உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

இலங்கையில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டுவது தடை ! – ஆளுங்கட்சி கூட்டத்தில் பிரதமர் மஹிந்த யோசனை.

இலங்கையில் மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படுவது தடை செய்யப்படவுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று காலை நடந்த ஆளுங்கட்சி கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ இதற்கான யோசனையை முன்வைத்துள்ளார்.

இதற்கு மாற்றீடாக வெளிநாடுகளில் இருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்யவும் அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் எதிர்வரும் வரவு செலவு திட்டத்திற்கு பின் இந்த யோசனை அமுல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதில் தொடரும் இழுபறி !

ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய தலைவரை எதிர்வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி நியமிக்கவுள்ளதாக அந்தக் கட்சியின் சட்டத்துறை செயலாளர் நிஸ்ஸங்க நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள செயற்குழு கூட்டத்தில் ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம் சஜித் பிரேமதாஸ கட்சியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து,  கட்சியின் புதிய பிரதி தலைவரை செயற்குழு உறுப்பினர்களின் வாக்கெடுப்பின் அடிப்படையில் தெரிவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிஸ்ஸங்க நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியைத் தொடர்ந்து, கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகவுள்ளதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக தற்போது பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அத்தோடு புதிய தலைவரை தெரிவு செய்வதற்காக பல தடவைகள் செயற்குழு உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்தனர். எனினும் இதுவரையில் தீர்மானமிக்க முடிவொன்று அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஐக்கிய தேசியக் கட்சியின் தலை விதியை மாற்றுவதற்கு அக்கட்சியை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைத்து தலைமைத்துவத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளமையும் நோக்கத்தக்கது.

 

சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் இன்று கூடுகின்றது பாராளுமன்றம் !

நாடாளுமன்றம் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் ஒரு மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது.

சபாநாயகர் அறிவிப்பு, மனுதாக்கல் உட்பட பிரதான சபை நடவடிக்கை நிறைவடைந்த பின்னர் விவாதம் ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி, மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கை, நிதி அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை மற்றும் 2020 வருட நடுப்பகுதியில் அரசாங்கத்தின் நிதி நிலைமை தொடர்பான அறிக்கை என்பன குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் நடத்தப்படவுள்ளது.

அத்துடன், நாளைய தினம் உற்பத்தி வரிச் சட்டத்தின் கீழான ஒன்பது ஒழுங்குவிதிகள், மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் 10 கட்டளைகள் என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

நாளை மறுதினம் துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான ஆறு கட்டளைகள், சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் மூன்று ஒழுங்குவிதிகள் மற்றும் சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஆறு தீர்மானங்கள் என்பன விவாதிக்கப்படவுள்ளன.

அத்துடன், நாளை பிற்பகல் ஒரு மணி முதல் பிற்பகல் ஏழரை மணி வரையும், நாளை மறுதினம் முற்பகல் 10.30 மணி முதல் பிற்பகல் ஏழரை மணிவரையும் அமர்வுகள் நடைபெறவுள்ளன.

அத்துடன், எதிர்வரும் 11ஆம் திகதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் அமரர் ஆறுமுகன்தொண்டமான் தொடர்பான அனுதாபப் பிரேரணை விவாதம் நடைபெறவுள்ளது.

அன்றையதினம் முற்பகல் 10.30 மணி முதல் 6.30 மணிவரை அமர்வுகள் இடம்பெறவிருப்பதுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இவ்விவாதத்தில் உரையாற்றவுள்ளனர்.

“விடுதலைப் புலிகளின் தேவைகளுக்காகவே மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது. இன்றும் புலிகளின் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன“ – சரத் வீரசேகர

“விடுதலைப் புலிகளின் தேவைகளுக்காகவே மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது. இன்றும் புலிகளின் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன“ என இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

சர்வதேச ரீதியில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முடக்குதவற்கு இலங்கை அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் சர்வதேச பொலிஸாருடன் இணைந்து விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதிச்செயற்பாடுகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர், “விடுதலைப் புலிகளின் தேவைகளுக்காகவே மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது. இன்றும் புலிகளின் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. நாம் புலியின் வாலையே அழித்துள்ளோம். தலை இன்னமும் சர்வதேச மட்டத்தில் இயங்குகின்றது.

