த ஜெயபாலன்

த ஜெயபாலன்

யாழ் மேலாதிக்கம் என்பது என்ன? : எம் ஆர் ஸ்டாலின்

யாழ் -மேலாதிக்கம் என்பது முதலில் ஒரு கருத்தியல் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். சிங்கள மேலாதிக்கம் என்பது எப்படி சிங்கள மக்களை குறிக்காமல் அந்த சிங்கள சமூகத்தில் இருந்து வெளிக்கிளம்புகின்ற ஆதிக்க சக்திகள் கொண்டிருக்கின்ற இனமேலாதிக்க கருத்தியலை குறிக்கின்றதோ அதேபோலத்தான் இக்கருத்தியலை நாம் புரிந்துகொள்ள முயலவேண்டும். சிங்கள மேலாதிக்கம் என்பது சிங்கள மக்களை குறிக்கவில்லை. சிங்கள மேலாதிக்கத்துக்கு எதிரான போராட்டம் என்பது சிங்கள மக்களுக்கு எதிரானதும் இல்லை. அதேபோலத்தான் யாழ் மேலாதிக்கம் என்பதையும் அதற்கெதிரான கருத்துப்பரிமாறல்கள் என்பதையும் யாழ்ப்பாண மக்களுக்கு எதிரானதாக கொச்சையாக புரிந்துகொள்ளக்கூடாது.

ஆனால் துரதிஸ்ட வசமாக இந்த புரிதலில் சிலருக்கு சிக்கல் இருக்கின்றது மேலும் சிலர் புரிந்து கொள்ளாதவாறு திரித்து கிழக்கில் இருந்து யாழ்-மேலாதிக்கம் குறித்து கருத்திடுவோர் மீது பிரதேசவாத துரோக முத்திரை குத்த முனைகின்ற போக்கும் அதிகரித்து வருகின்றது.

தமிழ் தேசியமென்பது பரந்துபட்ட தமிழ் மக்களின் சமூக பொருளாதார பிரச்சனைகளில் இருந்து உருவாகிய கருத்துருவமா? அன்றில் தமிழ் சமூகத்தில் ஆதிக்க சக்திகளாக அகல கால்பதித்து நின்ற யாழ்-மேட்டுக்குடிகளின் நலன்களில் இருந்தே அச்சிந்தனையுருவாக்கம் நிகழ்ந்ததா? இக்கேள்விகளுக்கான விடைகளை நாம் மேலோட்டமாக பார்ப்போம். அதனுடாகவே தமிழ் தேசியம் என்பதையும் யாழ் மேலாதிக்கம் என்பதையும் விளங்கிக்கொள்ளலாம்.

ஒரு சமூகமோ அல்லது ஒரு இனமோ அதன் அசைவியக்கம் சார்ந்து தனக்கான ஒரு கருத்தியலுடனேயே பயணிப்பது வழமையாகும். அந்த கருத்தியலின் உருவாக்கத்தில் அச்சமூகத்தின் சமூக பொருளாதார பண்பாட்டம்சங்களே நிச்சயம் தாக்கம் செலுத்தும். எனவே அந்த சமூக பொருளாதார பண்பாட்டு அம்சங்களில் ஆதிக்கம் செலுத்தும் பிரிவினரின் செல்வாக்கானது அச்சமூகத்தினது கருத்தியல் உருவாக்கத்தில் பிரதான பங்கெடுக்கும்.

அந்த வகையில் தமிழ் தேசியத்தின் வேர்களாகவும் பிதாமகர்களாகவும் யார் யாரெல்லாம் இருந்தார்கள் என்பதையிட்டு ஆராய்வோமானால் பொன் இராமநாதன், ஜ ஜி பொன்னம்பலம், சுந்தரலிங்கம், எஸ் ஜே வி செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்றோரை தவிக்கமுடியாது. இவர்களெல்லாம் தனவந்தர்களாகவும், பிற்போக்குவாதிகளாகவும், ஏழைகளை சுரண்டி பிழைப்போராகவும், ஆதிக்கசாதி வெறியர்களாகவும், ஆணாதிக்க மற்றும் பிரதேசவாதிகளாகவும், ஏகாதிபத்தியத்தின் முகவர்களாகவும் இருந்தார்கள் என்பது நமக்கேயுரித்தான வேதனையான வரலாறு ஆகும். இந்த பின்னணியில் இருந்துதான் தமிழ் தேசியமென்பதன் சிந்தனை மற்றும் கருத்தியல் உருவாக்கத்தில் தாக்கம் செலுத்திய வர்க்கத்தினரையும் இத்தமிழ் தேசியமென்பதன் ரிஷிமூலம் என்ன என்பதையும் நாம் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

1920களில் பள்ளிக்கூடங்களிலே அனைத்து மாணவர்களுக்கும் சம ஆசனமும் சமபந்தி போசனமும் வழங்கப்படக்கூடாதென்றும் தாழ்த்தப்பட்ட சமூக குழந்தைகளை தள்ளி வைக்க வேண்டுமென்றும் பிரித்தானிய தேசாதிபதியிடம் சென்று தலைகீழாக நின்று வாதாடியவர் பொன்.இராமநாதன் ஆகும்.

அதேபோல எல்லோருக்கும் வாக்குரிமை வழங்க கூடாது ‘வேளாளருக்கும் தனவந்தருக்கும்’ மட்டுமே வாக்குரிமை வேண்டும் என்றும் சர்வசன வாக்குரிமை வழங்கப்பட்டால் அது கும்பலாட்சிக்கு வழிகோலும் என்று டொனமூர் ஆணைக்குழு முன் சென்று சாட்சியம் சொன்னவரும் இந்த பொன்.இராமநாதன்தான்.

1944ஆம் ஆண்டு இலவச கல்வி மசோதா முன்வைக்கப்பட்டபோது
ஜி.ஜி பொன்னம்பலம் சிறிபத்மநாதன், மற்றும் அருணாசலம் மகாதேவா போன்றோர் சட்டசபையிலே ஒருமித்து நின்று அந்த மசோதாவை எதிர்த்தார்கள்.

அதுமட்டுமல்ல ஆங்கிலத்தை அகற்றி சுயபாஷைகளை அரச கரும மொழியாக்குவோம் என்று தென்னிலங்கையில் சுயபாஷை இயக்கம் உருவானபோது அதனை கடுமையாக எதிர்த்து ‘சிங்களமும் வேண்டாம் தமிழும் வேண்டாம்’ என்று அரச கரும மொழியாக ஆங்கிலமே இருக்க வேண்டுமென்று காலனித்துவத்தின் முகவர்களாக வாதங்களை முன்வைத்தவர்கள் ஜி.ஜி.பொன்னம்பலம் போன்ற தலைமைகளேயாகும்.

1947ல் பத்து லட்ஷம் மலையக மக்களின் வாக்குரிமையை பறிக்க காரணமான பிரசா உரிமை சட்டத்தை ஆதரித்து யுஎன்பியின் மக்கள் விரோத ஆட்சிக்கு துணைபோனவரும் இந்த பொன்னம்பலம்தான்.

இன்னுமொருவர் தமிழ்த்தேசியத்தின் தத்துவவாதி என்றும் ‘அடங்கா தமிழன்’ என்கின்ற ‘பெருமைமிகு’ அடைமொழியாலும் போற்றப்படுபவர் சுந்தரலிங்கம். அந்த மனிதனைப்போல் சாதிவெறியன் இனியொருபோதும் பிறக்க முடியாது.

1957 ல் நெற்காணி சட்டம் கொண்டுவரப்பட்டபோது செல்வநாயகம் தலைமையிலான தமிழரசு கட்சியினர் அதை எதிர்த்தனர்.

ஏழை எளிய மாணவர்களுக்கு சமபந்தி போசனத்தையும் சம ஆசனத்தையும் மறுத்தவர்கள், இலவச கல்வி கூடாது ‘கண்ட கண்டவர்களுக்கு’ கல்வி எதற்கு என்று குவித்திரிந்தவர்கள், வாக்குரிமையா ஒடுக்கப்பட்டவர்களுக்கும் பெண்களுக்கும் கூடவே கூடாது என்று கொக்கரித்தவர்கள், சுயபாஷையா? எதற்கு? ஆங்கிலத்தை அகற்றத்தேவையில்லை என்று தமது சொந்த நலன்களில் நின்று அடித்து பேசியவர்கள், மலையக மக்களை நிர்கதிக்குள்ளாக்கியவர்கள், ஏழைமக்களுக்கு காணிகளை வழங்குவதை எதிர்த்தவர்கள் எல்லோரதும் அரசியல் பரம்பரியமே இன்று வரை தொடருகின்ற தமிழ் தேசிய அரசியலாய் இருக்கின்றது.

மக்களின் நலன் சார்ந்த திட்டங்களையும் மசோதாக்களையும் எதிர்த்தவர்கள், பிரித்தானிய-சிங்கள ஆளும் வர்க்கத்தோடு இணைந்து கொண்டு ஏழை மக்களை ஒடுக்கி பிரபுத்துவ அரசியல் செய்தவர்கள் யாரோ அவர்களே துரதிஸ்ட வசமாக எமக்கு தேசியத்தை போதித்தனர்.

1947 ல் இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பிரிந்தபோது ‘அங்கே ஜின்னா பாகிஸ்தானை பிரித்தார். இங்கே பொன்னா தமிழீழத்தை பிரித்து எடுப்பேன்’ என்று பேசித்திரிந்தார் பொன்னம்பலம். பாராளுமன்ற முறைமை அறிமுகமானபோது தேர்தல் அரசியலுக்கான இனவாத அணிதிரட்டல் ஒன்றை நோக்கியே அவரது இந்த பேச்சுக்கள் இருந்தன.

1956ல் அரச கருமமொழிச்சட்டம் வந்தபோது பிரித்தானியரின் அருவருடிகளாக ஆங்கிலம் கற்று அரச நிர்வாக அதிகாரிகளாக இலங்கையெங்கும் பரவியிருந்த யாழ்ப்பாணத்து அதிகார வர்க்கம் பெரும் பாதிப்பினை எதிர்கொண்டது.

1971ல் கல்வி தரப்படுத்தல் வந்தபோதும் இந்த அதிகார வர்க்கத்தின் வாரிசுகளே பாதிப்படைந்தனர். இந்த பிரச்சனைகளை எதிர்கொள்ளவே ‘தமிழர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிட்டது ஒட்டுமொத்த தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றார்கள்’ என்று ஒப்பாரிவைத்தனர் இந்த யாழ்ப்பாண அதிகார வர்க்கத்தினர்.

ஆனால் அதற்கு மாறாக கல்வித்தரப்படுத்தல் என்பது வடக்கு கிழக்கு மாகாணங்களில் யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய ஆறு மாவட்ட மக்களுக்கும் பெரும் வரப்பிரசாதமாய் அமைந்திருந்தன. இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குரிய இட ஒதுக்கீட்டுக்கு சமனான அந்த சட்டத்தை தமிழரசு கட்சியினர் யாழ் மேட்டுக்குடிகளின் நலன்களில் இருந்து எதிர்த்தனர்.

மூதூர் பிரதிநிதியான தங்கதுரையும் மட்டக்களப்பு பிரதிநிதியான இராஜதுரையும் கல்வி தரப்படுத்தலால் பரந்து பட்ட தமிழர்களுக்கு வரலாற்றில் முதற்தடவையாக பல்கலைக்கழக வாய்ப்புக்கள் கிடைக்கும் என்கின்ற மாற்று கருத்துக்களை தமிழரசு கட்சியில் முன்வைத்தபோது அவை புறந்தள்ளப்பட்டன. கல்வி தரப்படுத்தல் ஒட்டு மொத்த தமிழினத்துக்கும் எதிரான இனவாத செயற்பாடு என்றே தமிழரசு கட்சி பிரச்சாரத்தை முடுக்கிவிட்டது.

பிரிவினை கோரிக்கை எமது மக்களையை அழித்தொழிக்கும் என்று வட்டுக்கோட்டை மாநாட்டிலேயே வந்து சொன்னார்கள் கனவான் தேவநாயகமும் தொண்டமானும். ஆனால் கிழக்கினதும் மலையகத்தினதும் அதிருப்திகளை அமிர்தலிங்கம் போன்றோர் கருத்தில் கொள்ளவில்லை.

யாழ்-மேட்டுக்குடிகள் யாழ்ப்பாணத்துக்கு உள்ளே ஒடுக்கப்பட்ட மக்களினதும் யாழ்ப்பாணத்துக்கு வெளியே வாழும் ஏனைய பிரதேச மக்களினதும் சமூக பொருளாதார வாழ்வியல் பிரச்சனைகளை பின்தள்ளி தாமும் தமது வாரிசுகளும் எதிர்கொண்ட உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பிரச்சனைகள் மட்டுமே அனைத்து தமிழருக்கும் உரியதான பிரச்சனைகளாக அரசியல் மயப்படுத்தினர். தமது நலன்களை அடிப்படையாக கொண்டே ஆயுத போராட்டத்தை முன்மொழிந்தனர். அதையே தமிழ் தேசியமென்றனர். தமிழீழ கோரிக்கையை பிறப்பித்தனர்.

இதுதான் யாழ் மையவாத சிந்தனை ஆகும். ஒரு சமூகத்தில் மேலாட்சி செலுத்துபவர்கள் தமது நலன்களில் மட்டுமே மையம்கொள்ளும் சிந்தனையின் வழியிலேயே அனைவரையும் பயணிக்க கோருவதும் அதுவே தமிழ் தேசியம் என்று முழங்குவதும் மேலாதிக்கமாகும்.

அதனால்தான் 1960-1970 காலப்பகுதியில் வடமாகாணத்தில் வெளிக்கிளம்பிய சாதி தீண்டாமை எதிர்ப்பு போராட்டங்களை தலைமையேற்று நடத்த அன்றைய காலத்தில் முக்கிய அரசியல் சக்திகளாக இருந்த தமிழ் காங்கிரசும் தமிழரசு கட்சியும் முன்வரவில்லை. அது முழுக்க முழுக்க வர்க்க அரசியல் பேசுகின்ற இடதுசாரி கட்சிகளாலேயே வழிநடத்தப்பட்டது. அதுமட்டுமன்றி அந்த சாதிய ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை பாராளுமன்றத்தில் கிண்டலடித்து உரையாற்றினார் தளபதி அமிர்தலிங்கம். தமிழ் தேசியத்தின் தந்தை என்று விளிக்கப்படுகின்ற செல்வநாயகமோ ‘நான் கிறிஸ்தவன் இது இந்துக்களின் பிரச்சனை’ என்று ஒதுங்கிக்கொண்டார்.

