உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

தலையில் காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு – வவுனியா பூவரசங்குளத்தில் சம்பவம் !

வவுனியா பூவரசங்குளம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட எருக்கலம் கல் பகுதியில் தலையில் காயங்களுடன் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண் இன்று(04.02.2021) வீட்டில் இருந்த நிலையில் காணியின் ஒரு பகுதியில் சடலமாக கிடந்துள்ளார். இதனை அவதானித்த குறித்த பெண்ணின் கணவர் சம்பவம் தொடர்பில் அயலவர்களிற்கும், காவல்துறையினருக்கும் தெரியப்படுத்தினார்.

குறித்த பகுதிக்கு சென்ற பூவரசங்குளம் காவல்துறையினர் சடலத்தினை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவத்தில் எருக்கலம்கல் பகுதியை சேர்ந்த சிவகுமார் சித்திரகலா என்ற 36 வயதான பெண்ணே மரணமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். அவரது தலைப்பகுதியில் பலத்த காயம் ஒன்றும் அவதானிக்கப்பட்டுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் ஆயிரம் ரூபாவை கோரி நாளை முடங்குகிறது மலையகம் !

தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபாய் அடிப்படைச் சம்பளம் கோரி நாளை ஐந்தாம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் கட்சி, தொழிற்சங்கம், வர்க்க, இன, மத, பேதமின்றி ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளனர்.

அத்துடன், கல்வி, போக்குவரத்து போன்ற துறைகளின் பல தொழிற்சங்கங்கள் இதற்கு ஆதரவு தெரிவிக்கின்ற நிலையில் நாளைய தினம் மலையகம் முடங்கும் என ஹட்டனில் இன்று (04.02.2021) நடைபெற்ற தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஊடக சந்திப்பில் தொழிற்சங்கப் பொதுச் செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இலங்கை கல்விச் சமூக சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சங்கர மணிவண்ணன் கருத்து தெரிவிக்கையில்,

“நாங்கள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஒன்று கூடினோம். அதில், சகல ஆசிரியத் தொழிற்சங்கங்களும் ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்தனர்.

சிங்கள ஆசிரிய தொழிற்சங்கங்களும் இதற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதன் காரணமாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை சமூகப் பிரச்சினையாக மாறியுள்ளது.

கம்பனிகள் தொடர்ச்சியாக எம்மை ஏமாற்றி வந்துள்ளனர். ஆகவே, நாங்கள் இதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நாட்டில் ஏனைய பிரதேசங்களில் ஒரு பிரச்சினை வரும்போது ஹர்த்தலாக நடத்தி அந்தப் பிரச்சினையினை வெற்றி கொள்கின்றனர். ஆனால், மலையகத்தில் அவ்வாறான ஒரு நிலை காணப்படுவதில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ஆசிரியர் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் நாயகம் எஸ்.டி.நாதன் கூறுகையில், “நாங்கள் ஏனைய தொழிற்சங்கங்களுடன் இணைந்து இந்தப் போராட்டத்திற்கு ஒத்துழைப்பதில் பெருமையடைகின்றோம்.

இந்தப் போராட்டத்தில் சிங்கள ஆசிரியர்கள், அதிபர்கள் கல்விசார் ஊழியர்கள் ஒத்துழைப்பதாக அறிவித்துள்ளார்கள். இதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆகவே, சுகயீன விடுப்பு அறிவித்து இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு நாங்கள் அதிபர்கள், ஆசிரியர்கள் என அனைத்து பிரிவினரிடமும் கேட்டுக்கொள்கிறோம்.

இதுகுறித்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் ஆசிரிய கல்வியியல் காங்கிரஸின் பொறுப்பாளருமான கணபதி கணகராஜ் தெரிவிக்கையில், “இன்று தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையினை ஒரு சமூகப் பிரச்சினையாகக் கருதி ஆசிரியர் தொழிற் சங்கங்கள் ஆதரவு வழங்க முன்வந்துள்ளன.

எனவே, தொழிற்சங்கங்களின் வேண்டுகோளுக்கமைய ஆசிரியர், அதிபர்கள் சுகயீன விடுப்பு கோரி இந்தப் போராட்டத்திற்கு ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதேநேரம், பெற்றோர்கள் நாளை தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்வதோடு நேற்று பல தரப்பினர் எம்மிடம் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவதாகத் தெரிவித்துள்ளனர்.

