01
01
மட்டக்களப்பு கரடியனாறு பிரதேசத்தில் 11 சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட நிலையில் கைது செய்யப்பட்ட 78 வயதுடைய சிறுமியின் பெரியதந்தையை எதிர்வரும் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு களுவாஞ்சிக்குடி சுற்றிலா நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் நேற்று திங்கட்கிழமை (30) உத்தரவிட்டார்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 11 சிறுமியை சம்பவதினமான கடந்த 28ம் திகதி சிறுமியின் தாயாரின் சகோதரியின் கணவனான 78 வயதுடைய பெரியப்பா காட்டில் தேன்எடுத்து தருவதாக சிறுமியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டபோது அந்த பகுதியில் மாடு மேய்கச் சென்ற ஒருவர் இதனைக்கண்டு சிறுமியின் பொற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த சிறுமியின் பெற்றோர் கடந்த 29 ம் திகதி அருகில் உள்ள காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து 78 வயதுடைய சிறுமியின் பெரியதந்தையை காவல்துறையினர் கைது செய்ததுடன் சிறுமியை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதனை அடுத்து கைது செய்தவரை களுவாஞ்சிக்குடி சுற்றிலா நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை (30) ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 11 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் அடுத்தவாரம் விநியோகத்துக்கு வரும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “தான் கண்டுபிடித்துள்ள இரண்டு கொரோனா தடுப்பு மருந்துகள் அடுத்த இரண்டு வாரத்துக்குள் விநியோகிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா தடுப்பு மருந்தின் உற்பத்தி தொடர்ந்து அதிகரிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் உயிர்தொழில்நுட்பவியல் நிறுவனமான மாடர்னா தனது கொரோனா வைரஸ் தடுப்பூசியை அவசரகால அங்கீகாரத்திற்காக ஒப்புதல் கோரியுள்ளது” என்று செய்தி வெளியானது.
மேலும், ஒவ்வாமை மற்றும் நோய்த் தடுப்புப் பிரிவின் தேசிய நிறுவினத்தின் இயக்குனர் ஆண்டனி கூறுகையில், ”நீங்கள் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதற்காக உரிமை கோர முடியாது. ஆனால், இது கொரோனாவை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முக்கியத் தருணம்” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. உருவாக்கப்படும் மருந்துகள் பலகட்டப் பரிசோதனைகளுக்கு அனுப்பப்படும்போது எதிர்பாராத பலனை அளிக்காமல் போவதும், அதிக பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதுமாகவே இருந்தன.
இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த பைசர் நிறுவனம், ஜெர்மனியைச் சேர்ந்த பையோ எண்டெக் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பு மருந்து மூன்றாம் கட்டப் பரிசோதனையில் 90 சதவீதம் பலன் அளித்திருப்பதாகத் தகவல் வெளியானது.
கொரோனாவுக்கான தடுப்பு மருந்து 50 சதவீதம் பலன் அளித்தாலே சாதகமான விஷயம் என்று கூறப்பட்டுவந்த நிலையில், பைசர் உருவாக்கிய தடுப்பு மருந்து 90 சதவீதம் பலன் அளித்திருப்பது உலகளாவிய மருத்துவக் குழுவினர்களுக்கு நம்பிக்கை வழங்கியுள்ளது.
அமெரிக்காவைத் தொடர்ந்து ரஷ்யாவும் தான் தயாரித்த ஸ்புட்னிக்-5 என்ற கொரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பலன் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. அதேபோல் சீனா உருவாக்கியுள்ள தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டப் பரிசோதனையில் உள்ளன.
லண்டனின் ஓக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தலைமையில் கண்டுபிடிக்கப்படும் கொரோனா தடுப்பு மருந்து இறுதிக்கட்டப் பரிசோதனையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மாவீரர் தினத்தை அனுஸ்டிக்க முடியாது போனமைக்கு, அரசாங்கத்துக்கு வாக்களித்த தமிழ் மக்களும் பொறுப்புக் கூற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஊடக சந்திப்பில் இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது,
“மட்டக்களப்பு மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன்னர் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் பெற்றோருக்கு எனது கவலையினை தெரிவித்துக்கொள்கின்றேன். மட்டக்களப்பு மாவட்டம் மட்டுமன்றி கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலைப்புலிகளின் தலைவரின் படத்தினை இணைத்து பதிவிட்டிருந்ததையும் குற்றமாக கொண்டு சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, ஒரு சிலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொலிஸ் நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். நல்லாட்சி இருந்த காலப்பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பினை விமர்சித்து ஒரு மாற்றம் உருவாகவேண்டும் என்று தமிழ் தேசியத்திற்கு எதிராக வாக்களித்த ஒவ்வொருவரும், இந்த இளைஞர் கைது விடயத்தில் பொறுப்புக்கூறவேண்டும். கடந்த ஆட்சிக்காலத்தில் நல்லிணக்கம் இருந்ததன் காரணமாக நாங்கள் சுதந்திரமாக செயற்பாடுகளை முன்னெடுத்தோம்.