நாம் இன்னொரு போருக்கு எப்போதும் தயாராகவே இருக்க வேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி இருந்தால் மட்டுமே இதனை எம்மால் கையாள முடியும்.

இந்தியாவை எமக்கு எதிராக தூண்டிவிட நினைக்கும் தமிழர் தரப்பினர் அரசை நெருக்கடிக்குள் தள்ளுவதாக நினைத்து தமிழ் மக்களையே நெருக்கடிக்குள் தள்ளுகின்றனர்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வீடு, மீன் , சைக்கிள் என்ற பாகுபாடுகளை நீக்கி மனப்பூர்வமாக ஒருமித்துச் செயற்பட அனைவரும் முன் வரவேண்டும்! – செல்வம் அடைக்கலநாதன்

”தமிழர்கள் பூர்வீகக் குடிகள் என்றவுடன் தென்னிலங்கை சிங்கள தரப்புக்கள் எல்லாம் ஒன்றிணைந்து அதனை எதிர்க்கின்றனர். ஆனால் தமிழர்கள் இதனைக் கேட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டுமே இருக்கின்றனர். சிங்கள தேசம் தமிழர்களுக்கு எதிராக ஒன்று திரண்டு ஒற்றுமையாக எதிர்கின்ற நிலையில் தமிழர் தேசத்தில் அந்த ஒற்றுமை இல்லை” பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வரவேற்பு மற்றும் கௌரவிப்பு யாழ் நாவலர் கலாச்சார மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத அலையொன்று தென்னிலங்கையில் கிளப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதன் தொடர்ச்சியாக தமிழர்களை வந்தேறு குடிகள் என்றும் வாடகை வீட்டுக்காரர்கள் என்றும் இனவாத ரீதியான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். புத்த பிக்குகள், பிரதமர், எதிர்க்கட்சி எம்.பிக்கள் உட்பட அனைத்து சிங்கள தரப்பும் ஒற்றுமையாக நின்று தமிழர்களிற்கு எதிராக செயற்படுகிறார்கள்.

அதிலும் தமிழர்களின் மண்ணையும் மொழியையும் பேசியவர்கள் எல்லாம் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் எனவும் கூறுவதனூடாக அவ்வாறு யாரும் கூறினால் உங்களுக்கும் அதுவே நடக்குமென்ற பாணியில் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

இவ்வாறு தென்னிலங்கையில் மிகப் பெரியளவில் இனவாத ரீதியான பிரச்சாரங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நீதியரசரும் பாராளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரன் அவர்கள் தமிழர்கள் பூர்வீகக் குடிகள் என்று சொன்ன கருத்திற்கு எதிராகவே தற்போது இந்த இனவாதப் பிரச்சாரங்களை அவர்கள் போட்டி போட்டு முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த இடத்தில் நாங்கள் அனைவரும் ஒன்றை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழர்கள் பூர்வீகக் குடிகள் என்றவுடன் தென்னிலங்கை சிங்கள தரப்புக்கள் எல்லாம் ஒன்றிணைந்து அதனை எதிர்க்கின்றனர். ஆனால் தமிழர்கள் இதனைக் கேட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டுமே இருக்கின்றனர்.

சிங்கள தேசம் தமிழர்களுக்கு எதிராக ஒன்று திரண்டு ஒற்றுமையாக எதிர்கின்ற நிலையில் தமிழர் தேசத்தில் அந்த ஒற்றுமை இல்லை. தமிழர் தரப்புக்களிடத்தே அந்த ஒற்றுமை என்பது கானல் நீராகவே உள்ளது. தென்னிலங்கை இனவாத அலையை எதிர்ப்பவர்கள் சொற்பமாகவே உள்ளனர். ஆக தமிழ் தேசம் எங்கே போகின்றது என்ற கேள்வி எழுகின்றது.

