::விளையாட்டு

::விளையாட்டு

இலங்கை மற்றும் சர்வதேச விளையாட்டுச் செய்திகள்.

ஐ.பி.எல்: புதிய அட்டவணை கோருகிறது இந்திய அரசு

i-p-l-logo.jpgஐ.பி.எல். எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளுக்கு புதிய அட்டவணையை தயாரிக்குமாறு ஐ.பி.எல். நிர்வாகத்துக்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஐ.பி.எல். போட்டிகள் ஏப்ரல் 10ஆம் தேதி துவங்கி, மே 24ஆம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், ஏறத்தாழ அதே காலகட்டத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலும் நடைபெறுவதால் பாதுகாப்புப் பிரச்சினைகள் எழுந்தன.

இதையடுத்து, அட்டவணையை மாற்றுமாறு ஐபிஎல் நிர்வாகத்திடம் மத்திய அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி, ஐபிஎல் நிர்வாகம் புதிய அட்டவணையை கடந்த 7ஆம் தேதி மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.

ஆனால், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், டெல்லி உட்பட பல்வேறு மாநில அரசுகள், போட்டி அட்டவணைகள் தொடர்பாக ஆட்சேபம் வெளியிட்டன. தேர்தல் நேரத்தில் கிரிக்கெட் போட்டிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பது கடினம் என்றும், கூடுதல் படையினர் தேவை என்றும் தெரிவித்தன. சில மாநில அரசுகள், ஒரு சில போட்டிகளுக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்க முடியும் என்று தெரிவித்தன. ஒரு சில மாநிலங்கள், தேர்தல் முடிந்த பிறகுதான் கிரிக்கெட் போட்டிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியும் என்று தெரிவித்தன.

ஆகவே, அதன் பிறகு உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஐபிஎல் நிர்வாகம் இந்த மாதம் 7ஆம் தேதி சமர்ப்பித்த அட்டவணைப்படி போட்டிகளை நடத்துவது சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளது.

மாநில அரசுகள் தெரிவித்துள்ள கருத்துக்களை கவனத்தில் கொண்டு, புதிய அட்டவணையைத் தயாரிக்குமாறு ஐ.பி.எல். நிர்வாகிகள் அறிவுறுத்தப்பட்டு்ள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கட் இடைக்கால சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமனம் -தலைவராக டி.எஸ்.டி. சில்வா தெரிவு

sl_cricket.jpgஇலங்கை கிரிக்கட் நிறுவன இடைக்கால நிருவாக சபைக்கு புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இடைக்கால நிருவாக சபையின் புதிய தலைவராக முன்னாள் இலங்கை கிரிக்கட் அணியின் சுழல்பந்துவீச்சாளரான டி.எஸ்.டி. சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இடைக்கால நிருவாக சபையின் செயலாளராக முன்னாள் இலங்கை அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்கவின் சகோதரர் நிஷாந்த ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். இது தவிர புதிய இடைக்கால நிருவாக சபையின் உறுப்பினர்களாக சிதத் வெத்தமுனி, சுஜீவ ராஜபக்ஷ, லலித் விக்ரமசிங்க, ரனில் அபேனாயக்க மற்றும் முன்னாள் இலங்கை அணியின் வேகப் பந்துவீச்சாளர் பிரமோதய விக்ரமசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.  இவர்களுக்கான நியமனக் கடிதங்களை விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே நேற்று முன்தினம் இலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் வைத்து வழங்கினார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை கிரிக்கட் அணியின் புதிய தலைவராக குமார் சங்கக்கார! உப தலைவராக முரளிதரன்!!

murali_sangakkara.jpgஇலங்கை கிரிக்கட் அணியின் புதிய தலைவராக குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தேசிய தெரிவுக் குழு இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளது. இலங்கை அணியின் உப தலைவராக நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் தலைவராக இதுவரை கடமையாற்றிய மஹேல ஜயவர்தனää அண்மையில் பாகிஸ்தானுக்கு இலங்கை அணி மேற்கொண்ட கிரிக்கட் சுற்றுலாவுடன் தலைமைப் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இதற்கிணங்க அணியின் புதிய தலைவர் மற்றும் உப தலைவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் ஜுன் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண ருவன்டி-20 கிரிக்கட் சுற்றுப் போட்டிகள் வரை இலங்கை அணி எவ்வித சர்வதேச ஆட்டங்களிலும் கலந்துகொள்ளாது என எதிர்பார்க்கப்படுகிறது.