ஆனால் தேசியமென்பது சமூகத்தில் ஒடுக்கப்படுகின்ற சாமானிய மக்களின் பிரச்சனைகளை புறமொதுக்கி ஆதிக்க வர்க்க நலன்களை முதனிலைப்படுத்துவது அல்ல. மேட்டுக்குடிகளின் பிரச்சனைகளை ஒட்டுமொத்த இனத்தின் அரசியல் அபிலாசைகளாக மேலிருந்து கீழ் நோக்கி திணிப்பதற்கு பெயர் தேசியமல்ல. மாறாக பரந்துபட்டு பெரும்பான்மையாக வாழும் அடித்தள மக்களிடமிருந்து அவர்களின் பிரச்சனைகளில் மையம்கொண்டு கீழிருந்து மேலாக பரந்து விரிய வேண்டியதே தேசியவாத குரலாகும். தேசியம் என்பது வெறும் சொல்லாடல் அல்ல. அது குறிக்கின்ற எல்லைக்குள் வாழும் முழு சமுதாயங்களினதும் வளர்ச்சிக்கான கருத்தியலாக இருக்கவேண்டும்.

ஒரு தேசியவாதத்தின் தொடக்கத்தில் அந்த இனத்தின் சிந்தனை மட்டத்தில் மேலாதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் பிரச்சனைகளே முன்னிறுத்தப்படுவது சிலவேளைகளில் தவிர்க்க முடியாதது ஆகும். ஆனால் காலப்போக்கில் அனைத்து மக்களது குறைபாடுகளையும் உள்வாங்கி தன்னை முற்போக்கான தேசியமாக வளர்த்துக்கொள்வதுண்டு. ஆனால் தமிழ் தேசியத்தில் அது இம்மியளவும் சாத்தியமாகவில்லை.

ஒரு தேசிய இனத்தின் முதன்நிலை பண்பு கூறுகளான மொழி நிலம் பண்பாடு பொருளாதாரம் என்பவற்றை வெறும் சடத்துவ நோக்கில் அணுகுவதால் மட்டும் தேசிய கூட்டுணர்வை உருவாக்கி விட முடியாது. வடக்குக்கும் கிழக்குக்கும் இடையே மலைக்கும் மடுவுக்குமான (மடுவென்பது கிடங்கெனக்கொள்க) அரசியல்,பொருளாதார,பண்பாட்டு வித்தியாசங்கள் குவிந்து கிடக்கின்றன. வரலாற்று ரீதியாக ஒருபோதும் வடக்குக்கும் கிழக்குக்குமான ஒரே அரசியல் தலைமை இருந்ததுமில்லை.

அதையும் தாண்டி வடக்கில் எங்கே பொதுப்பண்பாடு காணப்படுகின்றது. யாழ்ப்பாண சமூகம் என்பது சாதிகளால் கட்டமைக்கப்பட்ட அதிகார படிநிலை சமூகமாகும். சாதிக்கொரு சவக்காலையும் சாதிக்கொரு வீதியும் சாதிக்கொரு கோவிலும் வைத்துக்கொண்டு தமிழினத்துக்கான பொதுப்பண்பாட்டை எப்படி உருவாக்க முடியும்? எல்லோருக்குமான சமூகநீதியை எங்கே தேடுவது? நாமெல்லோரும் ஓரினம் என்னும் கூட்டுணர்வு எப்படி சாத்தியமாகும்? இன்றுவரை அகமண முறையை கைவிட தயாரில்லாது சாதிகளின் பொருட்காட்சி சாலையாக தோற்றமளிக்கும் யாழ்ப்பாணத்தில் வாழுவது ஓரினமா? அன்றி ஒரே மொழி பேசும் பல பழங்குடியினங்களா என்று கேட்க தோன்றுகின்றது.

யாழ்ப்பாணத்தில் இன்றுவரை பல கோவில்கள் தலித் மக்களுக்காக பூட்டிக்கிடக்கின்றன. ‘ஊர்கூடி தேரிழுப்பதென்பது’ முதுமொழி. ஆனால் ஊரிலுள்ள ஆதிக்க சாதிகள் புலம்பெயர்ந்து போனபின்பு தேரிழுக்க உயர்குடிகள் இல்லை என்பதால் ஜெஸிபி மெசினை கொண்டு தேரிழுக்கின்றோம் எதற்காக? தலித் மக்களை தேரில் கை வைக்க விடக்கூடாதென்பதற்காகத்தானே, தேர் தீட்டு பட்டுவிடும் என்பதற்காகத்தானே. இந்த நிலையில் தமிழருக்கான பொது பண்பாடு எங்கேஇருக்கின்றது? இருப்பதெல்லாம் வெறும் சாதிய பண்பாடு மாத்திரமேயாகும். அவற்றை கட்டிக்காப்பதுவும் யாழ்ப்பாண- மேலாதிக்கம்தான் நாம் குரல் கொடுப்பது யாழ்பாணத்து மேலாதிக்கத்தால் ஒடுக்கப்படும் ஏழைகள் மற்றும் சாதியரீதியில் ஒடுக்கப்படும் தலித் மக்களுக்காகவும்தான்.

இந்த லட்ஷணத்தில் யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற கட்சிகளின் தலைவர்களில், பாராளுமன்ற உறுப்பினர்களில், மாகாண சபை உறுப்பினர்களில் யாதொருவராயினும் தாழ்த்தப்பட்ட குலத்தவர் உண்டோ என்கின்ற கேள்வியெழுப்புதல் அவசியமற்றது ஆகும். அப்படி எதுமே இன்னும் சாத்தியமாகவில்லை. ஆனால் தமிழ் மக்களின் நலன்சார்ந்து ஒரு சிறு துரும்பையேனும் நகர்த்திய வரலாற்றை கொண்டிராத கறுவாக்காட்டு பரம்பரைகளான சுமந்திரனும்,விக்கினேஸ்வரனும்,கஜேந்திரகுமாரும் மக்களின் தலைவர்களாக வலம் வர முடிகின்றது.

உண்மையில் தமிழ் தேசிய கொள்கை சார்ந்து தேர்தல் அரசியலுக்கு அப்பால் எத்தனை சிவில் அமைப்புக்கள் செயலாற்றுகின்றன? எத்தனை தன்னுரிமை செயற்பாட்டாளர்கள் களத்தில் வேலை செய்கின்றனர்? என்று கேட்டால் என்ன பதில்? வெறுமனே வாக்கு வங்கி அரசியலுக்காகவே இந்த தமிழ் தேசியவாத பிதற்றல்களை யாழ்ப்பாண கட்சிகள் காவித்திரிகின்றன என்பதே உண்மையாகும். அதனாற்தான் இந்த யாழ் மேட்டுக்குடிகள் பேசுகின்ற தேசியம் என்பது போலியானது. மக்களை ஏமாற்றி மேட்டுக்குடிகளின் நலன்களை மட்டுமே பூர்த்திசெய்கின்ற கபட நோக்கம் கொண்டது என்று சொல்லுகின்றோம்.

ஆனால் தேசியவாதமென்பது இதுவல்ல. பொங்கு தமிழ் ஆரவாரம் பண்ணி மக்களை அணிதிரட்டுவதாலோ பொங்காத தமிழ் ஆர்ப்பரிப்போ செய்து தென்னிலங்கைக்கு சவால் விடுவதாலோ தமிழ் தேசியம் தழைத்தோங்க முடியாது. பூர்வீகம் பற்றிய புல்லரிக்கும் வீர வசனங்களாலோ முள்ளி வாய்க்காலில் சத்தியப்பிரமாணம் எடுக்கின்ற ஆசாமிகளாலோ தமிழ் தேசியத்தை கட்டியெழுப்ப முடியாது.

தேசியம் என்பது பற்றி ரஷ்ய புரட்சியாளன் லெனின் என்ன சொன்னார்? ஸ்டாலின் என்ன சொன்னார்? அல்லது ரோசா லுக்சம்பேக் என்ன சொன்னார்? பெனடிக் ஆண்டர்சன் என்ன சொன்னார்? அந்தோனியா கிராம்சி என்ன சொன்னார்? எரிக் ஹாப்ஸ்வாம் என்ன சொன்னார்? என்பதெல்லாம் நமக்கு புதியவையல்ல. இவையனைத்தையும் எமது முன்னோர்களே சொல்லிச்சென்றுள்ளனர்.

‘துடியன்,பாணன் கடம்பன்,பறையன் என இந்நான்கல்லது குடியும் இலவே’ என்கின்றது புறநானுற்று அறம். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பான் கணியன் பூங்குன்றனார் என்னும் சங்ககால தமிழ் புலவன். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்பார் திருவள்ளுவர்.

இவைதான் அனைவரையும் உள்ளீர்க்கின்ற தேசிய தர்மம் ஆகும். தமிழர்தம் தேசியத்தின் போற்றத்தக்க முதிசங்கள் இவையே ஆகும். இத்தகைய அரவணைப்பிலும் அகன்று விரிந்த மனப்பான்மையிலும் உருவாகின்ற தமிழுணர்வுதான் தமிழ் தேசியத்தின் அடிப்படையாக இருக்க முடியும்.

தேசியவாதமென்பது இன வெறி, மதவெறி, சாதிய ஆதிக்கம், தனவந்தரதிகாரம், பிரதேச வெறி, ஆணாதிக்கம், பரம்பரையதிகாரம், சிறுவர் துஸ்பிரயோகம், பாலியல் சுரண்டல், ஏகாதிபத்தியம் போன்ற அனைத்துவித அதிகாரங்களுக்கும் எதிரான ஒருமித்த குரல்களின் சங்கமமாக உருப்பெறவேண்டியதாகும். அதனுடாக சுயநிர்ணயம் கொண்ட வன்முறையற்ற சமூகநீதியுடன் கூடிய சமத்துவ சமூகத்தை கட்டியெழுப்பும் இலட்சிய வேட்கை கொண்டதே தேசியவாதமாகும்.

ஆனால் நமது தமிழ் தேசியமோ யாழ்பாணத்து மேட்டுக்குடிகளின் மையத்தில் நின்றுகொண்டு இவன் பள்ளன், இவன் பறையன் அவன் வன்னிக்காட்டான், அடுத்தவன் மட்டக்களப்பு மடையன், அதற்கப்பால் சோனி, தொலைவில் இருப்பவன் தோட்டக்காட்டான் என்று வக்கணம் சொல்லி சொல்லியே தன்னை உருவாக்கியது. பன்மைத்துவ தன்னிலைகளையும் தனித்துவங்களையும் அங்கீகரித்து உள்ளீர்ப்பதற்கு பதிலாக அனைவரையும் நிராகரித்து தனிமையப்படுத்தி வெளித்தள்ளியது.

நாம் வாழுகின்ற மண்ணையும்,காற்றையும்,கடலையும், நீர்நிலைகளையும் பேணிப்பாதுகாத்தலே இந்த தேசியத்தின் அடிப்படையாகும். அதற்காகவே ஆளும் உரிமையை நாம் கோருகின்றோம் என்பதே அதன் தாற்பரியமாகும். அதேபோன்று அனைவரும் சமம் என்பதும், நாமெல்லாம் ஒரே இனமென்பதும் மனதளவிலும் செயலளவிலும் திரளாகின்ற உணர்வே தேசிய உணர்வாகும்.

செல்வநாயகம் 1949 ஆம் ஆண்டு தமிழரசு கட்சியை தொடங்கி கிழக்கு மாகாணத்துக்கு வந்து தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றாகி அணிதிரளுங்கள் சமஷ்டியை பெற்றுத்தருகின்றேன் என்று அறைகூவல் விடுத்தார். அப்போது சமஸ்டி சாத்தியமில்லாதது,கிழக்கு மூவினங்களும் வாழும் இடம் இங்கே இனவாத அரசியல் வேண்டாம், இரத்த ஆறு ஓட வழிவகுக்க வேண்டாம் என்று செல்வநாயகத்தை எச்சரித்தார் மட்டக்களப்பின் நல்லையா மாஸ்டர் என்னும் பெருந்தகை. பதிலுக்கு கிழக்குமாகாணத்தின் சமூக, பொருளாதார, கல்வி, சுகாதார, மேம்பாட்டுக்காக அயராது பாடுபட்டு சாதனை புரிந்த அந்த மகானை அரச கைக்கூலி என்று பிரச்சாரம் செய்து தோற்கடித்தது தமிழரசு கட்சி.

மறுபுறம் செல்வநாயகத்தின் அறைகூவலின் பின்னால் ஒன்றுபடுவோம் என்று சொல்லி தமிழரசு கட்சியை கிழக்கு மாகாணத்தின் மூலை முடுக்குகளெல்லாம் கொண்டு சென்று வளர்த்து 1977ல் தமிழர் தலைவராக மட்டக்களப்பிலிருந்து மேலெழுந்து வந்த இராஜதுரைக்கு என்ன நடந்தது? அவரை வஞ்சித்து, ஒதுக்கி, துரோகியாக்கி வெளியேற்றியது தமிழரசுகட்சி. சொல்லப்பட்ட காரணம் என்னதெரியுமா? 1978ஆம் ஆண்டு சூறாவளியால் அழிந்து கிடந்த மட்டக்களப்பை பார்வையிட வந்த பிரதமர் ‘பிரேமதாசாவை வரவேற்கச்சென்றது குற்றம்’ என்றது அமிர்தலிங்கத்தின் குற்றப்பத்திரிகை. அத்தனைக்கு பின்னரும் கடந்த 2012ஆம் ஆண்டு ஏப்ரலில் செல்வநாயகத்தின் 35 வது நினைவு கூட்டமொன்றுக்காக யாழ்ப்பாணம் சென்ற ராஜதுரையை ‘மட்டக்களப்பு சக்கிலியா’ ‘துரோகி’ என்று துரத்தினார் சிவாஜிலிங்கம் என்கின்ற தமிழ் தேசிய பித்தர்.

* யாழ் மேயரான செல்லன் கந்தயன் யாழ்- நூலகத்தை திறந்துவைத்தல் கூடாது என்கின்ற மேட்டுக்குடிகளுக்கு ஒத்தாசை வழங்கி திறப்புவிழாவை தடுத்து நிறுத்தினர் தமிழீழவிடுதலைப்புலிகள்.

*தமிழ் பேசும் இஸ்லாமியரை தமிழ் தேசியத்துக்கு வெளியே துரத்தியடித்தனர் தமிழீழ விடுதலைப்புலிகள்.

*2004 ல் தமிழீழத்தின் நிழல் நிர்வாக கட்டமைப்புக்கு 32 துறை செயலாளர்களை தமிழீழ விடுதலை புலிகள் நியமித்தபோது 31 செயலர்களை வடமாகாணத்துக்குள் சுருட்டிக்கொள்ளுதல் தகுமோ? என்று கேட்ட கருணாம்மானை துரோகி என்று அறிவித்து வெருகல் படுகொலைக்கு ஆணையிட்ட அன்றே அறுந்து போனது வடக்கு கிழக்கு தாயக உறவு.

