“இன்னும் சில வருடங்களில் நெடுந்தீவு மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும்“ என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுவின் கலந்துரையாடல் நேற்று (06.11.2020) யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேற்றைய கூட்டத்தில், நெடுந்தீவு பிரதேச சபை தலைவரினால் தமது பிரதேசத்திற்கான போக்குவரத்தில் காணப்படும் குறைபாடுகள் தொடர்பாக எடுத்துக் கூறப்பட்ட நிலையிலேயே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்குறித்த விடயத்தினை தெரிவித்தார்.
தொடர்ந்தும் பேசிய டக்ளஸ் தேவானந்தா , “நெடுந்தீவு பிரதேசத்திற்கான போக்குவரத்து மற்றும் குடிநீர் பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தொடர்பாக ஏற்கனவே அமைச்சரவையில் கலந்துரையாடி, அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்களுக்கு பூரணமாக நிதி வழங்கப்படாமையினால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் நலன் கருதி, குறித்த வீடுகளுக்கான மீதித் தொகையை வழங்குமாறு ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளதாக வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த வீடமைப்பு திட்டங்கள் சட்டரீதியாக அனுமதிக்கப்பட்ட காணிகளில் அமைக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் எஞ்சிய தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
குறித்த விடயம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவையில் பிரஸ்தாபித்திருந்த நிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் குறித்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு வழங்கும் வேலைத் திட்டத்தினை விரைவில் நிறைவுக்கு கொண்டு வரவேண்டும் என்று கிராமிய உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக் குழுவின் தலைவர் அமைச்சர் ஜோன்ஸ்ரன் பெனான்டோ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதேச சபைகளின் தலைவர்கள் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.