உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“ஒரு இழிவான செயலை செய்துவிட்டு அதனை மேலிடத்து உத்தரவு என்று பல்கலைகழக நிர்வாகம் காரணம் கூற முடியாது” – சி.வி.விக்னேஸ்வரன் காட்டம் !

“ஒரு இழிவான செயலை செய்துவிட்டு அதனை மேலிடத்து உத்தரவு என்று பல்கலைகழக நிர்வாகம் காரணம் கூற முடியாது” என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் தற்போது உருவாகியிருக்கும் நிலைமைகள் தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே இவ்வாறு விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

அவர் இது குறித்து மேலும் தெரிவிக்கும் போது,

இப்போது இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி. யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் அவர்களின் உறவுகளுக்காக அமைக்கப்பட்டது.

மாணவர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர் என அனைத்துத் தரப்பினரும் இணைந்தே இதனை அமைத்தார்கள். இதனை நிர்மூலமாக்க வேண்டும் என்ற அரசின் உயர் தரப்பினரின் அழுத்தங்களையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம், இராணுவப் பாதுகாப்புடன் இதனை அகற்றியிருக்கின்றது.

கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், அவர்கள் மீதான படுகொலைகள் போன்றவற்றின் நினைவுகளை முழுமையாக அகற்றிவிட வேண்டும் என்பது தற்போதைய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றது. அதன் ஒரு அங்கமாகத்தான் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் முன்னெடுக்கும் மிகவும் ஆபத்தான வேலைத் திட்டங்களில் இதுவும் ஒன்று. இது போன்ற பல திட்டங்கள் இந்த அரசிடம் இருப்பதாகத் தெரிகின்றது.

பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் தமது உணர்வுகளின் வெளிப்பாடாக, தமது அன்புக்குரிய உறவுகளை நினைவுகூர்வதற்காக அமைத்த நினைவுத் தூபியை ஒரே இரவில் அராஜகமாகத் தகர்த்தெறிவது என்பது தமிழ் மக்களின் உணர்வுகளைச் சீண்டி நசுக்குவதற்கு ஒப்பானது. இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் ஒருபோதும் நல்லெண்ணத்தை ஏற்படுத்திவிட முடியாது. இது இராணுவ ஒடுக்குமுறையின் கோரத்தின் வெளிப்பாடாகத்தான் இருக்கின்றது. அத்துடன் எம்மவரின் பயத்தின் உச்சகட்டமாகவும் காணப்படுகின்றது.

பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் இராணுவம், அதிரப்படையினரைக் குவித்து துப்பாக்கி முனையில் மாணவர்களையும், பொதுமக்களையும் அச்சுறுத்திப் பணியவைப்பது இராணுவ அடக்குமுறையின் அசிங்க முகத்தையே வெளிப்படுத்துகின்றது. இந்தப் பகுதியில் இராணுவத்தைக் குவிக்க வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. உடனடியாக இராணுவம் அங்கிருந்து திரும்ப வேண்டும். இப்பொழுது இங்கு நடப்பது வெகுவிரைவில் சிங்களப் பகுதிகளிலும் ஏதோ ஒரு விதத்தில் நடைபெறப் போகின்றது என்பதை எமது சிங்கள சகோதர சகோதரிகள் உணர்வார்களாக!

அதேவேளை, இந்த நினைவுத் தூபி இடிப்பு விடயத்தில் பல்கலைக்கழக நிர்வாகம் நடந்து கொண்ட முறைமை குறித்து விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஒரு இழிவான செயலை செய்துவிட்டு அதனை மேலிடத்து உத்தரவு என்று காரணம் கூற முடியாது. ஒரு தவறான காரியத்தை செய்யுமாறு மேலிடத்து உத்தரவு வருமானால், அதனை செய்வதில் உள்ள பிழை அல்லது அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் ஆகியவற்றை மேலிடத்துக்கு எடுத்துக்கூறி புரிய வைப்பது சம்பந்தப்பட்டவர்களின் கடமை. இது இந்த விடயத்தில் எந்தளவுக்கு நடைபெற்றிருக்கிறது என்பது எனக்கு தெரியாது. எது எப்படி இருந்தாலும், இதுவரை காலமும் இந்த நினைவுத் தூபியை அகற்றுவதற்கு பல்கலைக்கழகத்தின் முன்னைய இரண்டு நிர்வாகங்களும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது கருத்தில் கொள்ளப்படவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

யாழ்.பல்கலைகழக நினைவு தூபி இடிக்கப்பட்டதன் எதிரொலி – சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு வைகோ ஆயத்தம் !

