உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“தமிழர்களுக்கு நீதியையும், தீர்வையும் வழங்குவது ஐ.நா. மனித உரிமை சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் பிரதான கடமையாகும்” – இரா.சம்பந்தன் 

“தமிழர்களுக்கு நீதியையும், தீர்வையும் வழங்குவது ஐ.நா. மனித உரிமை சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் பிரதான கடமையாகும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.6

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடர் நடைபெற்று வருகின்றது. இந்த அமர்வில் உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, இலங்கை தொடர்பான ஆணையாளரின் அறிக்கையை நிராகரித்ததுடன், உறுப்பு நாடுகளும் அதனை நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இவ்வாறானதொரு நிலையில் இலங்கை மீது பிரிட்டன் முன்வைக்கவுள்ள பிரேரணையின் நகல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. அது காத்திரமானதாக இல்லை என்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் விமர்சித்து வந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“போர் முடிந்து 11 ஆண்டுகள் கடந்து விட்டன. எனவே நீதிக்காகவும், தீர்வுக்காகவும் ஏங்கிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு நீதியையும், தீர்வையும் வழங்குவது ஐ.நா. மனித உரிமை சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் பிரதான கடமையாகும்.

இலங்கை அரசு பொறுப்புக்கூறும் வகையிலும், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் வகையிலும், போர்க்குற்றவாளிகளுக்குத் தண்டனையை வழங்கும் வகையிலும் புதிய பிரேரணை அமையப் பெற வேண்டும். அந்தப் பிரேரணையை உறுப்பு நாடுகள் அனைத்தும் ஆதரிக்க வேண்டும்.

பிரிட்டன் சில நாடுகளுடன் இணைந்து இலங்கை மீது முன்வைக்கவுள்ள பிரேரணையை வலுவாக்கிச் சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து உறுப்புரிமை நாடுகளும் அதற்கு ஆதரவு வழங்க வேண்டும்” – என்றார்.

“மிகவும் குறுகிய காலத்தில் மக்களின் வெறுப்புக்கு உள்ளான ஒரே ஒரு அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் மாறியுள்ளது” – பிரதமர் முன்னிலையில்  முருந்தெட்டுவே ஆனந்த தேரர் !

“மிகவும் குறுகிய காலத்தில் மக்களின் வெறுப்புக்கு உள்ளான ஒரே ஒரு அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் மாறியுள்ளது” என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு ஆதரவான பிரபல பிக்கு முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“பிரதமர் அவர்களே இந்த நாட்டை இவ்வாறு செல்ல அனுமதிக்க முடியாது. நீங்கள் கொஞ்சம் தலையீடு செய்யுங்கள். இன்று நாட்டு மக்கள் உங்களுடன் தான் இருக்கிறார். வேறு யாருடனும் இல்லை. யார் என்ன சொன்னாலும் மக்கள் உங்களுடனே இருக்கிறார்கள். மஹிந்த இல்லா நாடு எமக்கு வேண்டாம் என மக்கள் கூறுகின்றனர்.

பிரதமர் பஸ்ஸில் இருந்து இறங்கியுள்ளதாக சிலர் கூறுகின்றனர். மீண்டும் உங்களை பஸ்ஸில் ஏற்றிச் செல்வோம். ஜனாதிபதி கோட்டாபய அதற்கு ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார். எமக்கு தேவை உள்ளது.

குறுகிய காலத்தில் நாட்டு மக்கள் வெறுத்த அரசாங்கம் இது என்றால் யாரும் கோவப்படுவதற்கு இல்லை. அரசாங்கத்தை உருவாக்க கஸ்டப்பட்ட எங்களுக்கு அப்படியான வார்த்தைகளை கேட்க விருப்பமில்லை. நாட்டில் உருவான சிறந்த அரசாங்கம் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் என்று சொல்வதை கேட்கவே எமக்கு விருப்பம்” என்று முருந்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற புத்தக வௌியீட்டில் மஹிந்த ராஜபக்ஷவை அருகில் வைத்துக் கொண்டே முருந்தெட்டுவே ஆனந்த தேரர் இவ்வாறு கூறினார்.

“தமிழர்களுடைய பிரச்சினைகளை பிரதமர் மூலமாக தீர்க்கலாம்” – கருணா அம்மான்

“பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேரணி தேவைக்கில்லாத ஒன்று. வீண்வேலை. அரசாங்கம் தமிழ்மக்களுக்கு உதவ இருக்கின்றகாலகட்டத்தில் இவையெல்லாம் தேவையா? இதனை விட கதிர்காம பாதயாத்திரையில் செல்லலாம்” என கருணாஅம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் காரைதீவில் தெரிவித்தார்.

