உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

கொரியாவிடமிருந்து இலங்கைக்கு சலுகைக்கடனாக 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் !

கொரிய அரசாங்கம், 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு சலுகைக் கடனாக வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.

ஏற்றுமதி- இறக்குமதி (எக்ஸிம்) வங்கியின், பொருளாதார அபிவிருத்தி நிதியத்தின் ஊடாக இந்த கடன் தொகையை வழங்க கொரிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக நிதியமைச்சின் அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.

மேலும் கடன் வட்டி விகிதம் 0.15% -0.20% வரை குறைவாகவும், கடனுக்கு 10 ஆண்டுகள் சலுகை காலமும், சுமார் 40 ஆண்டுகள் சலுகை காலமும் உள்ளதாக கூறப்படுகின்றது.

கொரோனா விதிமுறைகளை மீறி முல்லைத்தீவில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் பிரசன்னத்துடன் பிரித் ஓதும் பௌத்த வழிபாட்டு நிகழ்வு !

அகழ்வாராய்ச்சி நடைபெற்றுவரும் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் கொரோனா விதிமுறைகளை மீறி முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் ஏற்பாட்டில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் பிரசன்னத்துடன் பௌத்த பிக்குகள் இணைந்து தொல்லியல் திணைக்களத்தினரால் பிரித் ஓதும் பௌத்த வழிபாட்டு நிகழ்வு தற்போது இடம்பெற்றுவருகின்றது.

குருந்தாவ அசோக புராதன பௌத்த விகாரை சிதைவுகள் இருப்பதாக தெரிவித்து அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று இரவிரவாக பூசைகள் இடம்பெற்று பௌத்த விகாரையை புனர்நிர்மாணம் செய்யும் வேலைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நாளை காலை இடம்பெறவுள்ளதாக அறியமுடிகின்றது. இந்த நிகழ்வுக்கு அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் தலைவர் ஜெகத் சுமதிபால தெற்கிலிருந்து வருகைதந்து கலந்துகொள்ளவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

காவல்துறையினருக்கோ மாவட்ட நிர்வாக தரப்பினருக்கோ சுகாதார தரப்பினருக்கோ தெரியப்படுத்தப்படாமல் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் ஏற்பாட்டில் பெருமளவான பௌத்த பிக்குகளை ஒன்றிணைத்து குறித்த சமய நிகழ்வு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் ஒன்றுகூடுவதற்கோ வழிபாடுகளை ஒன்றுகூடி மேற்கொள்வதற்க்கோ தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் அரச நிகழ்வுகளை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் இரவோடு இரவாக சுகாதார தரப்பினரின் எந்தவித அனுமதிகள் எவையும் பெறப்படாது குறித்த பௌத்த அனுட்டான நிகழ்வு பெரும் எடுப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக தலைமை படை அதிகாரி மற்றும் பௌத்த பிக்குகள் 29 பேர் , தொல்லியல் திணைக்களத்தினர் இணைந்து பெரும் எடுப்பில் தோரணங்கள் கட்டி , அலங்காரங்கள் பந்தல்கள் என வழிபாடுகள் இடம்பெற்றுவருகின்றது.

குருந்தூர்மலை அகழ்வாராய்ச்சிகள் தொடர்பில் வெளிப்படை தன்மை பேணப்படாது உள்ளூர் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதிகள் மறுக்கப்பட்டு இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கடந்த நான்கு மாதங்களாக தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வாராய்ச்சிப்பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் திடுதிப்பென பெரும் எடுப்பில் பௌத்த வழிபாடுகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை பலத்த சந்தேகத்தினை பிரதேச மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கொரோனா நிலமை காரணமாக மக்கள் கூட்டங்களை தவிர்குமாறு அறிவித்துள்ள நிலையிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்காக முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் அரசியல்வாதிகள் என்று எவர் ஒன்றுகூடினாலும் அனைவரும் கூண்டோடு கைதுசெய்யப்படுவார்கள் என இராணுவத்தளபதியும் கொரோனா செயலணி தலைவருமான சவேந்திரசில்வா தெரிவித்துள்ள நிலையிலும் குருந்தூர் மலைக்கு சென்று முல்லைத்தீவு மாவட்ட படைத்தளபதி உள்ளிட்ட படை அதிகாரிகளுடன் 25ற்கும் மேற்பட்ட பௌத்த துறவிகள் காவல்துறையினருக்கோ மாவட்ட அரசாங்க அதிபருக்கோ, பொதுசுகாதார பரிசோதகர்களுக்கோ அறிவிக்காத நிலையில் குருந்தூர் மலைக்கு சென்றுள்ளார்கள்.

