கட்டுரைகள்

கட்டுரைகள்

கட்டுரைகளும் விவாதங்களும்

வன்னிக்கள முனையில் இடம்பெற்ற மோசமான சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோ- விசாரணை நடத்தப்படுமென அரசதரப்பில் தெரிவிப்பு

rambukwella.jpg
வன்னிக்கள முனையில் இடம்பெற்ற மிக மோசமான சம்பவமொன்று தொடர்பாக வெளியான வீடியோ குறித்து விசாரணை நடத்துவதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்த முனையில் உயிரிழந்த விடுதலைப் புலிகளின் பெண்போராளி ஒருவரது உடலை முழுமையாக நிர்வாணப்படுத்திய சில படையினர் அந்த உடலை மிகவும் மோசமான செயல்களுக்குட்படுத்துவது கையடக்கத் தொலைபேசியிலுள்ள கமெரா மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

சக படை வீரரொருவரால் வீடியோ படமெடுக்கப்பட்ட இந்த மோசமான செயல் பின்னர் இணையத்தளங்களூடாக உலகம் முழுவதும் வெளியாகியிருந்தது.  எழுத்துக்களாலோ சொற்களாலோ வர்ணிக்கப்பட முடியாத மிகவும் கேவலமானதொரு செயலென இதனை வர்ணித்துள்ள ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அந்தப் பெண்போராளியை சுற்றி நிற்பவர்கள் அணிந்திருக்கும் சீருடைகளும் அவர்கள் கத்திக்கூச்சலிடும் வார்த்தைகளும் அவர்கள் யாரென்பதை அடையாளங்காட்டுவதில் எதுவித சிரமத்தையும் ஏற்படுத்தவில்லையெனவும் தெரிவித்திருந்தது.

மனித நாகரிகத்திற்கு அப்பாற்பட்ட மிகக் கொடூரமானதும் குரூரமானதுமான செயலென வர்ணிக்கப்படும் இந்தச் சம்பவம் குறித்து அரசு விசாரணை நடத்துமென பாதுகாப்பு விவகாரப் பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்இதுபற்றி அவர் கூறுகையில்; இதுபோன்ற சில சம்பவங்கள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. எனினும் இவ்வாறான சம்பவங்களை விடுதலைப் புலிகள் தங்கள் பிரசாரங்களுக்கு பயன்படுத்தி வருவது வரலாறு. ஐந்து இலட்சம் படையினர் மத்தியில் இவ்வாறான சில சில சம்பவங்கள் இடம்பெறத்தான் செய்யும். அதேநேரம் இவ்வாறான சில சம்பவங்களை வீடியோ படங்கள் மூலம் புலிகள் பெரும் பிரசாரங்களுக்கு பயன்படுத்தி வருவதை நாம் அறிந்துள்ளோம். இதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் ஆதரவைப் பெறவும் அவர்கள் முயல்வர். எனினும் இது தொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்போமெனவும் தெரிவித்தார்.

போர்க்களம் தான் மாறியிருக்கிறது, போர் தொடரும் – தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள்

kili-01.jpgகிளி நொச்சி வீழ்ந்து விட்டதால் ஈழப் போர் முடிவடைந்து விடாது. விடுதலைப் புலிகள் தங்களது உத்திகளை மாற்றிக் கொண்டு போரைத் தொடருவார்கள். போர்க்களம் தான் மாறியிருக்கிறது, போர் தொடரும் என்று தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தலைநகரமான கிளிநொச்சியை இலங்கை ராணுவம்  கைப்பற்றியது. இதுகுறித்து தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்களின் பொதுவான கருத்து, போர்க்களம் மாறி விட்டது. ஆனால் போர் தொடரும். விடுதலைப் புலிகள் தங்களது போர் உத்தியை மாற்றிக் கொண்டு போரைத் தொடருவார்கள் என தெரிவித்துள்ளனர்.

ஹமாஸ் அமைப்பினர் நடத்தி வரும் தாக்குதல்கள் பயங்கரவாத செயல் – ஜார்ஜ் புஷ்

0301-bush.jpgஇஸ்ரேல் மீது தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்தி வரும் தாக்குதல்கள் பயங்கரவாத செயல் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கூறியுள்ளார். வானொலி மூலம் புஷ் உரையாற்றியபோது இஸ்ரேலின் தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறுகையில், பயங்கரவாதிகளின் கைகளுக்கு ஆயுதங்கள் போய்க் கொண்டிருக்கின்றன. அது தடுக்கப்பட வேண்டும். அப்படி தடுக்கப்படும் வரை அமைதி பற்றி பேசுவதை ஏற்க முடியாது.

காஸா பகுதியில் முழுமையான போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு தூதரக அளவிலான முயற்சிகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது. போர் நிறுத்தம் என்பது ஒருவழிப்பாதையாக இருக்கக் கூடாது. போர் நிறுத்தம் என்று கூறி விட்டு இஸ்ரேல் மீது ராக்கெட் வீசித் தாக்குவது நியாயமல்ல.இஸ்ரேல் பகுதிகளில் ஹமாஸ் அமைப்பினர் நடத்தி வரும் ராக்கெட் தாக்குதல்கள் பயங்கரவாத செயல்களாகும் என்றார் புஷ்.

இலங்கையர் இருவருக்கு சவூதியில் மரணதண்டனை

saudi-0301.jpgஇலங் கையைச் சேர்ந்த இருவருக்கு சவூதி அரேபியாவில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ரியாத்திலுள்ள வங்கி ஒன்றிற்கு வெளியே சூடானியர் ஒருவரை கொலை செய்து அவரிடம் இருந்த பணத்தினை கொள்ளை அடித்த குற்றத்திற்காகவே இவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த வருடம் மட்டும் சவூதி அரேபியாவில் 92 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் படுகொலையை கண்டித்து சென்னை வரும் இந்திய பிரதமருக்கு கறுப்புக்கொடி

இலங்கையில் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க இந்திய மத்திய அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமையை கண்டித்து எதிர்வரும் 7 ஆம் திகதி சென்னை வரும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கறுப்புக் கொடி காட்ட தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

“இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கட்சி வேறுபாடின்றி எழுப்பிய குரலுக்கு இந்திய அரசு செவிசாய்க்கவில்லை. இலங்கையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்படவேண்டுமென்றும் இந்திய அரசு இலங்கை அரசுக்கு ஆயுத உதவி வழங்கக்கூடாது என்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரும் இணைந்து விடுத்த வேண்டுகோளையும் இந்திய அரசு பொருட்படுத்தவில்லை.

