உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“ஜனநாயகத்தை புதைத்து சர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்.” – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு !

“ஜனநாயகத்தை புதைத்து சர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம்.” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து நேற்று (வியாழக்கிழமை) அறிக்கை வெளியிட்டுள்ள அவர்,

குறித்த அறிக்கையில் , ஜனாதிபதியினால் அவசரகால சட்டம் அமுல்படுத்தப்பட்டமை மூலம் மக்களின் உரிமைகள் ஒடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பை கட்டுப்படுத்துவதாக குறிப்பிட்டு அரசாங்கம் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளமையானது அவர்களின் தவறான செயற்பாடுகள் மற்றும் திறமையின்மையை மூடி மறைக்கும் தன்னிச்சையான செயற்பாடாக கருத வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

குறிப்பாக அவசரகால சட்டத்தை அவசரமான நிலையில் பிரகடனப்படுத்தியுள்ளமை ஒரு ஆபத்தான நிலையை எடுத்து காட்டுவதாக குறிப்பிட்டுள்ள சஜித் பிரேமதாச, இதன் உண்மை நோக்கம் ஒரு சர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதாகும் என்றும் குற்றம் சாட்டினார்.

எனவே குறித்த அவசரகால சட்ட வர்த்தமானியை ஜனாதிபதி மீளப் பெற வேண்டும் என்றும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்தி சட்டவிரோதமாக பொருட்களை பதுக்கி வைத்திருப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

ரிஷாத் பதியுதீனின் சிறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கைப்பேசி !

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சிறையில் இருந்து கைப்பேசி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு கைப்பேசி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

இலங்கையின் காட்போட் பிரேதப் பெட்டிகளுக்கு சர்வதேச அளவில் அதிகரித்துள்ள கேள்வி !

உலக இளவில் கொரோனா பரவல் சற்றும் குறையாது அதிக பரவலை காட்டி வருகின்ற நிலையில் , தடுப்பூசிகளுக்கு நிகராக இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான சவப்பெட்டிகளுக்கும் கேள்வி அதிகரிதது வருகின்றது.

இதே நிலை இலங்கையிலும் தொடர்கின்றது. இலங்கையில் கொவிட் மரணங்களின் அதிகரிப்பையடுத்து கல்கிசை- மொரட்டுவ மாநகர சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட காட்போட் பிரேதப் பெட்டிகள் இலங்கையில் பிரபலமாக ஆரம்பித்திருந்து.

இந்த தகவல் வெளிநாடுகளுக்கும் பரவ ஆரம்பித்த நிலையில் , வெளிநாடுகளிலிருந்து பல கொள்வனவுக் கட்டளைகள் வந்துள்ளன. கல்கிசை – மொரட்டுவ மாநகர சபை உறுப்பினர் பிரியந்த சகபந்து வியட்நாமிலிருந்து பிரேதப் பெட்டிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும் தாய்லாந்திலிருந்து 1000 காட்போட் பிரேதப் பெட்டிகளுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. அவை வரும் திங்கட்கிழமை அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது என்றார்.

கொவிட் சடலங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இப்பிரேதப் பெட்டிகளுக்கு இலங்கையில் தற்போ பெரும் கேள்வி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரசின் எந்த நகர்வுகளாலும் கட்டுப்படாத கொவிட் தொற்று – 3500க்கும் அதிகமான புதிய தொற்றுக்கள் – 204 உயிர்ப்பலி !

நாட்டில் மேலும் 846 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று இதுவரை 3,619 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 447,749 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 378,168 ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரம் நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் மேலும் 204 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,604 ஆக அதிகரித்துள்ளது.

பஹன்துடாவ நீர்வீழ்ச்சியில் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு காணொளி வெளியிட்ட ஜோடிக்கு நேர்ந்த கதி !

பலாங்கொடை, பெலிஹுல்ஓயா – பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு, அதனை காணொளியாக பதிவுசெய்து ஆபாச இணையத்தளங்களில் பதிவேற்றிய  குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த 24 வயதான யுவதி ஒருவரும், மஹரகமவைச் சேர்ந்த 34 வயதான ஆண் ஒருவருமே இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கு பிரித்தானியா தீர்மானம் – இலங்கை அரசு வெளியிட்டுள்ள தகவல் !

பிரித்தானியாவின் 2000 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கான தடையை நீடிப்பதற்கு பிரித்தானிய உள்துறைச் செயலாளர் தீர்மானித்துள்ளமை குறித்து தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் வெளிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

குடிமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலையும், உலகளாவிய மற்றும் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தையும் விளைவிக்கும் பயங்கரவாதம் மற்றும் வன்முறைத் தீவிரவாதத்தை தணிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் பிரித்தானியாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தாம் உறுதிபூண்டுள்ளதாகவும் இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனோவால் ஊடகவியலாளரான  ஞானப்பிரகாசம் பிரகாஸ் உயிரிழப்பு !