மேலும் தமிழர்களுடைய பிரச்சினைகளை பிரதமர் மூலமாக தீர்க்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தேர்தல் முடிந்த கையோடு அம்மானைக்காணவில்லை என பலர் விரக்தியிலிருந்ததுண்டு ஒன்றுமே செய்யவில்லை என்றும் கூறினார்கள்.

உண்மை அரசாங்கம் இப்போதுதான் நிலையான கட்டத்திற்கு வந்துள்ளது. இனி நாம் நிறைய வேலைளை முடிக்கலாம். கொழும்பிற்குச்சென்று பல அமைச்சர்களையும் சந்தித்துவருகிறேன். விரைவில் நல்லவை நடக்கும்.

கல்முனை வடக்கு பிரதேசசெயலகம் தரமுயர்த்தல் தொடர்பாக அமைச்சர் சமல்ராஜபக்சவிடம் பேசியுள்ளேன். விரைவில் நல்ல பதிலைஎதிர்பார்க்கலாம்.

“காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சந்திக்க ஜனாதிபதி முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது” – ரவூப் ஹக்கீம்

“காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சந்திக்க ஜனாதிபதி முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது” என முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினால் இறந்த முஸ்லீம்களின் உடல்கள் எரிக்கப்பட்டு வந்த நிலையில் அண்மையில் அரசு வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அதனை நீக்கியிருந்தது.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

இந்த விடயம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் உள்வாங்கப்பட்டிராது விட்டிருந்தால், அவ்வாறே உறுப்பு நாடுகள் சிலவற்றால் இலங்கை மீது கொண்டுவரப்பட்ட பிரேரணையில் சேர்க்கப்படாது விட்டிருந்தால் வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட , மக்களின் ஒரு ஒரு சாராரை மனவேதனைக்குள்ளாக்கிய இத்தகைய எரியூட்டும் அவலத்திற்கு தீர்வு கிட்டியிருக்க மாட்டாது.

அமர்வின் ஆரம்பத்திலேயே இஸ்லாமிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் குரல் எழுப்பியதன் பயனாகவும், அநேகமான மேற்குலக நாடுகள் கருத்துப் பறிமாற்றங்கள் நடத்தி கண்டன எதிர்ப்பலைகளை தோற்றுவித்ததன் விளைவாகவும் பெப்ரவரி 25 ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவை அதன் செயல்பாட்டை தீவிரப்படுத்தியது.

தனிப்பட்ட நாடுகள் ஒவ்வொன்றினதும் மனித உரிமை மீறல்களை கண்காணிக்கின்ற விடயத்தில் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பங்களிப்பை யாரும் குறைத்து மதிப்பிடமுடியாது.

மனித உரிமைகள் நிகழ்ச்சி நிரலில் எங்கள் நாடும் ஓர் அங்கம் என்ற வகையில் ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் செயற்பாடுகளைப் பொறுத்தவரை முன்வைக்கப்படும் அறிக்கைகள் மீது கரிசனை செலுத்தி அவற்றை அணுக வேண்டும்.

நாங்கள் சந்தித்த எமது தலைநகரிலிருந்து இராஜதந்திர முன்னெடுப்புகளை மேற்கொண்டுவரும் வெளிநாட்டு முக்கியஸ்தர்களும் மற்றும் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கலந்துகொள்ளும் சர்வதேசப் பிரமுகர்கள் பலரும் எங்களது கோரிக்கையின் நியாயத்தைப் புரிந்துகொண்டதோடு, ஒத்துழைப்பு நல்குவதாக உறுதிமொழியும் அளித்திருந்ததற்கு நாங்கள் நன்றி தெரிவிக்கின்றோம்.

அத்துடன் இந்த விடயத்தில் எங்களது இழந்த உரிமையை மீளப் பெறுவதற்கு உதவிய பல்வேறு அரசியல் கட்சிகள் குறிப்பாக, ஐக்கிய மக்கள் சக்தி,தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் மற்றும் ஏராளமான சிவில் சமூக அமைப்புக்கள், உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் என்பன தனியாகவும் கூட்டாகவும் இதற்காகக் குரல் கொடுத்ததை நன்றியறிதலோடு நினைவு கூர்கின்றோம்.