இந்த நிலைமையில் எதிர்வரும் 7 ஆம் திகதி சென்னைக்கு வர இருக்கும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழர்களின் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்துவதென தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது. தமிழர்களின் தன்மானம் காக்கும் இப்போராட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் தமிழ் அமைப்புகளும் தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்துகொள்ளும்படி வேண்டிக்கொள்கிறேன்’

காஸா ஆக்கிரமிப்புக்கு எதிராக லண்டனில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் – சேனன்

1230990018227.jpgகடந்த ஆண்டுகளில் பல எதிர் போராட்டங்கள் கண்ட லண்டன் ட்ராபல்கர் ஸ்காயரில் இன்று (3rd Jan)மீண்டும் மக்களின் குரல் பலமாக ஒலித்தது. மேற்கத்தேய அதிகாரங்களின் ஆதரவுடன் கேட்டுக்கேள்வி இல்லாமல் பாலஸ்தீனிய மக்களை கொன்று தள்ளிக் கொண்டிருக்கும் இஸ்ரேலிய அதிகாரத்தின் அட்டகாசத்துக்கு எதிராக மீண்டும் ஆயிக்கணக்கில் மக்கள் திரண்டனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் எம்பாங்மென்றில் இருந்து பாராளுமன்றம் முதலான முக்கிய இடங்களை தாண்டி ட்ராபல்கர் ஸ்கார்வரை ஊர்வலமாக வந்து தமது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர். 

1230991169810.jpgஇஸ்ரேலிய டாங்குகள் காஸா பிரதேசத்திற்குள் அத்துமீறி நுழைந்த இன்று லண்டன் தெருக்களில் ஆயிரக்கணக்கானவர்கள் தமது தொண்டை வறள கத்தி எதிர்ப்பை தெரிவித்தனர். பாலஸ்தீனர்கள் யூதர்கள் மற்றும் பல்வேறு இன மக்கள் ஒட்டுமொத்தமாக ஒருமித்த குரலில் கத்தி 2009ம் ஆண்டின் எதிர்ப்பை தொடங்கி வைத்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய திறந்த சிறை என்றழைக்கப்படும் காஸா பிரதேசத்தில் அங்கு வாழும் 1.5 மில்லியன் மக்கள் தொடர்ந்து அனுபவித்து வரும் அடக்குமுறைகள் சொல்லிமாளக் கூடியவையல்ல. கடந்த 16 மாதங்களாக இஸ்ரேல் ஏற்படுத்தியிருந்த கடும் முற்றுகை காரணமாக குழந்தைகள் உட்பட ஏராளமான மக்கள் பசி பட்டினியுடன் எந்த அடிப்படை வசதிகளுமின்றி ஆடு மாடு நாய்களை விட கேவலமான வாழ் நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது நாமறிந்ததே. ஏராளமானவர்கள் பட்டினியால் செத்து கொண்டிருக்கும் தருணத்தில் எந்த தற்காப்பு வசதியுமற்ற அப்பாவி மக்கள் மேல் நவீனரக ஆயுதங்களை கொண்டு கடும் தாக்குதலை தொடங்கியுள்ளது இஸ்ரேல்.

இரண்டு வருடங்களுக்கு முன் லெபனானில் செம்மை அடி வாங்கியிருந்த இஸ்ரேலிய இராணுவம் தமது பலத்தை காட்ட அப்பாவி மக்களை  தாக்குவது மிகவும் கேவலம். ஏதிர்வரும் பெப்பிரவரி தேர்தலில் வலது சாரிகளின் வாக்குகளை அள்ளி சுருட்டும் நோக்குடன் இயங்கும் இஸ்ரேலிய அரசுக்கு உலகின் புதிய விடிவெள்ளி ஒபாமா உட்பட அனைத்து அதிகாரங்களும் ஆதரவு! இஸ்லாமின் பெயரைசொல்லி மக்களை ஆட்டிப் படைக்க நிற்கும் சவுதிஅரேபியா முதற்கொண்ட அரேபிய தலைமைகளும் வெறும் சாக்குக்கு இஸ்ரேலை கண்டிப்பதோடு நின்றுவிட்டன.

இப்படிப்பட்ட உலகில் வாழ்வதை நினைக்க சோகம் கவ்வுகிறது. இந்த தான்தோன்றித் தனமாக இயங்கும் கொலை வெறி நாய்களின் வால்களை நறுக்க வழியற்ற நிலையின் வேதனை குமுறல் லண்டன் தெருக்களில் கணீரென்று ஒலித்தது. அவர்தம் ஆத்திர பொறி மேலும் மேலும் வெடித்து பரவும் என்பதை தீர்மானமாக பார்க்க முடிந்தது. நீண்டகால ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் இந்த மக்கள் வேட்டையாடப்படுவதை சத்தம்போடாமல் பார்த்துக் கொண்டிருக்கும் அதிகாரத்தோடு நாமில்லை என்பதை உலகெங்கும் உள்ள மக்கள் தெரிவிக்க தொடங்கியுள்ளனர். இந்த ஆண்டும் இனிவரும் ஆண்டுகளும் மேலும் மேலும் அதிகமான எதிர்ப்பு ஊர்வலங்கள் போராட்டங்களை பார்க்கப்போவது தவிர்க்க முடியாதது.