2011 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி வாய்ப்பு தெற்காசியாவிடமிருந்து பறிபோகும் ஆபத்து -அர்ஜுன ரணதுங்க

cricket-arjuna-ranatunga.jpg2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை நடத்த தெற்காசிய நாடுகளுக்கு கிடைத்திருக்கும் வாய்ப்பு பயங்கரவாத பிரச்சினைகள் காரணமாக விலகிச் சென்று விடக் கூடிய ஆபத்து இருப்பதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான அர்ஜுன ரணதுங்க சுட்டிக் காட்டினார்.

பாகிஸ்தான், லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் தாக்குதலுக்கு இலக்கானமை தொடர்பாக அர்ஜுன ரணதுங்க இந்த கருத்தை வெளியிட்டார்.

“கிரிக்கெட் விளையாட்டு இன்று பிளவடைந்து காணப்படுகிறது. அத்துடன், நடவடிக்கைகளின் போது, எமது ஒத்துழைப்புகளும் பற்றாக்குறையாகவே இருக்கிறது. பயங்கரவாத பிரச்சினை காரணமாக 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டிகள் இங்கிருந்து (தெற்காசியாவிலிருந்து) விலகிச் சென்று விடக் கூடும். எனவே இது விடயத்தில் நாம் மேலும் நன்கு ஆராய்ந்து செயற்பட வேண்டும். என்றும் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் இடைக்கால நிர்வாக சபை முன்னாள் தலைவரான அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். 2011 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய தெற்காசிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணிக்கு பாகிஸ்தானில் வழங்கப்பட்ட பாதுகாப்பை கடுமையாக விமர்சிக்கிறார் முரளி

crc-04032009.jpg பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை கடுமையாகக் கண்டித்துள்ள இலங்கை அணியின் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன், தங்களது நடமாட்டம் குறித்து தீவிரவாதிகளுக்கு உள்ளகத் தகவல்கள் ஏதாவது கிடைத்திருக்கலாமெனவும் சந்தேகம் தெரிவித்துள்ளார்
.
லாகூர் டெஸ்ட்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்திற்காக கடந்த செவ்வாய்க்கிழமை காலை ஹோட்டலிலிருந்து கடாபி மைதானத்திற்குச் சென்றபோது இலங்கை அணி தீவிரவாதிகளின் தாக்குதலுக்கிலக்கானது.

இது தொடர்பாக முரளிதரன் அவுஸ்திரேலிய வானொலி ஒன்றுக்கு (“ரேடியோ 5mm’) வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் மேலும் கூறுகையில்;

எமக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு போதியதாயிருக்கவில்லை. எமது வாகனத்தில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் எவருமே கடமையில் இருக்கவில்லை. அப்படி எவராவது இருந்திருந்தால் எம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளக் கூடியதாயிருந்திருக்கும். வழமையாக நாம் செல்லும் போது எமக்கு பாதுகாப்பிற்காக நால்வர் அல்லது ஐவர் வருவர். அதேநேரம், கடாபி மைதானத்திற்கு நாம் செல்லும் பாதை குறித்த உள்ளகத் தகவல்கள் தீவிரவாதிகளுக்கு கிடைத்திருக்கலாம்.

ஹோட்டலிலிருந்து நாங்கள் காலை 8.30 மணியளவில் புறப்பட்டோம். பாகிஸ்தான் அணி 8.35 க்கு புறப்பட்டது. நாங்கள் இரண்டாகப் பிரிந்திருந்தோம். அவர்களுக்கு சரியான நேரம் தெரிந்திருந்திருக்கலாம். அவர்கள் எமது பஸ்சாரதியை சுட முயற்சித்தனர். பின்னர் அவர்கள் பஸ்ஸின் இரு புறங்களிலும் பலத்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருந்தனர். பஸ்ஸின் இரு பக்கங்களிலும் 39 குண்டுத்துளைகளை எண்ணக்கூடியதாயிருந்தது.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த வீரர்களான தரங்க பரண விதாண மற்றும் திலான் சமரவீர ஆகியோர் பலத்த காயம் காரணமாக இறந்திருப்பார்களெனத் தாங்கள் கருதியதாகவும் தெரிவித்தார். இதேநேரம், இந்தத் தாக்குதலானது ஒரு பெரிய சதித் திட்டத்தின் அங்கமாயிருக்கலாமெனத் தெரிவித்துள்ள போட்டி நடுவர் கிறிஸ் புரோட் (இங்கிலாந்து), துப்பாக்கிச் சூடு ஆரம்பமானவுடன் தாங்கள் பொலிஸாரால் கைவிடப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளார்.