இந்த விவகாரத்தில் வெளிநாட்டு அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு நாடுகளை ஒன்றிணைத்துச் செயல்படும் இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியம் போன்றவற்றின் அழுத்தம் கடந்த சில மாதங்களாக சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டு வந்தது.

காணாமல் போனோரின் குடும்பத்தினர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பல்லாண்டு காலமாக ஈடுபட்டுவருகின்றமையால், ஜனாதிபதி அவர்களின் குடும்பத்தினரைக் கண்டு கதைப்பதற்கு முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், அது அவர்களின் துன்பியல் வாழ்வில் அது ஒரு சிறிய முன்னெடுப்பு மட்டுமே.

ஐ.நா. மனித உரிமை பேரவையின் அறிக்கையில் குறிப்பிடப்படும் ஏனைய விடயங்கள் அனைத்தின் மீதும் அரசாங்கம் உரிய கவனஞ் செலுத்தி, ஆக்கபூர்வமான பங்களிப்புக்களைச் செய்து அதனது நிலைப்பாட்டை மீளாய்வுக்குட்படுத்தி, உள்ளக விவகாரங்களில் மறுப்புக் கூறுவதிலேயே காலத்தைக் கடத்தாது – பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளில் நாட்டம் செலுத்த வேண்டும் என்றுள்ளது.

“இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம்” – எம்.ஏ.சுமந்திரன்

“இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த வேண்டும் என்பதில் நாம் தெளிவாக இருக்கின்றோம்” என  தமிழரசுகட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழரசுகட்சியின் மத்தியசெயற்குழு கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (27.02.2021) இடம்பெற்றது.

இதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஒற்றுமையான முன்னெடுப்பு என்பது அரசியல் கூட்டோ தேர்தல் கூட்டோஅல்ல. தமிழர்களிற்கு எதிரான விடயங்களில் அனைத்து தரப்புகளும் ஒன்று சேர வேண்டிய தேவை இருக்கிறது. தமிழ்மக்கள் மத்தியிலே இது தொடர்பான எதிர்பார்ப்புகளும் இருக்கிறது. எனவே அரசியல் தலைமைத்துவம் கொடுக்க வேண்டியது எங்களது பொறுப்பு. அந்த பொறுப்பை நிறைவேற்றுவதை அரசியலுக்காக செய்கிறோம் என்று சொன்னால் அதனை ஏற்கமுடியாது.

அத்துடன் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படுவது குறித்து இன்று பேசினோம். மனித உரிமை பேரவை தனக்கு உரிய அதிகார வரம்புகளை பயன்படுத்தி தமது வார்த்தை பிரயோகங்களிற்கு ஊடாக சில முக்கியமான விடயங்களை இந்த வரைபிற்குள்ளே உள்டக்கியிருக்கிறார்கள்.

இலங்கை தொடர்பான விடயம் சர்வதேச மேற்பார்வையின் கீழே தொடர்ச்சியாக இருக்கவேண்டும். அந்ததீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கான செயற்பாடுகளை இணை அனுசரணை நாடுகளுடன் சேர்ந்து எடுத்திருக்கிறோம்.

இந்த அரசாங்கத்தின் போக்கு தமிழர்களிற்கு எதிராக இருக்கிறது என்பது தெரிந்த விடயம். தற்போது அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் எமது மக்களின் வாழ்க்கையை பாதிக்கின்றது. இருப்பை பாதிக்கின்றது. தொல்லியல் திணைக்களம் வனவளத்திணைக்களம் ஆகியன முன்னெடுக்கப்படும் கஸ்ரங்களை என்ன விதத்தில் எதிர்கொள்ளலாம் என்ற விடயம் தொடர்பாகவும் நாம் கலந்துரையாடியிருந்தோம்.

அத்துடன் உள்ளூராட்சி மன்றங்களில் ஏற்பட்ட பிணக்குகள் தொடர்பாகவும் வரவுசெலவுத்திட்டங்களிற்கு எதிராக வாக்களித்த கட்சி உறுப்பினர்களிற்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது சம்மந்தமாக நாங்கள் பேசியிருக்கிறோம். கட்சி பலப்படுத்தப்படவேண்டிய தேவை இருக்கிறது அதனை ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுப்போம்.
புதிய அரசியல் அமைப்பு தொடர்பாக ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட குழுவிற்கு எமது பிரேரணைகளை முன்வைத்திருந்தோம்.