பிரபாகரனது முப்பத்துவருட ஆயுதப்போராட்டம் தமிழ் பேசும் மக்களின் (சாதி,மத, பிரதேச,) பன்மைத்துவத்துவ குரல்களை அங்கீகரிக்க மறுத்து வீணாகி மண்ணோடு மண்ணாகிப்போனது..

இப்போது கிறிஸ்தவரையும் கழித்துவிட்டு இந்து கட்சிகளின் உருவாக்கத்துக்கு அத்திவாரம் இட்டுக்கொண்டிருக்கின்றது. யாழ்-மையவாத சிந்தனை முகாம். அதனை மூத்த தமிழீழவாதிகளில் ஒருவரான மறவன் புலவு சச்சுதானந்தம் கச்சிதமாகவே செய்து வருகின்றார்.

அண்மைக்காலமாக பெண்களின் குரலை உதாசீனம் செய்துவருகின்றது தமிழரசுக்கட்சி. கடந்த தேர்தலில் மட்டக்களப்பு மங்களேஸ்வரி சங்கருக்கு வேட்பாளர் வாய்ப்பு மறுக்கப்பட்டமைக்கு சுமந்திரன் சொன்ன காரணம். ‘அவர் துரோகம் செய்ய கூடியவர்’ என்று முன்னரே உணர்ந்தாராம் சுமந்திரன். இப்படி அவரே முடிவெடுப்பதென்றால் கட்சியின் செயலாளர் பதவியை துரைராசசிங்கத்துக்கு கறிவேப்பிலைக்கா கொடுத்து வைத்திருக்கின்றது தமிழரசு கட்சி? இதைத்தான் யாழ் மேலாதிக்கம் என்கின்றோம். ஒரு கணவனை இழந்த பெண் என்னும் வகையில் சசிகலா ரவிராஜை வைத்து வாக்குசேகரிக்க முயன்றது தமிழரசு கட்சி. அதன்பின்னர் அவருக்கு நடந்த அநியாயத்துக்கு விளக்கம் தேவையில்லை.

தமிழ் சமூகத்தில் மேலாதிக்கம் செலுத்துகின்ற இந்த யாழ்ப்பாண மேட்டிமை சக்திகளிடத்தில் உண்மையான தமிழ் தேசிய சிந்தனை இல்லை. இருப்பதெல்லாம் ஆதிக்க சிந்தனை மட்டுமேயாகும். அதில் சிங்களவர்களிடமிருந்து அதிகாரத்தை கைமாறி புதிய எஜமானர்களாக தங்களுக்கு முடி சூட்டி கொள்ளுகின்ற கபட நோக்கம் மட்டுமே மறைந்திருக்கின்றது. அதுவே வடமாகாண சபை முதலமைச்சர் விடயத்திலும் நடந்தேறியது.

நம்மை நாமே ஆளுதல் என்கின்ற அற்புதமான சிந்தனை ஆட்சியாளர்களை அடையாளமிட்டு மலினப்படுத்தப்பட்டுவிட்டது. சிங்கள ஆட்சியாளர்களுக்கு பதிலாக தமிழ் எம்பிக்களும் அமைச்சர்களும் முதலமைச்சரும் வந்துவிட்டால் தமிழ் தேசியம் தழைத்தோங்கும் என்று அப்பாவித்தனமாக நம்பவைக்கப்பட்டுள்ளனர் எமது மக்கள். வெறும் இனவாத வெறியை விதைத்து ஆளுவதற்கான உரிமைக்காக மட்டுமே போராட்டம் என்கின்ற எளிமைப்படுத்தப்பட்ட கருத்துருவமே சாமானிய மக்களின் மனநிலையில் ஆழமாக பதிய வைக்கப்பட்டுள்ளது..

இதுவரைகாலமும் தமிழ் தேசியத்தை தலைமையேற்று வழிநடத்தியவர்களில் அநேகமானோர் யாழ்- மேட்டுக்குடி நலன்களில் மையம்கொண்டுள்ள ஆதிக்க சிந்தனைக்கு மாற்றானவர்களாய் இருக்கவில்லை. அப்படியிருக்க முனைந்த ஒரு சிலரும் மைய நீரோட்ட அரசியலில் இருந்து ஓரங்கட்டப்பட்டனர். ஒதுக்கப்பட்டனர். அல்லது துரோகிகள் என்று கொன்றொழிக்கப்பட்டனர். இத்தகைய கேடுகெட்ட யாழ்-மேட்டுக்குடி தலைமைகளுடைய ஆதிக்க சிந்தனையின் அம்மணத்தை மறைக்க தேசியம் என்றும் தாயகமென்றும் விடுதலையுணர்வு என்றும் வேசம்கட்டுவதற்கு பெயர்தான் யாழ்- மேலாதிக்கம் என்பதாகும்.

அதனால்தான் சொல்கின்றோம். இந்த யாழ்-மேட்டுக்குடிகள் பேசுகின்ற தமிழீழம் என்பது யாழ்-மேலாதிக்க தமிழீழம்தான் . இந்த யாழ்-மேட்டுக்குடிகள் பேசுகின்ற தமிழ் தேசியம் என்பது யாழ் மேலாதிக்க தமிழ் தேசியம்தான். இந்த யாழ்-மேட்டுக்குடிகள் பேசுகின்ற தமிழ் நோக்கு என்பதும் யாழ் மேலாதிக்க தமிழ் நோக்குத்தான். என்றொருநாள் தமிழ் பேசும் மக்களின் தலைமையானது யாழ்-மேட்டுக்குடிகளிடமிருந்து கைமாறுகின்றதோ அன்றுதான் தமிழர்களின் நன்னாள் தொடங்கும். (Source: padakutv.lk)

வெலிகடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணியின் மனைவி இன்று காலமானார்!

குட்டிமணி அவர்களது துணைவியார் திருமதி.இராசரூபராணி இன்று காலை காலமானார். ‘குட்டிமணி’ என்ற இயக்கப் பெயரால் பரவலாக அறியப்பட்ட செல்வராஜா யோகச்சந்திரன் என்பவர், தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) ஸ்தாபக உறுப்பினர்களுள் ஒருவராவார்.

குட்டிமணியை தேடி வீட்டிற்கு சென்ற ஆமி, பொலிஸ்இ இரகசியப் பொலிசாரினாலும் பல இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டார். 1972 ல் குட்டிமணி தேடப்பட்ட காலம் முதல், இரு (ஆண், பெண்) பிள்ளைகளையும் பல கஸ்டங்களுக்கு மத்தியில் வளர்த்து ஆளாக்கியுள்ளார். அவரும் தமிழினத்திற்காக குட்டிமணி போராடிய காலங்களில் பலவகையிலும் தனது கணவருக்கு ஒத்தாசையாக இருந்து விடுதலைக்கு உதவியுள்ளார்.

ரெலோ தளபதி குட்டிமணி: பொலிஸார் மீது தாக்குதல், வங்கிக்கொள்ளை எனக் குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டிருந்த ரெலோ போராளியான குட்டிமணி, 1981 ஏப்ரல் முதலாம் திகதி படகு ஒன்றின் மூலம் தமிழ்நாடு செல்ல முயற்சிக்கும் போது, அரசாங்கப் படைகளால் கைது செய்யப்பட்டார். அவரோடு ஸ்தாபக தலைவர் தங்கதுரை என்பவரும், தேவன் என்பவரும் கைதுசெய்யப்பட்டார்கள்.

பல்வேறு குற்றங்கள் தொடர்பில் அவர் மீது பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவுசெய்யப்பட்டு கொழும்பு உயர் நீதிமன்றில் வழக்கு நடத்தப்பட்டது.

வழக்கில் முன்வைக்கப்பட்ட சாட்சியங்களின் படி, கைதுசெய்யப்பட்ட குட்டிமணியும் ஜெகன் என்பவரும் பல மாதங்களுக்கு எந்த வெளியுலகத் தொடர்புமின்றி, சட்டத்தரணிகள் கூட அணுகமுடியாதபடி, தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள்.

தடுத்து வைத்திருக்கப்பட்ட போது, சொல்லொணாச் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். குறித்த சித்திரவதைகள் பற்றிய விவரணங்கள் வழக்கின் சாட்சியப் பதிவுகளில் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

குட்டிமணி மற்றும் ஜெகனுக்கு எதிரான கொழும்பு உயர்நீதிமன்றில் நடந்த வழக்கில் 1982 ஓகஸ்ட் 13 ஆம் திகதி அவ்விருவருக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது.

குற்றவாளியாகத் தீர்மானிக்கப்பட்டபின், மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட முன்பதாக, குட்டிமணி ஏதேனும் தெரிவிக்க நீதிபதியினால் தரப்பட்ட வாய்ப்பில் குட்டிமணி தெரிவித்த விடயமானதுஇ தமிழ் இளைஞர் மத்தியில் நீண்ட தாக்கம் செலுத்தியதொரு கூற்றாக அமைந்து.

தன்னுடைய கூற்றிலே குட்டிமணி “நான் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. நான் ஒரு நிரபராதி. பொலிஸ் மற்றும் இராணுவத்தின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட என்னை, அவர்கள் சித்திரவதை செய்து சில வாக்குமூலங்களில் கையெழுத்துப் பெற்று, அவை எனக்கெதிரான சான்றாக இந்த வழக்கில் முன்வைக்கப்பட்டுஇ நான் குற்றவாளியாக்கப்பட்டிருக்கிறேன்.

இந்த நீதிமன்று இன்று வழங்கியுள்ள ஆணையைப் பற்றி, நான் என்னுடைய சில அடிப்படை எண்ணங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். இன்று இந்த வழக்கிலே, இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பானது தமிழீழம் அமைக்கப்படுவதற்கான புதிய உத்வேகத்தையும் வளம்மிக்க உரத்தையும் ஊக்கத்தையும் வலுவான காரணங்களையும் வழங்கும்.

இன்னும் வேறும், தமிழ் இளைஞர்களும் இந்த நீதிமன்றின் முன் பொய்க் குற்றச்சாட்டுகளின் பெயரில் நிற்கவைக்கப்படுவார்கள். இது தொடருமானால், விதிக்கப்படும் தண்டனையானது தமிழர்களின் விடுதலைக்கான ஊக்கமாக அமையும்.

நான் தமிழீழத்திலேயே தூக்கிலிடப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன். என்னுடைய முக்கிய உறுப்புகள், அவை தேவைப்படுவோர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன்.

என்னுடைய  கண்பார்வையற்ற ஒருவருக்கு வழங்கப்படவேண்டும் என்று வேண்டுகிறேன். அப்போதுதான் தமிழீழம் நிதர்சனமாவதை குட்டிமணி இந்தக் கண்களால் காணமுடியும். என்னுடைய உடல் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன்” என்று தெரிவித்தார். (Source: telo.org)

ஐபிசி தமிழ் ‘ரீக்கடை’ நடத்தியவர்கள் உட்பட அறுவர் வேலைநீக்கம் செய்யப்பட்டனர்!!!

சுமந்திரன் ‘தமிழ் தேசிய நீக்கம்’ செய்கின்றார் என்று ஐபிசி தமிழில் ‘ரீக்கடை’ நடத்தியவர்களையும் பேர்லோ திட்டத்தில் வீட்டில் இருந்தவர்களையும் ஐபிசி தமிழ் வேலை நீக்கம் செய்துள்ளது. ஐபிசி ரீக்கடையயைத் திறந்து சுமந்திரன் ‘தமிழ் தேசிய நீக்கம்’ செய்கின்றார் என்று அரட்டை அடிக்க அனுமதித்த கோகுலன், முகுந்தன் ஆகிய பாஸ்கரனுக்கு வேண்டப்பட்டவர்களே வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவருடன் ராஜ்குமார், சுலோமி, சுரேஸ், தினேஸ் ஆகியோரும் வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். ஐபிசி கலையகம் பிரித்தானியாவில் தனது மனிதவலுவைக் குறைத்துவருவது இது முதற்தடவை அல்ல. நிறுவனங்கள் மனிதவலுவைக் குறைப்பது இன்றுள்ள காலகட்டத்தில் புதிதும் அல்ல. ஆயினும் 2020 இலங்கைப் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளும் ஐபிசி தமிழ் க்கு ஏற்பட்டுள்ள புதிய நெருக்கடிக்கு காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

ஐபிசி ஒன்றும் இலாபத்தில் இயங்குகின்ற ஊடகமல்ல. அதன் வருமானம் அதன் லண்டன் கலையகத்தை இயக்குவதற்கே போதுமானதாக இல்லை. நிறுவனர் கந்தையா பாஸ்கரன் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் விரல்விட்டு எண்ணக் கூடிய பெரும் செல்வந்தர்களில் ஒருவர். அவர் ஐபிசி யை இயக்குவது நிச்சயமாக லாபநோக்கத்திற்காக அல்ல. தமிழ் மக்கள் மத்தியில் தன்னையொரு முக்கிய புள்ளியாக, அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக ‘கிங் மேக்கர்’ஆக தன்னை உருவகப்படுத்துவதே அவருடைய நோக்கமாக இருக்க முடியும்.

அதன் ஒருகட்ட நகர்வாகவே 2020 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் எம் ஏ சுமந்திரனை தோற்கடிக்க கட்சிக்குள்ளேயே பிரிவினையயைத் தூண்டிவிட்டதில் ஐபிசி நிறுவனர் பாஸ்கரன் முன்னணியில் நின்றார். எம் ஏ சுமந்திரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐபிசி நிறுவனர் லட்சங்களை வழங்கியதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தேசம்நெற்க்கு தெரிவித்திருந்தன. அவ்வாறான நிதி வழங்கப்பட்டவர்களில் மாவை சேனாதிராஜா முக்கியமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவர்ணவாகினி குழுமத்தை வாங்குவதற்கும் ஐபிசி திட்டமிட்டு செயற்பட்டு வந்ததும் தேசம்நெற்க்கு தெரியப்படுத்தப்பட்டு இருந்தது. சுவர்ணவாகினியயை வாங்குவதற்காக மின்னல் ரங்காவோடு ஐபிசி கூட்டுச் சேர்ந்திருந்தது. அச்சமயம் ரங்கா ராஜபக்ச சகோதரர்களின் பக்கம் நின்றார். ஆனால் அவர் விபத்து ஒன்றில் சிக்கியதையடுத்து அவ்வழக்கை சென்ற ஐக்கிய தேசியக் கட்சி அரசு அவருக்கு எதிராகப்பயன்படுத்திக் கொண்டது. ரங்கா ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து ராஜபக்ச சகோதரர்களுக்கு தாவியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ஐபிசி இன் சுவர்ணவாகினி கனவும் பலிக்கவில்லை.