அதுமாத்திரமின்றி, முச்சக்கரவண்டி சங்கங்கள், தனியார் பேருந்து சாரதிகள், வர்த்தகர்கள் என பலரும் இந்தப் போராட்டத்தினை முன்னின்று நடத்துவதற்கு முன்வந்துள்ளனர். இந்நிலையில், இந்தப் போராட்டம் மலையகத்தில் பூரண ஹர்த்தாலாக மாறும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழர் போராட்டம் எங்கும்  இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கும் ” – யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன்

“தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழர் போராட்டம் எங்கும்  இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கும்” என யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இந்நியலையில், இந்த செய்தியை இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேசத்துக்கும் தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மக்கள் உலகமெங்கும் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில், இலங்கையில் தமிழர் போராட்டம் நசுக்கப்படுகின்ற காரணத்தினால் ஓய்ந்துவிடப் போவதில்லை.

அத்துடன், தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழர் போராட்டம் எங்கும் இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, புலம்பெயர் தேசங்களில் எமது தமிழ் மக்கள் தாயகத்தில் உரிமைகளை வென்றெடுக்க போராட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும், தமிழகத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் இதனை வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“129 இலங்கையரை கைது செய்ய இன்டர்போல் சிவப்பு அறிவித்தலை வெளியிட்டுள்ளது ” – பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண

பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் 129 பேரைக் கைது செய்ய இன்டர்போல் சிவப்பு அறிவித்தலை வெளியிட்டுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண கூறினார்.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பணம் பறித்தல் ஆகியவற்றுடன் தொடர்புபட்ட கிம்புலா எல குணா, அவரது மகன் பும்பா மற்றும் பிறிதொரு நபர் ஆகியோர் விரைவில் இலங்கைக்குக் கொண்டுவரப்படுவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இன்டர்போலின் உதவியுடன் சிவப்பு அறிவித்தல்களை வெளியிட முடியும் என்றும் இலங்கையில் பல்வேறு குற்றங்களுக்காக நாட்டை விட்டு வெளியேறிய 129பேரைக் கைது செய்ய சர்வதேச சிவப்பு அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 87 பேருக்கு இன்டர்போல் நீல அறிவித்தலை வெளியிட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

40 பேர் நிதி மோசடியில் ஈடுபட்டமைக்காகவும் 24 பேர் ஏனைய குற்றங்களுக்காகவும் தேடப்படுவதாகவும் இவ்வாறான குற்றவாளிகளைக் கொண்டுவர இன்டர்போலின் உதவி நாடப்படும் என்றும் அவர் கூறினார்.

“நாட்டில் மீண்டும் இன்னொரு மோதலை தூண்ட முயன்றவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தவேண்டும்” – கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை மூடிமறைப்பதற்கு முயலவேண்டாம் கர்தினால் மல்கம் ரஞ்சித் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

73 வது சுதந்திரதினத்தை குறிக்கும் வகையில் இடம்பெற்ற ஆராதனையின் போதே  கர்தினால் மல்கம் ரஞ்சித் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் பகிரங்கப்படுத்தும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

30வருட கால யுத்தத்திலிருந்து மீண்ட இலங்கை நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் அபிவிருத்தி செய்துவருகின்றது என தெரிவித்துள்ள அவர் நாட்டில் மீண்டும் இன்னொரு மோதலை தூண்ட முயன்றவர்கள் யார் என்பதை வெளிப்படுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது என குறிப்பிட்டுள்ள மல்கம் ரஞ்சித் கடந்த காலத்தில் தலைவர்கள் ஆணைக்குழுக்களின் அறிக்கையை மறைத்தது போல இதனையும் மறைக்கவேண்டாம் என கோரியுள்ளார்.

“எங்களை தனித்தனியாக பிரித்தாள முடியாது என்ற செய்தியை இந்த நடை பயணத்தின் மூலமாக அரசுக்கு சொல்கின்றோம்” – எம்.ஏ.சுமந்திரன்

“எங்களை தனித்தனியாக பிரித்தாள முடியாது என்ற செய்தியை இந்த நடை பயணத்தின் மூலமாக அரசுக்கு சொல்கின்றோம்” என ஜனாதிபதி சட்டத்தரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பெரும்பான்மை இனத்தினை சேராதவர்கள் என்ற ஒரு காரணத்திற்காக எங்கள் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்தப்பட்டுள்ள பேரினவாதத்திற்கு எதிராக நாங்கள் ஒன்று சேர்ந்து திரண்டு நின்றால் மட்டும் தான் முகம் கொடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிகோரும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி மட்டக்களப்பு தாளங்குடா நகரில் இருந்து ஆரம்பித்து ஒட்டமாவடி நகரை அடைந்த நிலையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பேரான்மை ஆட்சி, எங்களை அடக்குகின்ற ஆட்சி, எங்களுக்கு சுதந்திரம் இல்லாமல் அடக்கி ஒடுக்கி ஆட்சி செய்கின்ற முறையை எதிர்த்து பல விடயங்களை முன்வைத்துள்ளோம். அனைத்து இடங்களிலும் எங்களோடு மக்கள் இணைந்து போராடுகின்றார்கள்.