அதனடிப்படையில் அவர்களுடன் ஒரு சந்திப்பு இடம்பெற்றிருந்தது. மூன்றாவது குடியரசு அரசியலைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டுமாக இருந்தால் அது தமிழ்தேசிய பிரச்சினைக்கு முழுமையான தீர்வை உள்ளடக்கியதானவகையில் இருக்கவேண்டியதன் அவசியத்தை சம்பந்தன் ஐயா அவர்கள் வலியுறுத்தி பேசியிருந்தார். இதனால் நன்மை வருமா இல்லையா என்பது எங்களுக்கு தெரியாது.

பொலிகண்டி பேரணியை ஏற்படுத்திய சிவில் அமைப்புகள் அது எதற்காக நடாத்தப்படுவதாக தெரிவித்து 10 காரணிகளை பலதரப்பிற்கும் அனுப்பியிருந்தது. அந்த கோரிக்கைகளை முன்வைத்தே அது ஆரம்பிக்கப்பட்டது. அதிலே சர்வதேச நீதிமன்ற பொறிமுறை பற்றி எதுவுமே சொல்லப்பட்டிருக்கவில்லை. அதனால் நாங்கள் அதற்கு எதிர்ப்பு என்று அர்த்தம் இல்லை. எனவே குறித்த சில காரணங்களை வைத்து ஆதரவை திரட்டிவிட்டு வேறுகாரணங்களை சொல்வது நியாயமற்றவிடயம் அதையே நாங்கள் சொல்லியிருந்தோம். உறுப்பு நாடுகளிற்கு நாம் அனுப்பிய கடிதத்திலே இந்தவிடயம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றிற்கு பாரப்படுத்த வேண்டும் என்று தெளிவாக சொல்லியிருக்கிறோம். அதற்கு மாறானவர்கள் அல்ல நாங்கள்.

தமிழ் மக்கள் பேரவை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு…  தமிழ் மக்கள் பேரவை என்ற ஒன்று இப்போது இருப்பதாக எனக்கு தெரியாது என்று பதிலளித்தார்.

“இலங்கை எதிர்த்தாலும் மிச்செல் பச்லெட் அவர்களின் பரிந்துரைகளை அமுலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்” – மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நசிஃப்

மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு இலங்கை எதிர்ப்புத் தெரிவித்தாலும், அதனை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் நடா அல் நசிஃப் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிடுகையில், “மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஏற்கனவே வெளியிட்டிருந்த அறிக்கை, இலங்கை அரசாங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் பின்னர் சீராக்கப்பட்டு நேற்று முன்வைக்கப்பட்டது.

இலங்கை அரசாங்கம் சில விடயங்களுக்கு எதிர்ப்பைத் தெரிவித்திருந்தமையால், இந்த அறிக்கையை இறுதிப்படுத்த மூன்று வாரங்கள் காலதாமதம் ஏற்பட்டது.

இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சில பொறிமுறைகளின் பல விடயங்களை அமுலாக்குவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, சிரியா, மியான்மார் மற்றும் வடகொரியா போன்ற நாடுகளில் அமுலாக்கப்பட்டுள்ளதைப் போன்றோ அல்லது இலங்கை விடயத்தை பிரத்தியேகமான முறையிலோ கையாள்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விடயத்துக்கான பொருத்தமான நடைமுறை எதுவென்பதை மனித உரிமைகள் பேரவையே தீர்மானிக்கும்.

அத்துடன், இலங்கை விடயத்தில் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் பல ஆண்டுகளாகச் சேகரிக்கப்பட்ட சான்றுகள் உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளார்.

“சட்டத்துறை மாணவனை தாக்கிய பொலிஸ் அதிகாரிகள்” – உடனடியாக பதவி நீக்குமாறு அமைச்சர் வீரசேகர உத்தரவு! 

பேலியகொடை பொலிஸ் நிலையத்தில் வைத்து சட்ட துறை மாணவன் ஒருவன் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை பணியில் இருந்து இடைநிறுத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு அமைச்சர் சரத் வீரசேகர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் மூவர் பணிநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

மிகார குணரத்ன என்ற சட்ட துறை மாணவனை நேற்று பேலியகொட பொலிஸ் அதிகாரிகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸிற்கு அழைத்து வந்த சந்தேக நபரை சந்திப்பதற்காக அவர் பேலியகொட பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளதுடன் இதன்போது சுமார் 10 பொலிஸ் அதிகாரிகள் தன் மீது தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளானவர் சட்டத்தரணி மைத்திரி குணரத்னவின் மகன் என தெரிவிக்கப்படுகின்றது