எமது தொன்மையை பேசியதற்காக, நீங்கள் எல்லோரும் சுட்டுக்கொல்லப்படுவீர்கள் என்றார் சரத் பொன்சேகா. இராணுவத்தில் என்ன சுட்டார்கள் என்பது தெரியவில்லை. இப்பொழுது வாய் திறந்து கத்துகிறார். அப்போது நாம் சுடுகின்ற போது இவர் எங்கேயிருந்தார்.

தமிழர்கள் பூர்வீக்கக் குடிகள் என்றதற்கு எதிர்ப்பு வந்தாலும் நாம் எமது மண்ணையும் மொழியையும் காப்பாற்ற வேண்டும். அதற்காக நாம் ஒன்றிணைந்து குரலெழுப்ப வேண்டும். எமது ஒற்றுமையே தற்போது அவசியமானது. ஏனெனில் எங்களுக்கு எதிராக தெற்கில் அவர்கள் எவ்வாறு ஒன்று திரண்டு இருக்கின்றனர் என்பதை தெளிவாகப் பார்க்க வேண்டும். ஆகையினால் எங்களுக்குள்ளும் அந்த ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.

யாழ்ப்பாணத்திற்கு நான் வந்திருந்த போது ஒரு செய்தியொன்றைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்திருந்தேன். அதாவது தமிழ்த் தேசியக் கட்சிகளாக இருக்கின்ற வீடு, மீன், சைக்கில்ள் கட்சிகளின் இளைஞரணியினர் ஒருமித்து ஒரு முடிவொன்றை எடுத்துள்ளனர். தியாக தீபம் தீலீபன் நிகழ்விற்காக ஒன்றாகச் சேர்ந்து செயற்படுவதாக அவர்கள் எடுத்துள்ள அந்தத் தீர்மானத்தை நான் வரவேற்கிறேன். இளைஞர்களின் ஒற்றுமையான அந்தச் செயற்பாட்டிற்கு நாங்கள் எங்களது முழுமையான ஆதரவை வழங்குவதற்குத் தயாராகவே இருக்கிறோம். இளைஞர்கள் ஒற்றுமையாக ஒருமித்துச் செயற்பட முன்வந்துள்ளது போன்று கட்சிகளும் அதற்கு முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறோம். அதனைவிடுத்து எங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்றால் எமது வாழ்வு கேள்விக்குறி.

ஆகவே எங்கள் மொழி கலை கலாச்சாரம் மண் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு நாங்கள் அனைவரும் ஒன்றுட்டு செயற்பட வேண்டியது அவசியம். குறிப்பாக எங்களுக்குள் இனியும் வீடு, மீன் , சைக்கில் என்ற பாகுபாடு காட்டக் கூடாது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். அதனைவிடுத்து உதட்டளவில் தேசியம் பேசுவதில் பயனில்லை. மேலும் உதட்டளவில் ஒற்றுமை குறித்துப் பேசுவதையும் நிறுத்த வேண்டும். மனப்பூர்வமாக ஒருமித்துச் செயற்பட வேண்டும். அவ்வாறானதொரு ஒற்றுமைக்காகவே நாங்கள் தொடர்ந்தும் கூட்டமைப்பில் இருந்து வருகின்றோம்.

இந்தக் கூட்டமைப்பை ஆரம்பித்த போது இருந்த கட்சிகள் எல்லாம் அதிலிருந்த வெளியேறியிருக்கின்ற போதும் நாங்கள் தொடர்ந்தும் கூட்டமைப்பிலேயே இருந்து வருகின்றோம். ஆகவே எங்களது கட்சியிலும் சரி கூட்டமைப்பிலும் சரி எம்முடன் இருந்து பிரிந்து சென்றவர்கள் இணைந்து செயற்பட முன்வர வேண்டும்.

