உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“சிங்கள ஆட்சியாளர்கள் சீனர்களை நம்பும் அளவிற்கு கூட தமிழர்களை நம்பவில்லை.” – சி.வி.விக்னேஸ்வரன்

“எங்கள் சிங்கள அரசியல்வாதிகள் விட்டில் பூச்சிகளைப் போன்றவர்கள். எரியும் நெருப்பைத் தேடிப் போய்த் தம்மை எரித்துக் கொள்ளும் சுபாவம் உடையவர்கள். அவர்கள் சீனர்களை நம்புவார்கள் ஆனால் தமிழர்களை நம்பமாட்டார்கள்.” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர்மேலும் தெரிவிக்கையில்,

சீன கம்யூனிசக் கட்சியின் 100 வது வருடத்தை முன்னிட்டு நாங்கள் தங்க நாணயங்களை வெளிக்கொண்டு வருகின்றோம். ஏற்கனவே பல நிறுவனங்களின் முன் ஆங்கில, தமிழ் ஏன் சிங்கள மொழி கூடப் பாவிக்கப்படாமல் சீன மொழியில்
மட்டும் பெயர்ப்பலகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு வேளை எமக்கு நடக்கப் போவதை முன்கூட்டியே அறிந்து தான் இவ்வாறான செயல்களில் நாம் ஈடுபடுகின்றோமோ நான் அறியேன். ஆனால் இவ்வாறான நடவடிக்கைகள் பூகோள அரசியலில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது என்பது பற்றி சிந்தித்தோமா? முகத்தைப் பகைத்து
மூக்கை வெட்டும் நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டு வருகின்றோம்.

சிங்கள மக்கள் தமிழ், முஸ்லிம் மக்களுடன் ஒன்றிணைந்து நாட்டை மீட்டெடுக்க இதுவே சரியான நேரம். ஆனால் சிங்கள ஆட்சியாளர்கள் சீனர்களை நம்பும் அளவிற்கு தமிழர்களையும் முஸ்லிம்களையும் நம்பவில்லை.

இந்த நடவடிக்கையே இன்று நாடு நெருக்கடிக்குள் தள்ளப்பட பிரதான காரணமாக அமைந்தது. தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து, முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டுவந்து புலம்பெயர் மக்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள சிங்கள மக்கள் முன்வர வேண்டும்.

நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்கு கைகொடுக்க தமிழர்கள் தயாராகவே உள்ளனர் என்பதை அரசாங்கத்திற்கும் சிங்கள மக்களுக்கும் கூறிக்கொள்ள விரும்புவதாக சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

ஹிஷாலினி தங்கியிருந்த அறையில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துருக்கள் – புதிய சர்ச்சை ஆரம்பம் !

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் தீக்காயங்களுக்கு உள்ளாகி மரணித்த ஹிஷாலினி என்ற 16 வயதான சிறுமி தங்க வைக்கப்பட்டிருந்த அறையில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துருக்கள் குறித்து விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, ஹிஷாலினியின் குடும்பத்தினர் கோரியுள்ளனர்.

Hisahalini

அதேநேரம், மாத்தறை பிராந்திய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் பொறுப்பதிகாரி வருணி போகஹவத்த தலைமையிலான காவற்துறைக் குழுவினால் இந்த சம்பவம் தொடர்பான பல முக்கிய தடயங்களும் தகவல்களும் துலக்கப்பட்டுள்ளன.

ஹிஷாலினி தங்க வைக்கப்பட்டிருந்த சிறிய அறை ஒன்றின் ஓரத்தை உறங்குவதற்காக அவர் பயன்படுத்திவந்துள்ளார். அந்த அறையின் கதவுக்கு பின்பக்கச் சுவரில் தரையில் இருந்து 4 அடி உயரத்தில் அவரால் எழுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் எழுத்துருக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

(என் சாவுக்கு காரணம்) என ஆங்கில எழுத்துக்களால் எழுத்தப்பட்டுள்ளது.

இது ஹிஷாலினியால் எழுதப்பட்டதுதானா? என்பது தொடர்பாக பல்வேறு கோணங்களில் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதற்காக இரசாயன பகுப்பாய்வுப் பிரிவின் எழுத்துருக்கள் நிபுணர்கள் குழு ஒன்று செயற்படுவதுடன், ஹிசாலினியால் எழுதப்பட்ட அப்பியாசப் புத்தகங்களும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும், தமது தங்கைக்கு ஆங்கில மொழியில் எழுதத் தெரிந்திருக்கவில்லை என்று, ஹிசாலியின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

தலதா அத்துகோரளவை வாய்மொழிமூல பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் !

பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள வாய்மொழி மூல பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில்  கவனம் செலுத்துவதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனே இன்று தெரிவித்துள்ளார்.