அங்கு படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பௌத்த துறவிகளினால் பிரித் ஓதப்பட்டு வருவதுடன் நாளை தொடக்கம் புனர் நிர்மான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

முஸ்லிம்கள் பெருநாளன்று பள்ளிவாசல்களுக்கு செல்லத்தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் தங்களது குடும்பத்தாருடன் தங்களது வீட்டிலேயே ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தால் அறிவித்துள்ள நிலையில் இது போன்றதான ஒரு காலத்தில் தடைசெய்யப்பட்ட   மதநடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரும் துணைபோவது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கொரோனா பரவாதா..? அவரை ஏன் பொலிஸார் தூக்கிச்செல்லவில்லை,? – சமூக வலைத்தளவாசிகள் கேள்வி !

கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தாண்டவமா​டிக் கொண்டிருக்கிறது.
சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்களில் பெரும்பாலானவர்கள் அவற்றை கடைப்பிடிப்பதில்லை.

முகக்கவசம் அணியாத பொதுமக்களை, பொலிஸார் அப்ப​டியே தூக்கிச் செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடி​யோக்கள் ஊடகங்களில் வெளியாகியிருந்தன.

யாழ்ப்பாணம், மன்னார், பண்டாரவளை மற்றும் மட்டக்களப்பில் பொதுமக்களை இவ்வாறு, பொலிஸார் தூக்கிச்சென்றிருந்தனர்.

அதேபோல, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, முக்கிய கூட்டமொன்றில், முகக்கவசம் அணியாது அமர்ந்திருக்கின்றார். இந்த வைபவம் இன்று (10.05.2021) இடம்பெற்றுள்ளது.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. அவரை ஏன்? பொலிஸார் தூக்கிச் செல்லவில்லை என்றும் சமூக வலைத்தளங்களின் ஊடாக கேள்வியெழுப்பப்பட்டுள்ளது.

“எதிர்வரும் 4 வாரங்கள் மிகவும் தீர்மானமிக்க.” – சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே

“எதிர்வரும் 4 வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கதாகும்.பொது மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பேணிவந்தால் இதனை கட்டுப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இன்னும் எங்களுக்கு இருக்கின்றது.” என இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்தார்.

நாட்டில் அதிகரித்துவரும் கொவிட் தொற்றாளர்களின் தொகையை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிக்கையில்,

நாட்டில் கொவிட் தொற்றாளர்கள் கடந்த இரண்டு தினங்களில் 1500 முதல் 2500க்கும் அதிகமானவர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலைமையிலும் இதனை கட்டுப்படுத்தலாம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். அதனால் பொது மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பேணிவந்தால் இதனை கட்டுப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இன்னும் எங்களுக்கு இருக்கின்றது.

அத்துடன் எதிர்வரும் 4 வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கதாகும். அதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியில் செல்வதாக இருந்தால் ஒருவர் மாத்திரம் செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோன்று இரண்டு முகக்கவசங்களை அணிந்துகொண்டு வெளியில் செல்லுமாறே நாங்கள் கேட்கின்றோம். இதுதான் புதிய சுகாதார வழிகாட்டலாகும். சனக்கூட்டம் இருக்கும் இடங்களுக்கு செல்வதை முடியுமானவரை தவிர்த்து கொள்ளவேண்டும். அதேபோன்று பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொண்டவர்கள் அதன் பெறுபேறு கிடைக்கும்வரை யாரும் வெளியில் செல்லாமல் தனிமையிலேயே இருக்கவேண்டும்.

அவ்வாறு யாராவது பி.சீ.ஆர். பரிசோதனை மேற்கொண்டுள்ள ஒருவருடன் நெருங்கிப்பழகி இருந்தால், அவர் உடனடியாக தனது பொது சுகாதார அதிகாரிகளிடம் அதுதொடர்பில் முறையிட்டு, சுயதனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.