முஸ்லிம்களின் பிரச்சனையாகவுள்ள ஜனாசா எரிப்பு விவகாரத்தினையும் நாங்கள் முன்னெடுத்துள்ளோம். தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சனைகள், எங்களது அரசியல் கைதிகள் விடுதலை, காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி செய்யப்பட வேண்டும். எங்களது நிலங்கள் அபகரிப்பு நிறுத்தப்பட வேண்டும். வழிபாட்டு தலங்கள் உடைக்கப்படுகின்றன. அவை நிறுத்தப்பட வேண்டும்.

மலையக மக்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்குவோம் என்று சொல்லிச் சொல்லி இழுத்தடிப்பு செய்கின்றார்கள். அது கொடுக்கப்பட வேண்டும். நாங்கள் பெரும்பான்மை இனத்தினை சேராதவர்கள் என்ற ஒரு காரணத்திற்காக எங்கள் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்தப்பட்டுள்ள பேரினவாதத்திற்கு எதிராக நாங்கள் ஒன்று சேர்ந்து திரண்டு நின்றால் மட்டும்தான் முகம் கொடுக்க முடியும்.

இதுவரைக்கும் எங்களை தனித் தனியாக கையாண்டார்கள். எங்களை தனித்தனியாக பிரித்தாள முடியாது என்ற செய்தியை இந்த நடை பயணத்தின் மூலமாக சொல்கின்றோம். அதனை தொடர்ந்து நீடிக்க வைக்க வேண்டும். ஒருவொருக்கு ஒருவர் உதவியாக தமிழ் பேசும் மக்கள் என்ற வகையில் பெரும்பான்மை இனத்தினை சேராதவர்கள் சிறுபான்மை இனத்தவர்களல்ல. நாங்கள் எண்ணிக்கையில் குறைவானவர்கள்.

நாங்களும் ஒரு மக்கள் எங்களுக்கும் ஒரு கலாசாரம் உள்ளது. எங்களுக்கு ஒரு மொழி இருக்கின்றது. அடையாளம், சமயம் இருக்கின்றது. இவற்றை பாதுகாக்கும் சம பிரஜைகளாக நாட்டில் வாழ்வதற்கான உரிமையை கேட்டு நாங்கள் இந்த நடை பவணியை நடாத்துகின்றோம். அனைவரும் சேர்ந்து எங்களோடு வரவேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளார் சுமந்திரன்.

“தனியாருடைய காணியில் விகாரை கட்டப்பட்டால் அதனை பிரதேச சபை நீதிமன்றம் சென்று நிவாரணத்தை பெற்றுக் கொள்ளலாம்” – அங்கஜன் இராமநாதன்

“வலி. வடக்கில் தனியாருடைய காணியில் விகாரை கட்டப்பட்டால் அதனை பிரதேச சபை நீதிமன்றம் சென்று நிவாரணத்தை பெற்றுக் கொள்ளலாம்” என யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

வலி வடக்கில் தனியார் காணியில் அமைக்கப்பட்டுவரும் திஸ்ஸ விகாரை தொடர்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற மீள்குடியேற்றம் தொடர்பான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

வலி வடக்கு தவிசாளர், தமது மீள்குடியேற்ற பகுதியில் உள்ள அரச காணியில் விகாரை கட்டுவதற்காக தம்மிடம் அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில் தற்போது சபைக்கே தெரியாமல் தனியார் காணிகளில் விகாரை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினர்.

இதன்போது பதிலளித்த அங்கஜன் இராமநாதன், தனியார் காணிகளில் அனுமதி பெறாமல் கட்டடங்கள் கட்டுவது தொடர்பில் வழக்கு தொடர்ந்து நிவாரணம் பெறுவதற்கு பிரதேச சபைக்கு அதிகாரம் உள்ள நிலையில் சபை அதனை மேற்கொள்ளுமாறு தெரிவித்தார்.