உலக பொருளாதாரம் தலைகீழாய் கவிழ்ந்து உருண்டு கொண்டிருக்கும் இத்தருணத்தில் அதிகாரங்கள் யுத்தம் -ஆக்கிரமிப்பு துவேசம் பக்கம் சார்ந்து மக்களை துவைத்து பிழியும் வரலாற்றை இதுவரை பார்த்துள்ளோம். அதிகாரத்துக்கு தெரிந்த தப்பும் வழி அது ஒன்றுதான் என்பது எமக்கு தெரியும். ஆனால் முதல் தடவையாக உலகமயப்பட்ட மக்கள் எதிர்ப்பு வளர்ந்து வருகிறது. எல்லாரும் கிறிஸ்மஸ் விடுமுறையில் இருக்கும் பொழுது நசுக்கிடாமல் போய் காஸாவில் அடித்தால் தப்பிவிடலாம் என்ற அதிகார கனவை உடைத்துள்ளனர் மக்கள். கண்டும் காணாமல் இருக்கும் இங்கிலாந்து அமெரிக்க அவுஸ்திரேலிய மற்றும் ஏனைய அதிகார வர்க்கங்கள் உடனடியாக குலுக்கப்படும் என்பதை மக்கள் சத்தம்போட்டு உணர்த்தியுள்ளனர். உலகவரலாற்றில் என்றுமில்லாதவாறு இந்த போக்கு அதிகரித்து வருவதை தற்போது நாம் அவதானிக்க முடியும்.

நீண்ட இடைவெளியில் நடக்கும் போது தேர்தலில் பெரும்பான்மை மக்களின் பங்களிப்பின்றி அரசமைக்கு சிறுபான்மை அதிகாரவர்க்க பிரதிநிதிகள் அடுத்த தேர்தல் வரையும் செய்யும் அநியாயங்கள் அட்டகாசங்களை இனியும் பொறுத்துகொண்டிருக்க முடியாது என்ற உணர்வு உலகெங்கும் உள்ள ஒடுக்கப்படும் வர்க்கத்தால் உணரப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் ஒபாமாவின் தேர்தலில் நிகழ்ந்தது போன்று ஒடுக்கப்படுபவர்கள் தேர்தலில் பங்குபற்றுவதால் மட்டும் தங்கள் பிரதிநிதிகளை ஆட்சிக்கு கொண்டுவந்துவிட முடியாது என்பது மக்களுக்கு இன்று மிகவும் வெளிச்சமாகியுள்ளது. இந்நிலையில் புதிய உலகளாவிய போராட்ட வடிவத்தின் தேவை அத்தியாவசிய தேவையாகியுள்ளது. உலகெங்கும் அதிகாரங்கள் தமது அட்டூழியங்களை ஒட்டுமொத்த மக்களின் சார்பிலும் நிகழ்த்துவதாக பாவனை செய்வது வரலாற்றில் என்றுமில்லாதபடி கேள்விக்குள்ளாகியுள்ளது. ஒவ்வொரு அட்டூழியத்துக்கும் எதிராக மக்கள் கிளர்ந்து ‘எமது பெயரில் இல்லை’ என்று கடும் எதிர்ப்பை வைப்பது உலகளாவிய எதிர்ப்புகளின் ஒன்றிணைவுக்கான சாத்தியங்களை ஏற்படுத்தியுள்ளது. காஸா மக்களுக்கெதிரான கொடுமையை எதிர்த்து உலக மக்கள் ஒன்றிணைவது இதன் ஒரு முதற்கட்டமே.

ஆயுதம் தாங்கி தற்காப்பு போர் செய்ய பாலஸ்தீனிய மக்களுக்கு அனைத்து உரிமையும் உண்டு. ஆனால் அந்தபோர் மக்கள் ஒன்றிணைந்த மக்கள் நடத்தும் போராக இருக்கும் வரையில்தான் அது வெற்றி நோக்கி செல்ல வாய்ப்புண்டு. இஸ்ரேலிய ஒடுக்கப்படும் மக்கள் உட்பட மத்திய கிழக்கு நாடுகளின் ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்த போர் தான் நிரந்தர தீர்வை நோக்கி நகரக்கூடிய ஒரே ஒரு போர். பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்ரேலில் போராடிக் கொண்டிருக்கும் இஸ்ரேலிய தோழர்கள் பாலஸ்தீன-லெபனான் தோழர்களுடன் இனைந்து போராட்டத்தை நடத்த முடியாத இக்கட்டான நிலையில் இருக்கிறது சூழ்நிலை. இருப்பினும் லெபனானிலும் இஸ்ரேலிலும் தோழர்கள் வெளியிட்ட துண்டு பிரசுரங்கள் ஓரே குரலில் ஓரே மாதிரியான வேண்டுகோளுடன் விநியோகிக்கப் படுவதை கேள்விப்படவே பலருக்கும் புல்லரிக்கிறது. அதே வேண்டுகோள்களுடன் இங்கிலாந்து மக்கள் பாராளுமன்றத்தின் முன் கூச்சல் இட்டது ‘உன்னத சங்கீதமாக’ இருந்தது.இஸ்ரேலிய –லெபனான் – அமெரிக்க இங்கிலாந்து தோழர்கள் ஒன்று சேர்ந்த குரலில் பாலஸ்தீன மக்களுடன் இணைந்து அவர்தம் கொடுமைகளுக்கு குரல் கொடுத்தது அனைவரது உரிமைகளையும் மதிக்கும் உலகை ‘கனவு’ காண்பவர்களுக்கு இதத்திலும் இதமான நம்பிக்கை தருகிறது.

வரலாற்றில் முதற் தடவையாக பங்களாதேஷ் பாராளுமன்றத்திற்கு 64 பெண்கள் தெரிவு

world.gif
பங்களாதேஷ் வரலாற்றில் முதற் தடவையாக 64 பெண் உறுப்பினர்களைக் கொண்ட ஒன்பதாவது பாராளுமன்றம் அமையவுள்ளது. நடைபெற்று முடிந்த தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட 19 பெண்கள் தமது போட்டியாளர்களை பாரிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளனர்.