குறிப்பாக நாடாளுமன்றில் இன்றைக்கிருக்கின்ற சூழ்நிலையில் நாடாளுமன்றத்தில் நாங்கள் ஒருமித்து செயற்பட வேண்டும். தமிழ் மக்களுக்காக ஒன்றிணைந்த குரல் எழுப்ப வேண்டும். இதில் நாடர்ளுமன்றில் அண்மையில் விக்கினேஸ்வரன் ஐயா தெரிவித்த கருத்துக்கு தென்னிலங்கையின் ஆளும் தரப்புக்கள் எதிர்ப்புத் தெரிவித்த போது கூட அந்த இடத்தில் நாங்கள் தமிழர்களாக குரல் எழுப்பியிருந்தோம்.

அவ்வாறு எங்களுக்கு எதிராக எழுப்பப்டுகின்ற இனவாதத்திற்கு எதிராக நாம் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும். எமது மண்ணையும் மக்களையும் காப்பாற்ற அத்தகைய ஒன்றிணைவு இன்றியமையாதது. அதுவே காலத்தின் கட்டாயமாகவும் இருக்கின்றது. நாங்கள் ஓரணியில் செயற்படுவதற்கு தமிழ்த் தேசியம் பேசுகின்ற தமிழ்க் கட்சிகள் அனைவரும் முன் வர வேண்டும்.

இதனை விடுத்து தேசியம் இனம் மண் என பேசி கொண்டு மக்களை ஏமாற்றும் வகையில் செயற்படக் கூடாது. எங்கள் தேசத்தை நாங்கள் காப்பாற்ற வேண்டும் என்றால் தமிழ் தரப்பில் உள்ள கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். அது உதட்டளவில் இல்லாமல் மனப்பூர்வமாக அமைய வேண்டும். இன்றைய நிலையில் இந்த ஒற்றுமைய ஏற்படாது விட்டால் தந்தை செல்வா சொன்னது போன்று தமிழர்களை கடவுளாளும் காப்பாற்ற முடியாது.

ஆகையினால் அத்தகைய ஒற்றுமையை ஏற்படுத்த நாங்கள் அழைப்பது மாத்திரமல்லாமல் அந்த ஒற்றுமையை ஏற்படுத்த தொடர்ந்தும் உழைப்போம். அவ்வாறு அத்தகையதொரு ஒற்றுமையை நாங்கள் உருவாக்குகிற பொழுது அதற்கு யார் இடைஞ்சலாகவோ அல்லது வரவில்லை என்றாலோ அதனை நாங்கள் தெளிவாக அடையாளப்படுத்திக் கூறுவோம். அவர்கள் யார் என்பதை மக்களாகிய நீங்கள் அறிந்து கொண்டு உங்களது முடிவுகளை எடுக்க வேண்டும்.

இதே வேளை இந்த அரசாங்கம் 20 ஆவது திருத்தம் என்ற ஒன்றை கொண்டு வர உள்ளது. ஆதனை ஆட்சியாளர்கள் தங்களது குடும்ப நன்மைக்காகவே கொண்டு வருவதற்கு முயல்கின்றனர். இதனை நாங்கள் சாதாரணமாகக் கடந்து சென்று விட முடியாது.

அதே போலவே அபிவிருத்தி என்ற விடயத்திலும் நாங்கள் சாதாரணமாக எதனையும் கடந்து போக முடியாது. அபிவிருத்தி செய்வோம் அதுவே தேவை என்ற அடிப்படையில் பிரதமர் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் நாங்கள் எங்களுடைய பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கும் வகையில் நியாயமான ஒரு தீர்வையே கோருகின்றோம். இந்த நிலையில் 13 ஆவது திருத்தத்தை கூட மாற்றுகின்ற செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் கூறுகின்றனர். அதற்கும் இடங்கொடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“புதிய அரசமைப்பில் 13ஆவது திருத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்” – விமல் வீரவன்ச

“அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டமும் 19ஆவது திருத்தச் சட்டமும் நாட்டுக்குச் சாபக்கேடாக அமைந்துள்ளன. இரண்டுக்கும் புதிய அரசமைப்பில் முடிவு காணப்படும். 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தற்காலிக ஏற்பாடேயாகும்.” என  அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை சிறப்புத் தூதுவர் மூலம் கையாள இந்தியா முயற்சிக்கின்றது என வெளிவந்த செய்தி தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த விமல் வீரவங்ச..