“அரசின் அறிவிப்பு வெற்றியுமல்ல, பரிசுமல்ல. அது எமது உரிமை” – இரா.சாணக்கியன்

கொரோனா இறப்பின் பின்னரான சடல அடக்கம் என்ற இந்த அறிவிப்பானது எமக்குக் கிடைத்த வெற்றியுமல்ல, பரிசுமல்ல எனத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், இது எமது உரிமை என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்கப்பட்டு அரசாங்கத்தால் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றி குறிப்பிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் குறிப்பிடுகையில்,

“கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. எனினும், இதனை நாங்கள் வெற்றியாகவோ அல்லது கிடைத்த பரிசாகவோ கருதவில்லை.

இது எங்களுடைய உரிமையாகும். அவர்கள் இந்த உரிமையை எப்போதோ கொடுத்திருக்க வேண்டும். இந்நிலையில், அனைத்து இலங்கையர்களுக்கும் சமத்தும் கிடைக்கவும் உரிமையை அடைவதற்காகவும் எங்கள் போராட்டத்தை நாம் தொடர்வோம்.

நாடாளுமன்றத்திற்குள்ளும், நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் இதற்கு எதிராக நான் தொடர்ந்தும் குரல் கொடுத்து வந்தேன். 20இற்கு ஆதவளித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைதி காத்தனர். எனினும், நானும் இதுகுறித்து தொடர்ந்தும் குரல் எழுப்பியிருந்தேன்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான மக்கள் எழுச்சிப் போராட்டத்தின் போதும்கூட நாம் இதுகுறித்து பலமானதொரு செய்தியினை சர்வதேசத்திற்கு வழங்கியிருந்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கையில் தேர்தல்களில் வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும்” – ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு

“இலங்கையில் தேர்தல்களில் வாக்களிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும்” என ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

அனைத்து வாக்காளர்களும் சகல தேர்தல்களிலும் வாக்களிப்பது கட்டாயமென்றும், இதற்கான சட்டக் கொள்கைகள் உருவாக்கப்பட்ட வேண்டுமெனவும் ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலை நடத்திய சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர், வாக்களிப்புகளில் ஈடுபடவில்லையென சாட்சியங்கள் கிடைத்துள்ளன. அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் உறவினர்களும் வாக்களிக்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளனர் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோன்று, இலங்கையின் தேர்தல் முறைமை குறித்துப் பரிந்துரைகளை முன்வைத்துள்ள ஆணைக்குழு, தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடுவதற்காக நிலையான அரசாங்கம் ஒன்று அவசியம் எனவும் பரிந்துரைத்துள்ளது.

பலவீனமான அரசாங்கம் ஒன்று காணப்பட்டதன் காரணமாக, இலங்கையில் தாக்குதல்களை நடத்தலாம் என, சஹ்ரானின் குழு எண்ணியதாக சாட்சியங்கள் கிடைத்துள்ளதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், வேறொரு கட்சியுடன் இணைவதைத் தடுப்பது தொடர்பான ஏற்பாடுகளை, ஒன்றிணைக்கும் பரிந்துரையும் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

“இலங்கைக்கு வெளிவிகார உறவை பொருத்த வரை இது முக்கியமான வாரம்” – முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய

வெளிவிவகார உறவுகளைப் பொறுத்தவரையில், இலங்கைக்கு இது மிகமுக்கியமான வாரமாகும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவிலேயே கருஜெய சூரிய மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், ஒரு நாடு என்ற வகையில் முன்நோக்கிச் செல்வது குறித்த பேச்சுவார்த்தைகளின் போது நாட்டின் இறையாண்மையை சமரசத்திற்கு உட்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இலங்கையின் வெளிவிவகார உறவுகளைப் பொறுத்தவரை, இது மிகவும் முக்கியமான வாரமாகும். ஒரு நாடு என்ற வகையில் முன்நோக்கிச் செல்வது குறித்த பேச்சுவார்த்தைகளின் போது நாட்டின் இறையாண்மையை சமரசத்திற்கு உட்படுத்த முடியாது.

எனினும், கௌரவமான நாடொன்றின் பொறுப்புவாய்ந்த பிரஜைகள் என்ற அடிப்படையில் ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட கடப்பாடுகளை நிறைவேற்றுவதிலும் தண்டனைகளிலிருந்து விலகுவதை முடிவிற்குக் கொண்டுவருவதிலும் முனைப்புடன் செயற்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.