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் உட்பட பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு தமிழக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து அவர் கூறியிருப்பதாவது:

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து வரும் 11ந்திகதி சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும். படுகொலையின் அடையாளங்கள் கூட இருக்கக்கூடாது என்பதற்காக நினைவு முற்றத்தை சிங்கள அரசு இடித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

கைது செய்யப்பட்ட யாழ்.பல்கலைகழக மாணவர்கள் பிணையில் விடுதலை !

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நிலையில் 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தலா ஒரு ஆள் பிணையில் அவர்களை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், பல்கலைக்கழக நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் நேற்று(08.01.2021) இரவோடு இரவாக இடித்து அழிக்கப்பட்டுள்ளது.

இதனை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் சமூக ஆர்வலர்களும் பல்கலைக்கழக பிரதான வாயிலில் நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் இருவரும் இன்று யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

அத்துமீறி பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழைந்தமை மற்றும் கலகம் விளைவித்தனர் என்று இரண்டு குற்றச்சாட்டுகள் மாணவர்கள் இருவருக்கும் எதிராக முன்வைக்கப்பட்டன.

மாணவர்கள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி விஸ்வலிங்கம் திருக்குமரன், நடந்தவற்றை மன்றுரைத்து பிணை விண்ணப்பத்தை முன்வைத்தார்.

இரு தரப்பினரது விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான், மாணவர்கள் இருவரையும் தலா 50 ஆயிரம் ரூபாய் பிணையில் விடுவித்து உத்தரவிட்டார். வழக்கு தவணையிடப்பட்டது.

யாழ்.பல்கலைகழக நினைவுத்தூபி இடிப்பு – தமிழக முதலமைச்சர் உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் !

யாழ்பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டமை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் எந்தத் தேர்தலாக இருந்தாலும், எந்த சமயத்திலும் அதிமுக  தலைமையில்தான் கூட்டணி - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம், cm ...

“இலங்கை முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப்போரில் இரக்கமின்றி கொல்லப்பட்ட பல்கலைகழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக யாழ்ப்பாணம் பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த நினைவுதூண் இரவோடிரவாக அழிக்கப்பட்டுள்ளமை பேரதிர்ச்சி தருகின்றது என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
உலகதமிழர்களை பெரும்வேதனையில் ஆழ்த்தியுள்ள இலங்கை அரசின் மாபாதக செயலுக்கும் அதற்கு துணைபோன யாழ்பல்கலைகழக துணைவேந்தருக்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்” என எடப்பாடி பழனிச்சாமி குறிபபிட்டுள்ளார்.

இதே வேளை முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிப்புக்கு, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “ஈழத் தமிழர்களின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் சிதைக்கப்பட்டதன் தொடர்ச்சியாக, யாழ் பல்கலையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூணும் இடிக்கப்பட்டதற்கு எனது கடும் கண்டனங்கள்! பிரதமர் மோடி இந்த அதிர்ச்சி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திட வேண்டும்! இது உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு!” என்று மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில், “ஈழப்பேரழிவை சந்தித்து நிற்கும் தமிழர்களை சீண்டும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடம் இரவோடு இரவாக இடித்து தகர்க்கப்பட்டுள்ளது பேரதிர்ச்சி அளிக்கிறது. இனப்படுகொலை செய்த ஆட்சியாளர்களின் தொடர் இனஅழிப்பின் நடவடிக்கையாகத்தான் இதைக் கருதவேண்டியிருக்கிறது” என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் ட்விட்டர் பக்கத்தில் கண்டனத்தைப் பதிவு செய்திருக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

“துணைவேந்தர் என்பவர் அரசின் அடிவருடி அல்லர். அடிபணிந்து ஒரு ஈனச் செயலைச் செய்வதைவிடப் பதவி துறப்பது மேலானது” – பொ. ஐங்கரநேசன்

“துணைவேந்தர் என்பவர் அரசின் அடிவருடி அல்லர். அடிபணிந்து ஒரு ஈனச் செயலைச் செய்வதைவிடப் பதவி துறப்பது மேலானது”  என தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

யாழ் பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நேற்றிரவு (08.01.2021) பல்கலைக்கழக நிர்வாகத்தால் இடித்தழிக்கப்பட்டது தொடர்பாகப் பொ. ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தனது கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பை நிகழ்த்திய ராஜபக்ச சகோதரர்கள் அதற்கான சாட்சியங்களையும், தடயங்களையும் அழித்தொழிப்பதில் முழுவீச்சுடன் செயற்பட்டு வருகின்றனர். அதன் ஒரு கட்டமாகவே முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள், ஊழியர்கள், அவர்தம் உறவினர்கள் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியைத் தற்போது பல்கலைக்கழக நிர்வாகத்தினரைக் கொண்டே இடித்து அழித்துள்ளனர்.