“புதிய அரசமைப்பில் 13ஆவது திருத்தத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றே நம்புகின்றோம். இதில் நாம் உறுதியான நிலைப்பாட்டில் இருக்கின்றோம். இதில் இந்தியா தலையிடுவதால் எந்தப் பயனும் இல்லை.

இந்த நாட்டில் இனப்பிரச்சினை தொடர 13ஆவது திருத்தமும் ஒரு காரணமாக இருக்கின்றது. அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டமும் 19ஆவது திருத்தச் சட்டமும் நாட்டுக்குச் சாபக்கேடாக அமைந்துள்ளன. இரண்டுக்கும் புதிய அரசமைப்பில் முடிவு காணப்படும்.

நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூலம் தற்காலிக ஏற்பாடே. அதன்பின்னர் வரவுள்ள புதிய அரசமைப்பு ஆபத்தான திருத்தங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

எனவே, புதிய அரசமைப்பில் இந்தியா விரும்பும் 13ஆவது திருத்தத்தின் பரிந்துரைகளை உட்புகுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேமாட்டாது” எனவும் அவர் குற்ப்பிட்டுள்ளார்.

உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடு என்ற வகையில் இலங்கைக்கு உலக மத்தியில் அங்கீகாரம் . – பிரதமர் மஹிந்த ராஜபக்ச

மனித உரிமைகளை பாதுகாத்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த நாடு என்ற வகையில் இலங்கைக்கு உலக மத்தியில் அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள கூடியதாக அமைந்ததாகவும், அவை அனைத்திற்கும் அமரர் சந்திரசிறி கஜதீரவின் அரசியல் அறிவு மற்றும் நற்பண்பு என்பனவே காரணமாக அமைந்ததாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மாத்தறை உயன்வத்த எச்.கே.தர்மதாச விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற சந்திரசிறி கஜதீரவின் ஆண்டு நினைவு விழாவில் கலந்து கொண்டு சந்திரசிறி கஜதீரவின் உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

உலகின் மிக மோசமான பயங்கரவாதிகளை எவ்வித சிக்கல்களும் இன்றி புனர்வாழ்வளித்து, மீண்டும் சமூகத்துடன் இணைப்பதற்கு முன்னாள் அமைச்சர் சந்திரசிறி கஜதீரவின் தலைமை மிகவும் முக்கியமானதாக அமைந்ததாக, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

´யுத்தம் நிறைவடையும் காலத்தின் போது சந்திரசிறி கஜதீர சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சராக சேவையாற்றினார். இந்நாட்டின் சுமார் 13 ஆயிரம் தமிழீழ விடுலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் புனர்வாழ்வு பெறுவதற்காக அவரிடம் சரணடைந்தனர்.

இது மிகவும் பொறுப்பான முறையில் மேற்கொள்ள வேண்டிய கடமையாக இருந்தது. அவரது ஆட்சிக் காலத்தில், 13 ஆயிரம் தமிழீழ விடுலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு எவ்வித பிரச்சனைகளும் இன்றி விடுவிக்கப்பட்டனர். அது மிகவும் பொறுப்புடன் நிறைவேற்ற வேண்டிய கடமையாகவும் அமைந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

செம்மணி படுகொலைகள் நினைவுநாள் இன்று அனுஸ்டிப்பு!

யாழ்.செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட சுண்டுக்குளி மாணவி குமாரசாமி கிருசாந்தியின் 24ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டது.

இதன்போது, செம்மணி பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஏனையவர்களையும் நினைவு கூர்ந்து, அஞ்சலி செலுத்தப்பட்டது.

