01

01

இந்து சமயத்தை பாதுகாக்க ஆறு அம்சக்கோரிக்கைகளை அரசிடம் முன்வைத்து வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி !

இந்து மக்கள் எதிர்நோக்குகின்ற முக்கிய பிரச்சினைகளை உள்ளடக்கிய ஆறு அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, அனைத்து இந்து அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியாவில் இன்று (01.10.2020) ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஊர்வலம் இன்று காலை 08.30 மணியளவில் வவுனியா குருமன்காடு காளிகோயில் முன்றலில் இருந்து ஆரம்பமாகி, குருமன்காட்டு சந்தி ஊடாக சென்று, அங்கிருந்து ரயில் நிலைய வீதியின் ஊடாக நகர மத்தியில் அமைந்துள்ள மணிக்கூட்டு கோபுரம் வரை சென்றது.

அதன்பின்னர் அங்கிருந்து பசார் வீதியூடாக சென்று, சூசைப்பிள்ளையார் குளமூடாக வவுனியா கந்தசுவாமி கோயில் முன்றலில் நிறைவுபெற்றது.

பசு வதையை எவ்வடிவிலும் தடுத்தல் அதனை அரசாங்கத்திற்கு சட்டமாக்க கோருதல், மதமாற்றத்தை தடுத்தல் அதனை தடுக்க அரசாங்கத்தை சட்டமாக்க கோருதல், இந்துமதம் சார்ந்த புராதன இடங்கள் எல்லாவற்றிலும், இந்துமதம் சார்ந்தவர்கள் எந்தவித தடையும் இன்றி வணக்கம் செய்வதற்கு வழிபாடு செய்வதற்கு ஆவன செய்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் அறநெறிக்கல்விக்கு முக்கியம் கொடுத்து ஏனைய வகுப்புக்கள், நிகழ்வுகளை தடைசெய்து அறநெறியை வளர்த்தல், இந்து மத ஆலயங்கள், நெறிக்கழகங்கள், ஒன்றியங்கள் மன்றங்கள் எல்லோரும் தங்களுடைய அன்றாட கடைமைகளோடு சமுதாய வளர்ச்சிக்கு சமுதாய தொண்டினை கட்டாயம் செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.

 

அத்தோடு, வவுனியா மாவட்டத்திலே பல வீதிகள் மற்றும் கிராமங்களுக்கு இந்து மதம் சார்ந்த பெயர்கள், காலக்கிரமத்தில் மாற்றப்படுகின்றது என்றும், வேறு மதம் சார்ந்து வேறு பெயர் சார்ந்து தமக்கு எதுவிதத்திலும் தொடர்பில்லாத பெயர்கள் வருகின்றன என்றும் அவற்றையெல்லாம் நீக்கி இந்துமதம் மற்றும் தமிழ் மொழி சார்ந்த, பழமைவாய்ந்த பெயர்கள் அப்படியே இருப்பதற்கு ஆவண செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.

ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான இந்துமக்கள் கலந்துகொண்டதுடன், இந்து கலாசாரத்தை பிரதிபலிக்கும் வாகன ஊர்தி பவனியும் இடம்பெற்றிருந்தது.

ஊர்வலத்தில் நல்லை ஆதினத்தின் இரண்டாம் குருமகாசந்நிதானம், அகில இலங்கை இந்து சாசனத்தின் தலைவர் ஐயப்பதாசக் குருக்குள், வேலர் சுவாமிகள், முத்து ஜெயந்தி நாதக்குருக்கள், பிரபாகரக் குருக்கள், தமிழருவி சிவகுமாரன், உட்பட நூற்றுக்ணக்கான இந்து மதக்குருக்கள், ஆலயத்தொண்டர்கள், வர்ததகர்கள், பொது அமைப்பினர் என பலர் கலந்துகொண்டனர்.