ஆனால் தேர்தல் முடிவுகள் கந்தையா பாஸ்கரனின் கனவைக் கலைத்துவிட்டது. கடந்த தேர்தலில் எம் ஏ சுமந்திரன் வெல்வது உறுதி என்பது தேர்தலுக்கு முன்னரேயே தேசம்நெற் போன்ற ஊடகங்களினால் உறுதியாக கூறப்பட்டதுடன், தமிழரசுக் கட்சியினுள் கூடுதல் வாக்குகளை சுமந்திரன் பெறுவார் என்பதையும் ஊகித்து இருந்தோம். ஆனால் ஐபிசி தமிழ் சுமந்திரன் தோற்கடிக்கப்படுவார் என்று விருப்புவாக்குகள் எண்ணப்படும் பொழுதுகூட நம்பி இருந்தனர். அதுமட்டுமல்லாமல் இந்த விருப்பு வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடைபெற்றதாகவும் ஐபிசி சொல்ல முற்பட்டது. அதற்கேற்ப நேர்காணல்களையும் ஒளிபரப்பியது. ஆனால் எம் ஏ சுமந்திரனின் விருப்பு வாக்கு எண்ணிக்கை ஒரு போதுமே சர்ச்சைக்குரியதாக இருக்கவில்லை.

மத்தியில் கோத்தபாயாவின் அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றதும், சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் கூடுதல் விருப்புவாக்குகளுடன் வெற்றி பெற்றதும், ஐபிசி தமிழ் ஆதரித்த வேட்பாளர்கள் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதும் கந்தையா பாஸ்கரனின் கனவுகள் கலைக்கப்பட காரணமானது. கோத்தபாய அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ள நிலையில் சுவர்ணவாகினிக்குள் யாரையும் நுழைய அனுமதிப்பதாக அவர்கள் இல்லை.

ஐபிசி தமிழி இன் ‘ரீக் கடை’ நிகழ்ச்சி எம் ஏ சுமந்திரன் மீது சேற்றை வாரியிறைக்கும் வகையிலேயே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது. அந்நிகழ்வில் எம் ஏ சுமந்திரனால் முன்மொழியப்பட்ட பெண்கள் மீது மோசமான அநாகரிகமான தாக்குதல்கள் நடத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட பெண்கள் இது தொடர்பாக தங்கள் விசனத்தை முகநூலில் பதிவு செய்திருந்தனர். ஐபிசி தமிழின் நன் மதிப்பையும் இந்நிகழ்வு மிகவும் பாதித்து இருந்தது.

சட்டத்தரணியான எம் ஏ சுமந்திரன் மக்களின் கணிசமான ஆதரவுடன் வெற்றி பெற்றதும், ஐபிசி தமிழ் சட்டச் சிக்கலுக்குள்ளாகலாம் என்ற அச்சமும் காரணமாகவும் ‘ரீக் கடை’ க்குப் பொறுப்பானவர்கள் நீக்கப்பட்டு இருக்கலாம் என ஊகங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால் ஐபிசி தமிழ் தற்போதைய சூழ்நிலையில் தொடர்ந்தும் அங்குள்ள பணியாளர்களை வைத்து நிறுவனத்தை நட்டத்தில் இயக்க முடியாது என்ற காரணத்தினாலேயே வேலை நீக்கம் செய்ததாக தெரிவித்துள்ளது.

மேலும் அடுத்த மாகாணசபை தேர்தல் விரைவில் அறிவிக்கப்படும் நிலையில் மாகாணசபையிலும் ஐபிசி தனது செல்வாக்கை செலுத்த முற்பட்டு வருகின்றது என பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தோற்கடிக்கப்பட்ட நிலையில், அவர் கட்சியின் தலைவராக இருந்த போதும் உறுதியான முடிவுகளை எடுக்கும் நிலையில் இல்லை. மாகாணசபை உறுப்பினர்கள் தேர்வில் எம் ஏ சுமந்திரனின் கைகள் ஓங்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த தேர்தலில் எம் ஏ சுமந்திரனின் ஆளாக இருந்த ஆர் நோல்ட்டையும் ஐபிசி சுமந்திரனுக்கு எதிராக திருப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது. சுமந்திரன் – ஐபிசி தமிழ் மோதல் மாகாணசபை தேர்தலில் எவ்வாறு அமையப் போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எம் ஏ சுமந்திரனுக்கு எதிராக ஊடகங்களும் சமூக வலைத்தளங்களும் செயற்பட்ட போதும் சுமந்திரனின் வெற்றியயை எவராலும் தடுக்க முடியவில்லை. ஒரு வகையில் இந்த ஊடகங்கள் மக்கள் மத்தியில் இருந்து அந்நியப்பட்டு வருகின்றனவோ என்றே எண்ணத்தை தோற்றுவிக்கின்றது. ஐபிசி தமிழ், உதயன், காலைக் கதிர், வலம்புரி அனைத்துமே சுமந்திரனுக்கு எதிரான ஊடகங்களாகவே செயற்படுகின்றன.

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி மாகாணசபை தேர்தலுக்கு தயாராக வேண்டும்! – முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள்

பாசமிகு சகோதர சகோதரிகளே!

அன்பார்ந்த நண்பர்களே!

ஆற்றல் மிகு தோழர்களே!

இலங்கையில் கடந்த ஆண்டு நவம்பரில் சுமார் 60 சதவீதமான மக்களின் வாக்குகளைப் பெற்று கோத்தபாய ராஜபக்ச மேன்மைதகு ஜனாதிபதியானார். தொடர்ந்து பாராளுமன்றத்தில் சிறுபான்மையான எண்ணிக்கையுடன் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த மஹிந்த ராஜபக்ச அப்போது ஆண்டு கொண்டிருந்த கட்சியினரின் ஒப்புதலுடன் கௌரவ பிரதமராகி தற்காலிகமாக மத்திய அமைச்சரவையை அமைத்துக் கொண்டார்.

இந்த ஆகஸ்ட 5ம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் 60 சதவீதத்துக்கு மேற்பட்ட மக்களின் வாக்குகளைப் பெற்றதோடு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு ஆசனங்களைப் பெற்றுள்ள சிறிலங்கா பொதுஜன பெரமுனைக்  கூட்டணி மஹிந்த ராஜபக்சவைப் பிரதமராகக் கொண்டு மிகவும் உறுதியான ஆட்சியை அமைத்துள்ளது.

கடந்த ஆறு மாதங்களாக உலகை ஆட்டிப்படைத்து வருகின்ற கொரோனா வைரஸ் இதுவரை இரண்டரை கோடி பேருக்கு மேல் பீடித்து எட்டரை லட்சம் பேரை காவு கொண்டு போய் விட்டது: உலக பொருளாதாரத்தை உலுக்கிப் போட்டுள்ளது: மனித குலம் அரண்டு போய் நிற்கின்றது: கொரோனாவின் தாக்கம் இலங்கையில் குறைவே. என்றாலும் பயமும் பதட்டமும் உலக தரத்திலேயே இங்கும் உள்ளது. இலங்கையின் பல்வேறு பொருளாதாரத் துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. பக்கத்து நாடுகளிலும் தூரத்து நாடுகளிடமிருந்தும் பெருந்தொகையில் கடன் வாங்காமல் நாட்டை நிர்வகிக்க முடியாத நிலையில் அரசாங்கம் உள்ளது.

பெரும் நம்பிக்கைகளோடு இலங்கை மக்கள் புதிய அரசாங்கத்துக்கு தமது வாக்குகளை அளித்திருக்கிறார்கள். மைத்திரி – ரணில் கூட்டாட்சி மீது விரக்தியும் ஆத்திரமும் கொண்ட பெரும்பான்மையான மக்கள் ராஜபக்சக்களிடம் ஆட்சியை மீண்டும் ஒப்படைத்திருக்கிகிறார்கள்  மக்களின் எதிர்பார்ப்புகளில் கணிசமான அளவுக்காவது  ராஜபக்சக்களின் ஆட்சி அரசியல் பொருளாதார சாதனைகளை ஆற்றுவார்களா என்று பொறுத்துதான் பார்க்க வேண்டும.

மிகப் பெரும்பான்மையான சிங்கள மக்களின் வாக்குகளாலேயே தான் ஜனாதிபதியானதாக கோத்தபாய ராஜபக்ச தமது பதவியேற்பின் போது வெளிப்படையாகவே கூறினார். அந்தத் தேர்தலில் வடக்கு – கிழக்கு வாழ் தமிழர்களில் 12 சதவீமானவர்கள் கூட அவருக்கு வாக்களிக்கவில்லை. ஆனால் அடுத்த ஒன்பது மாதத்துக்குள் நடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலில் தமிழர்களின் வாக்குகள் ராஜபக்சக்களின் கட்சிக்கும் அவர்களோடு அணிசேர்ந்து நிற்கும் தமிழ் அரசியற் சக்திகளுக்கும் மிகவும் மாறுபட்ட முறையில் வாக்களித்திருத்திருக்கிறார்கள்:

யாழ்ப்பாணம் மற்றும் வன்னித் தமிழர்களில் மூன்றில் ஒரு பங்கினரும்

திருகோணமலை மாவட்ட தமிழர்களில் சுமார் 25 சதவீதமானோரும்

மட்டக்களப்பு மாவட்ட தமிழர்களில் 50 சதவீதமானோரும்

அம்பாறை மாவட்ட தமிழர்களில் 55 சதவீதமானோரும்

ராஜபக்சக்களின் கட்சிக்கும் மற்றும் அவர்களுக்கு ஆதரவான கட்சிகளுக்கும் வாக்களித்திருக்கிறார்கள்.

இது சரியா பிழையா என்பதற்கப்பால் ஒரு வரலாற்று மாற்றம் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது இந்த ஆட்சி பற்றி எதிரும் புதிருமாக பல அபிப்பிராயங்கள் ஆரம்பித்துவிட்டன.

இராணுவ சர்வாதிகார ஆட்சி அமைந்து கொண்டிருக்கிறது என சிங்கள மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்க் கட்சிகள் குரலெழுப்புகின்றன:

ஆட்சியில் முஸ்லிம்கள் முற்றாக ஒதுக்கப்பட்டு விட்டார்கள் என்றும் எனவே முஸ்லிம்கள் ஆபத்தான அரசியற் சூழலுக்குள் தள்ளப்படும் ஆபத்து ஏற்படுகிறது என்றும் பெரும்பான்மையான முஸ்லிம்களின் தலைவர்கள் எதிர்வு கூறி வருகிறார்கள்:

பாசிச சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சி அமைந்துவிட்டதாக தமிழர்கள் மத்தியில் உள்ள பெரும்பான்மையான அரசியற்காரர்களும் புத்திஜீவிகளும் அளவிடுகிறார்கள்.

19வது அரசியல் யாப்பு திருத்தத்தை நீக்கி புதிய அரசியல் யாப்பு கொண்டு வரப்படும் என்றும் நாட்டில் புதிய வகையான தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தமது புதிய பாராளுமன்றத்தின் முதலாவது உரையில் குறிப்பிட்டுள்ளார். 19வது திருத்தத்துக்கு திருத்தம் ஒன்றை ஆக்கப் போகிறார்கள் என்பது திட்டவட்டமாகத் தெரிகின்றது. அது எப்படிப்பட்டதாக இருக்கப் போகிறது என்பது தெரியவில்லை. இது தொடர்பாக எதிர்க் கட்சியில் இருக்கும் தமிழ்க் கட்சிகள் எவ்வாறு நிலை எடுக்கப் போகின்றன என்பதுவும் தெளிவாக இல்லை.

மாகாண சகைகள் முறையை இல்லாமற் செய்ய வேண்டும் என சிங்கள பௌத்த ஆதிக்க வாதிகள் நீண்டகாலமாகவே கோரி வருகிறார்கள். அரசாங்கத்தில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைப்புகள் தொடர்பான அமைச்சர் தான் காணி அதிகாரத்தையோ பொலிஸ் அதிகாரத்தையோ தரப் போவதில்லை என கறாராக குரலெழுப்புகிறார். ஆனால் இவை தொடர்பாக ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ இதுவரை எதுவும் கூறவில்லை. ஆனால் ஒன்று தெளிவாகின்றது இன்னும் சில மாதங்களுக்குள் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறப் போகின்றது. அதில் இந்த அரசாங்கம் மிக ஆர்வமாக உள்ளது. ஏதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர் வடக்கு கிழக்கு மாகாண சபைகள் எவ்வாறாக அமையப் போகின்றன! எவ்வாறாக செயற்படப் போகின்றன! என்பவை பற்றி இப்போதைக்கு எதையும் உறுதியாகக் கூற முடியாது.

இவையெல்லாவற்றையும் வைத்துக் கொண்டு “தமிழ்த் தேசிய” சுலோகங்களுடன் அரசியல் செய்யும் கட்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பயக் கெடுதியை கிளப்பி மீண்டும் தமது அரசியல் ஆதரவுத் தளங்களை உறுதி செய்ய முனைவார்கள் என்பது தெளிவு. அதேவேளை அரசாங்கத்தோடு அணைந்து நின்று தங்களால் சாதிக்க முடியும் என்போர் அரசாங்கத்தின் சில பொருளாதார கட்டுமான வேலைத்திட்டங்களுக்கு அப்பால் கருத்துத் தாக்கமுள்ள அரசியல்ரீதியான செயற்பாடுகளைக் கொண்டிருப்பார்களா என்ற கேள்விக்கு இப்போதுவரை பதிலில்லை.

மாகாண சபைக்கான எதிர்வரும் தேர்தலின் முடிவுகளும் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகளின் பிரதிபலிப்பாக இருக்குமா அல்லது வேறுபட்டதொரு மாறுபாட்டைக் கொண்டிருக்குமா என உறுதியாகக் கூற முடியாது. வடக்கு கிழக்கு மாகாண சபையை கைப்பற்றுபவர்கள் எவ்வாறு செயற்படப் போகிறார்கள்: எவற்றைச் சாதிப்பார்கள் என்பதற்கும் இப்போதைக்கு தெளிவான பதில் இல்லை.

இப்படியான சூழ்நிலைமைகளின் பின்னணியில் தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியினராகிய நாம் எவ்வாறான அரசியல் நடைமுறை நிலைப்பாடுகளை முன்னெடுக்கப் போகின்றோம் என்பது பற்றி தெளிவாகவும் தீர்க்கமாகவும் சிந்தித்து –  முடிவுகள் செய்து – செயற்படல் வேண்டும்.

கட்சியின் பிரச்சாரங்களை விரிவுபடுத்தி முன்கொண்டு செல்ல வேண்டும். கட்சி உறுப்பினர்களை கருத்தாற்றல் மிக்கவர்களாகவும் செயற் திறன் கொண்டவர்களாகவும் வளர்த்தெடுக்க வேண்டும். கட்சியின் ஸ்தாபன கட்டமைப்புகளை பரந்துபட்ட மக்கள் தளங்களைக் கொண்டவையாக பரவச் செய்ய வேண்டும். எதிர்வரும் காலங்களிலும் தேர்தல்களைச் சந்திப்பது தவிர்க்க முடியாததே. ஏனைய அரசியற் கட்சிகள் மற்றும் அரசியற் குழுக்களுடன் இணைந்தும் அவற்றிலிருந்து தனித்துவமாகவும் செயற்பாடுகளை மேற்கொள்வதுவும் அவசியங்களே!