கொரோனோ தொற்றுக்கு உள்ளாகியிருந்த சுயாதீன ஊடகவியலாளரான  ஞானப்பிரகாசம் பிரகாஸ் உயிரிழந்துள்ளார்.  கொடிகாமத்தை சேர்ந்த பிரகாஸ் , சுயாதீன ஊடகவியலாளராக யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் , செய்திகள் எழுதி வந்ததுடன், உள்நாட்டு, வெளிநாட்டு இணையத்தளங்களுக்கும் செய்திகளை கட்டுரைகளை எழுதி வந்தார்.

அதேவேளை சில இணையத்தளங்களில் செய்தி பதிவேற்றுனராகவும் கடமையாற்றி வந்தார். அத்துடன் முகநூலில் உடனுக்கு உடன் உள்நாட்டு, வெளிநாட்டு செய்திகளை பதிவேற்றி வருபவர். அந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக தலைவலி, இருமலுடன், இலேசான காய்ச்சலுடன் பீடிக்கபப்ட்டு இருந்த நிலையில், நேற்றைய தினம் புதன்கிழமை அண்டிஜன் பரிசோதனையை தானாக முன் சென்று பரிசோதித்த போது, அவருக்கு, தொற்று உறுதியானது. குறித்த விடயம் தொடர்பில் தன்னுடைய முகநூல் ஒன்றிலும் பதிவிட்டிருந்தார்.

குறித்த பதிவுகளில்,   புதன்கிழமை மாலை 3 மணிக்கு தனது முகநூலில் “கடந்த ஐந்து நாட்களாக இலேசான தலைவலி இருமலுடன் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தேன். சற்று தேறிவரும் நிலையில் இன்று அன்டிஜன் சோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. குணமடைந்த பின்னர் தடையின்றி எனது பணிகள் தொடரும். அதுவரை காத்திருங்கள்” என பதிவு ஒன்றினையும் பதிவேற்றி இருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் மாலை திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து, வீட்டார் அவரை வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது, உயிரிழந்துள்ளார். இவர் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்டதால்  நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவற்றை எல்லாம் தாண்டியும் அவர் ஊடக துறையில் தனக்கென்று ஒரு இடத்தினை தக்க வைத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அன்னாருக்கு தேசம் குழுமத்தினர் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.

குழந்தை பிரசவித்த தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு – யாழில் பெருகும் கொரோனா !

யாழில் கொரோனா  வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் குழந்தை பிரசவித்து 10 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பிறந்த குழந்தைக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்படுகிறது.

கிளிநொச்சியைச் சேர்ந்த சண்முகராசா பிரியதர்ஷினி (வயது -33) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இதேநேரம், கைதடி அரச முதியோர் இல்லத்தில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 41 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர். அவர்களில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், இவர்கள் இருவர் உட்பட யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 8 பேர் கொரோனா வைரஸினால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றத்தில் சிறப்பாக செயற்பட்டோர் தரப்படுத்தல் பட்டியலில் சாணக்கியனுக்கு முதலிடம் !

பாராளுமன்றத்தில் சிறப்பாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தரவரிசையினை மந்திரி.எல் கே என்ற இணையத்தளம் வெளியிட்டு வருகின்றது.

இந்தநிலையில் தற்போது புதிய தரப்படுத்தல் பட்டியலினை குறித்த இணையத்தளம் வெளியிட்டுள்ளது.

புதிய தரப்படுத்தலில் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் முதல் இடத்தினை பிடித்துள்ளதுடன், அமைச்சர் சரத் வீரசேகர இரண்டாவது இடத்தினையும், புத்திக பத்திரன மூன்றாவது இடத்தினையும் பிடித்துள்ளனர்.

யாழில் இராணுவம் – பொலிஸார் முன்னிலையில் வாள்வெட்டுச்சம்பவம் – ஒருவர் படுகாயம் !

மருதனார்மடம் சந்தியில் இராணுவம், பொலிஸார் முன்னிலையில் வன்முறைக் கும்பல் ஒன்றினால் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதனால் அந்தப் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் சிறிது நேரம் பதற்றநிலை காணப்பட்டதோடு, பொலிஸார், சிறப்பு அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மருதனார்மடம் ஆஞ்சநேயர் ஆலயத்துக்கு முன்பாக பழக்கடை நடத்துபவர் மீதே இவ்வாறு வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட குழுவே ஊரடங்கு வேளையில் இவ்வாறு தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த நிலையில், சம்பவத்தில் படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.