வெளிநாட்டுச் செய்திகள்

வெளிநாட்டுச் செய்திகள்

விஸ்வரூபம் எடுக்கும் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீன பிரச்சினை – 12 மாடி கோபுர கட்டிடடத்தை கண் இமைக்கும் நேரத்தில் தரை மட்டமாக்கிய இஸ்ரேல் ஏவுகணைகள் !

காசாவில் இஸ்ரேல் நேற்று நடத்திய ஏவுகணை தாக்குதலில், ஊடக நிறுவனங்கள் செயல்பட்ட 12 மாடி கோபுர கட்டிடம் கண் இமைக்கும் நேரத்தில் தரை மட்டமாகியுள்ளது. கிழக்கு ஜெருசலேம் நகரில் இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. அரேபியர்கள், யூதர்கள் என இரு தரப்பினரும் சொந்தம் கொண்டாடும் புனித தலத்தில் இருந்து பின் வாங்குமாறு இஸ்ரேலை எச்சரித்த ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசத்தொடங்கினர்.

அதைத் தொடர்ந்து இஸ்ரேலும், பாலஸ்தீனத்தின் காசா முனை பகுதியை குறிவைத்து வான்தாக்குதல்களை தொடங்கியது.

ஹமாஸ் அமைப்பினர், இஸ்ரேல் மீது ராக்கெட் வீச்சு நடத்தினாலும், அந்த ராக்கெட்டுகளை நடுவானில் மறித்து அழித்து விடும் இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பினருக்கு கடுமையான பதிலடி கொடுத்து வருகிறார்கள். காசாமுனைப் பகுதியை குறிவைத்து இஸ்ரேல் நடத்துகிற வான்தாக்குதல் மிகக்கொடூரமானதாக இருந்து வருகிறது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினருடன் 100-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்களும் பலியாகி இருப்பதும், இந்தப் பலி தொடர்வதும் சர்வதேச சமூகத்தை அதிர வைத்துள்ளது.

காசாவில் ஊடக நிறுவனங்கள் செயல்பட்ட 12 மாடி கோபுர கட்டிடம் இடிந்து தரை  மட்டம் || Tamil News Israeli airstrike destroys Gaza 12-storey building  that houses mediaஇந்தநிலையில் நேற்று காசாநகரில் இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில், அங்கு அமைந்திருந்த 12 மாடிகளைக்கொண்ட கோபுர கட்டிடம் தீப்பிடித்து எரிந்து, இடிந்து தரை மட்டமானது.

இந்த கட்டிடத்தில்தான் அசோசியேட்டட் பிரஸ், அல்ஜசீரா உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் அமைந்திருந்தன.

இந்த கட்டிடம் இடிந்தபோது அந்தப் பகுதியே புழுதி மண்டலமாக மாறியது. இந்த தாக்குதலை அல்ஜசீரா டி.வி. நேரடியாக ஒளிபரப்பியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த 12 மாடி கோபுர கட்டிடத்தை வீழ்த்தியதின் பின்னணி குறித்து இஸ்ரேல் வாய் திறக்கவில்லை. இந்த கட்டிடத்தை குறிவைத்து இராணுவம் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக அதில் இயங்கிய ஊடக அலுவலகங்களை சேர்ந்தவர்களையும், குடியிருப்புகளில் வசித்து வந்த மக்களையும் வெளியேறுமாறு இராணுவம் உத்தரவிட்ட பின்னர் இந்த தாக்குதலை நடத்தியதால் உயிர்ச்சசேதம் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. இருப்பினும் கண்மூடி திறப்பதற்குள் இந்த 12 மாடி கட்டிடம் தரை மட்டமானது நேரில் கண்டவர்களை பதைபதைக்க வைத்தது.

Israel destroys Gaza tower housing AP and Al Jazeera offices | Reutersஇந்த தாக்குதல் குறித்து அசோசியேட்டட் பிரஸ் நிறுவனத்தின் தலைவர் கேரி புரூட் கூறுகையில், “இது எங்களை மிகுந்த அதிர்ச்சிக்கும், திகிலுக்கும் ஆளாக்கி உள்ளது. இந்த கட்டிடத்தில் எங்கள் நிறுவனம் இயங்கியதையும், அதில் பத்திரிகையாளர்கள் இருந்ததையும் அவர்கள் (இஸ்ரேல்) அறிவார்கள். இந்த கட்டிடம் தாக்கப்படும் என்பது குறித்து எங்களுக்கு எச்சரிக்கை வந்தது” என குறிப்பிட்டார்.