தாங்கள் யுத்த வலயமொன்றுக்குள் சிக்குண்டதாக நடுவர் சைமன் ரபெல் தெரிவித்தார். இரு அணியும் ஒரேநேரத்தில் புறப்பட்டிருந்தால் வீரர்கள் சென்ற வாகனத் தொடரணிக்கான பாதுகாப்பு அதிகமாயிருந்திருக்கும். ஆனால், இலங்கை அணி புறப்பட்டபோது புறப்படாது ஐந்து நிமிடம் தாமதித்தே பாகிஸ்தான் அணி புறப்பட்டதால் பாதுகாப்புப் பிரிவினர் இரண்டாகப் பங்கிடப்பட இலங்கை அணி வீரர்கள் தாக்குலுக்கிலக்கான போது அவர்களுக்கு பாதுகாப்பாகச் சென்றவர்களின் எண்ணிக்கை அரைவாசியாக இருந்தது. இதேநேரம், இலங்கை அணி வீரர்களின் பஸ்மீதான தாக்குதலின் போது பொலிஸார் செயற்பட்ட விதமும் கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. தாக்குதலின் போது தங்களை பாதுகாக்க எவருமே முன்வரவில்லையெனவும் தாங்கள் தனித்து விடப்பட்டிருந்ததாகவும் இது தங்களை கடும் சீற்றமடைய வைத்ததாகவும் சைமன் ரபெல் தெரிவித்துள்ளார்.

காயமடைந்த இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு கொழும்பில் சத்திர சிகிச்சை

pak-2nd-test.jpg
மருத்துவமனையில் இலங்கை கிரிக்கெட் வீரர் பரணவிதாரண பாகிஸ்தானின் லாகூர் நகரில் இனந்தெரியாத ஆயுததாரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி, காயமடைந்து தாயகம் திரும்பியுள்ள இலங்கைக் கிரிக்கெட் வீரர்களுக்கு கொழும்பில் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், அவர்களின் உடல்நிலை தேறிவருவதாகவும் வைத்திய அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தத் தாக்குதலின்போது இலங்கை அணியின் தலைவர் மஹேல ஜயவர்த்தன, உபதலைவர் குமார் சங்கக்கார, ஆரம்பத் துடுப்பாட்டவீரர் தரங்க பரணவிதாரண, மத்திய வரிசைத் துடுப்பாட்டவீரர்களான திலான் சமரவீர, வேகப்பந்து வீச்சாளர்களான திலின துஷார, சுரங்க லக்மால், சுழல்பந்து வீச்சாளர் அஜந்த மெண்டிஸ் ஆகியோருடன், அணியின் துணைப் பயிற்றுவிப்பாளர் பால் ஃபர்பிரீஸ் போன்றோர் காயம்பட்டிருந்தனர்.

புதனன்று நாடு திரும்பிய இவர்களில் நால்வர் தனியார் மருத்துவமனை ஒன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்தனர். தாக்குதலின் பின்னர் உடல் உளரீதியாக சோர்வடைந்திருந்த கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தத்தமது பழைய நிலைக்குத் திரும்பிவருகிறார்கள் என்றும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

செல்போன் மூலம் துப்பு துலங்கியது; நால்வரின் படங்களும் வெளியீடு

20090302.jpgபாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதலில் மொத்தம் 12 தீவிரவாதிகள் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று பொலிஸார் விசாரித்து வருகின்றனர். தாக்குதலுக்கு முன்பு தீவிரவாதிகள் பயன்படுத்திய செல்போன் எண் ஒன்று பொலிஸாருக்கு கிடைத்துள்ளது. அதைவைத்து துப்பு துலக்கி இருக்கிறார்கள் பாகிஸ்தான் பொலிஸார்.

அந்த செல்போன் ரஹீம் யார்கான் என்பவர் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை பொலிஸார் பிடித்துச் சென்றனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அவர் தவிர மேலும் 9 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். அவர்களில் 4 பேர் குவெட்டா நகரைச் சேர்ந்தவர்கள். 3 பேர் லாகூரையும், 2 பேர் கராச்சியையும் சேர்ந்தவர்கள்.

