகொள்ளப்பட்டதுடன், இந்த அனர்த்தத்தால் 21 ஆயிரத்து 411 பேர் காயமடைந்தனர். இந்நிலையில், சுனாமியால் காவுகொள்ளப்பட்ட உயிர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 26ஆம் திகதி உலக மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

அதற்கமைய, இலங்கையிலும் நாடளாவிய ரீதியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நடைபெறவுள்ளன.

இந்த கொடிய அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும் மக்களின் மனங்களில் உள்ள அச்சமும் ரணங்களும் மாறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

““மக்களுக்கு சாப்பிட உணவில்லை ஆனால் மதுபான உற்பத்தியை ஊக்குவிக்கிறது அரசு.” – தேரர் காட்டம் !

“மக்களுக்கு சாப்பிட உணவில்லை ஆனால் அரசு மதுபான உற்பத்தியை ஊக்குவித்துக்கொண்டிருக்கிறது.” என என ராமன்ய நிக்காயவின் தென்னிலங்கைப் பிரிவு தலைவர் ஒமல்பே சோபித தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

நாட்டு மக்கள் இன்று உணவு உட்கொள்ள முடியாத நிலையில இருக்கின்றனர், பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது இவ்வாறான பின்னணியில் நிதி அமைச்சு மதுபான உற்பத்திசாலைகளை அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றது.

நாட்டின் சமூக சீரழிவுகளை ஏற்படுத்தக்கூடிய குடிகார காலாச்சாரமொன்றை உருவாக்கும் நோக்கிலா அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுக்கின்றது..?

அரசாங்கம் புதிதாக மூன்று மதுபான உற்பத்திசாலைகளுக்கு அனுமதி வழங்க தீர்மானித்துள்ளதாக அண்மையில் ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது. நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது அவற்றை மூடி மறைக்கும் நோக்கிலா புதிய மதுபான உற்பத்திசாலைகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்குகின்றது .?.

இவ்வாறு அனுமதி பத்திரம் வழங்குவதன் பின்னணியில் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்ன ? மெய்யான மக்கள் பிரச்சினைகளை மூடி மறைக்கும் அரசாங்கத்தின் உத்தியா என்ற சந்தேகம் எழுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

கிழக்கு உக்ரைனில் முழுமையான போர் நிறுத்தம் !

கிழக்கு உக்ரைனில் முழுமையான போர் நிறுத்தம் மேற்கொள்ள  ரஷ்யா, உக்ரைன், ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து உக்ரைனுக்கான ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பின் தூதர் மிக்கோ கினூனென் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கிழக்கு உக்ரைனில் உக்ரைன் அரசாங்கப் படையினருக்கும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே முழுமையான போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பாக ரஷ்யா, உக்ரைன், ஐரோப்பிய பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவில், கடந்த ஆண்டு ஜூலை 22ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையாகவும் உறுதியாகவும் கடைப்பிடிக்க அனைத்து தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.

இந்தச் சூழலில் ஏற்பட்டுள்ள இந்த புதிய உடன்படிக்கை, கட்டுப்பாட்டு எல்லையின் இருபுறமும் உள்ள மக்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அரசுக்கு எதிராகப் போராட்டம் செய்தால் சிறைச்சாலை செல்லவேண்டி வரும்.” – எச்சரிக்கிறார் எஸ்.பி.திஸாநாயக்க !

அரச ஊழியர்கள் அரசுக்கு எதிராகப் போராட்டம் செய்தால் சிறைச்சாலை செல்லவேண்டி வரும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