காசாநகரில் மக்கள் அடர்த்தி நிறைந்த அகதிகள் முகாம் பகுதியில் இஸ்ரேல் வான்தாக்குதல் நடத்தி குறைந்தது 10 பாலஸ்தீனியர்களை கொன்றதைத் தொடர்ந்து இந்த தாக்குதலை அரங்கேற்றி உள்ளது. இதனால் காசாமுனைப் பகுதி பதற்றத்தின் பிடியில் சிக்கி உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களை தாக்கும் Black Fungus – மகாராஷ்டிர மாநிலத்தில் 52 பேர் பலி !

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களில் 52 பேர் Black Fungus தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் ஸ்டீராய்டு மருந்துகளினால் ஏற்படும் Mucor mycosis எனப்படும் Black Fungus தொற்று, கொரோனா தொற்றில் இருந்து மீண்ட நோயாளிகளுக்கு ஏற்பட்டு வருகிறது. இந்த தொற்றினால், கண், மூக்கு மற்றும் மூளையில் பாதிப்பு ஏற்படுகிறது.

Deadly 'black fungus' infection found in COVID-19 patients in India

தொற்று அதிகமாகும்போது நோயாளிகள் கண் பார்வையையே இழக்கும் அபாயம் உள்ளது. குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் Black fungus தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மகாரஷ்டிர மாநிலத்தில், கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களில் 52 பேர் Black fungus தொற்றால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக பிளாக் Black fungus தொற்றால் உயிரிழந்தோரின் பட்டியலை மகாராஷ்டிர அரசு வெளியிட்டுள்ளது.

“சவுதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை முதல் முறையாக ஒப்புக்கொண்ட ஈரான்

சவுதி அரேபியாவில் உள்ள மிகப்பெரிய எண்ணெய் வளப்பகுதியான ஹிஜ்ரா குரையாஸி அராம்கோ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள அப்கய்க் மற்றும் குரையிஸ் பகுதிகளில் உள்ள இரு எண்ணெய் ஆலைகளின் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் ஏமன் கிளர்ச்சி படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்களுக்கு சவுதி கிளர்ச்சியாளர்கள் பொறுப்பேற்றனர். எனினும் இதன் பின்னணியில் ஈரான் உள்ளதாக சவுதி, அமெரிக்கா ஆகிய நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன. இதனால் ஈரான் – சவுதி இடையே தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர் ஈரான் – சவுதி தலைவர்கள் பாக்தாத்தில் இருநாட்டு உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. மேலும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஈரானுடன் சிறப்பான உறவை கொண்டிருப்பதாக அண்மையில் தெரிவித்தார்.

இந்நிலையில், சவுதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை முதல்முறையாக ஈரான் அரசு ஒப்புக்கொண்டது. ஈரான் எப்போதும் பிராந்தியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை வரவேற்கும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் சயீத்து தெரிவித்துள்ளார்.

காசா முனையில் தொடரும் பதற்றம் – தாக்குதல் நடத்த தரைப்படையையும் இறக்கிய இஸ்ரேல் – அமெரிக்கா மேற்கொண்டுள்ள புதிய நகர்வு !

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.

இதற்கிடையே, ஜெருசலேமில் உள்ள அல்-அக்‌ஷா மத வழிபாட்டு தளத்தில் கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.

பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு ரொக்கெட் தாக்குதல் நடத்தியது. இதில் இஸ்ரேலியர்கள் பலர் காயமடைந்தனர். இந்த தாக்குதலையடுத்து காசா முனை மீது இஸ்ரேலிய பாதுகாப்பு படை பதிலடி தாக்குதல் நடத்தியது. இரு தரப்பும் மாறிமாறி ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகின்றன.