இது பற்றி மூத்த பொலிஸ் அதிகாரி ஹபிபூர் ரகுமான் கூறும் போது, “நாங்கள் லாகூரிலும் பக்கத்து மாவட்டங்களிலும் சோதனை நடத்தி சிலரை கைது செய்து இருக்கிறோம். அவர்களைப் பற்றிய விவரங்களை இப்போது வெளியே சொல்ல முடியாது. ஆனால் முக்கிய தகவல்கள் கிடைத்து உள்ளன” என்றார். லாகூரில் உள்ள மாணவர் விடுதி ஒன்றில் பொலிஸார் சோதனை நடத்தினார்கள். அங்கு இரத்தக்கறை படிந்த ஆடைகள் கிடைத்தன. இது தீவிரவாதிகள் ஆடை என்று கருதுகின்றனர்.

எனவே இந்த தாக்குதலில் மாணவர்களும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. மாணவர்கள் சிலரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் முடிந்த பிறகு தீவிரவாதிகள் இங்கு சிறிய நேரம் தங்கியிருந்து விட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதை ஒருவர் கமராவில் பதிவு செய்து இருந்தார். இந்த படம் ஏற்கனவே வெளியானது. தாக்குதல் நடந்த இடத்தில் இருந்த ரகசிய கண்காணிப்பு கமராவில் இந்த காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளன. தாக்குதல் நடத்துவதற்காக தீவிரவாதிகள் துப்பாக்கியுடனும் சாவகாசமாக நடந்து வருவதும், தாக்குதல் நடத்துவதும் தெளிவாக பதிவாகி இருக்கிறது.

தாக்குதல் முடிந்த பிறகு அவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்கின்றனர். அதுவும் கேமராவில் பதிவாகி உள்ளது. 12 தீவிரவாதிகள் தான் தாக்குதல் நடத்தியதாக கருதப்பட்டது. இதை கேமராவில் பதிவாகி இருக்கும் படங்களை பார்க்கும் போது 14 தீவிரவாதிகள் தாக்குதலில் சம்பந்தப்பட்டு இருப்பது தெரிந்தது.

இலங்கை அணிமீதான தாக்குதல் வெட்கக் கேடானது : இம்ரான்கான்

imran-khan.jpgஇலங்கை கிரிக்கெட் அணியினர் மீது லாகூரில் வைத்து தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் குறித்து தான் மிகுந்த கவலையும் வெட்கமும் அடைவதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளருமான இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பிரத்தியேக செவ்வி ஒன்றின் போதே அவர் இந்தக் கருத்தினை தெரிவித்துள்ளார். மேலும், அவர் கருத்து தெரிவிக்கையில்,

“இலங்கை அணிக்குப் பாகிஸ்தானில் வைத்து அளிக்கப்பட்ட பாதுகாப்பு போதுமானதாக இல்லை. பல்வேறு தீவிரவாத அச்சுறுத்தல்கள் லாகூரில் இருந்தமையை கருத்திற் கொண்டு இலங்கை அணிக்கான பாதுகாப்பை அரசாங்கம் மேலும் பலப்படுத்தியிருக்கவேண்டும் ” என்றார்.

பாகிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை வினைத்திறனுடன் இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது -பிரிட்டிஷ் பிரதமர்

20090302.jpg
அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரிட்டிஷ் பிரதமர் கோல்டன் பிரவுண் பாகிஸ்தானின் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு அனுதாபங்களைத் தெரிவித்ததுடன், பயங்கரவாதிகளின் பிரச்சினையை பாகிஸ்தான் கையாளவேண்டிய அவசியம் உள்ளதாக கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை வினைத்திறனுடன் இடம்பெறுவதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.  “இது மனித இருப்புக்கான யுத்தம். நாம் தோற்றால் அது உலகின் தோல்வி. தோல்வி இதில் தெரிவு அல்ல’ என்று வோல் ஸ்ரீட் கேர்னலுக்கு கோல்டன் பிரவுண் தெரிவித்துள்ளார்.

ஆனால், பாகிஸ்தானின் பலம் வாய்ந்த இராணுவத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஐ.எஸ்.ஐ. ஆகியவற்றால் அவரின் நிலைப்பாடு பலவீனப்படுத்தப்பட்டுவிடுமென்று மேற்குலக இராஜதந்திரிகள் அச்சப்படுகின்றனர். ஏனெனில், பாகிஸ்தான் இராணுவமும் ஐ.எஸ்.ஐ. யும் லஷ்கர் இ தொய்பா மற்றும் தீவிரவாத குழுக்களுடன் தொடர்புகளை வைத்திருக்கின்றனர் என்று “லண்டன் டைம்ஸ்’ பத்திரிகை கூறுகிறது.