மாவீரர் தின நாட்களில் வீடுகளில் தமது உறவுகளை நினைவுகூர்ந்ததை கூட வீடுகளுக்குள் புகுந்து தடைசெய்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. மாவீரர்களை நினைவுகூருதல் என்பது 1989ஆம்ஆண்டில் இருந்து நடைபெற்று வருகின்ற விடயம். ஆனால் இன்று மாவீரர்களை நினைவுகூருவதை தடுப்பதற்கு அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. தமிழர்களின் உணர்வின் அடையாளங்கள் அழிக்கவேண்டும் என்பதற்காக பல திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இதற்கான பொறுப்பு தற்போதைய அரசாங்கத்துக்கு வாக்களித்தவர்களையே சேரும்.
அதாவது, ஒரு தாய் தனது பிள்ளையினை நினைவுகூரமுடியாத சூழ்நிலையினை அமைத்துக்கொடுத்த ஆளும் கட்சியுடன்இணைந்துள்ள தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களுக்கு வாக்களித்த மக்களும் இதற்கான பொறுப்பினை ஏற்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“சுன்னாகம் பொலிஸார் மிகவும் அராஜகமான முறையில் நடந்துகொள்கின்றனர்” என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தன்னுடைய கண்டனங்களை வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்றில் இன்று (01.12.2020) இடம்பெரும் குழுநிலை விவாத்தில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் குறிப்பிடுகையில் இந்துக்களின் பண்டிகை தொடர்பாக இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் வடக்கில் இந்துக்கள் தங்களது பண்டிகைகளை கொண்டாடுவதற்கு இராணுவத்தினர் பொலிஸார் அச்சுறுத்தல் விடுப்பது தொடர்பாக கண்டனங்களை வெளியிடுவதாகவும் கூறினார்.
அத்தோடு அண்மையில் கார்த்திகை விளக்கீடு அன்று கிளிநொச்சி பரந்தனில் முதியவர் ஒருவர் தாக்கப்பட்டமை மற்றும் யாழ்.பல்கலை மாணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்தும் சிறிதரன்அதிருப்தி வெளியிட்டார்.
மேலும் இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணைகளை நடத்த வேண்டும் என குறிப்பிட்ட சிறிதரன், சுன்னாகம் பொலிஸார் மிகவும் அராஜகமான முறையில் நடந்துகொள்வதாகவும் குற்றம் சாட்டினார்.
வவுனியாவில் ஓரினச்சேர்க்கையால் எயிட்ஸ் தொற்று அதிகரித்து வருகின்றமையினால், இளைஞர்களை அவதானமாக இருக்குமாறு வவுனியா மாவட்ட பாலியல் நோய் தடுப்பு சிகிச்சை பிரிவு பொறுப்பதிகாரி வைத்தியர் கே.சந்திரகுமார் தெரிவித்திருந்தார்.
வவுனியா வைத்தியாசாலையில் நேற்று (30.11.2020) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஊடக சந்திப்பில் கே.சந்திரகுமார் மேலும் கூறியுள்ளதாவது,
“உலக எய்ட்ஸ் தினம் ஒவ்வொரு டிசம்பர் மாதம் முதலாம் திகதியும் நினைவுகூறப்படுகிறது. அந்த வகையில் வவுனியா மாவட்டத்திலும் உலக எய்ட்ஸ் தினத்தை நினைவு கூறவிருக்கிறோம். இலங்கையைப் பொறுத்தவரையில் இன்றைக்கு வரைக்கும் கிட்டத்தட்ட 4000 நோயாளிகள் எய்ட்ஸ் உடன் இனங்காணப்பட்டிருக்கிறார்கள்.
வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரையிலும் 2003இலிருந்து இன்றைக்கு வரைக்கும் 28எயிட்ஸ் நோயாளிகள் இனங்காணப்பட்டிருக்கிறார்கள். அதில் 17 நோயாளிகள் இறந்திருக்கிறார்கள். 11 நோயாளிகள் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இதில் ஆறு ஆண்களும் ஐந்து பெண்களும் அடங்குகிறார்கள்.