“வரலாறு முழுவதும், தாய்நாட்டிற்கு எதிரான சக்திகளையும், பயங்கரவாதத்தையும் தோற்கடிக்கும் ஒரு நிலையான கொள்கையில் நாம் செயற்பட்டோம்” – சுதந்திர தின வாழ்த்துச்செய்தியில் பிரதமர் மகிந்தராஜபக்ஷ

“வரலாறு முழுவதும், தாய்நாட்டிற்கு எதிரான சக்திகளையும், பயங்கரவாதத்தையும் தோற்கடிக்கும் ஒரு நிலையான கொள்கையில் நாம் செயற்பட்டோம்” என பிரதமர் மகிந்தராஜபக்ஷ  வழங்கியுள்ள சுதந்திரதின உரையில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
அனைத்து இலங்கையர்களும் 73 ஆவது சுதந்திர தினத்தை மிகுந்த பெருமையுடன் கொண்டாடுகின்றனர்.
காலனித்துவ காலத்திலிருந்து சுதந்திரத்திற்கான மக்களின் அர்ப்பணிப்பும் போராட்டமும் உலக வரலாற்றில் நன்கு அறியப்பட்டவை. அரசியல், மத மற்றும் கலாசார ரீதியாக மூலோபாய போராட்டங்கள் மூலம் சுதந்திரம் பெற்ற நீண்ட வரலாற்றை இலங்கை தேசம் கொண்டுள்ளது.

நாம் பெற்ற சுதந்திரத்தை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ளும் செயல்முறையே இன்று நம் தாய்நாட்டிற்கான தேவையாக உள்ளது. நாடுகளிடையே ஒற்றுமையை வளர்த்தல் மற்றும் மத நல்லிணக்கம் என்பன இதற்கு வலுவான ஆதரவாக அமைந்துள்ளன.

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் உள்ளூர் உற்பத்திக்கு மதிப்பளிக்கும் பொருளாதார கொள்கை ஊடாக தாய்நாட்டை அபிவிருத்தியை நோக்கி நகரும் பாதையில் நாம் நுழைந்துள்ளோம்.

ஒவ்வொரு துறையிலும் முன்னெடுக்கப்பட வேண்டிய சீர்திருத்தங்களைப் புரிந்துகொண்டு, மக்களிடம் முன்வைக்கப்பட்ட சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்தின் ஊடாக சுதந்திரம் மேலும் அர்த்தமுள்ளதாகும் போது வளமான எதிர்காலம் – சுபீட்சமான தாய்நாடு என்பது யதார்த்தமாகும்.

வரலாறு முழுவதும், தாய்நாட்டிற்கு எதிரான உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சக்திகளையும், பயங்கரவாதத்தையும் தோற்கடிக்கும் ஒரு நிலையான கொள்கையில் நாம் செயற்பட்டோம். எத்தனை சவால்கள் வந்தாலும், நாங்கள் ஒருபோதும் நம் தாய்நாட்டை காட்டிக் கொடுத்ததில்லை.

கொவிட் -19 தற்போது உலகம் எதிர்கொண்டுள்ள மிகப்பெரிய சவாலாகும். இந்நெருக்கடியிலிருந்து பொதுமக்களை விடுவிப்பதற்கான போராட்டத்தை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். எதிரிப் படைகளைத் தோற்கடிப்பதற்கு போன்றே, கொவிட் -19 தொற்றை தோற்கடிப்பதற்கும் இலங்கை தேசமாக நாங்கள் எழுந்து நிற்போம்.

எங்கள் தாய்நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த மற்றும் மகத்தான தியாகங்களைச் செய்த அனைவருக்கும் மற்றும் இன்று அந்த சவால்களுக்கு மத்தியில் அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைவருக்கும் நான் மரியாதை செலுத்துகின்றேன்.” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பொத்துவில் 2 பொலிகண்டி மக்கள் பேரணிக்கு வலுச்சேர்தத முஸ்லீம்கள் !

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிகோரும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி மட்டக்களப்பு தாளங்குடா நகரில் இருந்து ஆரம்பித்து காத்தான்குடி நகரை அடைந்துள்ளது.

2வது நாள் பேரணி இன்று காலை மட்டக்களப்பு தாளங்குடா இருந்து ஆரம்பித்து காத்தான்குடி நகர எல்லைக்குள் நுழைந்த போது பெருமளவான முஸ்லிம் மக்களும் இணைந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தற்போது காத்தான்குடி நகரின் மத்திய பகுதியை பேரணி அடைந்துள்ளது.