பங்களாதேஷ் அரசியல் ஏற்பாட்டின் பிரகாரம் 45 பெண்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படுவர். இந்நிலையில் ஏனைய 19 பேரும் ஆளுங்கட்சியுடனேயே இணைந்து கொள்வர். நடைபெற்று முடிந்த தேர்தலில் 65 தேர்தல் தொகுதிகளுக்காக 60 பெண்கள் போட்டியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேலும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள 19 பேரும் ஷேக் ஹசீனா, காலிதா ஷியா மற்றும் முன்னாள் முதல் பெண்மணியான நௌசான் எர்சாத் ஆகியோரின் கட்சிகளிலிருந்து தெரிவாகினர்.

இம்மூவரும் தலா மூன்று ஆசனங்களுக்காக போட்டியிட்டிருந்த நிலையில், நௌசான் எர்சாத் இரு ஆசனங்களையும் ஏனைய இருவரும் தலா மூன்று ஆசனங்களையும் பெற்றுக் கொண்டனர். பங்களாதேஷின் மொத்த வாக்காளர் தொகையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

மும்பைத் தாக்குதலைக் கண்டித்த ஒபாமா இஸ்ரேலைக் கண்டிக்கவில்லை -அரேபியர்கள் கவலை

israeli-aircraft.jpgமும்பைத் தாக்குதல் சம்பவத்துக்கு ஓபாமா கண்டனம் தெரிவித்தார். ஆனால் இஸ்ரேல் தாக்குதல் குறித்து மெளனம் காத்து வருகிறார். என்று அரபு நாட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து ஒபாமா தரப்பிடம் கேட்டபோது மும்பைத் தாக்குதல் சம்பவம் பயங்கரவாதம் தொடர்புடையது. இஸ்ரேல் தாக்குதல் நாடுகள் தொடர்புடையது என்று பதில் தெரிவித்ததாகக் கூறப்படு கிறது. இதனிடையே இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்தும் காசா பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதுவரை 370க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்ப தாகவும், 1,720 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிளிநொச்சி வீழ்ந்தது. ஆயுதங்களைக் கீழே வைத்து சரணடையுமாறு ஜனாதிபதி புலிகளுக்கு இறுதி வேண்டுகோள்: தொகுப்பு-ஏகாந்தி

kilinochchci_victory_.jpgபுலிகளின் அரசியல், நிர்வாகத் தலைமையகக் கோட்டையாக விளங்கிய கிளிநொச்சி நகரத்தை படையினர் நேற்று (02) கைப்பற்றிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, யாழ். – கண்டி ஏ-9 வீதி ஓமந்தை முதல் பரந்தன் வரை படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளுக்குப் பின்னர் கிளிநொச்சியில் படையினர் தமது நிலைகளைப் பலப்படுத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. புலிகளின் மறைமுக அரச நிர்வாகத் தலைநகராக விளங்கிய கிளிநொச்சி நகரத்தை படையினர் நேற்று முற்பகல் சுற்றிவளைத்து உள்நுழைந்ததாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். மும்முனைகளில் முன்னேறிய படையினர் கிளிநொச்சி நகரத்திற்குள் பிரவேசித்து நேற்று நண்பகல் அளவில் இறுதி நடவடிக்கையை மேற்கொண்டதாக நேற்றுப் பகல் தேசிய பாதுகாப்பு நிலையத்தில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் பிரிகேடியர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டம்

* 1984 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாவட்டம்
* நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகள்
* 95 கிராம சேவையாளர் பிரிவுகள்
* மூன்று பிரதேச சபைகள் (பச்சிலைப்பள்ளி, கரச்சி, பூநகரி)
* 1279 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுடையது
* சனத்தொகை – 1,95,812
* தமிழர் தொகை – 1,95,386 (99.78%)
* இலங்கை சோனகர் – 424 (0.22%)

கிளிநொச்சியின் வீழ்ச்சி விடுதலைப் புலிகளுக்கு நிச்சயம் பெரும் பின்னடைவு என்பதில் சந்தேகம் இல்லை. இருப்பினும் அவர்களின் போர் முடிவுக்கு வருமா என்பதும் சந்தேகம்தான். காரணம், கடந்த காலங்களில் புலிகள் நடத்திய போர்கள் இதை தெளிவாக்குகிறது. இலங்கை படைகளுக்கு எதிராக 1983ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் போர் தொடங்கியது. அது முதல் தொடர்ந்து பல வெற்றிகளையும், வீழ்ச்சிகளையும், பின்னடைவுகளையும் புலிகள் சந்தித்து வருகின்றனர்.

புலிகளின் தலைநகராக விளங்கியது கிளிநொச்சி என்றாலும் கூட அருகாமையில் உள்ள முல்லைத்தீவும் புலிகளின் முக்கிய தளமாக விளங்கி வருகிறது. கிளிநொச்சிக்கு முன்பாக பரந்தன் நகரை ராணுவம் கையகப்படுத்தியது. இதன் மூலம் வன்னிப் பகுதியில் முக்கிய தளங்களை இழந்துள்ளனர் புலிகள். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பின்னர் கிளிநொச்சி ராணுவத்தின் கைவசம் வந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் முதலே கிளிநொச்சியைக் குறிவைத்து ராணுவம் பல முனைகளில் தனது தாக்குதலைத் தொடங்கியது. ஆனால் புலிகளின் தடுப்பரண்கள், தொடர்ந்து பெய்து வந்த மழை காரணமாக இந்த முயற்சி தடைபட்டு வந்தது. இந்த மோதலில் ராணுவத்தரப்பில் பெருமளவில் சேதம் ஏற்பட்டது. நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தற்போது தங்களது இலக்கை ராணுவம் ஒரு வழியாக எட்டியுள்ளது.