எமது கட்சியின் சமூக ஜனநாயக கோட்பாடுகளின் அடிப்படையிலான கொள்கைகளும்  கோரிக்கைகளும் எமது மக்கள் மத்தியில் சக்தி மிக்க கருத்துக்களாகப் பரிணமிக்க வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டு ஒரு தார்மீக அரசியல் சமூக இயக்கத்தை முனனெடுப்பதை இலக்காகக் கொண்டு செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இங்கு சுமுகமாக – எல்லோரும் கை தட்டி எப்போதும் பாராட்டும் வகையான நேர்பாதை கிடையாது. நெளிவு சுளிவுகள் தவிர்க்க முடியாதவை

புரட்சிகரமான சமூக முன்னேற்றத்துக்கான பாதையில் பயணிக்க ஒரு புரட்சிகரக் கட்சியின் அவசியத்தை நாம் எப்போதும் உணர்ந்து வந்திருக்கிறோம் – வலியுறுத்தி வந்திருக்கிறோம். அதில் இதுவரை எதிர்பார்த்த வெற்றிகளைக் காணவில்லையே என்ற விரக்தி சரியானதல்ல. இது ஒரு தொடர் பயணம். திருவிழாவுக்குப் போடப்பட்டுள்ள கடைகளில் இதுவும் ஒரு கடையே என்றால் இந்தக் கட்சி தேவையற்ற ஒன்றாகும். தன்னம்பிக்கையற்ற யானைக்கு தும்பிக்கையும் பயன் தராது.

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சிக்கு ஒரு வரலாற்றுப் பாத்திரம் இருக்கின்றது! நாம் கடந்த காலத்தில் யாராலும் மறுக்க முடியாத மறைக்க முடியாத பங்களிப்பை இலங்கைக்கும் தமிழ் மக்கள் சமூகத்துக்கும் ஆற்றியிருக்கின்றோம். இன்றும் இதன் தேவை மக்களுக்கு உண்டு! புரட்சிகரமான சமூக முன்னேற்றங்களுக்கான செயற்பாடுகளுக்கான இடைவெளி நாம் வாழும் சமுதாயத்தில் உள்ளது! எனவே கட்சியின் ஒவ்வொரு தீர்மானமும் செயற்பாடும் கட்சியை பரந்துபட்ட மக்கள் மத்தியில் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட சக்தியாக பரிணமிக்கும் நிலையை அடையும் வகையில் செயலாற்றுவோம்.

எமது ஓவ்வொரு செயற்பாடுகளும் எமது கட்சி தலையேற்றிருக்கும் சமூக ஜனநாயகக் கோட்பாடுகளுக்கும் அவற்றின் அடிப்படையிலான கொள்கைகளுக்கும் ஏற்ப ஏன்? எதற்காக? யாருக்காக? எப்படி? எங்கு நோக்கி? ஏன்ற கேள்விகளுக்கு தர்க்கபூர்வமாகவும் பகுத்தறிவு பூர்வமாகவும் தெளிவான பதில்களைக் கொண்டவையாக அமையட்டும்.

தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் இந்த சமூகவலைத் தளம் கட்சியின் கருத்துக்களின் பிரச்சாரத் தளமாகும்: கட்சியின் உறுப்பினர்களுக்கும் ஆதரவாளர்களுக்குமான அறிவூட்டல் களமாகும்: கட்சியோடு தொடர்பு கொள்பவர்களுக்கும் கட்சியின் நிலைப்பாடுகளையும் செயற்பாடுகளையும் அறிய முனைவோருக்குமான மையமாகும்: நட்புரீதியான மாற்றுக் கருத்துக்களின் முற்றமாகும். இது ஒரே வேளையில் பல்லாயிரம் பேரைச் சென்றடைய எல்லோருமாக கூட்டாக உழைப்போம்.

இது எமது பல முயற்சிகளில் ஒன்றே! ஆக்கமானதென ஊக்கம் கொள்ளும் எதிலும் விடாமுயற்சியோடு செயலாற்றுவோம்;

உங்கள் அன்பின் சகோதரன் – நண்பன் – தோழன்

அ. வரதராஜ பெருமாள்

01 – 09 – 2020

இங்கிலாந்தில் கொரோனாவோடு வாழ்வு

அரசு பாடசாலைகளை திறக்கக் கோருகின்றது!

விரிவுரையார் சங்கம் பல்கலைக்கழகங்கள் கோவிட்-19 போர்க்களமாகலாம் என்கின்றனர்!!

மக்களில் ஒரு பகுதியினர் கொரோணா தடுப்புச் விதிகளை நிராகரிக்கின்றனர்!!!

இங்கிலாந்தில் பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படவதற்கும் இன்னும் சில நாட்களே உள்ள நிவையில் வெளிவகின்ற செய்திகள் ஒன்றுக்குப் பின் ஒன்று முரணாணதாகவும் குழப்பகரமானதாகவும் உள்ளது. அடுத்து வரும் இரு ஆண்டுகள் வரை உலகம் கொரோணாவோடு தான் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில் இயல்பு நிலைக்கு எவ்வாறு மீள்வது என்பதில் பிரித்தானிய அரசு பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றது. முதற்கோணல் முற்றிலும் கோணல் என்பது போல் கொரோணாவைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு ஆரம்பகட்டத்தில் அசமந்தமாக இருந்ததினால் தற்போது உத்தியோகபூர்வமாக நேற்று வரை 41,498 பேர் மரணமடைந்ததாக அறிவத்துள்ளது. ஆனால் உண்மையில் இத்தொகை இரட்டிப்பானது என அஞ்சப்படுகிறது.

இப்பின்னணியில் நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. அதன் முதற்கட்டமாக பாடசாலைகளை மீள ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. அதற்கான திட்டமிடல்களை அரசு மேற்கொண்ட போதும் வினைத்திறனற்ற திட்டமிடல்களால் பல சந்தர்ப்பங்களில் அரசு தனது முடிவுகளை மாற்றிக் கொள்ள – யூ ரேன் – எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. அதனால் அரசின் அறிவிப்புகள் தொடர்பில் மக்கள் நம்பிக்கை இழந்தும் வருகின்றனர்.

தற்போது பாடசாலைகளை ஆரம்பிப்பதிலும் அலுவலகங்களுக்கு பணியாளர்களை வரவைப்பதிலும் அரசு மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அடுத்த சில வரங்களுக்கு இங்கிலாந்தைப் பொறுத்தவரை இதுவே அரசின் முக்கிய செயற்பாடாக அமைய உள்ளது. அதற்கான கொரோணா தடுப்புச் செயற்பாடுகளை பாடசாலைகளும், பல்கலைக்கழகங்களும், அலுவலகங்களும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் பிரித்தானிய மக்களில் ஒரு பிரிவினர் அனைத்து கொரோணா தடுப்புச் செயற்பாடுகளும் அர்த்தமற்றவை என்றும் கொரோணா தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் முடிவுக்குக் கொண்டு வருமாறும் கோரி இலண்டனின் போராட்டமையமான ரவல்ஹர் ஸ்ஹயரில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டத்தினை நடத்தி உள்ளனர்.

ஆனால் இன்று விரிவுரையாளர் சங்கம் மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு திரும்ப வேண்டாம் என்ற ஆலோசணையை வழங்கி உள்ளது. கொரோணோ பரவிய ஆரம்ப காலத்தில் வயோதிபர் இல்லங்களே கொரோணாவினால் கூடுதலாக பாதிப்படைந்ததுடன், பல்லாயிரம் பேர் வயோதிப இல்லங்களில் மரணித்தும் இருந்தனர். கொரோணா இரண்டாம் கட்டம் பல்கலைக்கழகங்களின் விடுதிகளே கொரோணாவின் போர்க்களமாக மாறும் என விரிவுரையாளர் சஙங்கம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த லெயடஸ்டர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் நிஷான் கனகராஜா (படம்) அதற்காகத்தான் பல்கலைக்கழகங்கள் கொரோணா தடுப்பு நடவடிக்கைகளை கடந்த சிலமாதங்களாக திட்டமிட்டு தீவிரமாக செயற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்கள் இவற்றையெல்லாம் கருத்தில் எடுத்து மிகக் கவனமாக திட்மிட்டு அதன் அடிப்படையிலேயே பல்கலைக்கழகங்கள் இயங்க ஆரம்பிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார். பிரித்தானியாவில் லெய்ஸ்ரர் பிரதேசமே முதற் தடவையாக இரண்டாவது லொக்டவுன் க்கு உள்ளானது. ஆசியர்களை மிகச்செறிவாககக் கொண்ட இந்த லெய்ஸ்ரர் பிரதேசத்தில் கிழக்கிலங்கையைச் சேர்ந்த தமிழ், முஸ்லீம் மக்கள் கணிசமான அளவில் வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இங்கிலாந்தில் கோடைகாலம் முடிவடைந்து குளிர்காலம் ஆரம்பிக்க உள்ளது. இந்த குளிர்காலத்தில் தான் வைரஸ் கிருமிகள் மிகத் தீவிரமாக பரவுவது வழமை. இப்பரவல் பெரும்பாலும் பள்ளி மாவணர்களுடாவவே பரவுகின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது புதிதாக உருவாகியுள்ள இந்த வைரஸ்க்கு, பிரித்தானியாவைப் பொறுத்தவரை இதுவே முதற் குளிர்காலம் என்பதால் இந்த வைரஸின் பரவலும், தாக்கமும் எவ்வாறு அமையும் என்பது இன்னமும் மில்லியன் பவுண்ட் கேள்வியாகவே உள்ளது. இதற்குள்ளாக அலுவலர்களையும் தங்கள் அலுவலகங்களுக்கு திருப்புமாறு அரசு கோரத் திட்டமிட்டு உள்ளது. இந்தக் குளிர்காலம் பிரித்தானியாவைப் பொறுத்தவரை மிகக் கடினமான, அபாயமான குளிர்காலமாகவே நோக்கப்படுகின்றது.

அதே சமயம் தொடர்ச்சியாக மக்களை லொக் டவுனிலும் வைத்திருக்க முடியாது. ஏற்கனவே அரசு அளித்து வருகின்ற பேர்லோ திட்டம் இந்த ஒக்ரோபர் உடன் முடிவுக்கு வருகின்றது. அது முடிவுக்கு வருவதுடன் வேலை இழப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகின்றது. ஏற்கனவே வழங்கப்பட்ட உதவிகளை எவ்வாறு மீளப்பெறவது, எவ்வாறு பிரித்தானியாவின் கடன்தொகையைக் குறைப்பது என்ற குழப்பத்தின் மத்தியில் வேலை இழப்புகள் மக்களை மேலும் அரச உதவியை நோக்கித் தள்ள உள்ளது. சில ஆய்வுகளின் படி நேரடியாக கொரோணாவினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க அடுத்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதார நெருக்கடியால் கூடிய மரணங்கள் சம்பவிக்கும் என ஆபாய முகாமைத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. அதன்படி 2025 வரையான ஐந்து ஆண்டுகளில் பிரித்தானியாவில் 700,000 பேர் கொரோணா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பால் மரணத்தை சந்திப்பார்கள் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.

இன்னும் இரு மாதங்களில் வரவுள்ள வரவுசெலவுத் திட்டத்தில் அரசு கொரோணாவிற்கு செலவழித் பணத்தை மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதற்கு வரியயை அதிகரிக்க வேண்டி ஏற்படும். ஏற்கனவே கொரோணாவினால் பொருட்கள் விலையேறி உள்ள நிலையில் வரி அதிகரிக்கப்படும் பட்சத்தில் அந்த வரி அதிகரிப்பு மக்களை நோக்கியே தள்ளப்படும். அதனால் பொருட்கள் விலையேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும் அரசு பொதுச் செலவீனங்களை குறைக்க நிர்ப்பந்திக்கப்படும். தற்போது அட்சியில் உள்ள கொன்சவேடிவ் கட்சியானது முற்றிலும் முதலாளிகளினதும் பெரும் கோப்ரேட்களினதும் நலன்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சி. இவர்களுடைய பொருளாதாரக் கொள்கைகள் பெரும்பாலும் பின்தங்கிய கீழ் நிலையில் உள்ள மக்களையே கூடுதலாக பாதிக்கும் என்பதில் எவ்வித சந்தேகங்களும் கிடையாது. பொதுச்செலவீனங்கள் குறைக்கப்படும் போது அரச உதவிக்கொடுப்பனவுகள் குறைக்கப்படும். சுகாதார சேவைக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் மக்கள் மேம்பாட்டுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் என பாரிய நிதிக்குறைப்புகள் பொதுச் செலவீனத்தில் மேற்கொள்ளப்படும். இவற்றின் ஒட்டுமொத்த விளைவாகவே 700,000 அடுத்த ஐந்து ஆண்டுகளில் மரணத்தை தழுவுவார்கள் என கணிக்கப்படுகின்றது.

இவற்றுக்கு மத்தியில் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தும் வெளியேறுகின்றது. பிரித்தானியாவின் தான்தோண்றித் தனமான யெற்பாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் பதிலடிகொடுக்க முயைலாம். அவ்வாறான ஒரு நிலையேற்பட்டால் பிரித்தானியாவில் அத்தியவசியப் பொருட்களின் விலைகள் உயர்வது தவிர்க்க முடியாததாகும். மேலும் ஐரோப்பிய சந்தையில் தங்கியுள்ள பிரித்தானிய நிறுவனங்கள் இலாபமீட்டமுடியாமல் திவாலாகிப் போகும் சூழல் ஏற்படும். பல்லாயிரக்கணக்கானோர் வேலை இழக்கவும் நேரலாம். பிரித்தானிய பொருளாதாரம் கொரோணா என்ற இயற்கை அழிவினாலும் பொறிஸ் ஜோன்சன் என்ற வினைத்திறன் அற்ற செயற்திறனற்ற பிரதமராலும் இரட்டைத் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது. இவ்வழிவுகளில் இருந்து பிரித்தானியா மீண்டும் பழையநிலையை எட்ட இன்னும் ஒரு தசாப்தம் – பத்து ஆண்டுகள் ஆகம் என பொருளியல் நிபுணர்கள் கணிக்கின்றனர்.

நூல் அறிமுகம்: குமிழி – புளொட் க்குள் நடந்த அராஜகங்களை வெளிக்கொணரும் இன்னொரு படைப்பு – ஆர் புதியவன்

அட்டைப்படம் போலவே எல்லாமே தெளிவற்றுப்போய், நாவலில் சொல்லப்படுவது போல சுனாமி போல் கொன்றொழித்து பாலைவனமாக போன ஒரு தேசத்தின் கதை.