எங்கே எங்கே உறவுகள் எங்கே?, எரிக்காதே எரிக்காதே ஜனாசாக்களை எரிக்காதே, எங்கள் நிலம் எமக்கு வேண்டும்., வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், வேண்டும் வேண்டும் உரிமை வேண்டும், திரும்பிப் பார் திரும்பிப் பார் சர்வதேசமே திரும்பிப் பார், வட கிழக்கு தமிழர்களின் தாயகம், ஐ.நா சபையே தலையிடு, வழக்கு வழங்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்கு போன்ற முழக்கங்களை பேரணியில் பங்கேற்றுள்ள தமிழ் பேசும் மக்கள் ஒன்றாக ஓங்கி ஒலித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய பேரணியில் வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினர், பல்கலைக் கழக மாணவர்கள், தமிழ் தேசிய கட்சிகளை சார்ந்தவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், எஸ்.சிறிதரன், செல்வராசா கஜேந்திரன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்களும் பங்கேற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

“சிங்கள நாட்டையே நான் கட்டியெழுப்பவுள்ளேன் என கூறிய  ஜனாதிபதியின் ஒளிவு மறைவில்லா தன்மையை பாராட்டுகிறேன்”  – மனோகணேசன்

“சிங்கள நாட்டையே நான் கட்டியெழுப்பவுள்ளேன் என கூறிய  ஜனாதிபதியின் ஒளிவு மறைவில்லா தன்மையை பாராட்டுகிறேன்”  என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“நான் ஒரு சிங்கள பௌத்த தலைவன் என தெரிவிப்பதற்கு தயங்கப்போவதில்லை” என ஜனாதிபதி கோட்டாபாயராஜபக்ஷ  சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற 73 வது சுதந்திர தின நிகழ்வுவில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே மனோகணேசன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி மேலும் கூறியுள்ளதாவது,

ஜனாதிபதி கோதாவின் இன்றைய சுதந்திர தின உரையின் பிரதான சாராம்சத்தை கேட்டு பார்த்தால் இது தெளிவாக புரிகிறது. தேடிப்பார்த்ததில் அவரது சிந்தனையில் உள்ள நான்கு முத்தான விடயங்களை தனது உரையில் அவர் உதிர்த்துள்ளார் என தெரிய வருகிறது.

நாம் பல இன, மொழி, மத மக்கள் சகவாழ்வு வாழும் சுபீட்சமான இலங்கை ராஜ்யத்தை கட்டை எழுப்ப முயல்கிறோம். ஜனாதிபதி, தான் இலங்கையை அல்ல, சிங்கள பெளத்த இராஜ்யத்தையே தன கட்டியெழுப்ப புறப்பட்டுள்ளதாக என தெளிவுபட கூறி விட்டார்.

உண்மையில் தனது இலக்கை, ஒளிவு மறைவு இல்லாமல் தெளிவாக, உள்ளதை உள்ளபடி கூறியமையையிட்டு நான் ஜனாதிபதியை பாராட்டுகிறேன். அவரது இலக்கை நாம் ஏற்க மறுக்கிறோம் என்பது வேறு விஷயம். ஆனால், அவர் ஒளிந்து விளையாடவில்லை அல்லவா?

உலகத்துக்கு ஜனாதிபதி ஏதோ சொல்ல வருகிறார், அது என்ன என குழப்பிக்கொள்ள வேண்டாம். அவர் பின்வரும் நான்கு கருத்துகளைதான் தெளிவாக கூறுகிறார்.

(01) நீங்கள் தேடிய தலைவன் நான்தான். (02) நான் ஒரு சிங்கள பெளத்த தலைவன். இதை சொல்ல நான் ஒருபோதும் தயங்க போவதில்லை. (03) பெளத்த படிப்பினைகளின் அடிப்படைகளிலேயே நான் இந்நாட்டை ஆளுவேன். (04) நாட்டின் சட்ட வரையறைக்குள் எல்லா இன, மதத்தவருக்கும், சுதந்திரமும், சமத்துவமும் பெற்று சமாதான சகவாழ்வு வாழ பெளத்த தத்துவத்துக்குள்ளே உரிமையுண்டு.” என்பனவே அவையாகும்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தான், இலங்கையை அல்ல, சிங்கள பெளத்த இராஜ்யத்தையே தான் கட்டியெழுப்ப புறப்பட்டுள்ளதாக என தெளிவுபட கூறி விட்டார். இதற்காக அவர், கெளதம புத்தரையும் துணைக்கு அழைத்து, தன்னை நியாயப்படுத்தியுள்ளார்” எனவும் மனோகணேசனட தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.