மோதல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், காசா முனை மீது தாக்குதல் நடத்த விமானப்படையுடன் சேர்த்து தரைப்படையையும் இஸ்ரேல் களமிறக்கியுள்ளது. இதனால் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இரு தரப்பு மோதலில் இதுவரை மொத்தம் 133 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் காசா முனையில் ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் உள்பட 126 பேரும், இஸ்ரேலில் 7 பேரும்  உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்ற நிலையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை அமெரிக்க எடுத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன போராளிகளுக்கிடையில் போர் நிறுத்த பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் வகையில் அமெரிக்க சமாதான துாதுவர் ஒருவர் இஸ்ரேலின் ரெல் அவிவ் பகுதியைச் சென்றடைந்துள்ளார்.

அமெரிக்க துாதுவர் ஹடி ஆம்ர் இருதரப்புடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ள நிலையில் ஐக்கிய நாடுகளுடனும் பேச்சுக்களை நடத்தவுள்ளதுடன் குறித்த பதற்றம் நிலவும் பகுதியில் நிலையான அமைதி ஏற்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

2014க்கு பின்பு மிகப்பெரும் போர் – காசாவில் 35பேரும் இஸ்ரேலில் 05 பேரும் பலி !

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்‌ஷா வழிபாட்டு தளத்தில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை மோதல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினரின் முக்கிய கட்டிடங்கள் தரைமட்டமாகின. இதனை தொடர்ந்து நேற்று முழுவதும் இருதரப்பும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். இன்றும் தாக்குதல் நீடித்தது. குறிப்பாக இன்று அதிகாலையில் இஸ்ரேல் இராணுவம் நூற்றுக்கணக்கான குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.
இவ்வாறு இரு தரப்பும் மாறி மாறி  நடத்திய தாக்குதல்களில் பெரும் உயிரிழப்புகளும் பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இஸ்ரேல் தரப்பில் 5 பேரும், காசா பகுதியில் 35 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். 2014ல் நடந்த போருக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய மோதல் இதுவாகும்.
காசா மற்றும் ஜெருசலேம் பகுதியில் உள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து லோட் நகரில் வசித்து வரும் அரேபியர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் – பாலஸ்தீனியர் இடையே மோதல் – கண்டனம் தெரிவித்து லோட் நகரில் வசித்து வரும் அரேபியர்கள் வன்முறை – அவசரநிலை பிரகடனம் !

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே கடந்த சில நாட்களாக கடுமையான மோதல் நிலவி வருகிறது. இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள அல் அக்‌ஷா வழிபாட்டு தளத்தில் பாலஸ்தீனர்களுக்கும் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் இடையே கடந்த திங்கட்கிழமை மோதல் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது  நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தியது. இதற்கு இஸ்ரேல் நடத்திய பதிலடி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர் உள்பட 30 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து நேற்று முழுவதும் இருதரப்பும் மாறி மாறி தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர்.

அந்த வகையில் காசா முனை பகுதியில் இருந்த 13 மாடி கட்டிடம் இஸ்ரேலிய படையினரால் தரைமட்டமாக்கப்பட்டது. காசா டவர் என்று அழைக்கப்படும் அந்த கட்டிடம் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைமைக்கான அலுவலகம் செயல்பட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னதாக அந்த கட்டிடத்தில் இருந்த பொதுமக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

காசா டவர் கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேலிய நகரங்களை குறிவைத்து ஹமாஸ் அமைப்பு 130 ராக்கெட்டுகளை ஏவியது. இந்த ஏவுகணைகளில் பெரும்பாலானவை இஸ்ரேலிய ஏவுகணை தடுப்பு அமைப்பால் தடுக்கப்பட்டது. ஆனால், சில ஏவுகணைகள் இஸ்ரேலிய தலைநகர் டெல் அவிவ் மற்றும் பிற நகங்களில் விழுந்தன. இதில் பேருந்து, வாகனங்கள், கட்டிடங்கள் தீக்கிரையானது. ஹமாஸ் நடத்திய இந்த தாக்குதலில் கேரளாவை சேர்ந்த பெண் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

இதற்கிடையில், இஸ்ரேலின் லோட் நகரில் வன்முறை வெடித்துள்ளது. லோட் நகரில் இஸ்ரேலிய யூதர்களும், அரேபியர்களும் வசித்து வருகின்றனர்.