இது புளட் அமைப்புக்குள் நடந்த அராஜகங்களை வெளிக்கொணரும் இன்னொரு படைப்பு. இங்கே புளட் என்ற இயக்கப்பேரை நீக்கி விட்டு வேறு எந்த இயக்கத்தின் பெயரைப் போட்டாலும் அச்சரம் பிசகாமல் பொருந்தும்.

மோட்டார் சைக்கிள் சத்தம் கேட்டபோதெல்லாம் வரும் அச்சத்தை சொல்கிற இடத்தில் உயிர் உறைந்து போகும் ஒரு வித வலி.

கோவிந்தனின் புதியதோர் உலகம் முதல் முதல் புளட்டின் வெளித்தோற்றத்தை கிழித்துத் தொங்கப்போட்டது. (அதே கோவிந்தனை பின் புலிகள் சிதைத்துப் போட்டதையும் அறிந்தவர்களுக்கு தெரியும்) இப்போ குமிழி….

” புலியின் உளவாளி என்ற உரப்பலில் தோழர்கள் உண்மையறியாது குழம்பி நின்றார்கள். மீட்பர்கள் அடித்தார்கள்.குதறினார்கள். சுந்தரம் படைப்பிரிவு என்று பெயர் சூடிக்கொண்ட அவர்கள் சுமார் ஆறு ஏழு பேரும் ஒரு பந்தைப் போல மதனை உருட்டி எடுத்துக்கொண்டிருந்தார்கள்……

மனதைத் திடப்படுத்திக்கெண்டு வாசிக்கத் தொடங்குங்கள். அருமையான படைப்பு. தோழர் ரவி நல்ல எழுத்தாற்றல் மிக்கவர் என்பது தெரியும். ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போல் மிகுதியை பின்னர் வாசிக்கலாம் என புத்தகத்தை வைத்துவிட முடியாத படி ஒவ்வரு வரியும் உள்ளீர்க்கும் .
நாவலை வாங்க விரும்பினால் Ravindran Pa தொடர்பு கொள்ளுங்கள்.

ஷோபாவின் ‘இச்சா’ அசலா? நகலா? குற்றச்சாட்டுகள் வலுக்கின்றது!!! ஷோபா: “ஓ..அப்படியா!” சேனன்: “போலித் தனங்களை உடைப்பது அத்தியாவசியம்!”

தமிழ் இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர் ஷோபாசக்தியின் நாவல் ‘இச்சா’ அவருடைய மூலப் பிரதி அல்ல என்ற குற்றச்சாட்டு தமிழ் இலக்கிய பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகின்றது. இக்குற்றச்சாட்டு தொடர்பாக தேசம்நெற் ஷோபாசக்தியயைத் தொடர்புகொண்ட போது “ஓ..அப்படியா!” என்று இதுபற்றி எதனையும் அறியாதவராக இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேசம்நெற் உடன் உரையாட மறுத்துவிட்டார். ‘இச்சா’ நாவலின் அசல் பிரதியாகக் கருதப்படும் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நாவலைப் படைத்த சேனன் இக்குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தியதுடன் “போலித் தனங்களை உடைப்பது அத்தியாவசியம்!” என தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

ஈழத்து படைப்பாளிகளில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரே தமிழக இலக்கியச் சூழலில் அறியப்பட்டவர்களாக உள்ளனர். அந்த வகையில் ஷோபசகத்திஇ சேனன் இருவருமே குறிப்பிடத்தக்கவர்கள். அதிலும் ஷோபாசக்தி பல நாவல்களை வெளியிட்டு தனக்கென ஒரு இலக்கிய ரசிகர் வட்டத்தையே கட்டமைத்து வைத்துள்ளவர். இந்நிலையில் ‘இச்சா’ நாவல் இன்னுமொரு சக படைப்பாளியின் மூலத்தை தழுவிய பிரதி என்ற குற்றச்சாட்டு பலருக்கும் அதிர்ச்சித் தகவலாக அவர்களைச் சென்றடைந்து கொண்டுள்ளது.

‘இச்சா’ நாவல் ஆசிரியர் ஷோபாசக்தி மீதான தழுவல் மற்றும் பிரதி பண்ணுதல் போன்ற குற்றச்சாட்டுகள் தமிழ் இலக்கியச் சூழலுக்கு ஒன்றும் புதிதல்ல. தமிழ் சினிமாவில் தொடங்கி இலக்கியம் வரை இது எவ்வித கூச்சநாச்சமும் இன்றி செய்யப்படுகின்றது. இன்று பல்கலைக்கழகங்களில் கூட மாணவர்கள் முதல் பேராசிரியர்கள் வரை ஆய்வுகளைத் தழுவி பிரதி செய்து வெளியிட்டு பட்டம்பெற்றுச் செல்கின்றனர். இந்தியாவிலும் சர்வதேச நாடுகளிலும் இவ்வாறான இரண்டாம்தர ஆக்கங்களை வெளியிடுவதற்கென்றே ஜேர்னல்கள் இருக்கின்றன. தங்களுடைய இரண்டாம்தரமான ஆக்கங்களுடன் சில நூறு டொலர்களை வழங்கினால் இந்த ஆக்கங்கள் இவ்வாறான இரண்டாம் தரமான ஜேர்னல்களில் வெளியாகும். அதனை தங்களுடைய பதவி உயர்வுகளுக்குஇ சம்பள உயர்வுகளுக்கு விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் பயன்படுத்துவார்கள். ஆனால் அவர்கள் இதுபற்றி வெளியில் பெரிதாக அலட்டிக்கொள்ள மாட்டார்கள் ஏனென்றால் பொடுக்கேடு வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்பதால். ஆனால் இலக்கியவாதிகள் இதனை ஒரு பொட்டுக்கேடு என்றோ, கேடுகட்டத்தனம் என்றோ எண்ணுவதில்லை. அவ்வளவிற்கு தமிழ் சினிமாவும் இலக்கியச் சூழலும் தரம் தாழ்ந்துள்ளது.

உதாரணத்திற்கு ஈழத்தில் வெளிவந்த ‘புதுசு’ சஞ்சிகையில் பவானி என்ற ஒரு பெண் எழுத்தாளர் ‘இனம்காணல்’ என்ற ஒரு சிறுகதையை எழுதி இருந்தார். பவானி இலக்கிய உலகில் அறியப்படாத ஒரு அறிமுக எழுத்தாளர். புதுசு சஞ்சிகை வெளிவருவது நின்றே தசாப்தங்கள் ஆகிவிட்டது. ஆனால் அச்சஞ்சிகை எழுத்தாளர்களில் ஒருவராக இருந்த அ இரவி என்பவர் ஈழத்து இலக்கிய உலகில் ஓரளவு அறியப்பட்டவர். ‘ஒரு பேப்பர்’இ ‘ஐபிசி’ வானோலி ஊடாகவும் பிரபல்யமானவராக இருந்தவர். இந்த அ இரவி பாவானியின் ‘இனம்காணல்’ சிறுகதையைத் தழுவி பிரதி பண்ணி ‘நாச்சியார் திருமொழி’ என்ற பெயரில் அச்சிறுகதையை தமிழகத்தில் இருந்து வெளிவரும் தீராதநதி என்ற இலக்கிய சஞ்சிகையில் வெளியிட்டார். இவ்வாறு தமிழ் இலக்கிய வரலாற்றில் பல இலக்கியத் திருட்டுக்களும் நடந்தேறியுள்ளது.

அறிவுசார் உடமைகளின் திருட்டு என்பது தமிழ் இலக்கியச் சூழலில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விடயமாக சர்வசாதாரணமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுவருகின்றது. இது தமிழ் படைப்புலகத்தின் படைப்புச் செயற்பாடுகளை மிகவும் பலவீனப்படுத்துவதுடன் பாதிக்கப்படும் படைப்பாளிகளையும் இருட்டடிப்புச் செய்கின்றது. தனது வயிற்றுப் பசிக்காக திருடுபவர்களை மிகப்பெரும் பாதகர்களாக நோக்கும் சமூகம் இவ்வாறான அறிவுசார் உடமைகளின் திருட்டை கண்டும்காணமல் இருப்பது மிகப்பெரும் தவறு.

அந்த வகையில் ஷோபாசக்தியின் ‘இச்சா’ நாவலின் பிரச்சினையில் அதன் அடி – முடி யயைத் தேடிக் கண்டுபிடிப்பது தமிழ் படைப்புலகத்தின் படைப்பாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. ஷோபாசக்தியின் ‘இச்சா’ நாவலுக்கும் சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நாவலுக்கும் இடையே உள்ள ஒற்றுமை பற்றி ‘இச்சா’ நாவல் வெளிவந்த காலத்திலேயே அறிந்திருந்தேன். ஆயினும் அக்காலப்பகுதியில் சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நாவல் வெளிவந்திருக்கவில்லை என்பதால் அந்நாவல் வெளிவரும்வரை அது பற்றிய விமர்சனங்களிற்காக காத்திருந்தேன்.

நாவல் வெளிவந்த விடயம் சேனனின் முகநூலில் ஓகஸ்ட் 17ம் திகதி பதிவிடப்பட்டு இருந்தது. தமிழகத்தில் இந்நாவலை எங்கும் வாங்க முடியும் என சேனன் தனது பதிவில் குறிப்பிட்டு இருந்தார். அதற்குப் பின் ஒரு வாரகாலத்தின் பின் ஓகஸ்ட் 26இல் வே ராம சாமி என்ற தமிழகத்தைச் சேர்ந்த மிகவும் அறியப்படாத ஒரு எழுத்தாளர் சேனனையும் அறிந்திராத ஒரு எழுத்தாளர் வருமாறு தனது பதிவில் குறிப்பிடுகின்றார்:

“சேனன் என்பார் யார் என்று தெரியவில்லை ..

ஒரு மிகப்பெரிய ஒப்புமை வியப்பு என்னவெனில் அண்மையில் வெளிவந்த ‘இச்சா’ நாவலும் இதுவும் வடிவம்இ சம்பவங்கள் எல்லாம் ஒன்னு போல இருக்கு ..

கேப்டன் ஆலா (இச்சா )
கேப்டன் அல்லி (‘சித்தார்த்தனின்’) ரெண்டு பேரும் ஒரே ஆளா?

‘இச்சா’வில் கேப்டன் ஆலாவுக்கான நிகழ்வுகள் சேனனின் நாவலில் சாதனாஇ அல்லி இருவருக்குமாக
இருக்கிறது ..”

சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நூலின் மூலப்பிரதி நான் அறிந்த சிலரிடம் மேலதிக வாசிப்பிற்காகவும் அவர்களுடைய கருத்துக்களை உள்வாங்கி மேலும் செழுமைப்படுத்துவதற்காகவும் வழங்கப்பட்டு இருந்தது. அவர்கள் மூலமாகவே இந்த இலக்கியத் திருட்டு முதன்முதலில் மார்ச் மாதம் அளவில் கசியத் தொடங்கியது. இது தொடர்பாக இலக்கிய ஆர்வலரும் தற்போது புலனாய்வாளருமாகியுள்ள அருண் அம்பலவாணர் தனது முகநூல் பதிவில் “சேனன் தனது நாவல் பிரதியை எடிட் பண்ணவோ என்னவோ தனக்கும் ஷோபா சக்திக்கும் உறவினரான ஒரு பெண் ஏஜெண்டிடம் அனுப்பியிருக்கிறார். அந்த ஏஜெண்ட் அதனை “கொரில்லா” வுக்கு படிக்க கொடுக்க கொரில்லா அதனை அரக்கப்பரக்க “இச்சா”வாக சந்தைக்கு விட்டு விட்டாராம்” என்று குறிப்பிட்டுள்ளார். அருண் அம்பலவாணர் குறிப்பிடும் பெண் வேறு யாருமல்ல ஷோபசக்தியின் சகோதரி. இவர் சேனனுக்கும் சகோதரியானவர். ஷோபாசகத்தியும் சேனனும் நண்பர்கள் மட்டுமல்ல தீவகத்தைச் சார்ந்த நெருங்கிய உறவினர்களும் கூட.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேசம்நெற் சார்பில் ஷோசக்தியுடன் முகநூல் உட்பெட்டியூடாகத் தொடர்புகொண்டு விசாரிக்க முற்பட்டு எனது கேள்வியயை அனுப்பி வைத்தேன்: ‘வணக்கம் சோபாசக்தி உங்களுடைய ‘இச்சா’ நாவல் தொடர்பாக சில குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றது. இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக உங்களோடு உரையாட விரும்புகிறேன்’. அதற்கு குறுகிய நேரத்திலேயே ஷோபாசக்தியிடம் இருந்து பின்வரும் பதில் வந்தது: “என் எல்லாப் புத்தகங்கள் குறித்துமே நிறையக் குற்றச்சாட்டுகள் உள்ளன. எனவே இதெல்லாம் எனக்குப் பழகிப்போய்விட்டன. என்னோடு நீங்கள் உரையாடி ஒன்றும் ஆகப் போவதில்லை. தகவலுக்கு நன்றி”. ஒரு ஊடகவியலாளனாக நான் பல விடயங்கள் தொடர்பாக ஷோபாசக்தியுடன் தொடர்பு கொண்டிருக்கிறேன். பெரும்பாலும் ஷோபாசக்தி எந்த விடயத்திற்கும் தயங்காமல் தனது கருத்தை வெளிப்படுத்துபவர். பல சில்லறை விடயங்களுக்கே பதிலளிக்கத் தயங்காதவர். ஆனால் இக்குற்றச்சாட்டு தொடர்பில் தேசம்நெற் உடன் உரையாட அவர் மறுத்துவிட்டார்.

தேசம்நெற் சார்பில் நானும் விடுவதாக இல்லை: “சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ என்ற நாவலைப் பிரதி பண்ணியே உங்களுடைய நாவல் ‘இச்சா’ எழுதப்பட்டதாக சொல்லப்படுகின்றது. மேலும் சேனன் தன்னுடைய நாவலை உங்கள சகோதரிக்கு திருத்தத்திற்குக் கொடுத்ததாகவும் அதிலிருந்தே நீங்கள் இதனைப் பிரதி செய்ததாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. ஒரு பொறுப்புள்ள படைப்பாளியாக இதற்கு பதிலளிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளதல்லவா?” என்று மற்றுமொரு கேள்வியயை உட்பெட்டியில் அனுப்பி வைத்தேன். அதற்கும் பதில் விரைவிலேயே கிடைத்தது. ஷோபாசக்தியின் பதில்: “ஓ..அப்படியா! குற்றச்சாட்டு எங்கே பதிவாகியுள்ளது?” என்ற கேள்வியாக அது அமைந்தது. ‘கொரில்லா’ ‘பொக்ஸ்’ இனுள் நின்று கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பது என்பது இதைத்தானா?