புலிகளின் தற்போதைய ஒரே முக்கியதலமாக முல்லைத்தீவு மாறியுள்ளது. ஆனால் ராணுவத்தின் அடுத்த குறி முல்லைத்தீவுதான் என்பதால் புலிகளின் அடுத்த கட்ட நடவடிக்கை எந்த கோணத்தில் இருக்கும் என்பது கவனிப்புக்குரியதாகியுள்ளது. இலங்கையிலிருந்து இன்று வெளிவந்துள்ள அனைத்து செய்தித் தாள்களிலும் கிளிநொச்சி கைப்பற்றப்பட்டுள்ள சம்பவமே பிரதான செய்தியாக பிரசுரமாகியிருந்தது. நேற்றைய தினம் அரசாங்க தொலைக்காட்சியில் கிளிநொச்சி சம்பவம் குறித்த சில செய்திகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டன. ஆனால், கிளிநொச்சியின் வெற்றியானது விடுதலைப் புலிகளின் போராட்டத்தை அடக்கிவிட்டது என்று பொருள் கொள்ளப்படுமாயின் அது பெருந் தவறு. இராணுவத் தளபதி நேற்று ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது வன்னிப் பிரதேசத்தில் முல்லைத்தீவு, யானையிரவு போன்ற சுமார் 40 கி.மீ. வரை புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது என அறிவித்தார். இது கிழக்கில் தொப்பிகலை பிரதேசத்தைவிட குறைந்த பிரதேசம் என்றும் தெரிவித்தார். எனவே, இராணுவத்தின் அடுத்த இலக்காக முல்லைத்தீவு, யானையிரவு போன்ற பிரதேசங்கள் அமையுமென்பது அவர் கருத்துக்களிலிருந்து புலனாகின்றது. கிளிநொச்சியின் வெற்றி என்று கூறும்போது நகர்சார்ந்த வெற்றி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், கிளிநொச்சி மாவட்டத்தின் வெற்றியாக அது அமையுமா என்பது கேள்விக்குறியே. அரசியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி விடுதலைப் புலிகள் கெரில்லா தாக்குதல்களில் தொடர்ந்தும் ஈடுபடக்கூடிய நிலை அதிகரிக்கப்படலாம் எனப்படுகின்றது.

இது தொடர்பான செய்தித் தொகுப்புகள் கீழே இடம்பெற்றுள்ளன.

கிளிநொச்சியைப் படையினர் மீட்டதானது ஒரு இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக பெற்ற வெற்றியல்ல.

mahi.jpgகிளிநொச்சியைப் படையினர் மீட்டதானது ஒரு இனம் இன்னொரு இனத்திற்கு எதிராக பெற்ற வெற்றியல்ல. தெற்கு வடக்கை தோல்வியுறச் செய்ததாக வரைவிலக்கணப்படுத்தக்கூடிய தொன்றுமல்ல. இது முழு நாட்டிற்கும் கிடைத்த வெற்றியாகுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மனித வாழ்க்கையை விளையாட்டாகக் கொண்ட கொடூர பயங்கரவாதத்தைத் தோல்வியுறச் செய்த தீர்க்கமான வெற்றி. மக்களை இனம், மதம் என பிரிப்பதற்குப் பிரயத்தனம் செய்த இனவாதத்தைத் தோற்கடித்த வெற்றியாகுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். படையினர் கிளிநொச்சியை நேற்றுக் கைப்பற்றியதையடுத்து அதனை உத்தியோகபூர்வமாக நாட்டு மக்களுக்கு அறிவித்து உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்றுப் (02) பிற்பகல் இடம் பெற்ற இவ்வைபவத்தில் சிரேஷ்ட அமைச்சர்கள் முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில், ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது 2009ம் ஆண்டை வெற்றியின் ஆண்டென நான் அறிவித்தேன். அதன்படி, வருடம் பிறந்து இரண்டாவது நாளில் போராட்ட வரலாற்றில் முக்கியமானதொரு வெற்றியைச் சொந்தமாக்க முடிந்துள்ளது. உலகளவில் பிரபலமான அமைப்பான விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து புலிகளின் கோட்டையாகத் திகழ்ந்த கிளிநொச்சியை எமது படையினர் வெற்றி கொண்டுள்ளனர். கிளிநொச்சியைப் பிடிப்பதற்கு நான் கனவுகாண்பதாக புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியிருந்தார். எனது கனவு நனவாகியுள்ளது. இது எனது கனவுமட்டுமல்ல. அமைதியையும் சுதந்திரத்தையும் விரும்புகின்ற அனைவரினதும் கனவு இது. அனைத்து மக்களினதும் கனவு எமது படையினரால் நனவாக்கப்பட்டுள்ளது.

இது சாதாரண வெற்றியல்ல. வரலாற்று வெற்றி. புலிகளின் கோட்டையை எமது படையினர் மீட்ட வெற்றியென்பது பயங்கரவாதத்துக்கு எதிராக முழு உலகிற்குமான வெற்றி. முழு உலகமும் இதற்காக எமது படை வீரர்களைப் பாராட்டும். கிளிநொச்சி என்பது தனியானதொரு அரசு அமைக்க எண்ணியோரின் தலை நகரமாகும். சர்வதேச ஊடகங்கள் மட்டுமன்றி சில ராஜதந்திரிகளும் நம்பி செயற்பட்ட காலம் ஒன்றிருந்தது. புலிகளின் அந்த தனிராஜ்யத் தலைநகரம் கை நழுவியது.

2005ம ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது முழு நாட்டிலும் ஒரே சட்டத்தை நிலைநாட்டுமாறு மக்கள் எம்மைக் கேட்டுக்கொண்டனர். பல உடன்படிக்கைகளால் பிளவுபட்டிருந்த நாட்டை ஐக்கியப்படுத்துமாறு கேட்டனர். முப்படையினரும் மக்கள் என்மீது வைத்த நம்பிக்கையை நிறைவேற்றவே அர்ப்பணிப்புடன் உழைத்தனர்.
இன்று அந்த எதிர்பார்ப்பு நிறைவேறியுள்ளது. 2009ம் ஆண்டில் எமது நம்பிக்கை மேலும் மேம்பாடடைந்துள்ளது. படையினர் தமது கண், காது, இரத்தம் மட்டுமன்றி தமது உயிரைக் கூட தியாகமாக வழங்கியே இவ்வெற்றியைப் பெற்றுள்ளனர். இதற்காக நாட்டுத் தலைவர் என்ற வகையில் நாட்டு மக்கள் அனைவரினதும் கெளரவத்தை அவர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். இந்த வரலாற்று வெற்றிக்கு தலைமைத்துவம் வழங்கிய முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உட்பட சகல படை உயரதிகாரிகள், வீரர்கள் அனைவருக்கும் நாட்டு மக்களின் கெளரவம் உரித்தாகட்டும்.