நினைவுத்தூபிகள் பெறுமனே சீமெந்தாலும் கற்களாலும் ஆன உயிரற்ற தூண்கள் அல்ல. கருங்கல்லாக இருக்கும் வரைக்கும் காலடியில் மிதிபடும் பாறையாகக் கருதப்படுகின்ற கருங்கல் தெய்வச்சிலையாக வடிக்கப்பட்ட பின்னர் எவ்வாறு புனிதம் பெற்று வணக்கத்துக்குரியதாக மாறுகின்றதோ அதேபோன்றுதான் நினைவுக்கற்களும், நினைவுத்தூபிகளும். இவற்றில் மரணித்துப் போனவர்களின் ஆன்மா குடிகொண்டிருப்பதாகவே அவற்றை அஞ்சலிப்பவர்கள் நம்புகிறார்கள்.

தமிழத்தேசிய விடுதலைப் போராட்டத்தில் காத்திரமான வரலாற்றுப் பங்களிப்பை நல்கிவந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், தற்போது பல்கலைக்கழக நிர்வாகத்தினரின் இழிசெயலால் தன் மீது கழுவ முடியாத கரியைப் பூசிக் கொண்டுள்ளது. அரசாங்க அதிகாரிகள், அரசின் சேவகர்களாக இருக்கும் அதேசமயம் அவர்கள் சார்ந்த இனத்தின் நலன்களையும் அபிலாசைகளையும் கருத்தில் கொள்பவர்களாக இருத்தல் வேண்டும்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த பேராசிரியர் அ. துரைராஜா அவர்கள் ஒரு துணைவேந்தராக பல்கலைக்கழகத்தை நல்வழி நடத்திச் சென்ற அதேவேளை, தமிழ் இனத்தின் அரசியல் விடுதலை குறித்த தெளிவான பார்வையுடனும் செயற்பட்டிருந்தார். அதனாலேயே அவர் மாமனிதராகப் போற்றப்படுகின்றார். இப்போதுள்ளவர்கள் மாமனிதர்களாக வேண்டாம். குறைந்தபட்சம் மனிதர்களாகக்கூட நடந்திருந்தால் மரணித்தவர்களின் நினைவுகளைச் சுமந்துள்ள தூபியை இடிப்பதற்கான உத்தரவைச் சிரமேற்கொண்டு நிறைவேற்றியிருக்கமாட்டார்கள்.

மேலும் பல்கலைக்கழக நுழைவாசற் கதவுகளைப் பூட்டி விளக்குகளை அணைத்துவிட்டுத் திருட்டுத்தனமாகப் பல்கலைக்கழக நிர்வாகமே செய்து முடித்திருக்கிறது. இதற்கு, சட்டவிரோத தூபி என்பதால் அழுத்தங்கள் காரணமாகவே அகற்ற வேண்டி ஏற்பட்டது என்று துணைவேந்தர் பேராசிரியர் சி. ஸ்ரீசற்குணராஜா அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளார். துணைவேந்தர் என்பவர் அரசின் அடிவருடி அல்லர். அடிபணிந்து ஒரு ஈனச் செயலைச் செய்வதைவிடப் பதவி துறப்பது மேலானது என தெரிவித்துள்ளார்.

“பல்கலைகழக தீர்மானத்துக்கு அமையவே நினைவுத்தூபி இடிக்கப்பட்டது ” – இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து

“யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நினைவு தூபி இடித்தழிக்கப்பட்ட விடயத்திற்கும் எமக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என இராணுவம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி உடைக்கப்பட்டமை குறித்து இராணுவத்தின் மீது எழுப்பப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் தனியார் ஊடகமொன்று வினவிய போதே, இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் உள்ளக விடயங்களில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவம் தலையீடு செய்யாது எனவும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் இராணுவத்தின் தலையீடு எதுவும் இல்லையெனவும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் தீர்மானத்திற்கு அமையவே இந்த விடயம் இடம்பெற்றுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்து குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான சிக்கலுக்குரிய சம்பவங்களின் போது பொலிஸாருக்கு உதவி தேவைப்படும் பட்சத்தில் அவர்கள் கோரிக்கை விடுத்தால் மாத்திரம் தம்மால் தலையீடு செய்ய முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வேறு எந்தவொரு விதத்திலும் தம்மால் அந்த விவகாரத்தில் தலையிட முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதே நேரம் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமை தொடர்பாக பல்கலைகழக துணைவேந்தர் எஸ்.சற்குணராஜா குறிப்பிடுகின்ற போது , “யாழ் பல்கலைக்கழகம் என்பது அரசாங்கத்தினுடைய சொத்து எனவே அரசாங்கத்தினுடைய சுற்று நிருபங்களை நடைமுறைப்படுத்த வேண்டியது துணைவேந்தர் ஆகிய எனது கடமை. அதன் அடிப்படையிலேயே நான் இந்த தூபியினை இடித்து அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனெனில் குறித்த தூபி அமைப்பதற்கு அனுமதி எதுவும் பெறப்படவில்லை.

எனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் கடிதத்தின் அடிப்படையில் அனுமதி இல்லாத கட்டடங்கள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும் என அறிவித்தல் வழங்கப்பட்ட தன் அடிப்படையிலேயே நான் அதனை அகற்றியிருந்தேன்” எனவும் அவர் குறிப்பிட்டிருந்தமை நோக்கத்தக்கது.

 

தகவல் மூலம் – ஐ.பி.சி தமிழ்

கொரோனா அச்சமூட்டி விரட்டப்பட்ட போராட்டக்காரர்கள் – யாழ்.பல்கலைகழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் !

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சற்று முன்னர் அறிவித்துள்ளது.

மேலும் போராட்டம் இடைநிறுத்தப்பட்டாலும் சில மாணவர்கள் இடிக்கப்பட்ட நினைவுத்தூபியை மீளக்கட்டடி தரும்வரை நிறுத்தாத உண்ணா விரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் மாணவர் ஒன்றியம் மேலும் அறிவித்துள்ளது.

No description available.

“யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவுத்தூபிகளை பார்த்து ஏன் நீங்கள் அதிகம் அச்சமடைகின்றீர்கள் ?” – முன்னாள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் கேள்வி !

“யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவுத்தூபிகளை பார்த்து ஏன் நீங்கள் அதிகம் அச்சமடைகின்றீர்கள்” என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்றிரவு(08.01.2021)  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்ட மே-18 நினைவேந்தல் நினைவாலயம் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் இடித்து அழிக்கப்பட்டுள்ளமையானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பலரும் தமது கண்டனங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவருகின்றனர்.

இந்நிலையிலேயே முன்னாள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் மேற்கண்டவாறு ட்விட் செய்துள்ளார்.

மக்களை பலவந்தமாக மறக்கச்செய்வதற்கான முயற்சிகள் மக்கள் முன்னரை விட அந்த விடயத்தை மேலும் நினைவில் வைத்திருக்கும் நிலைமையை உருவாக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களின் நினைவுத்தூபிகளை பார்த்து ஏன் நீங்கள் அதிகம் அச்சமடைகின்றீர்கள் என டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ள அவர் “மக்களின் இழப்புகள் நினைவுகள் வலிகள் துயரங்கள் கண்ணீர்கள் ஏன் உங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன”  எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏனென்றால் வலிகளும் வேதனைகளும் கண்ணீரும் ஆயுதங்களை விட வலிமையானவை என்பது உங்களிற்கு தெரிந்திருக்கின்றது என அவர் பதிவிட்டுள்ளார்.

எந்த தலைவர்களின் உத்தரவு காரணமாக தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்களோ அவர்களின் நினைவுத்தூபியை சிதைப்பதற்கு இரவின் இருளில் இயந்திரங்களை அந்த தலைவர்களே அனுப்புவது இழிவானது – இனவெறி -கொடுரமானது என கிரவுண்ட் வியுஸ் இணையத்தளத்தின் ஆசிரியர் அமாலினி டி சய்ரா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

“400 வருடங்கள் இலங்கையை ஆக்கிரமித்திருந்த வெள்ளையர்களிடமிருந்து நாட்டை மீட்டு அதன் தனித்துவத்தன்மையை நிலைநாட்டியவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா” – மைத்திரி சிறிசேன புகழ்ச்சி !

“400 வருடங்கள் இலங்கையை ஆக்கிரமித்திருந்த வெள்ளையர்களிடமிருந்து நாட்டை மீட்டு அதன் தனித்துவத்தன்மையை நிலைநாட்டியவர் எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்கா” என முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகத் தலைவர் முன்னாள் ஜனாதிபதி எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டாரநாயக்காவின் 122 ஆவது ஜனன தினம் நேற்று(08.01.2021) அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ,

எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டார நாயக்க நாட்டில் புதியதொரு யுகத்தை உருவாக்கிய தலைவர் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். சுமார் 400 வருடங்கள் இலங்கையை ஆக்கிரமித்திருந்த வெள்ளையர்களிடமிருந்து நாட்டை மீட்டு அதன் தனித்துவத்தன்மையை நிலைநாட்டி நாட்டு மக்களின் சகல உரிமைகளையும் வென்றெடுத்ததில் அவர் முக்கிய பங்கினை வகிக்கின்றார்.