அண்மையில் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்தின் போது, ​​சில அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துகோரள மீது வாய்மொழிமூல பாலியல் வசைபாடுகளை நடத்தியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான ரோகிணி கவிரத்ன கவலை தெரிவித்தபோது சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.

மேற்படி செயற்பாடானது பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை மீறுவதாகவுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை விமர்ச்சிப்பதற்கும் தனிப்பட்ட விடயங்கள் தொடர்பில் விவாதிப்பதற்கும் இது இடமல்ல. மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் இடமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 12 பெண் பாராளுமன்ற உறுப்பினர்களே உள்ளனர். பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள்  அவமானத்திற்கு உட்படுவது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும் என்றார்.

யாழில் அதிகரிக்கும் கொரோனாத்தொற்று – ஒக்சிசன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு !

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒக்சிசன் தட்டுப்பாடு காணப்படுவதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

யாழ் .போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சண்முகநாதன் சிறிபவானந்தராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் போதனா வைத்தியசாலையில் நாளொன்றுக்கு 120 வரையான ஒக்சிசன் சிலிண்டர்கள் இதுவரை பாவிக்கப்பட்டு வந்தது எனினும் தற்போது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக குறித்த சிலிண்டர் பாவனை 180 ற்கு மேல் அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு நாளும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்து மூன்று தடவைக்கு மேல் வாகனங்கள் அனுராதபுரம் சென்று சிலிண்டர்கள் பெற்று வருகின்றன.
யாழ்ப்பாண குடாநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளதன் காரணமாக வைத்தியசாலை விடுதிகளில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்திலும் கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் எனவே தற்போதுள்ள நிலையில் மருத்துவ வளங்கள் அனைத்தும் கொரோனா தொற்றுக்குள்ளாருக்கு பாவிக்கப்படுகின்றது.

தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசி போடாதவர்கள் தான் அதிகமாக இறப்பினை சந்திக்கின்றார்கள் எனவே பொதுமக்கள் அனைவரும் இந்தத் தடுப்பூசியைப் போடுவதன் மூலம் உயிரிழப்புகளில் இருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

அத்தோடு இனிமேல் வைத்தியசாலைக்கு வருவோர் தமக்குரிய தடுப்பூசி அட்டையினை கொண்டு வருதல் மிக அவசியமான ஒன்றாகும் எனவே எதிர்வரும் காலத்தில் பொதுமக்கள் இந்த கொரோனா தொற்றால் இருந்து தங்களை பாதுகாப்பதற்கு உரிய வழிமுறைகளை கையாள வேண்டும் அத்தோடு அனைவரும் இந்த தடுப்பூசியினை பெறவதன் மூலம் இந்த தொட்டியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

எனவே பொதுமக்கள் தற்போதுள்ள நிலையை அனுசரித்து அனைவரும் செயற்படுவதன் மூலம் குறித்த தொற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

“கடற்றொழில் கற்கைகளுக்கான பீடத்தை முல்லைத்தீவில் உருவாக்க முயற்சிக்கின்றேன்” – அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா !

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வவுனியா பல்கலைக்கழகமானது அறிவுசார்ந்து சிந்தித்து எதிர்காலத்தை முன்னகர்த்தும் சந்ததியை உருவாக்கும் அறிவுக்கூடமாக மிளிர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் கடல்தொழில் தொடர்பான கற்கை நெறிகளுக்கான தனியான பீடம் ஒன்றினை முல்லைத்தீவு மாவட்டத்தில் உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வவனியா பல்கலைக்கழகம் தொடர்பில் கருத்தக் கூறும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

1997 ஆம் ஆண்டிலிருந்து யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து சில பீடங்கள் வவுனியா வளாகத்திற்கு மாற்றப்பட்டு அது வவுனியா வளாகமாக இயங்கிவந்தது. இந்நிலையில் அந்த வளாகம் இந்த மாதம் முதல் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டு இருக்கின்றது. இந்த நிலைக்கு உயர்த்த அல்லது பங்களித்த அனைவருக்கும் எனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்

இதேநேரம் வன்னியுடன் யாழ்ப்பாணத்திற்கான தொடர்புகள் இல்லாத காலங்களில் இந்த வவுனியா வளாகத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்கொண்டு செல்லப்பட்டதுதான் இந்த வளர்ச்சிக்கான சாத்தியமாகி இருக்கிறது.

வவுனியா பல்கலைக்கழகமாக மாற்றம் பெறுவதற்கு நடவடிக்கையை மேற்கொண்ட ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, பிரதமரர் மஹிந்த ராஜபக்ச மற்றும் கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் ஆகியோருக்கு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதேபோன்று கடல்தொழில் தொடர்பான கற்கை நெறிகளுக்கான தனியான பீடம் ஒன்றினை முல்லைத்தீவு மாவட்டத்தில் உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். அந்த முயற்சியும் விரைவில் சாத்தியமாகும் என்று நான் நம்புகின்றேன்.