காசா மற்றும் ஜெருசலேம் பகுதியில் உள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து லோட் நகரில் வசித்து வரும் அரேபியர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இஸ்ரேலிய யூதர்களின் வீடுகள், கடைகள், வாகனங்கள் மீது லோட் நகரில் வசித்து வரும் அரேபியர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். பல்வேறு வீடுகள், கார்கள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேலிய யூதர்களுக்கும், அரேபியர்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. இந்த சம்பவங்களால் லோட் நகரில் பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், வன்முறையைக் கட்டுப்படுத்தும் விதமாக லோட் நகரம் முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அவசரநிலை பிரகடனத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு இன்று அறிவித்தார்.

அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டதன் மூலம் லோட் நகரில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட உள்ளனர். பாதுகாப்பு படையினர் உள்ளூர் போலீசாருக்கு வன்முறையை கட்டுப்படுத்துவதிலும் அமைதியை நிலைநாட்டுவதிலும் உதவிகரமாக இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் லோட் நகர் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

இந்தியாவின் குஜராத்தில் கொரோனாவிலிருந்து விடுபட வாரத்திற்கு ஒரு முறை மாட்டு சாணம் மற்றும் மாட்டின் கோமியத்தை உடல் முழுவதும் பூசிக்கொண்டு பிரார்த்தனை !

இந்தியா தற்போது கொரோனாவின் இரண்டாம் அலையில் சிக்கி தவித்துவருகிறது. இந்தியாவில்  இதுவரை 2,29,92,517 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனாவால் பலியானர்வகளின் எண்ணிக்கை 2,46,116 உள்ளது. இதன் விளைவாக மக்கள் மருத்துவமனைகளில் போதிய மருத்துவ வசதி மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில், குஜராத்தில் கொரோனாவில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள மக்கள் சிலர் வாரத்திற்கு ஒரு முறை மாட்டு சாணம் மற்றும் மாட்டின் கோமியத்தை உடல் முழுவதும் பூசிக்கொண்டு பிரார்த்தனை செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் கொரோனாவை எதிர்த்துப் போராட நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என அவர்கள் நம்புகிறார்கள்.

காலம் காலமாக ஹிந்துக்கள் மாடுகளை தெய்வமாகவும் மாட்டின் சாணத்தை மற்றும் கோமியத்தை கிருமி நாசினியாக தங்கள் வீடுகளை சுத்தம் செய்ய பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் குஜராத்தில் மக்கள் கொரோனாவிற்கு மருந்தாக மாட்டின் சாணம் மற்றும் கோமியத்தை பயன்படுத்திய சம்பவம் குறித்து மருத்துவர் மக்களை எச்சரித்துள்ளார்.

“மாட்டு சாணத்திலோ அல்லது கோமியத்திலோ கொரோனாவை முறியடிக்கக்கூடிய எந்த விதமான மருத்துவ தன்மையும் இல்லை மேலும் இவை மருத்துவ ரீதியாகவோ அல்லது அறிவியல் ரீதியாகவோ நிரூபிக்கப்படவில்லை என்றும், இவ்வாறாக செய்வதால் மேலும் வேறு நோய்கள் உருவாகக்கூடிய அபாயமும் உள்ளதாக” என இந்திய மருத்துவர்கள் மற்றும்   விஞ்ஞானிகள் பலர் தெரிவித்துள்ளார்.

குஜராத்தை சேர்ந்த கவுதம் மணிலால் என்பர் கூறுகையில் “இங்கு மருத்துவர்கள் கூட வந்து இந்த முறையைச் செய்து செல்கின்றனர். இவ்வாறாக அவர்கள் செய்வதால் மருத்துவமனையில் அவர்கள் சந்திக்கும் நோயாளிகளிடம் இருந்து அவர்களுக்கு தொற்று ஏற்படாது என்பது அவர்களின் நம்பிக்கை” என்று கூறியுள்ளார்.

மேலும் கடந்த ஆண்டு கொரோனா தொற்றிலிருந்து மாட்டின் சாணத்தை உடலில் பூசி பிரார்த்தனை செய்ததால் மட்டுமே அவர் நோயிலிருந்து காப்பாற்றப்பட்டார் என்றும் கூறியுள்ளார். இவர் ஸ்ரீ சுவாமிநாராயண் குருகுல் விஸ்வவித்யா பிரதிஷ்டானம் என்ற இந்து துறவிகள் நடத்தி வரும் பள்ளியில் பல ஆண்டுகளாக உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் இந்திய மருத்துவ கழகத்தின் தேசியத் தலைவர் டாக்டர் ஜே.ஏ.ஜெயலால் குறிப்பிடும் போது “COVID-19 க்கு எதிராக நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்காக பசு அல்லது சிறுநீர் செயல்படுகிறது என்பதற்கு உறுதியான அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை, இது முற்றிலும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது” என்று கூறியிருக்கிறார்.