மேலும் வைத்தியசாலைகளின் எண்ணிக்கை, பி.சீ.ஆர். பரிசோதனைகள், ஒட்சிசன் போன்றவற்றை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்று. அதனால் பொது மக்கள் இதுதொடர்பாக சிந்திக்காமல் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருந்தால் எங்களுக்கு இந்த நோயை கட்டுப்படுத்த முடியாமல் போவதில்லை. தற்போது நாட்டில் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டு வருவது மேல்மாகாணத்தில், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்கள் மற்றும் கண்டி, குருணாகல். மாத்தளை மாவட்டங்களாகும். தொற்றாளர்கள் அதிகம் கண்டுபிடிக்கப்படும் கிராம சேவகர் பிரிவுகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றார்.

“கர்ப்பிணி தாய்மார்களும் பச்சை பாலகர்களும் இறக்கின்றனர். நாட்டை முடக்குங்கள்.” – மனோகணேசன் ஆதங்கம் !

“கர்ப்பிணி தாய்மார்களும் பச்சை பாலகர்களும் இறக்கின்றனர். நாட்டை முடக்குங்கள் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

நாட்டை மூன்று வாரத்திற்கு முடக்குமாறும் அத்தோடு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் 20 ஆயிரம் ரூபாய் வழங்குமாறும் அவர் அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“இதுவரை ஆறு நாடுகளில் உள்ள கொரோனா வைரஸ்கள் இங்கே வந்து சேர்ந்துள்ளன. என்றும் இதனால் கர்ப்பிணி தாய்மார்களும் பச்சை பாலகர்களும் இறப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டை மூட மறுப்பது ஏன்? என கேள்வியெழுப்பிய அவர், துறைமுக நகர சட்டமூலத்தை சபையில் நிறைவேற்றிக்கொள்வதுதான் தேவை என்றால் நாட்டை மூடி, நாடாளுமன்றத்தை மாத்திரம் திறந்து வையுங்கள் எனக் கோரியுள்ளார்.

“செப்டெம்பர் மாத இறுதிக்குள் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 20 ஆயிரமாக உயர்வடையும்” – இலங்கைக்கு எச்சரிக்கை !

இலங்கையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தவறும் பட்சத்தில் செப்டெம்பர் மாத இறுதிக்குள் கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 20 ஆயிரமாக உயர்வடையும் என வோஷிங்டனை தளமாக கொண்ட பல்கலைக்கழகத்தின் ஆய்வொன்றை மேற்கோள்காட்டி, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இந்த எச்சரிக்கை தகவலை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் வொஷிங்கடன் பல்கலைக்கழகத்தின் ஆய்வறிக்கை குறித்து இலங்கை அவதானம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள மங்கள சமரவீர, குறித்த பல்கலைக்கழகமானது கொரோனா தொற்று தொடர்பான ஆழமான ஆய்வை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

அந்த வகையில் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு, கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவும் பிரித்தானியாவும் தொற்று பரவலை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளதாகவும் அந்த நாடுகளை முன்னுதாரணமாக கொண்டு இலங்கையும் செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன்பிரகாரம் நாட்டில் ஏற்படக் கூடிய பேரழிவை தடுக்கும் வகையில் மொத்த சனத்தொகையில் குறைந்தது 70 வீதமான மக்களுக்கு தடுப்பூசி மருந்தை விரைவில் செலுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாரிய பேரழிவை தடுப்பதற்கான கால அவகாசம் தற்போதும் உள்ளதாக குறிப்பிட்ட அவர், இலங்கை துரிதமாக செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புதிதாக பரவும் ஐந்து வகையான கொரோனா வைரஸ் திரிபுகள் – ஐரோப்பிய நாடுகளில் பரவிவரும் வைரஸ் நல்லூரில் !

இலங்கையில் ஐந்து வைரஸ் திரிபுகள் பரவி வருவதாக ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

இதன்படி பிரித்தானியாவில் பரவிவரும் பி.1.1.7 என்ற வைரஸ் நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் அடையாளங்காணப்பட்டுள்ளது.

கொழும்பு, குருநாகல், கண்டி, பொலன்னறுவை, மன்னார் மாவட்டங்களில் சில பகதிகளில் இந்த வைரஸ் தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

அத்துடன், டென்மார்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் பரவி வரும் பி.1.428 என்ற வைரஸ் திரிபுடன் யாழ்ப்பாணத்தில் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் நல்லூரை மையமாக கொண்டு குறித்த வைரஸ் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மட்டக்களப்பு மற்றும் கொழும்பின் சில பிரதேசங்களில் பி.1.411 என்ற இலங்கையில் திரிபடைந்த வைரஸ் ஒன்று பரவி வருவதாகவும் தெரியவந்துள்ளது.