1996ஆம் புரட்டாதி மாதம் 7ஆம் திகதி, யாழ்.சுண்டிக்குளி கல்லூரி மாணவி கிருஷாந்தி (வயது 18) வீதியால் சென்று கொண்டிருந்தவேளை செம்மணி பகுதியில் அப்போதிருந்த இராணுவ முகாமில் வழிமறித்த இராணுவத்தினர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கழுத்தை நெறித்து படுகொலை செய்ததாக கூறப்படுகின்றது.

மேலும், செம்மணி இராணுவ முகாமில் கிருஷாந்தியை தடுத்து வைத்திருந்ததை, ஊர் மக்கள் கண்ணுற்று, மாணவியின் தாயாரிடம்  தெரியப்படுதாகவும் அதனைத் தொடர்ந்து மாணவியின் தாயாரான ஆசிரியை குமாரசாமி இராசம்மா (வயது 59), மாணவியின் சகோதரனும் யாழ்.பரியோவான் கல்லூரி மாணவனான குமாரசாமி பிரணவன் (வயது 16) மற்றும் மாணவியின் வீட்டுக்கு அயல் வீட்டில் வசிக்கும் தென்மராட்சி பல நோக்கு கூட்டுறவு சங்கத்தில் உதவியாளராக கடமையாற்றிய சிதம்பரம் கிருபாமூர்த்தி (வயது 35) ஆகியோர் மாணவியை தேடி சென்று செம்மணி இராணுவ முகாமில் விசாரித்தவேளை அவர்கள் மூவரையும் இராணுவத்தினர் படுகொலை செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

படுகொலை செய்யப்பட்ட நால்வரின் உடல்களை அன்றைய தினம் நள்ளிரவே செம்மணி பகுதியிலுள்ள வயல் வெளியில் இராணுவத்தினர் புதைத்தனர் எனவும் கூறப்படுகின்றது.

அதேவேளை யாழில் அக்கால பகுதியில் கடத்தப்பட்டவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் 600பேருக்கும் அதிகமானவர்கள் செம்மணி வயல் வெளிகளில் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக பெரும்பாலானோர் கூறுகின்றமையும் நினைவில் கொள்ளத்தக்கது.

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரங்களுக்கான புதிய தூதுவர்கள் தெரிவு! – 60 வயதிற்கு மேற்பட்ட, ஓய்வுபெற்ற இராஜதந்திரிகள் நாடு திரும்ப காலக்கெடு.

வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதரங்களுக்கான புதிய தூதுவர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி புதுடில்லி, வொஷிங்டன், சென்னை, டோக்கியோ, பெய்ஜிங் மற்றும் ஒட்டோவா ஆகிய இலங்கை  தூதரங்களுக்கான புதிய தூதுவர்களே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின்  வெளிவிவகார செயலாளராக பதவி வகித்த ரவிநாத் ஆரியசிங்க அமெரிக்காவின் வொஷிங்டனுக்கான புதிய தூதுவராக நியமிக்கப்படவுள்ளதுடன், இந்தியாவின் புதுடில்லிக்கான தூதுவராக மிலிந்த மொரகொடவும், சீனாவின் பெய்ஜிங்கிற்கான தூதுவராக கலாநிதி பாலித கோகணவும் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களில் பணிபுரியும் 60 வயதிற்கு மேற்பட்ட, ஓய்வுபெற்ற இராஜதந்திரிகள் பலருக்கு நாடு திரும்பிவர வேண்டும் என காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

நியுயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகவுள்ள ஷேனுகா செனவிரத்ன, ஒட்டாவிற்கான தூதுவராகவுள்ள அசோக கிரிகாகம, சுவீடனின் ஸ்டோக்ஹோம் தூதுவராகவுள்ள சுதந்தக கனேகமாராச்சி, எகிப்தின் தூதுவராகவுள்ள தமயந்தி ராஜபக்ஷ, ஹவானா தூதுவராகவுள்ள ஏ.எல்.ரத்னபால மற்றும் ஹேய்கிற்கான தூதுவராகவுள்ள சுமித் நாகந்த ஆகியோருக்கே இந்த காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்ளது.