இஸ்ரேல் போலீசாருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் எதிரொலி – இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் ராக்கெட் தாக்குதல் !

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல்கள் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.

இந்த காசாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின்மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவது வழக்கம். ஹமாஸ் பயங்கரவாதிகளில் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவமும் எதிர்த்தாக்குதல் செய்து வருகிறது.

இதற்கிடையில், இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள ஷைக் ஜாரா மாவட்டத்தில் யூதர்கள் தங்களுக்கு சொந்தமானது என்று கூறும் நிலத்தில் வசித்து வந்த பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்ற இஸ்ரேல் அரசு நடவடிக்கை எடுத்துவந்தது.

இதற்கு கண்டனம் தெரிவித்து ஜெருசலேமில் உள்ள அல் அச்சா மசூதி அமைந்துள்ள பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் போலீசாருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.

முதலில் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மீது தாக்குதலை தொடங்கினர். அதன் பின்னர் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர்.
பாதுகாப்பு படையினர் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தினர். பாலஸ்தீனர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் பலர் காயமடைந்தனர். அதேபோல், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் பலர் காயமடைந்தனர். இந்த மோதலை தொடர்ந்து ஷைக் ஜாராவில் இருந்து பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்றுவது தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கை சிறிது நாட்களுக்கு தள்ளிவைப்பதாக இஸ்ரேல் நீதித்துறை தெரிவித்துள்ளது.

வழக்கு தள்ளிவைக்கப்பட்டபோதும் மோதல் அரங்கேறி வருகிறது. இருதரப்பினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் இந்த மோதல் மிகப்பெரிய அளவில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்று உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளன.

இதன் ஒரு பகுதியாக பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது காசா முனையில் இருந்து ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் நேற்று ராக்கெட் தாக்குதல் நடத்தினர்.

இஸ்ரேல் மீது ஹமாஸ் ராக்கெட் தாக்குதல் - அதிகரிக்கும் பதற்றம்முதலில் 7 ராக்கெட்டுகள் ஹமாஸ் பயங்கரவாதிகளால் ஏவப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் இஸ்ரேலை குறிவைத்து மொத்தம் 45 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலான ராக்கெட்டுகள் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் விழுந்ததாக பாதுகாப்பு படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் தாக்குதலால் ஜெருசலேம் மற்றும் இஸ்ரேலின் பிற நகரங்களில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகளின் ராக்கெட் தாக்குதல் நடத்திய சில மணி நேரத்தில் அந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை பதிலடி கொடுத்துள்ளது. காசா முனையில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி மற்றும் குழந்தைகள் உள்பட மொத்தம் 20 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் பதிலடி தாக்குதலால் ஜெருசலேம், ஹமாஸ் பகுதிகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஆப்கானிஸ்தானில் ஷியா முஸ்லிம் மகளிர் பள்ளிக்கூடத்தை குறிவைத்து பயங்கரவாதத்தாக்குதல் – பலியான மாணவிகள் எண்ணிக்கை 60ஆக உயர்வு !

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகம் வாழும் டாஷ்தே  பார்ச்சி நகரில் மகளிர் பள்ளிக்கூடம் ஒன்று உள்ளது. இரு தினங்களுக்கு முன் மாலை வகுப்புகள் முடிந்து மாணவிகள் பள்ளியை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர்.

அப்போது பள்ளிக்கூடத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. குண்டு வெடிப்பில் சிக்கி மாணவிகள் மரண ஓலம் விட்டனர். என்ன நடக்கிறது என சுதாரிப்பதற்குள் அடுத்தடுத்து மேலும் 2 குண்டுகள் வெடித்துச் சிதறின. இந்த தொடர் குண்டுவெடிப்பு ஒட்டுமொத்த நகரையும் அதிர வைத்தது.‌ முதல் கட்டமாக 25 மாணவிகள் பலியானதாக தகவல் வெளியானது.