ஏனெனில், ஐ.எஸ்.ஐ. யின் முன்னாள் தலைவர் ஒருவர் இந்தத் தாக்குதல் விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டிருக்கக் கூடுமென்று தனது ஊகத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தார். இதற்கு இந்தியப் புலனாய்வுத் துறையின் பின்னணி இருந்திருக்கக்கூடும் எனவும் மும்பைத் தாக்குதலுக்கு பதிலடியாக இதனைச் செய்திருக்கலாமென்றும் அவர் கூறியிருந்தார்.  “இது இந்திய உளவுத்துறையின் வேலையென்பது இலகுவாக புரிந்துகொள்ளக்கூடியது’ என்று ஓய்வுபெற்ற ஜெனரல் ஹமீட் குல் கூறியிருந்தார்.

இதுதொடர்பாக போதியளவு ஆதாரமில்லையாயினும் இந்த மாதிரியான விடயங்கள் சாதாரண பாகிஸ்தானியர் இலகுவாக நம்பக்கூடிய விடயங்களாகிவிடுமென கூறப்படுகிறது. பல தரப்பினரும் செறிந்து வாழும் லாகூரில் இத்தாக்குதல் இடம்பெற்றிருப்பது குறித்து பாகிஸ்தானியர் குழப்பம் அடைந்துள்ளனர்.

அத்துடன் விளையாட்டானது அவர்களுக்கு மிகவும் விருப்பமானதொன்றாகும். பாகிஸ்தானியரால் இதனை செய்திருக்க முடியாதென்று சாஷியா சர்தாரி (வயது 28) என்ற குடிவரவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். இதனைச் செய்தவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

எவ்வாறாயினும் பாகிஸ்தானில் உள்ள தீவிரமாக சிந்தித்து கருத்து கூறுபவர்கள் “இந்தியாவின் சதி’ என்று கூறப்படும் கதைகளை நிராகரித்துள்ளதுடன், பாகிஸ்தானின் புகழை நாசமாக்கியுள்ள தீவிரவாதிகள் தொடர்பாக அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.  அரசு மறுத்துவிடும் நிலைமைக்குச் சென்றால் அது மோசமான விடயமாகும். பாகிஸ்தானை அழித்துவிடும் நிகழ்ச்சித்திட்டத்துடன் நாம் வைத்திருக்கும் குழுக்கள் தொடர்பாக எவ்வளவு காலத்துக்கு நாம் மறுக்கப்போகின்றோம் என்று “டெய்லி டைம்ஸ்’ பத்திரிகை கேள்வி எழுப்பியுள்ளது.

இது இவ்வாறிருக்க, லாகூரில் கடாபி விளையாட்டரங்கின் வெளிப்புறத்தின் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது இடம்பெற்ற தாக்குதல் லஸ்கர்இதொய்பா மேற்கொள்ளும் நடவடிக்கைகளை ஒத்தது என்று பாகிஸ்தான் அதிகாரிகள் கூறுகின்றனர். மும்பையில் கடந்த நவம்பரில் இடம்பெற்ற தாக்குதலுக்கு இக்குழுவே சூத்திரதாரியென குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. ஆனால் , இதில் “வெளிநாட்டுக் கரம்’ இருப்பதாக பலர் சூசகமாக கூறுகின்றனர். மும்பைத்தாக்குதலுக்கு பழிவாங்க இந்தியா இத்தாக்குதலை நடத்தியிருப்பதாக முழுமையான போதிய ஆதாரங்கள் இல்லாமல் சாதாரண பாகிஸ்தானியர் மத்தியில் ஊகங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. பஞ்சாப் பொலிஸின் குற்றவிசாரணை திணைக்களம் கடந்த ஜனவரியில் எச்சரிக்கை விடுப்பதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதில் இந்திய உளவுத்துறை முகவரமைப்பானது கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கக் கூடுமென்றும் எச்சரிப்பதாக பிழையான அறிக்கையொன்றை விடுத்திருந்தது.