இதேவேளை இன்னொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அதாவது எனது அரசியல் அணுகுமுறை எந்தளவுக்கு நடைமுறை சாத்தியமானது என்பதை இங்கே நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு இடத்திலிருந்து ஆரம்பித்து எமது எதிர்பார்ப்புகளை நோக்கி படிப்படியாக நகரமுடியும் முடியும் என்ற அணுகுமுறையே சாத்தியமானது என்பதை நான் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கூறிவருகின்றேன்’ என்றும் அவர் கூட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் !

கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளில் இலக்கை அடைவதற்கான பாதையில் இலங்கை பயணிக்கிறது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள் இலங்கை தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடையும் நிலையில் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியெசஸ் கூறியுள்ளார்.

இது குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் இதற்காக அரசாங்கத்துக்கும் நாட்டு மக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் ருவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,

“செப்டம்பர் இலக்குக்கு முன்னதாக, இலங்கை தனது மக்கள்தொகையில் 10% பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடுவதை கண்டு மகிழ்ச்சி! அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் அவர்களின் முயற்சிகளுக்கு நன்றி. வைரஸை கட்டுப்படுத்துவதற்கான நிரூபிக்கப்பட்ட பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, ஒரே நாளில் 5 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்திய இலங்கையின் சாதனையை WHO கடந்த வாரம் பாராட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“தடுப்பூசிகளைப் பெறுவதில் வடக்கு மக்கள் மிகுந்த ஆர்வம்.” – சவேந்திர சில்வா பாராட்டு !

வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தடுப்பூசிகளைப் பெறுவதில் மக்கள் மிகுந்த ஆர்வத்தைக் காட்டி வருகின்றனர். இதனை நாம் வரவேற்கின்றோம் என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

கொரோனாத் தடுப்பூசியைப் பெறுவதில் வடக்கு மக்கள் ஆரம்பத்தில் ஆர்வத்தைக் காட்டவில்லை. எனினும், அவர்கள் தற்போது மிகுந்த ஆர்வத்தைக் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு மாகாண மக்களும் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.

கொரோனாவை விரட்டக்கூடிய ஒரே ஆயுதம் தடுப்பூசியே. எனவே, நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்குவதில் அரசு அதிக சிரத்தையுடன் செயற்படுகின்றது.

தடுப்பூசிகளைப் பெற்றுவிட்டோம் எனக் கருதி சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாமல் மக்கள் இருக்கக்கூடாது.

கொரோனாத் தடுப்புக்கான சுகாதார விதிகளை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்” – என்றார்.

“முல்லைத்தீவு , அரசாங்கத்தின் திணைக்களங்களினாலும் படையினராலும் அபகரிக்கப்படுகின்றது.” – து. ரவிகரன் குற்றச்சாட்டு!

முல்லைத்தீவு- வட்டுவாகல் பகுதியும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளும் அரசாங்கத்தின் சில திணைக்களங்களினாலும் படையினராலும் அபகரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக துரைராசா ரவிகரன் மேலும் கூறியுள்ளதாவது,

“வட்டுவாகலை அண்மித்த பகுதிகளில் 617 ஏக்கர் காணிகள் கடற்படை வசமும் 400 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் இராணுவத்தின் வசமும் உள்ளன. மேலும் பெரிய விகாரை ஒன்றையும் அப்பகுதியில் அமைத்து, பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தை நிலை நாட்டி வருகின்றனர்.

இதேவேளை கடந்த 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக  வட்டுவாகல் நந்திக் கடல் மற்றும் நந்திக் கடல் சேர்ந்த பகுதிகளில் உள்ள சுமார் 10230 ஏக்கர் நிலப்பரப்பை  வன ஜீவராசிகள் திணைக்களம், தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

மேலும் முல்லைத்தீவு கோட்டாபய கடற்படை முகாம் அமைந்துள்ள காணிகள், முள்ளிவாய்க்கால் கிழக்கு மக்களுக்கும் வட்டுவாகல் மக்களுக்கும் உரியவையாகும்.

இந்நிலையில் கடந்த 29ஆம் திகதி, வட்டுவாகல் பகுதியில் கடற்படையினருக்கான காணி அளவீட்டிற்காக,  நிலஅளவைத் திணைக்களத்தினர் சென்றவேளை அவர்களை வழி மறித்த மக்கள், எதிர்ப்பினை தெரிவித்து  போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“சிறுவர்களை வேலைக்கமர்த்தினால் கடும்தண்டனை.” – அரசாங்கம் எடுத்துள்ள புதிய தீர்மானம் !