பொதுவாக எய்ட்ஸ் 3 முறைகளில் தொற்றுகிறது. ஒரு நோய்த் தொற்றுள்ளவருடன் பாலியல் ரீதியாக உறவு கொள்கின்றபோது தொற்றுகிறது. அதேபோல நோய்த் தொற்றுள்ள ஒருவர் தனது உடலுறுப்பு தானம், இரத்த தானம் என்பவற்றை மேற்கொள்ளும் போது கடத்தப்படுகிறது. மூன்றாவது தொற்றுள்ள ஒரு கர்ப்பிணி தாயிலிருந்து பிள்ளைக்கு பரவுகிறது.
வவுனியா மாவட்டத்தில் தற்போது இளைஞர்கள் மத்தியில் இந்த நோய் தொற்று அதிகரித்துள்ளது. அதாவது ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் அதிகரித்துள்ளனர். அதுவே இளைஞர் மத்தியில் இந்த நோய் பரவ அதிக காரணமாக இருக்கின்றது. ஆகவே இளைஞர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். இளைஞர்கள் தமக்கு தெரியாதவர்களுடன் இருக்கும்போது பாலியல் தொடர்பான தொடர்பை வைத்திருக்க கூடாது.
வவுனியாவில் இருக்கக்கூடி 36 பெண் பாலியல் தொழிலாளிகள் எங்களிடம் சிகிச்சைக்கு வருகிறார்கள் என்றாலும் அவர்கள் தொடர்ச்சியாக வருகை தருவதில்லை என்றாலும் அவர்களுக்கும் இது தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்கி வருகிறோம். இலங்கையைப் பொறுத்தவரையில் தாயில் இருந்து பிள்ளைக்கு தொற்று கடத்தப்படுவதைத் வெற்றிகரமாக நாங்கள் தடுத்திருக்கிறோம். இதற்காக உலக சுகாதார நிறுவனத்திடம் இருந்தும் நற்சான்றிதழ் பெற்றிருக்கிறோம்.
ஆகவே, முற்றுமுழுதாக இலங்கையில் இருந்து எயிட்ஸ் தொற்றுனை இல்லாமற் செய்வதற்கு இலங்கையில் உள்ள அனைவருமே ஒரு தடவை எச்.ஐ.வி.பரிசோதனை செய்ய வேண்டும் என்பதே எங்கள் ஆலோசனையாக இருக்கிறது. இந்த கொவிட் காலத்தில் விழிப்புணர்வுகளைச் செய்வதில் சிரமம் இருப்பதால் ஊடகங்கள் ஊடாக இதனைச் செய்ய விரும்புகிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“யுத்தத்தினால் தமிழ் மக்கள் உயிர்கள் உடமைகளை இழந்திருந்த நிலையில் கல்வி செல்வத்தையும் தற்போது இழந்து கொண்டிருக்கிறார்கள்” என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று (01.12.2020) இடம்பெறும், கல்வி தொடர்பான குழுநிலை விவாதத்தில் பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த விவாதத்தின் போது வடக்கில் அபிவிருத்திகள் ஏராளம் நடந்திருந்தாலும் கல்வி நிலை தொடர்ந்தும் பின்தங்கி காணப்படுவதாக சுட்டிக்காட்டினார். குறிப்பாக அண்மையில் வெளியான பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ் மாவட்டம் 19 ஆவது இடத்திலும் கிளிநொச்சி 25 ஆவது இடத்திலும் தீவக வலையம் இறுதி இடத்திலும் இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
யுத்தத்தினால் தமிழ் மக்கள் உயிர்கள் உடமைகளை இழந்திருந்த நிலையில் கல்வி செல்வமும் இல்லாது போய்க்கொண்டிருக்கும் சூழலில் கல்வியில் சிறந்ததொரு சமூகமாக வடக்கு கிழக்கு மக்கள் மீண்டும் வளர்ச்சி பெற இந்த அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
“அரசாங்கம் நீதிமன்றங்களை தமிழர்களின் உரிமைகளை அடக்குகின்ற கருவியாக பயன்படுத்தப்படுவதாக” பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தன்னுடைய கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“கடந்த வாரம் 21 ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை தமிழர்களின் விடுதலைக்காக, உரிமைக்காக தனது உயிரை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்கின்ற ஒரு புனிதமான காலமாகும். குறித்த காலப்பகுதியில் அரசாங்கம் பொலிஸாரையும் உளவுத்துறையினரையும் இராணுவத்தினரையும் பயன்படுத்தி மிகவும் மோசமான அடக்குமுறையின் ஊடாக ஜனநாயக உரிமைகளை அடக்குகின்ற ஒரு கருவியாக இன்று நீதிமன்றங்களை மாற்றி தமிழர்களின் நினைவேந்தல் உரிமையை மறுத்து இருக்கின்றது. அதற்காக எனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றேன்.