ஆப்கானிஸ்தானில் பள்ளிக்கூடத்துக்கு வெளியே நடந்த தொடர் குண்டு வெடிப்பு! பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு!இந்நிலையில், குண்டு வெடிப்பில் பலியான மாணவிகள் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 100-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.‌

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. கடந்த காலங்களில் ஷியா பிரிவு முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்பட்ட பல பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. எனவே இந்த கொடூர தாக்குதலையும் அவர்களே நடத்தி இருக்கக் கூடும் என நம்பப்படுகிறது.

முந்தைய அரசை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக அறிவித்தது மியன்மார் இராணுவம் !

மியன்மாரில் ராணுவ ஆட்சி நடந்து வரும் சூழலில் முந்தைய அரசைச் சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் இராணுவம் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை இராணுவம் கைப்பற்றியுள்ளது. மேலும் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைண்ட் உள்பட ஆளும் கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தலைவர்களை கைது சிறை வைத்துள்ளது. அதுமட்டுமின்றி நாடு முழுவதும் ஓராண்டுக்கு அவசரநிலையை இராணுவம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத்தேர்தலில் மோசடி நடந்திருப்பதாகக் குற்றம்சாட்டி, ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறது மியன்மார் ராணுவம்.

ஆனால் மியான்மர் மக்கள் இராணுவ ஆட்‌சியை ஏற்க மறுத்து கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தினமும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் இந்த தன்னெழுச்சி போராட்டத்தை மியான்மர் இராணுவம் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது.

இராணுவ ஆட்சி தொடங்கியதில் இருந்து இப்போது வரை இராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் 700-க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் மியான்மரில் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. அதேபோல் போராட்டக்காரர்கள் மீது இராணுவம் வன்முறையை கட்டவிழ்த்து விடுவதும் தொடர்கிறது.

இதனிடையே இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆளும் கட்சி தலைவர்கள் பலரையும் ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ள அதேவேளையில் துணை அதிபர் மான் வின் கைங் தான் மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் இராணுவத்திடம் இருந்து தப்பி தலைமறைவாகினர்.

அதனை தொடர்ந்து இராணுவத்திடம் இருந்து தப்பிய ஆளும் கட்சி எம்.பி.க்கள் பைடாங்சு ஹுலுட்டாவ் (மியான்மர் நாடாளுமன்றம்) பிரதிநிதிகள் குழு (சி.ஆர்.பி.எச்) என்கிற குழுவை தொடங்கினர். இந்தக் குழுவின் தலைவராக (பொறுப்பு) மான் வின் கைங் தான் உள்ளார். மியான்மரின் நிழல் அரசாக செயல்பட்டு வரும் இந்த சி.ஆர்.பி.எச்., நாட்டின் மக்களாட்சி அரசாக செயல்பட சர்வதேச அங்கீகாரத்தை நாடுகிறது.

ஆனால் மியான்மர் இராணுவம் சி.ஆர்.பி.எச்-சை சட்ட விரோத குழுவாக கருதுகிறது.
அந்த குழுவுடன் ஒத்துழைக்கும் எவரும் தேசத்துரோக குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ள நேரிடும் என இராணுவம் ஏற்கெனவே எச்சரித்துள்ளது. இந்தநிலையில் சி.ஆர்.பி.எச்-சை பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ள மியான்மர் இராணுவம், முந்தைய அரசை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அனைவரையும் பயங்கரவாதிகளாக அறிவித்துள்ளது.

இராணுவ ஆட்சிக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம் தொடங்க காரணமாக இருந்ததோடு அதற்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால் முந்தைய அரசின்நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாக மியான்மர் இராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

அதுமட்டுமன்றி மியான்மரின் நிழல் அரசாக இயங்கும் சி.ஆர்.பி.எச்-சால் கடந்த வாரம் அமைக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு படையும் பயங்கரவாத இயக்கமாக மியன்மார் இராணுவம் அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள சிறுபான்மை இன குழுக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட இந்த மக்கள் பாதுகாப்பு படை மத்திய ஒற்றுமை இராணுவத்தின் முன்னோடியாக செயல்படும் என சி.ஆர்.பி.எச். கடந்த வாரம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.