வீட்டு வேலைகளில் குறைந்த வயதுடைய சிறுவர்களை ஈடுபடுத்தியிருக்கும் வீட்டு உரிமையாளர்கள், அவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து மற்றும் சமூக பொலிஸ் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட வகையில் இவர்களை மீள அனுப்பாதவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“எதிர்காலத்தில் சகல கிராம அதிகாரிகள் பிரிவுகள் தோரும் ஒரு சமூக பொலிஸ் அதிகாரி நியமிக்கப்படவுள்ளார். அவர்கள் சிறுவர் பாதுகாப்பு பொலிஸ் பிரிவுடன் இணைந்து இதுதொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்வர்.

தற்போது மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவை அனுமதிக்கப்பட்டுள்ளதால் வீட்டு உரிமையாளர்கள் தமது குறைந்த வயது சேவகா்களை திருப்பி அனுப்புவதில் சிரமம் இருக்காது” என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிறுமி இஷாலினியின் மரணம் கற்றுத்தந்த பாடம் – மலையக சிறுவர்களை பாதுகாக்க சிறுவர் பாதுகாப்புகுழு ஸ்தாபிப்பு !

அண்மையில் உயிரிழந்த சிறுமி இஷாலினியின் மரணம் மலையகம் மட்டும் அன்றி நாடு முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந் நிலையில் மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே அவர்களின் தலைமையில் இன்று (02.08.2021)  நுவரெலியா, கண்டி, மாத்தளை மாவட்டங்கள் உள்ளடங்களாக மத்திய மாகாணத்தில் சிறுவர் பாதுகாப்பு மற்றும் அவர்களின் அபிவிருத்தி தொடர்பான குழு மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து திணைக்களங்களின் பிரதானிகளுடனும் , காவல் துறை, இராணுவம் மற்றும் சர்வதேச ஸ்தாபனங்கள் உள்ளடங்களாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் கீழ் இயங்கும் பிரஜாசக்தி அபிவிருத்தி செயற்றிட்டத்தின் பணிப்பாளர் நாயகம் பாரத் அருள்சாமி கருத்து தெரிவிக்கையில் ,

அமைச்சர் ஜீவன் தொண்டமான் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக மத்திய மாகாணம் முழுவதும் சிறுவர் பாதுகாப்பை உறுதி செய்தல் மட்டுமல்லாது , அவர்களின் அபிவிருத்தி தொடர்பாகவும் இக் குழு ஆளுநரினால் ஸ்தாபிக்க பட்டுள்ளது. மேலும் இக் கூட்டத்தில் உரையாற்றிய பாரத், எமது அமைச்சின் ஊடக பிரஜாஷக்தி செயல் திட்டத்தின் சிறுவர் பாதுகாப்பு மற்றும் வலுவூட்டல் பிரிவு ஸ்தாபிக்க பட்டுள்ளது இதன் மூலம் நாம் ஆலோசனைகள் வழங்குவது மாத்திரம் அன்றி தரவுகள் திரட்டும் வேலைத்திட்டத்திலும் உள்ளோம் இதற்க்காக நாம் அவசர தொலைபேசி இலக்கங்களை 0512222422 மற்றும் 0715550666 அறிமுகப்படுத்தி உள்ளோம்.

மேலும் பாடசாலைகளை விட்டு இடை விலகும் மாணவர்களை, ஆண்டுக்கு மலையகத்தில் ஏறத்தாழ 900 மாணவர்கள், இனம் கண்டு மீண்டும் கல்வியினை தொடர வைத்தல் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம் ஊடாக இலவசமாக தொழில்முறை கல்வி, இனைய வழி கல்வி போன்ற கல்வி முறை மாத்திரம் அன்றி சுயதொழில் ஊக்குவித்தல் மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவித்தல் போன்ற செயல் முறைகளை நாம் வழங்கி வருகிறோம். மேலும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் தலைமையில் வீட்டு வேலைக்கு அமர்த்தப்படும் பணியாளர்கள் தொடர்பாக விசேட சட்ட மூலத்தையும் நாம் உருவாக்க பரித்துரைத்துள்ளோம் உதாரணமாக ILO C 189 போன்ற சட்டமூலத்தின் மூலம் சட்டங்களை விரிவாக்கல் போன்ற செயன்முறைகளை நாம் முன்னெடுக்க உள்ளோம் என தெரிவித்தார். மேலும் இவ்வாறு குழு ஒன்றை ஸ்தாபித்தமைக்காக ஆளுநர் அவ்ரகளுக்கு நன்றிகளை தெரிவித்தார்

இக்கூட்டத்தில் மாவட்ட அதிபர்கள், திணைக்கள பிரதானிகள் கல்வி அமைச்சின் செயலாளர், சிறுவரை பாதுகாப்பு அதிகார சபையின் பணிப்பாளர்கள் பொலிஸ் உயர் அதிகாரிகள் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் மனித உரிமை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.