13வது திருத்தச் சட்டத்தை நீக்குவது ஒரு விளையாட்டுத் தனமான விடயமல்ல” – எச்சரிக்கின்றார் சித்தார்த்தன்.

“அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தை நீக்கும் துணிச்சல் அரசாங்கத்திற்கு இல்லை. இது ஒரு விளையாட்டுத்தமான விடயமல்ல. இரு நாடுகளுக்கும் இடையில் அமைதியை ஏற்படுத்தும் வகையில் செய்துகொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தமாகும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

“13வது திருத்தச் சட்டத்தை நீக்கும் முயற்சிகள் ஏதும் திறைமறைவில் முன்னெடுக்கப்டுக்கப்பட்டால் அதனை முறியடிக்க உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

13வது திருத்தச் சட்டம் தொடர்பில் நாட்டில் பலவிதமான கருத்தாடல்கள் இடம்பெற்றுவரும் பின்புலத்தில் தமிழ் செய்தி ஊடகமொன்று கருத்து தெரிவிக்கும் போதே தர்மலிங்கம் சித்தார்த்தன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “13வது திருத்தச் சட்டம் தமிழ்த் மக்களுக்கான முழுமையான தீர்வு இல்லை என்பதை தமிழ் மக்கள் அதனை அறிமுகப்படுத்திய போதே தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தனர். இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் இருநாடுகளுக்கும் இடையில் செய்துக்கொள்ளப்பட்ட ஒப்பந்தமாக இது இருந்தபோதிலும் இன்றுள்ள சூழலில் தமிழ் மக்களுக்கு அற்ப சொற்ப அதிகாரங்களை பகிரக் கூடிய ஒரு தீர்வுத்திட்டமாக இது உள்ளது.

13வது திருத்தச் சட்டத்தை நீக்க வேண்டுமென பலர் தனிப்பட்ட ரீதியில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். அது அவர்களது தனிப்பட்ட கருத்தாகும். அரசாங்கம் 13வது திருத்தச் சட்டம் குறித்து எவ்வித கருத்துகளையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

13வது திருத்தச் சட்டத்தை இலகுவாக நீக்கிவிட முடியாது. இது ஒரு விளையாட்டுத்தனமான விடயமல்ல. இரு நாடுகளுக்கும் இடையில் செய்துக்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தமாகும். ஒப்பந்தத்தை செய்துள்ள இந்தியா இந்த விடயத்தை நீக்குவதற்கு ஒருபோதும் இடமளிக்காது. 13வது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கான முயற்சிகளை அரசாங்கம் எடுக்காதென்றே கருதுகிறோம். அதற்கான துணிவு அரசாங்கத்திடம் இல்லை.

இந்தியாவில் தற்போது மோடி அரசாங்கம் உள்ளதால் அவர்கள் இதனை கண்டுகொள்ள மாட்டார்களென சிலர் கூறுகின்றனர். அவ்வாறில்லை. மோடி அரசாங்கமோ அல்லது ராஜீவ் அரசாங்கமோ அல்ல இதில் முக்கியம். இந்திய அரசாங்கம் ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது. இலங்கையில் அரசாங்கங்கள் மாறினால் கடந்த அரசாங்கம் செய்த ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்படுவது போன்று இதனை அர்த்தப்படுத்திக்கொள்ள கூடாது. இந்தியாவில் அரசாங்கங்கள் மாறினாலும் அதன் வெளிவுறவுக் கொள்கை மாறாது. இதுதான் ஆரம்பகாலம் முதல் இந்தியா கடைப்பிடிக்கும் வரலாறு.

நாம் இந்தியாவுடன் இராஜந்திர பேச்சுவார்த்தைகளுக்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சந்திப்புகளை தற்போது மேற்கொள்வது கடினம். என்றாலும் 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் அரசாங்கம் ஏதும் நகர்வுகளில் ஈடுபட்டால் நாம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அதனை முறியடிப்பதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்.” என்றுள்ளார்.