“என்னுடைய சகோதரர் குற்றவாளி என நிரூபிக்கப்பட முன்னரே கைது செய்யப்பட்டார் ” – பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதீன்

ஒரு சம்பவத்தில் குற்றவாளியாக இருந்தால் தான் சிறையிலே அடைப்பது வழமை. அதற்கு நேர்மாறாக குற்றவாளி என்று நிரூபிக்க முன்னரே தனது சகோதரரை கைது செய்தனர் என  பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியூதீன் தெரிவித்தார்.

இது தொடர்பாக வவுனியாவில் இன்று(01.10.2020) ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த அவர்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட இப்ராகிம் என்ற வர்த்தகர் எனது சகோதரருக்கு 7 முறை தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியிருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரை கைது செய்திருந்தனர். இரு தினங்களில் விடுவிக்கப்படுவர் என்று அழைத்து செல்லப்பட்ட நிலையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழே அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

என்னுடைய சகோதரர் நிரபராதி எந்தக் குற்றங்களுடனும் தொடர்புடையவர் அல்ல என்று நான் முன்னரே சொல்லியிருந்தேன். எவ்வாறான விசாரணைகளிற்கும் அவர் ஒத்துழைப்பினை வழங்குவார் என்றும் சொன்னேன். அந்த வகையில் 5 மாதங்கள் கழித்து எந்தக் குற்றசாட்டுடனும் அவர் தொடர்பில்லை என்ற வகையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஒரு சம்பவத்திற்காக விசாரணை மேற்கொள்ளும் போது குற்றவாளியாக இருந்தால் தான் சிறையிலே அடைப்பது வழமை என்று சட்டத்தரணிகள் சொல்கிறார்கள். அதற்கு நேர்மாறாக குற்றவாளி என்று நிரூபிக்க முன்னரே அவர் கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு காவலில் வைக்கப்பட்டு 5 மாதங்கள் சிறையிலே அடைக்கப்பட்டார். தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். அந்தவகையில் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

உயிர்த்த ஞாயிறு சம்பவம் பாரதூரமானது பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பலர் காயமடைந்திருக்கிறார்கள். எனவே அதன் விசாரணைகளில் யாரையும் சந்தேகப்படமுடியும் அந்த விசாரணைகளிற்கு ஒத்துழைக்க வேண்டியது நாட்டின் பிரஜைகளுடைய கடமை. அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். அந்தவிடயத்திற்கு எனது சகோதரரோ? நானோ? இடைஞ்சலாக இருக்கமாட்டோம் என்றார்.

இதேவேளை இந்த அரசுடன் இணைந்து செயற்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக கூறப்படுவது தொடர்பாக ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட நிலையில் பதிலளிக்க அவர் மறுத்துவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“இலங்கை அரசாங்கம் கருத்து சுதந்திரம், சிவில் சமூகத்திற்கான தளம் ஆகியவற்றை பாதுகாப்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளது“ – ஐ.நாவில் இலங்கை!

“இலங்கை அரசாங்கம் கருத்து சுதந்திரம், சிவில் சமூகத்திற்கான தளம் ஆகியவற்றை பாதுகாப்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளது“ என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் வருடாந்த அறிக்கையில் இலங்கை தொடர்பாக அச்சுறுத்தும் விஜயங்கள் கண்காணிப்பு துன்புறுத்தல் குறித்த முறைப்பாடுகள் குறித்து தெரிவிக்கப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை சார்பாக விளக்கமளிக்கும்போதே, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி டயானி மென்டிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் பொதுச் செயலாளரின் வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே பகிரங்கமாக நிராகரித்துள்ளது என அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் கருத்து சுதந்திரம், சிவில் சமூகத்திற்கான தளம் ஆகியவற்றை பாதுகாப்பது குறித்து அர்ப்பணிப்புடன் உள்ளது என தெரிவித்துள்ள டயானி மென்டிஸ், ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சிவில் சமூகத்தினருக்கு எதிரான சம்பவங்கள் குறித்த முறைப்பாடுகள் விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பு நலன் தொடர்பாக வழமையான பாதுகாப்பு வலையமைப்புகளை இயக்குவதற்கு அப்பால் பாதுகாப்பு தரப்பினரும் புலனாய்வு பிரிவினரும் நாட்டின் எந்த குழுவினரையும் விசேடமாக கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை எனவும் டயானி மென்டிஸ் தெரிவித்துள்ளார்.