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சேனனிடம் தேசம்நெற் கேள்வி எழுப்பியது. அதற்கு சேனன் “இரு நாவல்களையும் படித்த நண்பர்கள் சொல்லித்தான் இச்சா நாவலைப் படித்தேன். அதிர்ச்சியாக இருந்தது. ஒற்றுமை – வேற்றுமை பற்றி படித்தவர்கள்தான் மேலும் சொல்ல வேண்டும். இப்போதுதான் எனது நாவல் விற்க ஆரம்பித்திருகிறார்கள். சற்றுப் பொறுத்திருங்கள். மேலும் பலர் படிக்கட்டும். அந்த வாக்கு மூலங்களில் இருந்து பேசுவதுதான் நியாயம். ஆனால் தமிழ் கலை இலக்கிய உலகில் இன்று புரையோடிக் கிடக்கும் பல்வேறு போலித் தனங்களை உடைப்பது அத்தியாவசியம் – எதிர்காலத்தில் நல்ல இலக்கியம் உருவாக அது அவசியம்” எனத் தெரிவித்தார்.

இப்பொழுது மெல்ல எழுந்துவரும் இந்த இலக்கியச் சர்ச்சை இன்னும் சில வாரங்களில் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் ஷோபாசக்தியின் ஏனைய படைப்புகளும் கேள்விக்கு உள்ளாக்கப்படலாம். சேனனின் ‘சித்தார்த்தனின் விநோதச் சம்பவங்கள்’ நாவல் யுத்தத்தைத் தொடர்ந்து கருக்கொள்ள ஆரம்பித்தது. மலேசிய இலக்கிய ஆர்வலர் நவீன் வெளியிட்ட சஞ்சிகையிலும் இந்நாவலின் சில கதைகள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. சேனனின் நாவல் வெளிவருவதற்கு முன்னமே தனது நாவல் வெளிவரவேண்டும் என்பதில் ஷோபாசக்தி காட்டிய ஆர்வத்தை பலரும்சுட்டிக்காட்டுகின்றனர். அருண் அம்பலவாணர் தனது பதிவிலும் அதனைச் சுட்டிக்காட்டி உள்ளார்.

இக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஷோபசக்தி பொறுப்புடன் பதிலளிப்பது மிகவும் அவசியம். இவை எழுந்தமான குற்றச்சாட்டுகள் அல்ல. ஷோபாசக்தியின் படைப்பாற்றலை கேள்விக்கு உள்ளாக்குகின்ற விடயம். இதுவரை ஷோபாசக்தியின் படைப்பாற்றல் மீது யாரும் இவ்வாறான ஒரு குற்றச்சாட்டை வைத்ததில்லை. அவருடைய அரசியல் மீது, அவர் தன்னைச் சுற்றிக் கட்டமைத்த தலித்திய விம்பத்தின் மீது பல குற்றச்சாட்டுகள் இருந்தமையும் அக்குற்றச்சாட்டுகள் தற்போது அவரை அம்பலப்படுத்தி வருவதும் கண்கூடு. தற்போது முதற்தடவையாக அவருடைய படைப்பாற்றல் கேள்விக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஷோபாசக்தி படைப்பாற்றல் உள்ள எழுத்தாளர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அவருடைய படைப்பாற்றல் என்பது புனைவு, இரசனை என்பனவற்றுக்குள் மட்டுப்படுத்தப்பட்டது என்பதும் அவர் நாவலின் கட்டமைப்பு மற்றும் கருஉருவாக்கத்தில் தழுவலையும் பிரதிகளையும் வைத்தே படைப்புகளை உருவாக்குகின்றார் என்ற குற்றச்சாட்டுகளை அவ்வளவு இலகுவில் கடந்து போய்விட முடியாது என்பதை அடுத்துவரும் வாரங்கள் அவருக்கு உணர்த்தும் என்றே கருதுகிறேன்.

தமிழக இலக்கியச் சூழல் ஈழப் போராட்ட இலக்கியங்களை நிராகரிக்கின்றது! – கலந்துரையாடல்

தமிழக இலக்கியச் சூழல் ஈழப் போராட்டம் சார்ந்த இலக்கியங்களை நிராகரிக்கின்றது என்பதனை விவாதத்துடன் கலந்துரையாடுவதற்கான நிகழ்வு ஒன்றை ‘திரள்’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது. ஓகஸ்ட் 29 இலண்டன் நேரம் மாலை 2:30ற்கு ஆரம்பிக்கும் இக்கலந்துரையாடலில் இணைந்து கொள்வதற்கான விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிகழ்வு விபரத்தில் உள்ளது.

‘நவீன தமிழ் இலக்கியத்தில் அரசியல் பிரதிகளும் அரசியல் நீக்கம் பெற்ற பிரதிகளும்’ என்ற தலைப்பில் இக்கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டு உள்ளது. தமிழ் இலக்கியச் சூழல் என்பது பெரும்பாலும் தமிழக இலக்கியச் சூழலாக குறுக்கப்பட்டுள்ள நிலையில் ஒடுக்கப்பட்டுள்ள ஈழச் சமூகங்களின் இலக்கியங்களை தமிழக இலக்கியச் சூழல் மேலும் ஓரம்கட்டுகின்றதா என்ற கேள்வி உலகெங்கும் பரந்து வாழ்கின்ற ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ளது. அந்த வகையில் ஈழத்து – தமிழக எழுத்தாளர்கள் இலக்கியவாதிகள் அண்மைக்காலத்தில் இணைந்து மேற்கொள்கின்ற கலந்துரையாடலும் விவாதமுமாக இது அமைய உள்ளது.

இந்நிகழ்வில் இலங்கையில் இருந்து இலக்கிய ஆய்வாளர் ரியாஸ் குரானா தமிழகத்தில் இருந்து பேராசிரியர் இலக்கிய விமர்சகர் அபிலாஷ் சந்திரன் இலக்கிய ஆய்வாளர் முபீன் சந்திகா இவர்களுடன் லண்டனில் இருந்து எழுத்தாளர் அனோஜன் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.  இந்நிகழ்வை இலக்கிய ஆர்வலரும் ஆய்வாளருமான வாசன் வழிநடத்துகின்றார். இவர்களது ஒரு மணிநேர முன்னுரைகளைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொள்வோர் கேள்விகளை எழுப்பவும் கருத்துக்களைப் பரிமாறவும் ஒரு மணிநேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது. மொத்த நிகழ்வும் இரு மணி நேரத்திற்குள் முற்றுப்பெறும். இந்த இணையவெளி கலந்துரையாடலில் இலங்கை, இந்தியா உட்பட புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்தும் இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் கேள்விகேட்டு கருத்துக்களை பரிமாற விரும்பாதவர்கள் சமகாலத்தில் நிகழ்வை முகநூலில் பார்க்கின்ற வகையில் நிகழ்வு ஒளிபரப்பாக்கப்படும் என ஏற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர்.

‘திரள் – உரையாடல் வெளி’ என்ற இவ்வமைப்பு அண்மையில் பிரித்தானியாவில் உள்ள முற்போக்கு இலக்கிய ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பு தொடர்ந்துவரும் காலங்களில் குறைந்தபட்சம் மாதாந்தம் ஒரு நிகழ்வையேனும் நடத்த உள்ளதாக தேசம்நெற் க்குத் தெரிவித்தனர். ஒரு குறுகிய எல்லைக்குள் மட்டுப்படுத்தப்பட்டு உள்ள ஈழத்து இலக்கியச் சூழலை புலம்பெயர்ந்த நாட்டு எல்லைகலைக் கடந்து ஒருங்கிணைத்து புதியதொரு உத்வேகத்தோடு பயணிக்க உள்ளதாகவும் திரள் குழுமம் தேசம்நெற்க்குத் தெரிவித்து இருந்தது. பின் கோவிட்-19 காலம் உருவாக்கி உள்ள தொழில்நுட்ப வெளியானது இலக்கிய ஆர்வலர்களை எல்லைகளைக் கடந்தும் சமகாலத்தில் கலந்துரையாடல்களை தொழில்நுட்ப வெளியில் மேற்கொள்வதற்கான தளத்தை உருவாக்கித் தந்துள்ளதாகத் தெரிவித்த திரள் குழுமத்தினர் தடைகள் பின்னடைவுகள் கூட புதிய வெளிகளை உருவாக்கி விடுகின்றன எனத் தெரிவித்தனர். முற்போக்கான ஆரோக்கியமான ஒரு இலக்கியச் சூழலை உருவாக்க முற்போக்கு இலக்கிய ஆர்வலர்களுடன் இணைந்து பயணிக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தேசம்நெற்க்குத் தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனுக்கு முள்ளந்தண்டு மாற்றுச் சத்திர சிகிச்சை தேவை!!!

மழை வரும் வராமலும் இருக்கும்!
சம்பந்தன் அண்ணை ஜனநாயமாக நடப்பார் அப்படி இல்லாமலும் இருப்பார்!!
கோத்தபாயா அபிவிருத்தியயை முன்னெடுப்பார் முன்னெடுக்காமலும் இருப்பார்!!!

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருக்கு முள்ளந்தண்டு சிக்கல்கள் நிறைய உள்ளது. அதில் பா உ சித்தார்தனுக்கே கூடிய சிக்கல் உள்ளது. தேர்தல் முடிவிற்குப் பிறகு பா உ சித்தார்த்தன் டான் தொலைக்காட்சியின் ஸ்பொட் லைட் வழங்கிய நேர்காணலில் என்ன சொல்ல வருகின்றார் எனபது சித்தார்த்தனுக்கும் புரியவில்லை இவரை நேர்காணல் செய்த ஊடகவியலாளர்களுக்கும் புரிந்ததாகத் தெரியவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தேர்தலில் வரலாற்று ரீதியான தோல்வியயைக் கண்டுள்ள நிலையில் பத்து ஆண்டுகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதனும் தர்மலிங்கம் சித்தார்த்தனும் அரசியல் முதுகெலும்பு இல்லாததால் அல்லது அது இத்துப் போனதால் தான் குப்பை கொட்டினர் என்பது உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழர் அறிந்த இரகசியம். சிவசக்தி ஆனந்தன் அருந்தவபாலன் ஆகியோருக்கு ஏற்பட்ட நிலை தங்களுக்கு ஏற்படும் என்று அறிந்த புத்திசாலிகள். இப்படியான முதுகெலும்பற்ற புத்திசாலிகள் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குத் தேவை. தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைவதற்கு அழைக்கப்பட்ட கூட்டமொன்றில் கூட த சித்தார்தனுக்கு இருப்பதற்கு ஆசனமே வழங்கப்படமால் அவமானப்படுத்தப்பட்டார். அப்படி இருந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் நின்றால் ஒரு ஆசனம் கிடைக்கும் என்பதால் தான் இணைந்தார். அதற்கான பலனை அனுபவிக்கின்றார்.

த சித்தார்த்தன் புளொட் இயக்கமாக இருக்கும் போதும் சரி அரசியலுக்கு வந்த போதும் சரி முதுகெலும்பற்ற ஒருவராகவே செயற்பட்டார். புளொட் அமைப்பில் அவர் தலைமையேற்ற போது நடந்த எந்தக் கொடூரச் செயலையும் அவர் தட்டிக்கேட்கவோ தடுத்து நிறுத்தவோ முற்படவில்லை. இவர் பிறகெப்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜனநாயகமின்மையைத் தட்டிக் கேட்பார். நாட்டில் நடக்கும் ஜனநாயக மறுப்பைத் தட்டிக் கேட்பார். தன்னைச் சுற்றி என்ன அநியாயம் நடைபெற்றாலும் அது பற்றி அறச்சீற்றம் கொள்ளாத அல்லது கொள்ளத் தெரியாத ஒரு அரசியல் வில(லா)ங்கு சித்தார்த்தன்.

த சித்தார்த்தன் யாழ் சமூகத்தை பிரதிபலிக்கின்ற சராசரி மனிதன். யாழ் சமூகத்தில் வாழ்பவர்கள் பெரும்பாலும் ஏதோ தாங்கள் உண்டுஇ தங்கள் வேலையுண்டு மற்றையவர்களிடம் கெட்டபெயரைச் சம்பாதித்துவிடக் கூடாது என்ற விழிப்புணர்வுடன் வாழ்பவர்கள். தங்களைச் சுற்றி என்ன அநீதிகள் நடைபெற்றாலும் கண்டுகொள்ளாமல் இருந்துவிடுவார்கள். அதனைத்தான் கடந்த கால ஆயுதப் போராட்டமும் மக்களுக்கு கற்றுக்கொடுத்தது. தட்டிக் கேட்பவர்களை கேள்வி கேட்பவர்களை ஆயுதம் தாங்கியவர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் மட்டுமல்ல அரச ஊழியர்களுக்கும் கூட பிடிப்பதில்லை. அதனால் தான் யாழ் சமூகத்தில் என்ன விலைகொடுத்தும் மாற்றத்தை தடுத்துவிடவே முயற்சிப்பர். அந்தப் பின்னணியில் வந்தவர் தான் தர்மலிங்கம் சித்தார்த்தன்.

இவர் பொதுவெளிக்கு வந்திராவிட்டால் நானும் இந்த விமர்சனத்தை வைத்திருக்க வேண்டி வந்திராது. சராசரியாக உள்ள தமிழ் அரசியல் வாதிகளுக்குள் த சித்தார்த்தன் ஒப்பீட்டளவில் நேர்மையானவர் தான். அதனால் தான் ஒரு வாக்கு வங்கியயைத் தொடர்ந்தும் வைத்திருக்கின்றார். ஆனால் இவருடைய நேர்மை கடந்த பத்துவருடத்தில் தமிழ் மக்களுக்கு பெரிதாக எதனையும் பெற்றுக் கொடுக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் தமிழ் மக்கள் பெற்றெடுத்திருக்க வேண்டிய அபிவிருத்தி விடயங்களை பெறுவதற்கு இவரைப் போன்றவர்கள் தடையாக இருந்துள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளாக இவருடைய ஆசனத்தில் ஒரு செயற்திறன் மிக்கவர் சிவசக்தி ஆனந்தன் போல் ஒருவர் இருந்திருந்தால் இன்னும் பலதை மக்களுக்கு செய்திருக்க முடியும்.