22 ஜனவரி 2009 திகதியிடப்பட்ட அறிக்கையில் , இந்தியாவின் ரோவானது இலங்கை கிரிக்கெட் குழுவினரை இலக்கு வைக்குமாறு தனது முகவர்களுக்கு பணித்துள்ளதாகவும் விசேடமாக அவர்கள் ஹோட்டலுக்கும் விளையாட்டரங்கிற்கும் பயணம் செய்கையில் இலக்குவைக்க பணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப்பின் குற்றப்புலனாய்வு திணைக்கள மேலதிக பொலிஸ்மா அதிபர் மலிக் முகமட் இக்பால் கையெழுத்திடப்படவிருந்ததாக தென்படுகின்றது. இதேவேளை அந்த அறிக்கை தொடர்பாக “த ரைம்ஸ்’ இக்பாலுடன் தொடர்பு கொண்ட போது அவர் உறுதிப்படுத்துவதையோ அல்லது மறுப்பதையோ நிராகரித்துவிட்டார். “கசிந்துவிட்டதொன்று’ புலனாய்வு விடயங்கள் தொடர்பாக நான் கருத்து கூறமுடியாது’ என்று அவர் தெரிவித்துவிட்டார்.

பாக். பாதுகாப்பை உறுதிப்படுத்தியதையடுத்தே வீரர்களை அனுப்பத் தீர்மானித்தோம்

pak-2nd-test.jpg பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக நேற்று பாராளுமன்றத்திலும் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. சபையில் கிரிக்கெட் அணியினர் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர் காமினி லொக்குகே விளக்கமளித்தார்.

இலங்கை வீரர்களின் நிலைகுறித்து பிரஸ்தாபிக்கப்பட்டதுடன், அநுரகுமார திசாநாயக்க, ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சபை முதல்வரிடம் இது தொடர்பாக விளக்கம் கோரினர். இதன்போது சபை முதல்வர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறுக்கிட்டு, பாகிஸ்தானில் இத்தகைய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து இது தொடர்பில் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் வகையில் சபையிலிருந்து பிரதமர் வெளியில் சென்றுள்ளார்.

அவர் வந்ததும் முழுமையான விபரங்களைத் தெரிவிக்க முடியும் என்றார். இதனையடுத்து சற்று தாமதமாக சபைக்குள் வந்த விளையாட்டுத்துறை அமைச்சர் காமினி லொக்குகே, லாகூரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு விவகாரம் சம்பந்தமாக விளக்கமளித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நேற்றுக்காலை 9.15 மணியளவில் இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

எமது வீரர்கள் விளையாடுவதற்காக மைதானத்திற்குள் பிரவேசித்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது எதிர்பார்த்த ஒன்றல்ல. பாகிஸ்தான் அரசாங்கம் எமது வீரர்களுக்கான பூரண பாதுகாப்பை உறுதிப்படுத்தியதையடுத்தே நாம் எமது வீரர்களை அங்கு விளையாட அனுப்பத் தீர்மானித்தோம்.மேற்படி சம்பவம் பற்றி நாம் கேள்விப்பட்ட உடனேயே வெளிநாட்டமைச்சுடன் தொடர்புகொண்டு பாகிஸ்தானுடன் கலந்துரையாடினோம். அதனையடுத்து எமது வீரர்களுக்கு பூரண பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத செயற்பாடுகள் இதற்கு முன்னரும் இடம்பெற்றுள்ளன. பல தடவைகள் பல நாடுகளில் இதுபோன்று புலிகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அண்மையில் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் இதில் குறிப்பிடத்தக்கது. எனினும் எமது வீரர்கள் தயங்காது தமது விளையாட்டுக்களை தொடர்ந்தனர்.

இம்முறை பாகிஸ்தானின் உறுதிமொழியை நாம் நம்பினோம். அத்துடன் பயங்கரவாதப் பிரச்சினை காரணமாக இலங்கைக்கு ஏனைய சர்வதேச அணிகள் விளையாடவர பின்வாங்கியபோது பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகளே எமக்குக் கை கொடுத்தன. அந்த உதவிக்குப் பிரதியுபகாரமாகவே இம்முறை பாகிஸ்தானுடன் விளையாட நாம் முன்வந்தோமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதன்போது, குறுக்கிட்ட அநுரகுமார திசாநாயக்க எம்.பி பாகிஸ்தானுடன் இம்முறை இணைந்து விளையாடவிருந்த அவுஸ்திரேலிய அணி பாதுகாப்புக் காரணங்களுக்காக அத்தீர்மானத்தை மாற்றிக்கொண்டது. இத்தகைய சூழலில் பாதுகாப்பில்லை என்ற நிலையிலும் எமது அணியை அங்கு அனுப்ப முற்பட்டதேன்? எனக் கேள்வியெழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் காமினி லொக்குகே பாகிஸ்தானின் உறுதிமொழியில் நாம் நம்பிக்கை வைத்திருந்தோம் என்றார்.