உலகெங்கிலும் தீவிரவாத சக்திகள் நவீன வழிமுறைகளைப் பயன்படுத்தி வருகின்ற இந்த தருணத்தில், தனது தேசிய பாதுகாப்பு தொடர்பாக பலவீனமாக காணப்படும் எந்த நாடும் கவலைதரும் விளைவுகளை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் எனவும் இதன் காரணமாக அனைத்து தரப்பினரும் இந்த யதார்த்தத்தினை புரிந்துகொள்ளவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

”தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் கீழ் இயங்கும் புற்றுநோய் மற்றும் உளநல வைத்திய சிகிச்சை பிரிவுகளை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கு எடுக்கும் முயற்சி தொடர்பாக முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அதிருப்தி!

”தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் கீழ் இயங்கும் புற்றுநோய் மற்றும் உளநல வைத்திய சிகிச்சை பிரிவுகளை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கு எடுக்கும் முயற்சி தொடர்பாக முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இயங்கிக்கொண்டிருக்கும் புற்றுநோய் வைத்திய சிகிச்சைபிரிவு மற்றும் உளநலவைத்தியப்பிரிவினை, மத்திய அரசின் கீழ் எடுப்பதற்கான ஒரு கலந்துரையாடல் ஆளுனர் தலைமையில் யாழில் இடம்பெற்றுள்ளது.

அதனை மத்திய அரசின் கீழ் கொண்டுவந்து யாழ் போதனா வைத்தியசாலையுடன் இணைப்பதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அறியமுடிகின்றது.

இவை மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கிக்கொண்டிருக்கும், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையினுடைய இரு விசேட பிரிவுகளாக இருக்கிறது.

இதனை திடீர் என்று மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்படுவதற்கு எடுக்கப்படும் முயற்சி எமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை இந்திய ஒப்பந்ததின் கீழ் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமையானது அதிகாரபரவல் நோக்கிய முதலாவது படியாக ஏற்றுக்கொள்ளப்பட்டே நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.

அந்தவகையில் 13 ஆவது திருத்தச்சட்டத்தின் அடிப்படையில் மாகாணசபைக்கு வழங்கப்பட்ட அதிகாரப்பகிர்வை மீண்டும் மத்திய அரசு பறிக்கும் முயற்சியாகவே இதனை பார்க்க முடியும். போதனா வைத்தியசாலைகளும் விசேட தேவையின் கீழ் உருவாக்கப்பட்ட வைத்தியசாலைகளையும் தவிர ஏனைய அனைத்து சிகிச்சை நிலையங்களும் மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இருக்கவேண்டும் என்று 13ஆவது திருத்தத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது. இவை இரண்டும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் கீழ் இயங்கும் விசேட பிரிவுகளே தவிர தனியான வைத்தியசாலைகள் அல்ல.

மாகாணசபையில் கடந்த 2015 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுகாதார நியதிச்சட்டத்தின் படி பிரசுரிக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் இந்த இரண்டு பிரிவுகளும் மாகாண சபையினுடைய ஆளுகைக்கு கீழே இயங்கும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் இரு பிரிவுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே சட்டரீதியாக மக்கள் பிரதிநிகளால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபையில் உருவாக்கப்பட்ட நியதிச்சட்டத்தினை, சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடாமல் விரோதமான முறையில் கையகப்படுத்துவதை நாம் ஏற்க முடியாது.