நாட்டு மக்களின் பங்களிப்பு இதில் முக்கியமானது. மக்கள் இந்த அர்ப்பணிப்புடனான பங்களிப்பை இன்னும் குறுகிய காலத்துக்கு வழங்க வேண்டியுள்ளது. முல்லைத்தீவையும் கைப்பற்றி புலிகளை முழுமையாகத் தோற்கடிக்கும் வரை இதற்காக ஆதரவு தருமாறு மக்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஆயுதங்களைக் கீழே வைத்து சரணடையுமாறு புலிகளுக்கு இறுதியாக வேண்டுகோள்விடுக்கின்றேன். பல தசாப்தங்களாக புலிகளின் பிடியில் பணயக் கைதிகளாகவுள்ள வடக்கு மக்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

தமிழில் உரை

வடக்கு மக்களே உங்களதும் உங்கள் பிள்ளைகளினதும் பாதுகாப்பான எதிர்காலத்தை நான் நாட்டுத் தலைவன் என்ற ரீதியில் நான் பொறுப்பேற்கிறேன் என வாக்குறுதியளிக்கிறேன். ஒரே கொடியின் கீழ் மகிழ்வுடன் வாழ நவீன இலங்கையை உருவாக்க நம்மை அர்ப்பணிப்போம். எமது இணைந்த அர்ப்பணிப்பு சகல தடைகளையும் வென்று முன்னோக்கிச் செல்ல வழிவகுக்குமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். ஜனாதிபதி வடக்கு மக்களுக்கான வாக்குறுதியைத் தமிழில் வழங்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது.

புலிகளின் கனவு ஈழத்தின் கோட்டை தகர்ந்தது…’ – இராணுவப் பேச்சாளர்

kili-01.jpgபுலிகளின் கனவு ஈழத்தின் கோட்டையாக விளங்கிய கிளிநொச்சி படையினரிடம் வீழ்ந்தமை அவர்களுக்குப் படுதோல் வியாகுமென்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். நீதிமன்றம், வங்கி, சமாதான செயலகம், அரசியல் தலைமையகம், நடவடிக்கைத் தலைமையகம் போன்ற அனைத்து நிர்வாகக் கட்டமைப்புகளையும் கிளிநொச்சியி லேயே புலிகள் வைத்திருந்தனர். இன்று அவர்களின் ஈழத் தலைநகர் சிதைக்கப்ப ட்டுள்ளதுடன் புலிகள் ஏ-9 வீதியின் கிழ க்குப் பகுதிக்குள் முடக்கப்பட்டுள்ளார்களென்றும் பிரிகேடியர் தெரிவித்தார்.

சட்டவிரோத வரிசேகரிப்புக்கும் தளமாக விளங்கிய கிளிநொச்சி கைப்பற்றப் பட்டுள்ளதால் ஆனையிறவு, பளை பகுதிகளுக்கு புலிகள் ஓரங்கட்டப்பட்டுள்ளதாகக் கூறிய பிரிகேடியர் நாணயக்கார, தொப்பி கலைக்குச் சமமான ஒரு பிரதேசத்தில் மாத்திரம் முடக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

‘புலிகளின் 236 இலக்குகள் தாக்கி அழிப்பு’ – விமானப் படை பேச்சாளர்

kili-02.jpgபரந்தன் மற்றும் கிளிநொச்சியைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கைகளின் போது, புலிகளின் 236 இலக்குகளை விமானப் படையினர் தாக்கியழித்துள்ளதாக விமானப் படைப்பேச்சாளர் விங்கமாண்டர் ஜனகநாணயக்கார தெரிவித்தார். இராணுவத்திற்கு உதவியாக 139 தடவைகள் விமானப்படையின் விமானங்கள் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 2008 ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் மூன்று மாதகாலம் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்கள் படை நடவடிக்கைகளுக்கு பாரிய வெற்றியளித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கிளிநொச்சி நகருக்குள் படையினர் பிரவேசித்ததை அடுத்து தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று விசேட செய்தியாளர் மாநாடு நடைபெற்றது. இதில் விமானப்படைப் பேச்சாளர் மேலும் தகவல் தருகையில்:- விமானப் படைக்குச் சொந்தமான எம். ஐ. – 24 ரக விமானங்களைப் பயன்படுத்தி புலிகளின் 32 இலக்கு மீது 25 தடவைகள் தாக்குதல்கள் நடத்தியுள்ள அதேசமயம் கிபிர் மற்றும் எப்-7 ரக ஜெட் விமானங்களை பயன்படுத்தி 204 இலக்குகள் மீது 144 தடவைகள் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சியை நோக்கி முன்னேறி வந்த இராணுவத்தின் 57 வது படைப் பிரிவினருக்கும், முதலாவது செயலணியினருக்கும் உதவியாகவே இந்த விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. விமானப் படையினரின் வெற்றிகரமான தாக்குதல்கள் மூலம் கிளிநொச்சி, பரந்தன், இரணைமடு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகள், பலமான மற்றும் ஒன்று கூடும் தளங்கள் பல முக்கிய இலக்குகள் தாக்கியழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த விமானப் படைப் பேச்சாளர் விமான ஓட்டிகளும், களமுனையிலுள்ள போர் வீரர்களும் இதனை உறுதி செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஈழப் போர் … ஒரு பார்வை…

1983 – விடுதலைப் புலிகள் நடத்திய கொரில்லாத் தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். கொழும்பில் தமிழர்களுக்கு எதிரான கலவரம் மூண்டது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக வெளியேறினர். இதை முதல் ஈழப்போர் என புலிகள் வர்ணித்தனர்.