அத்துடன், கொழும்பு மாவட்டத்தின் சில பகுதிகளிலும் களுத்துறை மாவட்டத்தின் பண்டாரகம பிரதேசத்தல் நைஜீரியாவில் பரவும் வைரஸ் திரிபு அடையாளங்காணப்பட்டுள்ளது.

இதனைவிட, கொழும்பில் அமைந்துள்ள தனியார் தனிமைப்படுத்தல் நிலையம் ஒன்றில் தென்னாபிரிக்க வைரஸ் திரிபும் கண்டறியப்பட்டுள்ளதாக சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகம் தெரிவித்துள்ளது.

“பகுதியளவில் நாட்டை முடக்குவதற்கு தயாராக இருங்கள்.” – பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் !

தற்போதுள்ள COVID-19 நிலைமையை அடுத்து 75% முழுமையாக அல்லது பகுதியளவில் நாட்டை முடக்குவதற்கு தயாராக இருக்குமாறு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

நேற்று (09) அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.

பசில் ராஜபக்ஷ ஜனாதிபதி பணிக்குழுவின் தலைவராக உள்ளார்.

அத்தியாவசிய சேவை வழங்குநர்களின் தலைவர்கள் கலந்துரையாடலுக்கு வரவழைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் ஊரடங்கு உத்தரவு அல்ல, பயணக் கட்டுப்பாடுகள் மட்டுமே விதிக்கப்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டது. அத்தகைய சூழ்நிலையில் அத்தியாவசிய சேவைகளை எவ்வாறு தொடர்வது என்பது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க தீவிர சிகிச்சை பிரிவுகளில் பற்றாக்குறை !

இலங்கையில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க தீவிர சிகிச்சை பிரிவுகளில் பற்றாக்குறை நிலவுகின்றது எனக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் நிபுணர் மருத்துவர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்தார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

இருதய நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை படுக்கைகள் உள்ளன. ஆனால், நாங்கள் தற்போது கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அவர்களை இடம் மாற்றப் போகின்றோம் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மகப்பேற்றியல் மற்றும் பெண்ணோயியல் நிறுவனத்தின் தலைவர் மருத்துவர் பிரதீப் டி சில்வா, “கொரோனா நோயாளிகளுக்கு மாத்திரம் பிரத்தியேகமான தீவிர சிகிச்சை படுக்கைகள் உள்ளதா.? என்பது தற்போது கேள்விக்குறியாகவே உள்ளது – என்றார்.

இதனிடையே நேற்றைய ஒரு நாளில் மட்டுமே சுமார் 2500க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதுடன் நேற்று மட்டும் 15பேர் கொரோனாவால் இறந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஏன் சிங்கள மொழியில் கடிதங்கள் அனுப்புகிறீர்கள்.? – எம்.ஏ.சுமந்திரன் கடும் விசனம் !

நாடாளுமன்றத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதங்கள் மற்றும் சுற்றறிக்கைகள் சிங்கள மொழியில் வழங்கப்படுவதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் விசனம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அதிகாரிகள் மொழிக் கொள்கையை முறையாக நடைமுறைப்படுத்துவதில் குறைவான அணுகுமுறையைக் கையாள்கின்றனர் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார அவசர நிலைமையைப் பிரகடனப்படுத்தக் கோரி, சுமந்திரன் நாடாளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தார். இந்நிலையில், அவரது பிரேரணை சுகாதார அமைச்சுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கும் கடிதம் அவருக்கு சிங்கள மொழியில் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் உறுப்பினர்களுக்கு சிங்கள மொழியில் கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. நாம் இந்தப் பிரச்சினையை எத்தனை தடவைகள் முன்வைத்துள்ளோம்? நாடாளுமன்ற ஊழியர்களுக்கான சுற்றறிக்கைகளும் சிங்களத்தில் மட்டுமே வழங்கப்படுகின்றன.

அரசமைப்பு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள இரு மொழிக் கொள்கையை, குறைந்த பட்சம் நாடாளுமன்றத்திலேனும் அமுல்படுத்தப்பட வேண்டும்.

இவ்வாறான உரிமை மீறல்கள் தொடர்வது ஏன் கவனிக்கப்படுவதில்லை?” என்று சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்