மேலும், போரால் பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்துக்கு உளவியல் ரீதியாக ஆற்றுப்படுத்தல் எவ்வளவு முக்கியம் என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாக புரியும். யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உளவியல் ரீதியாக ஆற்றுப்படுத்துகின்ற செயற்பாடுகள், உங்களுடைய அரசாங்கம் 2010 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஆட்சி புரிந்தபோதோ,அதற்கு பின்னரோ அல்லது கடந்த வருடம் மீண்டும் ஆட்சிக்கு வந்ததன் பின்னரோ உருவாக்கப்பட்டிருக்கவில்லை.
போரினால் பாதிக்கப்பட்ட மக்கள், மனதளவில் எவ்வளவு வேதனையில் இருப்பார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அத்தகைய இடத்தில் அவர்களது உறவுகளை நினைவு கூர்வது என்பது அவர்களது மனதை ஓரளவேனும் ஆறுதல்படுத்தும். மருத்துவ தன்மையில் யோசித்தாலும் கூட நினைவேந்தலுக்கு அனுமதித்திருக்க வேண்டும். இலட்சக்கணக்காக மக்களை வீடுகளுக்கு 7 நாட்கள் சிறைப்பிடித்த நிலைமை போன்றுத்தான் மீண்டும் உருவாக்கப்பட்டு உளரீதியான தாக்குதலுக்கு தமிழ் மக்கள் உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இனவாதம் என்பது ஒரு தேர்தலை வெற்றி கொள்ள நமக்கு வாய்ப்பாக அமையலாம் . ஆனால் இனவாதம் என்பது ஒரு நாட்டை வளர்ச்சியடையச் செய்ய ஒருபோதும் பங்களிக்காது” என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம். முஷாரப் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று (01.12.2020) இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
இனவாதம் என்பது ஒரு தேர்தலை வெற்றி கொள்ள நமக்கு வாய்ப்பாக அமையலாம் . ஆனால் இனவாதம் என்பது ஒரு நாட்டை வளர்ச்சியடையச் செய்ய ஒருபோதும் பங்களிக்காது என்ற யதார்த்தத்தை இந்த சபையிலுள்ள சகல உறுப்பினர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.
பல்வேறு நிபுணர்களைக்கொண்ட உலக சுகாதார ஸ்தாபனம் ,யுனெஸ் கோ போன்ற அமைப்புக்கள் தொழில்நுட்ப விடயத்தில் உலகுக்கே வழிகாட்டிக் கொண்டிருக்கும் நிலையில், கொரோனாவினால் உயிரிழப்போரின் உடல்கள் தொடர்பிலும் வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளபோதும் அவற்றை எல்லாம் பொருட்படுத்தாது முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் இலங்கையில் எரிக்கப்படும் விடயம் பெரும் துயரமாக மாறியுள்ளது.
இலங்கையில் முஸ்லிம்கள் இவ்வாறு நல்லடக்கம் செய்யப்படாமல் எரிக்கப்படுவதன் பின்னணியில் அரசின் சுகாதாரத் துறையினால் ஒழுங்கமைக்கப்பட்ட நிபுணர்கள் குழுவின் பிழையான வழிகாட்டுதல்களினால் தொடர்ந்தும் முஸ்லிம் சமூகத்தின் மத,கலாசார நம்பிக்கைகள் அனைத்தும் சிதைந்து சென்று கொண்டிருக்கின்றன. முஸ்லிம் சமூகம் கொரோனா பாதிப்பால் இரட்டிப்பு பாதிப்பை அடைந்து கொண்டிருக்கின்றது என்பதை இந்த அரசில் உள்ளவர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.
இந்த கொரோனா தாக்கத்தினால் ஏற்படுகின்ற இறப்பை விடவும் இறந்த உடல்களை எரிப்பதனால் வருகின்ற வலி முஸ்லிம் சமூகத்திற்கு பெரும் வலியாக உள்ளது என தெரிவித்துள்ளார்.