1987 – போர் நிறுத்தத்திற்கு முயன்ற இந்தியா, அதை அமல்படுத்த படைகளை அனுப்பியது. அமைதி ஒப்பந்தத்திற்கு புலிகள் ஒத்துக் கொண்டாலும் கூட ஆயுதங்களைக் கைவிட மறுத்து விட்டனர். இதையடுத்து இந்தியப் படைகளுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையோ மோதல் மூண்டது. 1000க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் உயிரிழந்தனர்.

1990 – 3 ஆண்டு கால சண்டைக்குப் பின்னர் இந்தியப் படைகள் இலங்கையை விட்டு கிளம்பின. யாழ்ப்பாணத்தை கையகப்படுத்தியது புலிகள் இயக்கம். 2வது ஈழப் போர் தொடங்கியது.

1991 – விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டுத் தாக்குதலில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார்.

1993 – விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டுத் தாக்குதலுக்கு இலங்கை அதிபர் பிரேமதாசா பலியானார்.

1995 – அதிபர் சந்திரிகா குமாரதுங்கா, புலிகளுடன் போர் நிறுத்தத்திற்கு முன்வந்தார். ஆனால் கடற்படைக் கப்பலை தகர்த்தனர் புலிகள். 3வது ஈழப் போர் தொடங்கியது. ஆனால் அரசு வசம் போனது யாழ்ப்பாணம்.

1995 -2001 – வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போர் தீவிரமடைந்தது. கொழும்பு மத்திய வங்கியில் நடந்த மனித வெடிகுண்டுத் தாக்குதலில் 100 பேர் உயிரிழந்தனர். சந்திரிகாவும் காயமடைந்தார்.

2002 – நார்வே முயற்சியால் விடுதலைப் புலிகளுக்கும், அரசுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

2003 – அமைதிப் பேச்சுக்களிலிருந்து விலகினர் புலிகள். போர் நிறுத்தம் செயலிழந்தது.

2004 – கிழக்கை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர் புலிகள். அதே ஆண்டில் சுனாமி தாக்குதல் நிகழ்ந்தது. தமிழர் பகுதிகளில் பேரிழப்பு.

2006 – ஜெனீவாவில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அரசுப் படைகளுக்கும், புலிகளுக்கும் இடையே மீண்டும் போர் வெடித்தது.

2007 – கிழக்கில் உள்ள புலிகளின் முக்கிய நகரான வாகரையை ராணுவம் மீட்டது. ஜூலையில், கிழக்கு மாகாணம் முழுமையும் புலிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.

2008 – ஜனவரி மாதம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக அரசு அறிவித்தது. ஆகஸ்ட் மாதம் வடக்கில் நான்கு பகுதிகளில் ராணுவம் முன்னேறியது. கிளிநொச்சியை நெருங்கி விட்டதாக ராணுவம் அறிவித்தது.

2009 – ஜனவரி 2ம் தேதியான இன்று கிளிநொச்சியைப் பிடித்து விட்டதாக ராணுவம் அறிவித்தது.

வெற்றியின் பயனை மக்கள் அனுபவிக்க எரிபொருள் விலையை குறைக்க வேண்டும் – ரணில்

ranil-2912.jpgகிளிநொச்சியில் படையினர் பெற்ற வெற்றியை நாட்டு மக்கள் அனுபவிக்கும் விதத்தில் எரிபொருள் விலையை உடனடியாகக் குறைக்கவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். கண்டியில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக்கட்சியின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறுனார். நாட்டில் மக்கள் இன்று பல்வேறு கஷ்டங்கள், துன்பங்கள் மத்தியில் வாழுகின்றனர். ஆனால், அவர்களுக்கு உரிய மானியங்கள், சலுகைகள் வழங்கப்படவேண்டியது இன்று அவசியம். அரசு அதனைச் செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய மாகாண சபைத்தேர்தலில் போட்டியிடும் மாத்தளை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களின் ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர்கள், தொகுதிகளின் அமைப்பாளர்களுக்கு அறிவூட்டும் இக்கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க மேலும் கூறியதாவது; சிந்தனை என்று கூறுவது நாட்டுக்கும், மக்களுக்கும் சிறந்த நன்மைகளைத் தரக்கூடியதாக அமைந்திருக்கவேண்டும். ஆனால், அவ்வாறு இங்கு சிந்தனையில்லை. இன்று அடாவடித்தனம், அநீதி, ஊழல்கள், வீண்விரயம், மக்களிடம் அனுதாபம் காட்டாமை போன்ற தீய வழிகள் காணப்படுகின்றன. நாட்டில் இவை இருக்கக்கூடாது. எரிபொருள் விற்பனை தொடர்பாக நீதிமன்றத்தின் உத்தரவையும் மதிக்காமல் 120 சத வீத இலாபத்துடன் எரிபொருட்கள் விற்பனை செய்யப்படுவது நாட்டு மக்களுக்கு அநீதியையும் அசௌகரியங்களையும் இழைப்பதாகும்.

கிளிநொச்சியை கைப்பற்றியதாக அறிவிக்கின்றனர். இதனால், நாம் படையினரை கௌரவித்து பாராட்டி எமது மகிழ்ச்சியைத் தெரிவித்துக்கொள்கிறோம். கிளிநொச்சியை கூட்டாக வைத்துக்கொண்டுதான் விலைவாசிகள் உயர்த்தப்பட்டது. அவ்வாறானால் இம்மாதத்திலிருந்து பெற்றோலை 100 ரூபாவாகவும் மண்ணெண்ணெயை 5 ரூபாவாகவும் குறைத்து மக்களுக்கு வழங்கவேண்டும். இவ்வாறு செய்யாவிட்டால் மக்களே இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவார்கள் என்றார்.