1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டார நாயக்க அரசாங்கத்தை மக்கள் தமது அரசாங்கம் என்று கருதினர். 3 வருடங்கள் குறுகிய காலத்திற்குள் அவர் பல சேவைகளை ஆற்றியுள்ளமையின் காரணமாகவே இன்றும் மக்கள் அவரை நினைவு கூர்கின்றனர்.

அவர் தலைமையிலான முற்போக்கான அரசியல் கட்சி நாட்டில் பல மாற்றங்களை ஏற்படுத்தியது. மனிதனொருவனின் பிரதான கடமை பிரிதொரு மனிதனுக்கு சேவையாற்றுவது என்பதே அவரது கொள்கையாகும். எஸ்.டபிள்யு.ஆர்.டி.பண்டார நாயக்கவின் வெளிநாட்டு கொள்கைகளின் அடிப்படையிலேயே சர்வதேசம் இலங்கையின் மீது அவதானம் செலுத்தியது.

இவரால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை சிறிமாவோ பண்டாரநாயக்கவும் சிறப்பாக முன்னெடுத்துச் சென்றார். அவரது முற்போக்கான அரசியல் முன்னெடுப்புக்கள் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினால் மாத்திரமின்றி முற்போக்கு சிந்தனையுடைய அனைவராலும் தொடர்ந்தும் பின்பற்றப்படும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதில் கலந்துக்கொண்டு அஞ்சலி செலுத்திய முன்னாள் ஜனாதிபதி சந்திக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது “தற்போதும் நான் தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்அதனை ஒரு வருடத்திற்கு முன்னரே நான் கூறினேன். தற்போது கட்சியின் தலைவராக இருப்பவர் சட்டவிரோதமாகவே உள்ளார்.” எனவும் அவர் மைத்திரிபால சிறிசேன தொடர்பாக குறிப்பிட்டிருந்தமை நோக்கத்தக்கது.

“மே 18 தூபியை அகற்றியிருக்காவிட்டால் ஏனைய மாவீரர் நினைவு தூபிகளும் நிர்மூலமாக்கப்பட்டிருக்கும்” – துணைவேந்தர் எஸ்.சற்குணராஜா விளக்கம் !

“மே 18 தூபியை அகற்றியிருக்காவிட்டால் ஏனைய மாவீரர் நினைவு தூபிகளும் நிர்மூலமாக்கப்பட்டிருக்கும்”  என யாழ்.பல்கலை துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.சற்குணராஜா கூறியுள்ளார்.

நேற்றிரவு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒன்றியத்தினால் அமைக்கப்பட்ட மே-18 நினைவேந்தல் நினைவாலயம் யாழ்ப்பாண பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் இடித்து அழிக்கப்பட்டது. மேலும் விஷேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு அங்கு கூடிய மாணவர்களும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்றலில் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

யாழ் பல்கலைக்கழகம் என்பது அரசாங்கத்தினுடைய சொத்து எனவே அரசாங்கத்தினுடைய சுற்று நிருபங்களை நடைமுறைப்படுத்த வேண்டியது துணைவேந்தர் ஆகிய எனது கடமை. அதன் அடிப்படையிலேயே நான் இந்த தூபியினை இடித்து அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏனெனில் குறித்த தூபி அமைப்பதற்கு அனுமதி எதுவும் பெறப்படவில்லை.

எனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல் கடிதத்தின் அடிப்படையில் அனுமதி இல்லாத கட்டடங்கள் அனைத்தையும் உடனடியாக அகற்ற வேண்டும் என அறிவித்தல் வழங்கப்பட்ட தன் அடிப்படையிலேயே நான் அதனை அகற்றியிருந்தேன்.

இதனை அகற்றத் தவறி இருந்தால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் காணப்படும் ஏனைய பொங்குதமிழ் தூபி மற்றும் மாவீரர் நினைவாலயம் என்பனவும் நிர்மூலமாக்கப்பட்டிருக்கும் எனவே இதனை தடுக்கும் முகமாகவே நான் எமது நிர்வாகத்தினரின் உதவியுடன் நேற்றிரவு அனுமதி இல்லாது அமைக்கப்பட்ட மே-18 நினைவேந்தல் தூபியினை அகற்றியிருந்தேன்” என விளக்கம் அளித்துள்ளார்.