அவற்றை நடாத்தக்கூடிய நிதி மாகாணசபைகளிடம் இல்லை என்றே காரணம் கூறப்படுகின்றது. மாகாண நிர்வாகத்திடம் அவ்வாறு நிதி நெருக்கடி இருக்குமானால் விசேட நிதி ஒதுக்கீட்டை மத்திய அரசு அதற்கு வழங்கி செயற்பாடுகளை முன்னெடுக்கமுடியும். அத்துடன் இந்த இரு பிரிவுகளிலும் பணப்பற்றாக்குறை காரணமாக சரியான சிகிச்சைகள் வழங்கப்படவில்லை என்ற குறைபாடுகள் எவையும் இதுவரை சுட்டிக்காட்டப்படவில்லை. எனவே இது 13 ஆவது திருத்தச்சட்டத்தினை இல்லாமல் ஒழிக்கவேண்டும் என்ற செயற்பாடாகவே பார்க்கமுடியும். அதன் முதற்படியே இது.

இதேவேளை வடக்கில் யாழ்மாவட்டத்தினை தவிர ஏனைய நான்கு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகளையும் மத்திய அரசின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் நம்பகமாக அறிகிறோம். இவ்வாறான செயற்பாடுகளை அரசு உடனடியாக நிறுத்தவேண்டும். இதற்கு எதிராக நிச்சயம் நாங்கள் குரல் கொடுப்போம். எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

“கட்சிக்குள் நடக்கும் ஜனநாயக மீறலை பார்த்துக்கொண்டு இருப்பவன், தமிழர்களுக்கு எதிரான ஜனநாயக மீறலை எதிர்க்க தகுதியற்றவன்”- கட்சியை விட்டு நான் விலகமாட்டேன் வி.மணிவண்ணன் உறுதி!

முன்னணியில் உள்ள ஒருசிலரின் சுயலாப அரசியலுக்கு நான் முட்டுக்கட்டையாக இருந்தமையினாலேயே என்னை கட்சியை விட்டு நீக்க பல முயற்சிகளை மேற்கொள்ள தொடங்கினார்கள் அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் ஊடக பேச்சாளருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (01.10.2020) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,

கட்சிக்குள் நடக்கும் ஜனநாயக மீறலை பார்த்துக்கொண்டு இருப்பவன், தமிழர்களுக்கு எதிரான ஜனநாயக மீறலை எதிர்க்க தகுதியற்றவன் என்றும் கூறினார்.

நாம் எமது கொள்கை சார்ந்து பயணிக்கும் போது, ஒரு சிலரின் சுயநலம் மற்றும் சுயலாபத்திற்காக திசை திருப்ப முற்பட்டபோது அதனை கட்சிக்குள் இருந்து தான் கடுமையாக எதிர்த்தாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர்களின் சுயலாப நோக்கிற்கு தான் முட்டுக்கட்டையாக இருந்தமையினாலேயே தன்னை கட்சியை விட்டு நீக்க பல முயற்சிகளை மேற்கொள்ள தொடங்கினார்கள் என்றும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார்.

கட்சிக்கு என நிதிக்கட்டமைப்பை உருவாக்க முயற்சித்த போதும் அது ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்றும் நிதிக்கட்டமைப்பை உருவாக்க நினைத்த தன்னை கடுமையாக எதிர்த்தார்கள் என்றும் கூறினார். இன்று தன்னை கொள்கை இல்லாதவன் என கூறுபவர்கள் ஏன் முதலிலேயே கட்சியில் இருந்து துரத்தவில்லை என்றும் ஏன் தேர்தலில் போட்டியிட வேண்டும் என மன்றாடினார்கள் என்றும் கேள்வியெழுப்பினார்.