நாடு தற்போதுள்ள நிலையில் அரச ஊழியர்களுக்கும் சம்பளம் குறைக்கலாமே தவிர அதிகரிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் இன்று அவர் மேலும் தெரிவித்ததாவது:-
உரப் பிரச்சினையைப் பார்த்தால் யூரியாவைக் கொடுக்கலாம் என்ற நிலைப்பாடு உள்ளது. ஆனாலும், இயற்கைப் பசளையே சிறந்தது.
அடுத்து இப்போது பேசப்படும் விடயம் டொலர் பற்றாக்குறை.  இந்தப் பிரச்சினைக்கு அடுத்த வருடம் தீர்வு கிடைக்கும்.
நாட்டில் வேலை செய்கின்ற அனைத்து ஊழியர்களுக்கும் இப்போது சம்பளம் குறைக்க வேண்டுமே தவிர அதிகரிப்பு இல்லை. அதற்காகப் போராட்டம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். நமது நாட்டுக்கு இப்போது முக்கியமாகத் தேவைப்படுவது வெளிநாட்டு பங்களிப்பு.
எரிவாயு வெடிப்பு பிரச்சினைக்கு ஜனவரியில் தீர்வு கிடைக்கும்” – என்றார்.

வீடு செல்ல விடுமுறை வழங்க மறுத்த பொலிஸ்பொறுப்பதிகாரி – நால்வரை சுட்டுக்கொன்ற பொலிஸ் உத்தியோகத்தர் !

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி உட்பட நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த பொலிஸ் நிலையம் விசேட அதிரடிப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், துப்பாக்கிச்சூட்டு நடாத்திய பொலிஸ் உத்தியோகத்தரும் கைது செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்றம் நிலவுவதுடன், மக்கள் மத்தியில் பீதி நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

அம்பாறை – திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் மொனராகலையைச் சேர்ந்த பொலிஸ் சாஜன் குமார என்பவர் வீடு செல்வதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் விடுமுறை கோரியுள்ளார். இந்த நிலையில் அவருக்கு பொலிஸ் பொறுப்பதிகாரி தெய்கம விடுமுறை வழங்காததையடுத்து ஆத்திரமடைந்த பொலிஸ் சாஜன் சம்பவதினமான நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வாகனத்தில் ஏறி ரோந்து நடவடிக்கைக்கு செல்வதற்கு தயாராகி இருந்தபோது அவர் மீது ரி 56 துப்பாக்கியால் பொலிஸ்சாஜன் சரமாரியாக துப்பாகிபிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து அவரை தடுக்க முற்பட்ட பொலிஸார் மீது அவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதையடுத்து, சம்பவ இடத்தில் 3 பொலிஸார் உயிரிழந்ததுடன், பொலிஸ் பொறுப்பதிகாரி உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்ததுடன் இறப்பு எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது.

துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்ட பொலிஸ் சாஜன் அங்கிருந்து மோட்டர் சைக்கிளில் தப்பிச் சென்ற நிலையில், மொனராகலை அத்திமலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததையடுத்து அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சம்பவத்தையடுத்து, அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்திற்கு கிழக்கு மாகாணா சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சென்று நிலமையை ஆராய்ந்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு பணித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது

முல்லைத்தீவில் 13 வயது சிறுமி இறந்த விவகாரம் – மூவருக்கு விளக்கமறியல் !

முல்லைத்தீவு மூங்கிலாற்றில் சிறுமி உயிரிழப்பில் கைதுசெய்யப்பட்டு காவற்துறை தடுப்பு காவலில் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

முல்லைத்தீவு மூங்கிலாறு கிராமத்தில் கடந்த 15 ஆம் திகதி காணமல் போன  13 வயது சிறுமி 18 ஆம்திகதி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமி கொலை செய்யப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சிறுமியின் அத்தான் கடந்த 22.12.21 அன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது எதிர்வரும் 04.01.2022 திகதி வரை அவர்  விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு காவற்துறையினர்  சிறுமியின் கொலை தொடர்பில் தாய்,தந்தை,சிறுமியின் அக்கா ஆகியோர் கடந்த 23.12.21 அன்று புதுக்குடியிருப்பு காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவிற்கு அமைய 48 மணத்தியாலங்கள் காவற்துறை தடுப்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையில் இன்று 25.12.21 சந்தேக நபர்கள் மூவரையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோது அவர்களை எதிர்வரும் 04.01.2022 வரை விளக்கமயியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு காவற்துறையினர் சந்தேக நபர்கள் மூவரையும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா இவர்கள் மூவரையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

சிறுமியின் உயிரிழப்பு தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபரை புதுக்குடியிருப்பு காவற்துறையினர் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தி வருகின்றார்கள்.