பட்டாசு கொளுத்தி மக்கள் ஆரவாரம்

கிளிநொச்சி நகரை படையினர் கைப்பற்றி விட்டனர் என்ற செய்தி நேற்று அறிவிக்கப்பட்டதும் தெற்கில் பட்டாசு கொளுத்தி மக்கள் ஆரவாரம் செய்தனர். ஜனாதிபதிக்கும் முப்படைத் தளபதிகளுக்கும், பாதுகாப்பு செயலாளருக்கும் நன்றி தெரிவித்து கோஷமெழுப்பியவாறு தேசியக் கொடிகளை ஏந்தியவாறு ஊர்வலமாகவும் சென்றனர். கொழும்பில் சகல பகுதிகளிலும் பட்டாசுகள் கொளுத்தப்பட்டன. பிரதான வீதிகளில் ஊர்வலமாகச் சென்றும், கோஷமெழுப்பியும் பட்டாசு கொளுத்தியதாகவும் பெரும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன. நகரெங்கும் கோர்வை கோர்வையாக பட்டாசுகள் கொளுத்தப்பட்டன.

புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கிளிநொச்சிப் பகுதியை அரச படையினர் கைப்பற்றியதாக ஊடகங்கள் மூலம் அறிவிக்கப்பட்டதனை தொடர்ந்து இரத்தினபுரி நகரில் நேற்று (02) பகல் 12.00 மணிக்கு ஆரம்பமான இந்த ஆர்ப்பாட்ட பேரணி பிற்பகல் 1.00 மணி வரை நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இராணுவ வீரர்களுக்கும் ஆதரவு தெரிவித்தனர்.

அனுராதபுரம் நகரையும் நகரைச் சூழவுள்ள பிரதேசங்களையும் சேர்ந்த மக்கள் பட்டாசு கொளுத்தி தமது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். அனுராதபுரம் டி. எஸ். சேனநாயக்க சுற்று வட்டம், ஓங்கிப் பகுதி, பழைய நகரப் பகுதி, மார்க்கப் பகுதி, புதிய பஸ் நிலையம் பகுதிகளில் ஒன்று கூடிய பொதுமக்கள் கிளிநொச்சி வெற்றியை பட்டாசு கொளுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தலாவ, தம்புத்தேகம, நொச்சியாகம, கெக்கிராவ, ஹொரவப்பொத்தான, கஹட்டகஸ்திகிலிய, மதவாச்சி, கெபிதிகொள்ளாவ, ரம்பாவ, கலன்பிந்துனுவெவ, திறப்பனே, மரதன்கடவள, எப்பாவல, மிஹிந்தலை போன்ற நகரங்களிலும் பொதுமக்கள் ஒன்று கூடி சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதையடுத்து நாடளாவிய ரீதியில் பட்டாசி வெடித்து மகிழ்ச்சி ஆரவாரம் செய்யப்பட்ட நிகழ்வு தமிழ் மக்களின் உள்ளங்களை புண் படுத்தக்கூடிய ஒரு நிகழ்வாக மாற இடமுண்டு. இத்தகைய சம்பவங்களினால் இனக்குரோதங்களை வளக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பொறுப்பு வாய்ந்த அரசாங்கத்தின் கடமையாகக் கொள்ளலாம்.

கொழும்பு விமானப் படை தலைமையகம் முன்னால் தற்கொலைத் தாக்குதல்
மூன்று விமானப்படைவீரர்கள் பலி; 34 பேர் காயம்

கிளிநொச்சி கைப்பற்றப்பட்டதை ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக அறிவித்து சில மணிநேரத்திற்குள் விமானப்படை தலைமையகத்தின் முன்பு தற்கொலை குண்டுதாக்குதலொன்று இடம்பெற்றுள்ளது. தற்கொலை குண்டுதாரி தலைமையகத்திற்குள் நுழையும் முன்பே நுழைவாயிலில் இந்த குண்டு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான செய்தி வருமாறு:-

கொழும்பு விமானப் படைத்தலைமையகத்திற்கு முன்னால் நேற்று (02) மாலை இடம் பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் மூன்று விமானப் படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 36 பேர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை 5.10 மணியளவில் இடம்பெற்றதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

வீதியின் மறுபுறத்திலிருந்து வேகமாக ஓடிவந்த தற்கொலை குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்துள்ளதாக விமானப்படை பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் இரண்டு பஸ் வண்டிகளும், மூன்று மோட்டார் சைக்கிள்களும் சேதமடைந்துள்ளன. காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 13 விமானப் படைவீரர்களும், 23 சிவிலியன்களும் அடங்குவதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார். அலுவலகக் கடமைகளை முடித்துக்கொண்டு ஊழியர்கள் வீடு திரும்பிக்கொண்டிருக்கும் நேரம் என்பதால் பெரும் வாகன நெருக்கடி காணப்பட்டது. இந்த நேரத்தில் பாரிய சத்தத்துடன் குண்டு வெடித்ததால் பெரும் பதற்றம் நிலவியது.

குண்டு வெடிப்பு இடம்பெற்றதும் முப்படையினரும், பொலிஸாரும் குவிக்கப் பட்டிருந்ததுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. லேக்ஹவுஸ் சுற்று வட்டத்திலிருந்து கொம்பனி வீதி வரையிலான வீதிப்போக்குவரத்து தற்காலிகமாக தடைசெய்யப்பட்டு சில மணிநேரத்தில் மீண்டும் வழமைக்கு திரும்பியது.

ஜன. 5-ல் ஹசீனா பதவியேற்பு

haseena.jpg
பங்களாதேஷ் புதிய பிரதமராக இரண்டாவது முறையாக வரும் 5ம் தேதி அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனா பதவியேற்கிறார்.

அவர் பங்களாதேஷ் அதிபர் இயாஜுதின் அகமதுவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஹசீனா விரும்பும் நாளில் அவர் பிரதமராக பதவி ஏற்கலாம் என்று அதிபர் அகமது கூறியதாக அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பங்களாதேஷில் கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 300 தொகுதிகளில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் தலைமையிலான கூட்டணி 262 இடங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவின் கட்சி 32 இடங்களை மட்டுமே பிடித்து படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.