அணமையில் டான் தொலைக்காட்சியின் ஸ்பொட் லைட் நிகழ்ச்சியில் கூட அவர் ஸ்பொட்டாக எதனையும் சொல்லவில்லை. மேலே குறிப்பிட்டதுபோல் ஒன்றுக்குப் பின் ஒன்று முரணாகவே கருத்துத் தெரிவித்து உள்ளார். தன்னுடைய பாராளுமன்ற ஆசனத்தைப் பயன்படுத்தி தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பயன்படுத்தி எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வெளிப்படவில்லை. மக்களால் தோற்கடிக்கப்பட்ட மாவை சேனாதிராஜாவுக்கு தேசியப்பட்டியலில் இடம்கொடுக்கவில்லை என்பது தான் அவருடைய ஆதங்கம். தமிழரசுக் கட்சி ஜனநாயகப்படி முடிவெடுக்கவில்லை என்பது உண்மைதான். சரி ஜனநாயகப்படி முடிவெடுத்தால் நீங்கள் ஏன் மக்கள் தங்கள் ஜனநாயகத்தின் மூலம் தோற்கடித்தவரை பின் கதவால் கொண்டுவர முற்படுகிறீர்கள். இதில் என்ன ஜனநாயம் இருக்கின்றது. தேசியப் பட்டியல் ஆசனத்தை அம்பாறைத் தொகுதிக்கான பிரநிநிதித்துவமாக வழங்கியது உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி தன்னுடைய தேசியப் பட்டியல் ஆசனத்தை யாழ் குடாவில் உள்ள ‘குதிரை கழுதை’ களுக்கு வழங்கியது போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள நீங்களும் இன்னும் ஆனையிறவு தாண்டாத மனநிலையில் இருப்பது ஏன். உங்களைப் போல் இன்னுமொரு முதுகெலும்பற்றவர் கட்சிக்குள் இருந்தால் நீங்கள் இன்னும் கூடியகாலம் குப்பை கொட்டலாம் என்பதற்காகவா?

மேலும் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளைக் கூட சித்தார்த்தனால் விளங்கிக்கொண்டிருக்க முடியவில்லை. ஓரிடத்தில் குறிப்பிடும் போது மக்கள் அரசுசார்பானவர்களுக்கு வாக்குகள் அளித்ததால் மக்கள் தேசியத்தை விட்டு விலகிச் சென்று கொண்டிருக்கின்றார்கள் என்று குறிப்பிடுகின்றார். இன்னுமொரு இடத்தில் குறிப்பிடும் போது மக்கள் தேசியத்துடன் தான் இருக்கிறார்கள் என்கிறார். நீங்கள் அங்கம் வகித்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக மக்கள் வாக்களிக்கக் காரணம் நீங்களும் உங்களைப் போன்ற தமிழ் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களும் எதனையும் சாதிக்கவில்லை என்பதனாலேயே. ஏன் அதனை உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு சமயத்தில் மக்கள் தவறாக தங்கள் வாக்குகளை அளித்துவிட்டார்கள் என்று கூறும் சித்தார்த்தன் மக்களுடைய வாழ்நிலை கடந்த பத்து ஆண்டுகளாக மேம்படாததற்கு தானும் ஒரு காரணம் என்பதை ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படி ஏற்றுக்கொள்ளாதவர் குறைந்தபட்சம் தன்னுடைய பாராளுமன்ற ஆசனத்தைப் பயன்படுத்தி எதனைச் சாதித்தேன் என்பதைக் கூறிப்பிட்டிருக்க வேண்டும்.

விருப்பு வாக்கு விடயம் பற்றிக் கேட்டபோது கூட ஒரு முதுகெலும்பற்ற பதிலையே சித்தார்த்தன் முன்வைக்கிறார். ஒரிடத்தில் விருப்பு வாக்கில் மோசடிகள் இடம்பெறுவதாக நம்பகரமாக தெரிய வருவதாகத் தெரிவிக்கின்றார். இன்னுமொரு சந்தர்ப்பத்தில் அவ்வாறு நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் ஆனால் நடந்திருக்கலாம் என்றும் சொல்கின்றார். அவருடைய நம்பகமான தகவல் எதுவென்றால் தன்னுடைய மிக நெருங்கிய நண்பருக்கு அவருடைய நண்பர் சொன்னதாகச் சொல்கிறார். இதெல்லாம் ஒரு நம்பகரமான தகவல் என்று ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஒரு பொது ஊடகத்தில் சொல்லுகின்றார் அதனைக் கேட்டு இரண்டு ஊடகவியலாளர்கள் ஆமாம் கொட்டுகின்றனர். விருப்பு வாக்கு மோசடிக்கு அவர் கொடுத்த உதாரணம் 2004இல் தமிழீழ விடுதலைப் புலிகள் தொலைபேசியூடாகவே விருப்பு வாக்குகளை மாற்றியதாக குறிப்பிடுகின்றார். 2004இல் புலியின்றி ஓரணுவும் அசையாது இருந்த போது விருப்பு வாக்குகள் மாற்றப்பட்டதையும் 2010ற்குப் பின் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன் வாக்குகள் எண்ணப்பட்டதற்கும் வித்தியாசம் தெரியாத ஒருவர் இந்த அரசியலில் எதைத்தான் சாதிக்கப் போகின்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அரசியலில் இருந்தும் இல்லாத ஒருவராகவே அடுத்த ஐந்து ஆண்டுகளை வீணடிக்கப் போகின்றார். முடிந்தால் எனது கூற்றை அவர் பொய்யாக்கி விடட்டும்.

பிரித்தானியாவில் ஒரு வேலைக்கு 1000 பேர் விண்ணப்பம்! அரசியல், பொருளாதார, கல்விக் கொள்கைகளில் மாற்றம் வேண்டும்!!!

பிரித்தானியாவின் ஒரு பகுதியில் ஒரு வெற்றிடத்திற்கு ஆயிரம் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. மார்ச் 2020இல் கொரோனா பன்டமிக் ஆரம்பித்த வேளையில் பிரித்தானியாவில் வேலையற்றோர் எண்ணிக்கை கடந்த 40 ஆண்டுகளில் மிகக்குறைந்த நிலையில் காணப்பட்டது. அப்போது வேலையற்றவர்களின் எண்ணிக்கை 1.35 மில்லியன்களாக இருந்தது. ஆனால் அடுத்த மூன்று மாதகாலத்தில் யூனில் வேலையில்லாமல் அரசு உதவிகளைப் பெற்றவர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகியது. 2.7 மில்லியன் பேர் வேலை இழந்தவர்களுக்கான அல்லது வருமான போதாமைக்கான உதவிகளைப் பெற்று வந்தனர். மார்ச் முதல் யூலை வரையான காலத்தில் மட்டும் 730000 பேர் சம்பளம் வழங்கப்படுவதில் இருந்து நீக்கப்பட்டதாக தேசிய புள்ளிவிபர அலுவலகம் தெரிவித்து இருந்தது.

கிழக்கு லண்டனில் உள்ள எனது நண்பரின் முடிதிருத்தும் நிலையத்துக்கு எப்போது சென்றாலும் காத்திருந்து முடிதிருத்த வேண்டும். அல்லது முன்னரே அவரிடம் நேரத்தை பதிவு செய்து செல்வது வழமை. மூன்று பணியாளர்கள் இருந்தாலும் 2 தொடக்கம் 5 பேர்வரை காத்திருப்பார்கள். சில தினங்களுக்கு முன் கார் MOT எடுக்கச் சென்றபோது சலூனில் மூன்று பணியாளர்கள் இருப்பதைப் பார்த்தேன். MOT எடுத்துவிட்டு அண்ணளவாக ஒரு மணிநேரத்திற்குப் பின் மீண்டும் முடி திருத்தச் சென்றேன். பணியாளர்களைத் தவிர யாரும் இல்லை. மார்ச் மாதமளவில் பொறுப்பாய் இருந்த நண்பரோடு உரையாடிய போது தானும் ஒரு சலூன் திறக்கப்போவதாகச் சொல்லி இருந்தார். புதிய சலூன் திறப்பது பற்றிக் கேட்டேன். ‘பயமாக இருக்குது அண்ணா’ ஆட்கள் வரவே பயப்படுகிறார்கள். எல்லாம் வெறிச்சோடிக்கிடக்கின்றது என்று சலிப்போடு கூறினார்.

அத்தியவசிய தேவைகளில் ஒன்றான முடிதிருத்தும் நிலையத்தின் நிலையே இப்படி என்றால் மற்றைய வேலைகளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. பிரித்தானியாவில் ஒவ்வொரு நாளும் நிறுவனங்கள் எத்தினை பேரை வேலையால் நிறுத்துகின்றனர் என்ற விபரம் வெளிவந்த வண்ணமே உள்ளது. வீடுகளில் மிக அறியப்பட்ட நிறுவனங்களான பிபி – BP, பிரிடிஸ் ஏயர்வெய்ஸ், M&S – எம் அன் எஸ், ஜோன் லூயிஸ், பிஸா கட், தி கார்டியன், ஈவினிங் ஸ்ராண்டட் பத்திரிகைகள் என்று இந்தப் பட்டியல் மிகநீளமானது. ‘வைட் கொலர் ஜொப்’ என்று பிரித்தானியர்கள் பெருமைப்படுகின்ற பல தொழில்கள் தற்போது ஆபத்துக்கு உள்ளாகி உள்ளது.

நிறுவனங்கள் தொடர்ந்தும் வேலையில் பணியாளர்களை வைத்திருப்பதற்காக வழங்கும் பேர்லோ திட்டம் ஒக்ரோபரில் முடிவுக்கு வரும் போது, வேலை இழப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த வேலை நீக்கம் என்பது வெறுமனே கொரோனாவினால் ஏற்பட்டது மட்டுமல்ல. கொரோனாவிற்கு முன்னரேயே பிரித்தானிய வேலைமுறையில் மாற்றங்கள் வேண்டும் என்பதை நிறுவனங்கள் மிகத் திட்டமிட்டு தகுந்த நேரத்திற்காக காத்திருந்தன. கொரோனா வின் தாக்கம் இந்த மாற்றத்தை சடுதியாக துரிதப்படுத்தி உள்ளது.

பிரித்தானிய நிறுவனங்கள் தொழில்நுட்பத்தில் கூடுதல் முதலீடுகளைச் செய்துவருவதால் கூடுதல் லாபத்தை காண முடியும் என்பதை உணர்ந்து அதற்கேற்ப செயற்படத் தொடங்கிவிட்டன. மனித வலுவுக்காக ரொபேட்களை கணணிகளைப் பயன்படுத்தும் முறை தற்போது தீவிரமாக்கப்பட்டு வருகின்றது. அதனால் மனிதர்கள் செய்யும் பணிகளை கணணிகளும் ரோபேட்களும் செய்ய ஆரம்பித்துவிட்டன. குறிப்பாக ரீற்றெயில் செக்ரரை எடுத்துக்கொண்டால் அவர்களுடைய வருமானம் அதிகரித்தே உள்ளது. ஆனால் அவர்கள் ஒன்லைன் மூலமாக வருமானமீட்டுவது மிகையாக அதிகரித்துள்ளது. அதனால் அவர்கள் தங்களுடைய கல்லும் சீமேந்தும் கொண்டு கட்டப்படும் வியாபார நிலையங்களின் எண்ணிக்கையை மிக விரைவில் குறைத்துக் கொள்வார்கள்.

இன்னும் சில ஆண்டுகளில் வங்கிகள் எமது ஹைஸரீற்றில் இருந்து காணாமல் போய்விடும். அடுத்த ஆண்டு முதல் பிரித்தானியா ஓட்டிகள் இல்லாத வாகனங்களை பரீட்சார்த்தமாக நடைமுறைக்கு அனுமதிக்க உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் ரக்ஸிகளும் ஊபர் ட்ரைவர்களும் வேலை இழக்க வேண்டி ஏற்படலாம். தற்போது நாங்கள் செய்கின்ற பல நடைமுறை வேலைகள் இன்னும் சில ஆண்டுகளில் வரலாறு ஆகிவிடும்.

தற்போதைய பொருளாதாரமானது மிக வேகமாக அறிவியல் பொருளாதாரமாக மாறி வருகின்றமையால் வேலைவாய்ப்பிற்கான சந்தையில் தங்களை விற்க விரும்பும் ஒவ்வொருவரும் தங்களுடைய தனித்துவத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகின்றது. இந்த ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களில் இருந்து வெளியேறும் பட்டதாரிகள் கூட வெறும் சான்றிதழ்களை மட்டும் வைத்துக்கொண்டு வேலைழயப் பெற்றுவிட முடியாது. அவர்கள் கடுமையான போட்டியயை சந்திக்க வேண்டி நேரிடும். சான்றிதள்கள் மட்டுமே அறிவாகி விடாது. ஏனைய திறன்களும் பரீட்சிக்கப்படும்.

பழையன கழிவதும் புதியன புகுவதும் இயல்பானாலும், இழக்கப்படும் வேலைகளுக்கு ஏற்ப புதிய தொழில்நுட்பம் புதிய வேலைகளை உருவாக்குமா என்றால் நிச்சயமாக இல்லை. தொழில்நுட்பத்தை நிறுவனங்கள் கொண்டு வருவதன் அடிப்படை நோக்கமே மனித வலுவைக் குறைத்து அவர்களுக்கு வழங்கும் சம்பளத்தைக் குறைத்து அதீத லாபம் மீட்டுவது மட்டுமே.

அதனால் அரசு புதிய தொழில்சார் சட்டங்களை இயற்றி வேலை நேரத்தை குறைத்து, சம்பளத்தை உயர்த்தி, அரச உதவித் திட்டங்களை உயர்த்த வேண்டும். தொழில்நுட்பம் வளராத காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட வாரத்திற்கு 40 மணிநேர வேலைக் கணக்கு தற்போது தொழில்நுட்பம் அதன் உச்சத்தை தொட்டுள்ள இன்றைய காலகட்டத்திற்கு எவ்விதத்திலும் பொருத்தமற்றது. தொழில்நுட்ப வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த மக்கள் சமூகத்திற்கும் சொந்தமானது. அதன் பலனை அனுபவிக்கும் உரிமை ஒவ்வொரு தனிமனிதனுக்கும் உண்டு.

மக்கள் தனிமனிதர்களாக மட்டும் சிந்திக்காமல் சமூகம் சார்ந்தும் சிந்திக்க வேண்டிய அரசியல் சூழலில் நாம் வாழ்கின்றோம். மக்கள் கூட்டத்தை தனிமனிதர்களாக்கி தனிமனிதர்களிடையே போட்டியயை உருவாக்கி சமூக அக்கறையை இல்லாமல் செய்து வெறும் போட்டியயையும் பொறாமையயையும் உருவாக்கும் தற்போதைய அரசியல் பொருளாதார கல்விக் கொள்கைகளில் கடுமையான மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

தங்களுடைய பட்டப் படிப்பிற்காக £50000 வரையான கடன் சுமையைப் ஏற்றுக்கொள்ளும் இளைஞர்களதும் யுவதிகளதும் எதிர்காலம் அரசின் கொள்கைவகுப்பிலேயே தங்கியுள்ளது. பெருநிறுவனங்கள் லாபமீட்டுவதற்காக தங்களைத் தயார்படுத்தும் இந்த இளைஞர் யுவதிகளின் கல்வி முற்றிலும் இலவசமாக்கப்பட வேண்டும்.