தமிழ் தேசிய கட்சிகளின் உடைவினால் சிங்கள தேசிய கட்சி வடக்கு கிழக்கில் எழுச்சி பெற்று வருகின்ற நிலையில் புதிய கட்சியோ, அமைப்போ உருவாக்குவது பெரிய விடயமே இல்லை, என குறிப்பிட்டுள்ள சட்டத்தரணி வி.மணிவண்ணன் தான் உருவாக்கிய கட்சி கண் முன்னால் அழிவடைந்து செல்வத பார்த்துக்கொண்டு இருக்கப்போவதில்லை என்றும் கூறினார்.

கட்சிக்குள் ஜனநாயக பண்பற்ற செயற்பாடுகள் தொடர அனுமதித்தால் தமிழ் மக்களுக்கு எதிரான அநீதிக்கு எதிராக போராட தகுதியற்றவனாக இருப்பேன் என்றும்,

எனவே மிக விரைவில் கட்சியின் பொதுச்சபையை கூட்டி முடிவெடுப்போம் என்றும் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் போராட்டம் !

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (01.10.2020) காலை வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவுகளின் அமைப்பினரால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு காரியாலயத்திற்கு முன்பாக போராட்டத்தை நிறைவு செய்யவுள்ளனர்.

இதன்போது காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் மகஜரொன்றும் கையளிக்கப்படவுள்ளது.

காணாமலாக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி வேண்டியும், சிறுவர் துஸ்பிரயோகங்கள் மற்றும் சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் உள்ளிட்டவற்றை கண்டித்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட உறவுகளுடன் கொண்டு செல்லப்பட்ட எமது சிறுவர்கள் எங்கே, இராணுவத்தினராலும், துணை இராணுவ குழுக்களினாலும் கொண்டு செல்லப்பட்ட எமது சிறுவர்கள் எங்கே என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதன்போது கோசமெழுப்பினர்.

இதேநேரம், இனவழிப்பு குற்றங்களுக்கு உள்ளக விசாரணையை நிராகரிப்பதாகவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.

“சுதந்திர இறையாண்மை கொண்ட இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிட முடியாது” – அமைச்சர் சரத் வீரசேகர

“சுதந்திர இறையாண்மை கொண்ட இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிட முடியாது” என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாதுக்க பகுதியில் நேற்று (30.09.2020) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும்அங்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர…, மாகாணசபை முறையினை தொடர்ந்தும் செயற்படுத்தும் விடயத்தில் இந்தியா தலையிடவோ அல்லது கட்டாயப்படுத்தவோ முடியாது. மற்ற நாடுகளின் தலைவர்களால் இவை தீர்மானிக்கப்பட வேண்டிய விடயம் இல்லை என்றும் தெரிவித்தார்.

அத்தோடு மாகாண சபைகள் என்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரம். ஆகவே இது நாட்டின் ஜனாதிபதியால் மட்டும் தீர்மானிக்கப்பட வேண்டிய ஒன்று என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்தியா இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் 13 ஆவது திருத்தம் நமது அரசியலமைப்பில் அறிமுகப்படுத்தப்பட்டபடி இந்தியா பல நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது, அவற்றில் ஒன்று விடுதலை புலிகளை நிராயுதபாணியாக்கப்பட்டது, அது ஒருபோதும் நடக்கவில்லை.

இந்தியாவால் அதைக்கூட நிறைவேற்ற முடியவில்லை. எனவே, இந்தோ-இலங்கை ஒப்பந்தம் எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது கேள்விக்குரியது என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். அத்தோடு 19 இன் மூலம் இழக்கப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை திருப்ப வழங்கும் முகமாக 20வது திருத்தம் கொண்டுவரப்படுவதாக அவர் கூறினார்.

நிறைவேற்று அதிகாரம் இன்றி நாட்டினை நிர்வகிக்க முடியாது என சுட்டிக்காட்டிய அவர் இருப்பினும் 19வது திருத்தத்தில் பிரதமருக்கு இருந்த அதிகாரத்தினை குறைப்பதற்கான முயற்சி இதுவல்ல என்றும் குறிப்பிட்டார்.